Friday 18 September 2015

சங்கத்தமிழரின் சமய வாழ்வியல்



சங்கத்தமிழரின் சமய வாழ்வியல்

சமய வரலாறு ஆய்வுகள்


தமிழக சமய வரலாறு என்பது இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள்,  அகழாய்வு என விரிந்து, ஆய்ந்து ஒருங்கிணைக்கப்படும் ஆய்வு முடிவுகள்.  இத்தளங்களில் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளுபவர் மற்றவற்றைப் பற்றியும்  ஓரளவு ஆழ்ந்த வாசிப்பு இருந்தால் மட்டுமே மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகள் நம்பகத்தன்மை கொண்டதாக அமையும். தற்கால தமிழியல் ஆய்வாளர்கள், குறிப்பாக கல்வெட்டு, நாட்டார் வழக்காற்றியல், செப்பேடு, அகழாய்வு ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், அவர்கள் சார்ந்த துறையறிவை மட்டுமே கணக்கில் கொண்டு தமிழர் வரலாற்றை நிறுவ முயல்கின்றனர்.
அத்தகைய ஆய்வுப் போக்குகள் தமிழர்களின் வரலாற்றை திரிப்பதோடல்லாமல், தமிழ் ஆய்வாளர்களின் குறைபாடான ஆய்வுமுறைகள்  குறித்து மேலைநாட்டோர் குறைகூறுவதற்குப் பெரும் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.  உதாரணமாக, கடந்த 2015 மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான “சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல்” என்ற பகுதியில் கல்வெட்டு ஆய்வாளர் திரு.செந்தீ நடராசன் அவர்கள் தமிழர்களின் சமயம் குறித்த கேள்விக்கு மனம் போன போக்கில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார். கல்வெட்டு ஆய்வாளர் திரு.செந்தீ நடராசன் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு இல்லாதவர் என்பது "சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு என்ற சொற்களே இல்லை. ஒரு இடத்தில் முக்கண்ணன் என்ற சித்தரிப்பு வருகிறது. அது இந்திரனைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் மூன்று கண்கள்."   என்றும் “சங்க இலக்கியத்தில் யாகங்களைச் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வைதீகம் இருந்திருக்கிறது. சமணமும் பவுத்தமும் ஆசிவகமும் இருந்திருக்கினறன. பின்னால் சங்க இலக்கியத்தை சைவர்கள் தொகுக்கும்போது சமண, பவுத்த தடயங்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதையும் மீறிச் சில இடங்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது.” என்றும் சைவர்கள் மீது (மறைமுகமாக சங்க இலக்கியத்தைத் தொகுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போன்றோர் மீது) குற்றச்சாட்டுக்களை எந்த ஆதாரமும் இன்றி வம்படி வழக்காக கூறுவதிலிருந்தே அப்பட்டமாக வெளிச்சமாகிறது. 

செந்தீ நடராசன் கூறும் இந்திரன் கள்ளத்தால் அகலிகையைப் புணர்ந்து சாபம் பெற்ற கதையை பரிபாடல் 19ம் பாடல் விளக்குகின்றது. (இச்சாபத்தால் இந்திரன் பெற்றது ஆயிரம் கண்கள்; மூன்றாம் கண்ணல்ல) கண்ணுதலோன் அல்லது முக்கண்ணன் என்ற பெயரால் வழங்கப்படுவது சிவபிரானே என்பது குழந்தையும் அறிந்த ஒன்று. சங்க இலக்கியங்களில் சிவனும், விஷ்ணுவும் (திருமாலும்) பல இடங்களில் வருகின்றனர்.  உதாரணமாக, சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களில், ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நான்கு நூல்களிலும் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல்கள் சிவபெருமானைப் பற்றியவை. திருமால்(விஷ்ணு) ஐந்திணைத் தெய்வங்களுள் காடும் காடுசார்ந்த முல்லைக்குத் தெய்வமாக விளங்குகின்றான். சங்க இலக்கியங்களில் வரும் பாடல்களில் சங்கத் தமிழர்களின் சமய வாழ்வியல் உண்மைகள் எங்கும் நீக்கமற விரவிக் கிடக்கின்றன. அவைகளை யாரும் மனம் போன போக்கில் நீக்கிவிட முடியாது.

