Thursday 24 January 2013

எல்லாப் புகழும் இறைவனுக்கே! - இருள்சேர் இருவினையும் சேரா!!


"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." -  திருக்குறள்:1.5


ஐந்தாவது கடவுள் வாழ்த்துப்  பாடலாகத் திருக்குறளில் இடம்பெறும் மேற்கண்ட குறளுக்குத்  தவத்திரு குன்றக்குடி அடிகளார்   "இறைவனின் பொருளுடைய புகழினை விரும்பியவர்களை   மயக்கம் செய்யும்  நல்வினை,  தீவினை  வந்தடையா." என்றும் "இருள்சேர் - அறியாமை வழிப்பட்ட,  பொருள்சேர் புகழ் - பொருள்  நிறைந்த, அர்த்தமுள்ள  உண்மையான பயன் பொருந்திய புகழ்." என்றும் "இறைவனின் புகழினைச் சொல்லுதல் தன்முனைப்பை நீக்கும்; இறைவனைப்புகழ்தலால் யாரும் இகழப்படுவதில்லை. ஆதலால், அழுக்காறில்லை. எனவே, வினைபடு வாயில்கள் தோன்றா." என்றும் அவரெழுதிய திருக்குறள் உரை நூலில் விளக்கம் தந்துள்ளார்கள் .  திருக்குறள் முனுசாமி  உள்ளிட்ட பெரும்பான்மையான திருக்குறள் உரையாசிரியர்கள், அடிகளாருடைய கருத்தினை ஒட்டியே விளக்கியுள்ளனர்.  ஆயினும், சைவ சித்தாந்தத்தின் வழி சிந்தித்தால், வள்ளுவனின் கவியுள்ளம், உண்மை விளக்கம் வெளிப்பட்டுத் தோன்றுகிறது.

"இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா." என்று கொண்டு கூட்டினால், "இறைவன் பொருள்சேர் செயல்புரிந்தாரிடம்  இருள்சேர் இருவினையும் சேரா."  எனத் தெளியும். அதாவது, 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிவது' என்பது ஒருவர் செய்யும் செயலெல்லாம் இறைவன்(சிவன்) செயலே எனச்  சிவபுண்ணியங்களாகச்  செயல்புரிவதாகும்; அவ்வாறு செயல்புரிந்தாரிடம்    'இருவினைஒப்பு' எனப்படும் நல்வினையின் பயனாகிய இன்பத்தினிடம் விருப்பு அல்லது தீவினையின் பயனாகிய துன்பத்திடம் வெறுப்பு போன்ற எண்ணங்கள் எதுவும் இன்றி 'நம் மூலமாக இறைவன் இயங்குகிறான்'  என்ற உணர்வு ஒன்றே நிகழ்வதால், 'இருள்சேர் இருவினையும்' சேராமல் நீங்கும் என விளங்கும். 'நான்' செய்வது என்ற உணர்வுடன் செய்யும் நல்வினை கூட, அச்செயல்புரிந்த உயிரின் புண்ணியக் கணக்கிலே சேர்ந்து நற்பயனை, அப்பிறப்பிலோ பிற்பிறப்பிலோ தரும். (நல்வினையும் அதன் பயனை அனுபவிக்குமாறு பிறவியைத் தருவதால்) இது 'தன் நிமித்தம் செயல்புரிவது' என்ற வகையில் வரும்.  வள்ளுவப் பெருந்தகையும்

'யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்"


என அருளியுள்ளார்கள். நல்வினையே உயிர்ப் புண்ணியக்  கணக்கில் சேர்ந்து பிறவிப்பிணியைத் தரும்போது போது தீவினை குறித்துச் சொல்ல  வேண்டியதேயில்லை.  எனவே,  மணிவாசகரின்  வாக்கான 

"நன்றே செய்வாய் பிழை செய்வாய்  
  நானோ இதற்கு நாயகமே" - திருவாசகம் 

என்ற திருவாசகத்தின் வழி 'செய்யும் செயலெல்லாம் இறைவன்(சிவன்) செயலே' என்று பணி புரிவதே 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிவது' ஆகும்.  அத்தகைய உயிர்களுக்கு மட்டுமே 'இருள்சேர் இருவினையும் சேரா' நிகழும்எனவே, 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார்' என்பதை 'இறைவனின் பொருளுடைய புகழினை விரும்பியவர்களை' என்று நேர் பொருள் கொள்ளுதல் அத்துணைச் சிறப்பன்று. ஆஸ்கார் விருதினைப் பெற்ற தருணத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் 'எல்லாப்  புகழும்  இறைவனுக்கே!' என்று அவருக்குக் கிடைத்த வெற்றியை அவர் செயலாகக் கருதாது 'இறைவன்  பொருள்சேர் புகழ் புரிந்தது' குறித்து உலகொர்க்கேல்லாம் உணர்த்தியதை இங்கு நினைவு கொள்ளத் தக்கது. அங்ஙனமல்லாது தம் செயலாகச் செய்யும் நல்வினை, தீவினை இரண்டும் அவ்வவ் உயிரின் 'வினைக்குவியல்' என்னும் 'சஞ்சித கர்மத்தையே' சேரும்.