சங்கப்பாடல்களில் வழிபாட்டுப் பதிவுகள்

 சங்கப்பாடல்கள் தமிழர்தம் வீரவரலாற்றையும், அகம், புறம் என்னும் கூறுகளின் ஊடே அவர்தம் சமூக வரலாற்றையும், பண்பாட்டு அசைவுகளையும் அழகுற வெளிப்படுத்துபவை. இப்பண்பாட்டு அசைவுகள் சங்ககாலத் தமிழர்களின் இறைவழிபாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கியதேயாகும். சங்ககாலத் தமிழர்களின் சமயவுணர்வு ஒழுக்கங்கள் குறித்த சொற்களும், சொற்றொடர்களும் சங்க இலக்கியப் பாடல் வரிகளின் ஊடே இழையோடிக் காணப்படுகின்றன; அவையே நாம் சங்கத்தமிழர்களின் இறைவழிபாட்டு முறைமைகளை அறிந்துகொள்ளும் சான்றுகளாகவும், வாயில்களாகவும் நின்று நம்மை மலைப்புறச் செய்கின்றன. புறப்படைஎடுப்பு எதையும் எதிர்கொள்ளாச் சங்கத்தமிழர்கள், புலவர்களின் பாடல்களையே சமூக,அரசியல் மற்றும் வரலாற்று ஆவணங்களாகக் கொண்டிருந்தனர். சங்ககால ஆட்சியாளர்கள் வரலாறு குறித்த சங்ககாலக் கல்வெட்டுகளோ, ஓலைச்சுவடிகளோ கிட்டாமைக்கு இதுவே காரணமாகும்.


சங்க இலக்கியங்களும், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கணங்களும் சங்ககாலத்தில் இருந்த உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும் ஒட்டியே உருவானவை என்பது தொல்காப்பியத்தின் பாயிரத்தில்  பனம்பாரனார் பாடிய “தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்” என்னும் வரியிலிருந்து விளங்கும். சங்கத் தமிழரின் சமயக் கொள்கைகளை தெளிவாக நிறுவ, சங்ககாலத்தில் இருந்த உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும் மட்டுமே சான்றாகக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுவோம். 

சங்கத் தமிழரின் சமயக் கொள்கைகள்

சமய வாழ்வுக்கு இன்றியமையாத கடவுட் கொள்கை சங்ககாலத் தமிழரிடையே நிலவியதற்கு சங்கப்பாடல்களே சான்றாக நிலவுகின்றன. கடவுள் ஒருவர் உண்டு என்பதை உணர்ந்து, அவரை வாழ்த்தி, வணங்கி வழிபட்டு, உலக வாழ்க்கையை மேற்கொள்ளுவது சமய வாழ்வாகும். இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களமாக உயிர்களும் இவ்வுலகமும் விளங்குகின்றன. உலகத்தை “நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்” என்று வரையறுக்கின்றது நம் தொல்காப்பியம். இவ்வைந்துக்கும் அப்பால், அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டுவிக்கும் முதற்பொருளை சங்கத்தமிழர் ‘கடவுள்’ என்றும், ‘இயவுள்’ என்றும் குறித்துள்ளனர். “கடவுள் வாழ்த்து”, “பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்” ஆகிய தொடர் மொழிகள் இவைகளை நிறுவும். சமயம் என்ற நிலைக்களத்தில், “காலம் உலகம் உயிரே உடம்பே, பால் வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீரைந்தும்” சிறந்த பொருள்களாக நிற்கின்றன. உயிர்கள் ஓரறிவு உடைய புல் முதல் ஆறறிவுடைய மனிதர்கள் முடிய ஆறு வகைப்படுகின்றன. இவ்வுயிர்கள் அனைத்தும் “மன்னுயிர்” என்றும் “தொல்லுயிர்” என்றும் சிறப்பாக வழங்கப்படுவதால், (மன் என்றால் நிலைப்பேறு என்று பொருள்) அவை கடவுளாகிய முதற்பொருளால் படைக்கப்படாமல் கடவுளைப்போன்றே என்றும் நிலைப்பேறுடைய உள்பொருளாகும். உயிர்கள் தவிர்த்த உலகமும், உலகிலுள்ள பொருள்களும் (உயிர்கள் வாழும் உடல்கள் உள்ளிட்ட) அம்முதற் பொருளால் படைக்கப்படுவன என்பது கடவுளை முதற்பொருள் என்பதோடு “உலகு இயற்றியான்” என்றும் “உலகு படைத்தோன்” என்றும் நற்றிணை:240 – ம் பாடலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அறியலாம்.
 
உயிர்களுக்கு என்று தனியான நிறமோ, உருவமோ இல்லை; ஆனால், அவை உலகியல் பொருட்களான பல்வேறு உடம்புகளுக்குள் புகுந்து இயங்குவதோடல்லாமல், ஏனைய உலகியல் பொருட்களையும் இயக்குகின்றன; இவ்வுயிர்கள் உடல்களில் ஏன் புக வேண்டும்? இதற்கு என்ன காரணம்? அதுதான் வினைப் பயன். உயிர்கள் அத்தகைய இயக்கங்களை புரிவதால், வினைகள் உயிர்களிடையே தோன்றி நிலவுகின்றன.  “வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” (தொல்.சொல்.சூ.198) எனத் தொல்காப்பிய நூற்பா குறிக்கும். செய்யும் வினைகளுக்குத் தகுந்த வினைப்பயனாக, உயிருக்கு உடம்பும், நுகர்பொருட்களான பலன்களும் அமைகின்றன. அத்தகைய உடம்பையும், நுகர்பொருட்களையும், அவற்றின் நிலைக்களனாக இவ்வுலகத்தையும் படைத்து அளிக்கும் கருணையைச் செய்வதே முதற்பொருளாகிய இறைவனின் தன்மையாகும். உயிர் இவ்வுலகில் உலவ இறைவன் படைத்து அளித்த உடலில் தங்கி வினை (தொழில்) செய்து, தன்னிடம் இயல்பாய் ஒட்டியிருக்கும் அறியாமையிலிருந்து நீக்கம் பெற்று, தன்னை அறிந்து, தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து நிலைத்த பேரின்பப் பிறவாநிலை பெற்றுப் பயன்பெறுவதால், இவ்வுலகம் உயிர்களின் பொருட்டே இறைவனாகிய பரம்பொருளால் படைக்கப்பட்டு, உயிர்களுக்கு உதவப்பட்டிருப்பது என்பது சங்கத் தமிழரின் சமயக் கொள்கையாகும். அவ்வாறு உடம்பையும் நுகர் பொருட்களையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய இறைவன் மேன்மையுற்று விளங்குகின்றான். ஆகவே, இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள தொடர்பு பலன் கருதாது உதவி செய்வோனுக்கும், அவ்வுதவியைப் பெற்றோனுக்கும் உள்ளதாகும். உதவி பெற்ற உயிர்கள் இறைவனது அருளை நினைந்து வழிபட்டு உய்கின்றன. இதனால்தான் தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்தார். சங்கத்தமிழர்கள் உலகுயிர்கள் இயங்கும் திறத்தினை தமது வாழ்வியல் நுகர்ச்சியில் கண்டு தெளிந்தவர்கள் என்பதை “ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” என்று சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடலில் திறம்படப் பதிவு செய்கின்றார். (அவர்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கையே பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக அடையாளம் காணப்பட்டது.) 