இனி, 'இருள்சேர் இருவினையும்' என்று நல்வினை, தீவினை ஆகிய இரண்டையும் சேர்த்துக் கூறியது ஏன் என்று சிந்திக்கலாம். தீவினையை இருள் என்றது பொருத்தமே. நல்வினை எப்படி இருள் வகையில் சேரும்? நல்வினை, தீவினை ஆகிய இரண்டிற்கும் தாய் ஆணவமாகிய இருளே. ஏனெனில், உயிரின்மேல் படிந்துள்ள ஆணவ இருளைப் போக்கவே பிறப்பு இறைவனால் நிகழ்த்தப்பெறுகிறது; பிறப்பினால் கிட்டிய உடல்மூலம் உயிர் செயல்பட்டுக் காரியங்களைச் செய்யும்போதுதான் நல்வினை, தீவினை ஆகியன 'ஏறுவினை'களாக (ஆகாமிய கர்மமாக) நிகழ்ந்து பின்  உயிரின் 'சஞ்சித கர்மம்' அல்லது 'வினைக்குவிய'லில் சென்று சேருகின்றன. எனவேதான், 'இருள்சேர் இருவினையும்' என்றார் வள்ளுவர். 

உயிரின்மேல் படிந்துள்ள ஆணவமாகிய இருளால், உயிரின் இயல்பாகிய அறிவு மறைக்கப்பட்டு, தான் யார் என்று உணராது உயிர் கேவலநிலையில் கிடக்கும்.  அறியாமை இருளாகிய ஆணவத்தால் கலக்குண்டு உழலும் உயிர்கள் அவைகளின் இயல்பாகிய அறிவு விளக்கம் பெற்று வீடுபேறு எய்திடவே, சடசக்தியாகிய மாயையினின்று உலகத்தையும்,  ஐம்பொறிகளுடன் ஐம்புலன்களும் கூடிய உடல்களை   அறிவைத்தரப்   படைத்து,  இன்ன உடலில் இன்ன உயிர் என, உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப (கன்மம்/கர்மம்) அமைத்துத் தருகிறான் இறைவன். இவ்வாறு மாயைக்கு  அருளேயாகிய இறைவனிடத்தும் (உயிர்களைப் பற்றியுள்ள) இருளாகிய ஆணவத்திடமும் தொடர்பு உள்ளதால், செயல் அல்லது வினை எனப்படும் கன்மத்தின் விதையான 'ஆசை'யை முளைவிடச்செய்து இருவினைகளை வளரச்செய்கிறது. அருளின் தொடர்பால் நல்வினையும், ஆணவ இருளின் தொடர்பால் தீவினையும் விளைகின்றன. இது, உயிர்கள் ஆற்றிய நற்தொண்டுகளாலும், புலன்கள் நுகர்ச்சி  தரும் மயக்கத்தால் நிலையில்லாத இப்பிறவிகளை நிலையென எண்ணித் தவறான வழிகளில் பொருளீட்டும் முனைப்பில் செய்யும் தீமைகளாலும் அறியப்படும்.  நல்வினையால் நற்பயனும், தீவினையால் துன்பமும், விளைவுகளாக உயிர்களால் பல பிறவிகளில் நுகரப்படும் (அனுபவிக்கப்படும்). பிறவி நீங்கி முத்திபெற இந்த நல்வினையும் ஒரு காலத்தில் விடப்பட வேண்டியதாதலின், இதுவும் இருளாகிய தாய்வழிச் சொத்தாயிற்று.  ஒரு பிறவியில் நுகரவேண்டிய நல்வினை, தீவினை பயன்களான புண்ணிய, பாவங்கள் 'ஊழ்வினை' / 'பிராப்தம்' / 'பிராரர்த்த கர்மம்' ஆகும். அவ்வாறு ஊழ்வினையை நுகர ஏற்பட்ட பிறவியில் உயிர் ஆற்றும் செயல்கள் (அல்லது)  வினைகள் 'ஏறுவினை' / 'வருவினை' / 'ஆகாமிய கர்மம்'  ஆகும். 'ஊழ்வினை'யின் குழந்தையே 'ஏறுவினை'. இது சென்று சேருமிடம் உயிரின் 'வினைக்குவியல்' எனப்படும் 'சஞ்சித கர்மம்'. ஊழ்வினையை நுகர ஏற்பட்ட பிறவியில் வினைத் துறவறம் பூண்டு, 'இறைவன் பொருள்சேர் புகழ்', அதாவது நமது எல்லாச் செயல்களையும்  'இறைவினையாக'வே நாம்  செயல்  புரிவோமானால் 'இருள்சேர் இருவினை' நம்மை அண்டாது.
  