உயிர் வகையுள், மக்களை உயர்திணை உயிர் என்றும், ஏனைய உயிர் வகையை அஃறிணை உயிர் எனவும் வகுத்தனர் சங்கத்தமிழர். உயர்திணை' என்மனார், 'மக்கட் சுட்டே;' , 'அஃறிணை' என்மனார், 'அவர் அல பிறவே;' – (தொல். சொல். சூ. 1) என்கின்றது சங்கத்தமிழ் தொல்காப்பியம். மக்கள் இனத்துள் அடங்காமல், கடவுளாகிய (அல்லது இறைவனாகிய) முதற்பொருளும் ஆகாமல், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ‘தெய்வங்கள்’ காணப்படுகின்றன. இத்தெய்வங்கள் உலக உயிர் போல மனவுணர்வும், வினை புரிதலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் கொண்டு, பிறத்தலும் இறத்தலும் உடையன. தெய்வங்களின் செயல் முறைகளும், வாழ்க்கையும் உலக உயிர்களினின்றும் மேல்-நிலையில் உள்ளன. “தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி” 'இவ்' என அறியும் அந்தம் தமக்கு இலவே;  - (தொல். சொல். சூ. 4.) உலக மக்கள் இனம் அல்லாததால், “இவ்வென அறியும் அந்தம் தமக்கு இல” என்றும், சொல் உலகில் “உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” எனவும் வரையறுத்துள்ளார் தொல்காப்பியர்.

திணைநிலைத் தெய்வங்கள்

சங்கத்தமிழர்கள் சொல் உலகை உயர்திணை, அஃறிணை என்று இனம் கண்டதைப் போல், பொருள் உலகைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத ஐந்திணையாக வகுத்துக் கொண்டனர். இந்நிலப் பகுதியுள் வாழ்ந்த திணை நிலை மக்கள் முறையே குன்றவர், ஆயர், வேளாளர், பரதவர், எயினர் எனக் குறிக்கப் பெற்றனர். ஐந்திணை நிலை மக்கள் அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு, தொழில் முதலியன தனித்தனியே கொண்டு வாழ்ந்தனர். சமய ஒழுக்கம் நிலைபெற, குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயோனும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்கு கொற்றவையும் திணைநிலைத் தெய்வங்களாகக் கொண்டு வாழ்ந்தனர் சங்கத்தமிழர்கள்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறைபாற் சொல்லவும் படுமே.
(தொல். பொருள். அகத்திணை 5)

இத்தெய்வங்களுக்கு, நாட்பூசையும், வழிபாடும், விழாக்களும் செய்வது சமய ஒழுக்கமாகின்றது. இறைவன் இத்தெய்வவகைகளுக்கு மேல் நின்று எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாய் விளங்குகின்றான். அனைத்து நிலப்பகுதிகளுக்கும், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய அனைத்திற்கும் மேலாய் நின்று, அனைத்தும் தன் ஆணை வழி நிற்கச் செய்வதால், முழுமுதற் கடவுளாம் இறைப்பொருளுக்கென தனியே நிலம் குறிக்காது, எல்லா நிலங்களிலும் இக்கடவுட் குறிப்பைப் பொதுவாகக் குறித்தனர் சங்கத்தமிழர்.

சங்கத்தமிழரின் முதற்பொருளாம் இறைக்கொள்கை

மேலும், குறிஞ்சி நிலம் முதலாக தெய்வவகை அனைத்திற்கும் தோற்றம் நிலை வேறுபாடு கூறப்படுவது போல, முதற்பொருளாம் இறைவனுக்கு தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. சங்க இலக்கியங்களில் முதற்பொருளாம் இறைவனை குறிக்கும் போதெல்லாம் பிறைமுடியும், முக்கண்ணும், கறைமிடறும் உடையவனாகக் குறிக்கின்றன. இவ்விறைவன், சங்கத்தமிழரின் அன்றாட வாழ்வியலில் உணர்வில் கலந்தவன் என்பதை, நீண்ட ஆயுள் தரவல்ல அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாது தனக்கு ஈந்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய புறநானூறு: 91-ம் பாடலில் சங்கப்புலவர் ஔவையார் அழகுற வெளிப்படுத்துகின்றார். ஔவையார் அக்கனியை உண்டபின்னரே அதன் சிறப்பை அறிந்து பெருவியப்புற்றார். தான் நெடிது வாழ நினையாது, எனக்குத் தந்து என்னை நெடிது வாழச் செய்த பெருந்தகை வள்ளலை வாழ்த்தப் பாடிய ஔவையார் “இந்நெல்லிக்கனியின் அருமை கருதாது எனக்குத் தந்து சாதலை நீக்கிய நீ நீலமணி மிடற்றுக் கடவுள் போல என்றும் நிலைபெற்று வாழ்வாயாக!” என்று வாழ்த்தியுள்ளார். இதோ அப் புறநானூற்றுப் பாடல்:

வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்க
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
5       பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
        நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
10      தாத னின்னகத் தடக்கிச்
        சாத னீங்க வெமக்கீத் தனையே.  (91)

“நீலமணி மிடற்று ஒருவன்போல” என்ற கருத்து, “பல்லுயிர்களையும் சாவிலிருந்து காக்கும் பொருட்டு, சாதற்குக் காரணமாகிய கொடிய ஆலால நஞ்சைத் தானுண்டும், அந்நீலமணிமிடற்று இறைவன்  நிலைபெற்றிருந்தாற் போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும்” என்றார். ‘ஒருவன்’ என்ற விளி இறைவனைக் குறிக்கும். இப் புறநானூற்றுப் பாடல், நீலமணிமிடற்று இறைவன் மக்களின் வாழ்வியல் இரண்டறக் கலந்தவன் என்பதை வெளிக்காட்டும் ஒரு சிறந்த உதாரணமாகும். (இறைவன் குறித்த பல சங்கக் காட்சிகளைத் தனியே காண்போம்)

தற்காலத்தில், ‘சிவன்’, ‘சிவம்’ என்ற சொற்களால் குறிக்கப்படும் முதற்பொருளாம் இறைவன் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது கொண்டு, சிவப் பரம்பொருளே பழந்தமிழர்களாம் சங்கத்தமிழரின் சமயத்துறையில் நிலவிய கடவுள் / இறைவன் என்பது தெளிவாகும். சங்க இலக்கியங்களில் தெய்வங்களுக்குத் தோற்றமும், இறைவனுக்கு அது கூறப்படாமையும் நோக்கும்போது, உடல்களில் பிறவாத வாழ்க்கைப் பெருமையுடையவன் இறைவன் என்பதும், பிறந்து நிலை வேறு கொண்டு இயங்குவன தெய்வங்கள் என்பதும் பழந்தமிழர் கொண்டிருந்த இறைக்கொள்கைகள் எனத் தெளிவாகும்.   

சங்ககால மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறுபிறப்பும், வீடுபேற்றின்பமும், நிரயம் என்னும் சொர்க்க/ நரகத் இன்ப/ துன்பமும் சொல்வழக்கில் நிலவுகின்றன. மக்களின் மனம், மொழி, மெய் என்னும் உடம்பு ஆகிய மூன்றின் அசைவு மற்றும் அசைவின்மைகளால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை. நல்வினை செய்தோர் இன்பத்துக்கும், தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியவராவர். இறந்தகால வினை (செயல்கள்) உயிர்கட்கு நிகழ்காலத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்கால வினை எதிர்காலத்தை உருவாக்குகிறது. செய்யும் வினைக்கேற்ப ஊதியமும் உறைவிடமும் அமைவது போல வினைக் கேற்பவே உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன.

உடலுடன் பொருந்திய உயிருக்கு வினைகள் தோன்றுகின்றன. வினைக்கு உயிரோ உணர்வோ இல்லை. அது தானேச் சென்று வினை செய்தவனுக்குரிய பலனைத் தருவதில்லை. வினை செய்தவனுக்கு வினைப் பயன் அவனையே அடைவதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அரசன் இட்ட பணியை ஏவலர்கள் செய்வது போல, வினை செய்தோனுக்குரிய வினைப்பயன் அவனையே அடையுமாறு இறைவனிட்ட பணியை அந்த தெய்வங்கள் செய்கின்றன. அதனாலேயே அத்தெய்வங்களை பால் வரை தெய்வம்என்கிறார் தொல்காப்பியர். செய்யப்படும் வினைப்பயன்களுக்கு ஏற்றவகையில் உயிர்களுக்கு இம்மை, மறுமை, வீடுபேறு என மூவகை உலகுகள் காட்டப்படுகின்றன.

காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீரைந்தோடு பிறவுமன்ன
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
பால் பிரிந்திசையா வுயர்திணை மேன.
(தொல். சொல். சூ. 57)

காலம் என்பது காலக் கடவுள். உலகம் என்பது உலக மக்கள் வினை செய்தற்குரிய இடமான மண்ணுலகம். வினைப்பயனை நுகர்தற்குரிய மறுமையுலகம் நிரயம். தொல்காப்பியர் ஊழின் இயல்பினை எடுத்துரைத்தலால் அவ்வூழிற்குக் காரணமாகிய மறுபிறப்பு உண்டென்பதும் சங்கத்தமிழரின் கருத்தென்பது தெரிய வருகிறது. வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க்குரியது வீடுபேறு என்றும் சங்கத்தமிழர் கருதினர். வினை செய்தவுடனே உடன் தோன்றும் வினைப்பயன் வினைமுடிவில் ஊழ்கனிபோல் நின்று நுகர்ச்சிக்குரிய காலத்தில் வினைபுரிந்தோனே அப்பயனை நுகரும்வண்ணம் செய்கின்றன இறைவன் ஆணையால் இயங்கும் தெய்வங்கள். (இதுவே ஊழ்வினை என்பது சங்கத்தமிழர் கருத்து.)

ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி இறைவன் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயல்களாதலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி கால வகையில் வேறுபடும் என்று கருதினர் சங்கத்தமிழர். குன்றவர் முருகனுக்கு வழிபாடாற்றி வேட்டம் செல்வதும், ஆயர் மாயோனுக்கு குரவையாடி வழிபாடு இயற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இக்கருத்து பற்றியதே ஆகும். 

கடவுள், தெய்வம் என்னும் சொற்களில் மட்டும் இறைமையை தொல்காப்பியர் கூறியதோடு நில்லாமல், தொல்காப்பியம் முழுமையும் இறையியல் நிறையியலாக நிறைந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, எழுத்ததிகாரத்தில், "தமிழில் உயிர், மெய், உயிர் மெய் என அமைந்த அற்புதச் செய்தி எண்ணுவதற்கு இனிமை பயப்பதாகும். "உயிர்" என்பது "ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியுமான அழிவில்லாத பொருளை" என்றும். "மெய்" என்பது சாருகின்ற பண்டங்கள் தோறும் சார்ந்ததின் வண்ணமாய்க் காணப்படும் ஆன்மாவை என்றும். "உயிர்மெய்" என்பது கடவுளும் பரிபக்குவம் எய்திய ஆன்மாவும் இரண்டறக் கலந்த நிலையாகும்" என்றும். "ஆன்மாவின் இயற்கை ஆணவத்தோடு நிற்றல் என்றும் கொள்ளலாம்; இதை தொல்காப்பியர் "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" என்றார். 