உயிர்கள் உலகத்தில் பிறந்து இறந்து வரும்பிறவிகளில்  ஈட்டும் வினைகளின் மொத்த தொகுப்பே 'சஞ்சித கர்மம்' அல்லது 'வினைக்குவியல்' ஆகும். 'முக்தி' என்னும் பேரொளி கிட்டும்வரை, ஆணவ இருளில் உழலும் உயிர்களுக்கு  அறிவு விளக்கம் பெறும்வண்ணம், பேரருளாளனாகிய இறைவனால் அருளப்பட்ட கைவிளக்குகளே உடல்களும் உலகமும். இதுகாறும் இப்புவனத்தில் தோன்றிய இறைவனின்  அடியார்களாகிய, மாணிக்கவாசகர் போன்ற  அருளாளர்களால் அருளப்பட்ட மறைகளே மின்விளக்குகள் போல் நின்று 'முற்றறிவு' என்னும் முத்தியை நோக்கிய உயிர்களின் பயணத்தில் துணைபுரிகின்றன. பயண முடிவில், இறைவனின் பேரருள் வெளித்தோன்றி மரணமில்லாப் பெருவாழ்வாகிய 'முக்தி' எனும் இறைப்பேறு (சிவப்பேறு) கிட்டுமாறு அருளும். இவ்ஞான ஒளி வெளிப்படுங்காலை கைவிளக்கும்,மின்விளக்கும் தேவையில்லாமல் போகும். இதையே மணிவாசகர்

"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் 
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்"
                                                                - திருவாசகம்:திருப்புலம்பல்-3

என இனிது அருளிச்செய்கிறார். உயிருக்கு உற்றார்-உடல், ஊர்-உலகம், பேர்- மன,மொழி,மெய்களால் உயிர் நிகழ்த்தும் இருவினைகள், கற்றார்-மறைகள். இவையனைத்தும், கைவிளக்கும் மின்விளக்கும் சூரியன் வெளிப்படுங்காலை தேவையற்றுப் போவதைப்போல், இறையருள்  உயிர்க்கு வெளித்தோன்றி முற்றறிவை அறிவிக்கும்போது தேவையற்றுப் போகும். சீவன் ஆகிய உயிர் சிவனுடன் இரண்டறக்கலந்து (கலப்பினால் ஒன்றாதல்-அத்துவிதக் கலப்பு) சிவமே ஆகும்போது வழிபாடு உள்ளிட்ட அனைத்துச் செயல்களும் மறைந்து விடும். இதை மணிவாசகர்

"மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்ப்படும் ஆயிடிலே
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே 
காரிகையார்கள் தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாதே 
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே 
மால்  அறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே 
பண் களி கூர் தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே 
பாண்டி நல் நாடுடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாதே 
விண் களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே"
                                                                       - திருவாசகம்:திருப்படையாட்சி-1

என, தூய மனம் படைத்திருக்கிறபொழுது பக்தனுக்குத் தன் ஊனக் கண்களால் இறைவனைக் காண இயல்வதையும், முக்திக்கலப்பிலே உடல்,மனம்,மாயப் பிரபஞ்சம், உயிர் இருப்பு அனைத்தும் மறைவதால், கண்கள் உள்ளிட்ட அனைத்து நுகர் பொறிகளும் செயலற்றுப் போய் கண்கள் இறைவன் திருவடிகளைக்  கண்டு களிப்பது உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் நிகழாமல் உயிர் சிவமேயாகிவிடும் என்பதை அற்புதமாக அருளிச் செய்கிறார். 'நான்' என்ற தன்னுணர்வு இருந்தால் மட்டுமே இறைவனைக் காண்பதும், களிப்பதும் நிகழ இயலும். இரண்டறக் கலந்துவிட்ட முக்திக் கலப்பில் தன்னுணர்வு கரைந்துவிடுவதால் இவை நிகழாது என்கிறார் பெருமான்.

நம் அறிவு எனப்படும் சிற்றறிவு ஐம்புலன்களுடனுடைய உடலினின்றும் அதன்வழி உலகத்தினின்றும் பெறப்பட்டவையே. புலன்களில்  ஏதேனும் குறையிருப்பின், அப்புலன்வழிக்கிட்டும் அறிவு தடைபடுகிறது. கேட்கும் புலனில் குறைவுண்டாகின், கேள்விச் செல்வத்தால் கிட்டும் அறிவு கிட்டாது. பிறவிகளிலேயே உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இதுபற்றியே அருள் ஞானியார் ஔவையார்  அருளிச்செய்த 

"அரிது அரிது மானிடராதல் அரிது.
மானிடராய்ப் பிறப்பினும் கூன், குருடு, 
செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான் இயற்றல் அரிது.
 தானமும் தவமும் தான் இயற்றியகாலை 
வானவர் நாடு வழி திறந்திடுமே.