ஆன்மாவின் இயக்கமும் அதன் அனுபவ விளைவும் இறைவனால் நடைபெறுகின்றது. இந்த உண்மையைத் தொல்காப்பியர்" மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்" (தொல்.எழுத்து.சூ. 46.) என்றார். "க்" என்ற மெய்யெழுத்தில் உள்ள புள்ளியே ஆணவமாகும். மெய் என்ற ஆன்மாவில் ஆணவம் என்ற புள்ளி அகல அகரம் அவற்றோடு ஒன்றாக வேண்டும். அப்போது "க்" என்ற புள்ளி இயல்பாக நீங்கி "க" என்று உயிரின் அளவாய் ஒலிக்கும். அதுபோல அகரமாகிய இறைவன் மெய்யாகிய ஆன்மாவில் கலந்து கொண்டால் ஆன்மா ஆணவம் நீங்கி அவன் அளவினதாய் நிற்கும்" என்று கூறிய தவத்திரு தேமொழியார் சுவாமிகளின் கருத்து இங்கு ஆராயத்தக்கது. (நன்றி:’மாமறை பேசுகிறது’ கட்டுரை.).
உலக வாழ்வில், அனைத்து உயிர்களும் இன்பம் ஒன்றையே விரும்புகின்றன. “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்.பொருள்..சூ. 219).என்பது தொல்காப்பியர் வாக்கு. இந்த இன்பப்பயனை அடைவதற்காகத் தோன்றும் வினை தடையாகி நிற்கும் போதும் இன்னல்களைச் சந்திக்கும் போதும், அத்தகைய தடைகளையும், இன்னல்களையும் நீக்குவதற்காக மக்களின் அறிவும், முயற்சியும் பெருமளவு ஈடுபடுத்தப்படுகின்றன. தடைகளும், இன்னல்களும் எல்லை கடந்து செல்லும்போது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மையால் பெரும்வரட்சி, பெருங்காற்று, பெரும்பகை, கொடுவிலங்கு போன்றவற்றால் இடையூறு உண்டாகும்போது தெய்வவழிபாடு மூலம் தீர்வுகாண முயல்கின்றனர். பெருமழையில் வருந்திய குறிஞ்சிநிலக் குறவர் மக்கள் கடவுள் வழிபாட்டால் மழை நின்று மகிழ்வெய்தினர் என்று பறைசாற்றுகின்றது புறநானூறு. இதோ அப்பாடல்:

 “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
  மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
  கடவுட் பேணிய குறவர் மாக்கள்
  பெயல்கண் மாறிய உவகையர்”               (புறநானூறு: 143)

வினையின் தொடக்கத்தில் இடையூறு நேராமல் இருப்பதற்காகவும், வினையின் நடுவில் வந்த இடையூறு நீங்குவதற்காகவும், வினையின் முடிவில் வினைப்பயனாக வரவேண்டிய இன்பம் குறைவிலாது கிடைப்பதற்காகவும், சமய வழிபாடு நிகழ்த்தப்பட்டது.

சங்ககாலத் தமிழர்கள், உலகமக்கள் வாழ்வை அகம், புறம் என இரண்டாக வகுத்துக்கொண்டனர். உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும் முழுவதும் தகுதி பெற்று, தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் திறனுள்ள ஒருவனும் ஒருத்தியும்  ஒருவரையொருவர் விரும்பிக் காதலுறவு கொண்டு, உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்துகொண்டு இல்லறம் புரியும் ஒழுக்க வாழ்வே அகம் எனப்படும். அகம் தவிர்ந்த அனைத்து வாழ்வும் புறம் ஆகும். சமய வாழ்வு ‘புறம்’ பகுதியைச் சார்ந்தது.

சங்க இலக்கியங்களில் வெளிப்படையாக முழுமுதற் கடவுளைச் ‘சிவன்’ என்ற பெயரால் கூறப்படவில்லை. (சிவன் என்பது சிவப்பு, செம்மை என்ற காரனப்பெயராகும். இறைவனுக்கு மட்டுமல்ல, எவரையும் அவர்தம் சிவந்த மேனி நிறத்தைக்கொண்டு புகழும் காட்சிகளைச் சங்கப்பாடல்களில் எங்கும் காண இயலாது. இது, சங்கப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.)  ஆனால், முழுமுதற் கடவுளின் இயல்பை விரித்துரைக்கப்பட்டுள்ளது; குறிப்பாக, அவன் எடுத்த படைகளாகிய கணிச்சி, மழு, மூவிலைச்சூலம் பற்றியும், அவனுடைய இடபவாகனத்தையும், உமாதேவியார் எப்போதும் பெருமானுடன் சேர்ந்திருப்பதையும், பெருமான் எப்போதும் இசைபாடுவதையும் கூறும் அவர், அவனது பழமையான இயல்புகள் அமரரும், முனிவரும், பிறரும் அறியாத் தொன்மை மரபென்றும், அவன் அருள்மயமான தாளின்கீழ்  உயிர்க்கூட்டம் எப்போதும் வாழ்கின்றன என்றும் திறம்படக் கூறுகின்றனர் சங்கப்புலவர்கள். "அறவாழி அந்தணன்" என்று இறைவனை அழைக்கின்றார் திருவள்ளுவ தேவநாயனார்; பெருந்தேவனாரோ "மணிமிடற்று அந்தணன்" (நீலகண்டன்) என்றழைத்து மகிழ்கின்றார். இதோ சிவபெருமானின் புகழ்பாடும்  பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்து பாடல்:

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலடடுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்
றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
                                                           - பெருந்தேவனார்.