முத்தி உபாயச் செய்யுள் இங்கு உணர்ந்துகொள்ளத் தக்கது.  இச்செய்யுளில், "ஞானமும் கல்வியும் நயத்தல்" என ஞானத்தை முதலிலும் கல்வியைப் பின்னும் எழுதியது சிந்தனைக்குரியது. கல்வி பெறுவதல்லவா ஞானம் பெறுவதன் முதற்படி? தற்கால உலகத்தில் கல்வி என்பது பொருளீட்டுவதற்கானப் பயன்பாட்டுக் கல்வி என்ற அளவிலே நின்றுவிட்டமையைக் கண்கூடாகக் காண்கிறோம். பொருளீட்டுவதற்கானப் பயன்பாட்டுக் கல்வியில் 'முனைவர்' பட்டம் பெற்ற ஒருவர் தவறிழைத்தால் 'படித்தவன் செய்கிற காரியமா' என நொந்துகொள்கிறோம்; ஏனெனில், கல்வியில் ஞானம் உள்ளீடாக இருக்கவேண்டும் என்பது மானுட எதிபார்ப்பு. ஞானமில்லாத எந்தக் கல்வியும் பயனற்றது. ஞானமற்ற பொருளீட்டுப் பயன்பாட்டுக் கல்வியினால் உலகின் பெரும் செல்வந்தராக வாழ்ந்த ஆல்ப்ரெட் நோபெல் அவர்களின் வாழ்க்கை இங்கு நினைவுகூரத் தக்கது. டைனமைட் உள்ளிட்ட பல வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து, அவைகளின் விற்பனை மூலம் உலகின் முதல்நிலை பணக்காரரான அல்ப்ரெட் நோபெலின் மரணச் செய்தியை 1888ம் ஆண்டு அவரே படிக்க நேர்ந்தது. அல்ப்ரெட் நோபெலின் சகோதரர் லுத்விக் இறந்த செய்தியைத் தவறாக ஆல்ப்ரெட் நோபெல் இறந்துவிட்டதாக ஒரு பிரஞ்சு நாளிதழ் வெளியிட்டது.  "மரண வியாபாரியான ஆல்ப்ரெட் நோபெல் மரணம்" ("The merchant of death is dead") என்று செய்தித் தலைப்பிட்டு "உலகம் இதுவரையில் கண்டிராத வகையில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கான டைனமைட் உள்ளிட்ட ஆயுதங்களைக் கண்டுபிடித்து, பிணக்குவியல்மேல் பணக்குவியல் ஈட்டிய வல்லரக்கன் ஆல்ப்ரெட் நோபெல் மரணமடைந்தான். அவன் மரணம் கொண்டாடப் படவேண்டியது." என எழுதியது. கலிங்கத்துப் போர் அசோகச் சக்கரவர்த்தியின்  மனமாற்றத்துக்குக் காரணமானதைப்போல் இச்செய்தி ஆல்ப்ரெட் நோபெல் மனத்தை வருத்தியது. சரித்திரம் தன்னை மன்னிக்குவிதமாக அவர் ஈட்டிய அனைத்துப் பணத்தையும் நோபெல் அறக்கட்டளைக்கு அளித்தார். அந்தச் செயல் மூலம், மனிதகுலம் 'நோபெல் பரிசை நிருவியவர் அல்பிரட் நோபெல்' என்னும் நினைவையே கொள்ளும் வண்ணம் 'நோபெல் பரிசு' என்பதை உலகோர் இதயங்களில் ஆழப்பதித்தார். இன்றுள்ள பெரும்பான்மையோர் 'டைனமைட்டைக் கண்டுபிடித்தவர் அல்பிரட் நோபெல்' என்பதை அனேகமாக மறந்துவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். மனிதகுல மேம்பாட்டிற்கு உழைத்த அறிவியல், பொருளாதாரம், மானுடம், கலை, உலக அமைதி போன்ற துறைகளின் பங்களிப்பாளர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப்படுகிறது என்பதே பெரும்பான்மையரின்  நினைவு. இவ்வாறு, 'அல்பிரட் நோபெல்' தன் வாழ்நாளில் ஈட்டிய பெரும் தீவினைக்குப் பரிகாரம் கண்டார். ஆயினும், மனிதகுலம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதா என்பதுதான் வினா. வினைப்பயன் என்பதே விடை.





No comments:

Post a Comment