இங்கும், புலவர் பெருந்தேவனார், "சிவன்" என வெளிப்படையாகக் கூறாது அவன் தன்மைகளையே பாமாலையாகச் சூட்டுகின்றார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் சிவன் கோவிலை "பிறவா
யாக்கைப் பெரியோன் கோவில்" என்றே பதிவு செய்கின்றார். சிவபெருமானைப் பற்றிப் பாடும் பெரும்பான்மையான சங்கப்பாடல்களில் இம்மரபையே கைக்கொண்டு பாடப்பட்டிருக்கின்றதைக் காண்கிறோம். புறநானூறு சங்கப் பாடல்களில் பாடல் எண்கள் 55, 91 ஆகியவை சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையும் பாடல் எண்கள் 57, 58 ஆகியவை திருமாலைப் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 56 யமன், சிவன், திருமால், முருகன், பலதேவன்  ஆகியோர் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 299 முருகன் கோயில் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 241 இந்திரன் கோயில் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 378 இராமன், சீதை, இராவணன், அனுமன் குறிப்புகளையும் கொண்டவை என்பதைக் காணலாம். 

தமிழன் கொஞ்சம் உறங்கினால் சங்கஇலக்கியங்களே அடையாளம் தெரியாமல் அழிந்துவிடும் அபாயம் செந்தீ நடராசன் போன்றோரால் ஏற்படும் என்ற அச்சம் வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை இவர்போன்றோர் தம் “அறியாமை அடாவடி அதிரடி நாட்டாமை” முறை தீர்ப்புகளால் அழித்துவிடுவர். இவர்கள் அனைத்து இலக்கியங்களையும் பொருள்முதல்வாதம் மற்றும் ஐரோப்பிய ஆய்வுச் சட்டகங்களைக் கொண்டும் அடக்க முயல்வதுதான் இத்தகைய அவலங்களுக்குக் காரணம். உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதும், மேலேடுத்துச் செல்வதும்தான் பன்மைத்துவம் ஆகும். பன்மைத்துவத்துக்கு வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வேதமதத்து ஆரிய ஒர்ரைப்புனிதக் கொள்கைகளால் ஆபத்து என்றால், பொருள்முதல்வாதிகளால் ஏற்படுவது மற்றோர் பேராபத்து. பன்மைத்துவத்தாலான தமிழக மற்றும் இந்தியப் பண்பாட்டு அசைவுகளுக்கு இவை இரண்டுமே அச்சுறுத்தல்கள்தாம்.

 



பின்னிணைப்பு: சங்கப்பாடல்களில் இறைவனும் தெய்வங்களும்:

புறநானூறு
பாடல் எண். 55
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
10
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
15
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
20
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
                                        பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
(பி - ம்.) 1நாண்7பரிமா8எனும்13வெந்தெற16உடையாயாதலினில்லோர்’, ‘உடையையாதலினி17நீடுவையொழிய
திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.
உயர்ந்தமலையாகிய பெரியவில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி ஒப்பில்லாததோர் அம்பைவாங்கி மூன்றுமதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்கட்கு வெற்றியைக்கொடுத்த கரியநிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப்பக்கத்து அணிந்த பிறைசேர்ந்த திருநெற்றிக்கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம்போல மூவேந்தருள்ளும் மேம்பட்ட பூந்தாரையுடைய மாற! கடிய சினத்தை யுடையவாகிய கொல்களிறும் விரைந்த செலவையுடையவாகிய மனஞ்செருக்கிய குதிரையும் நெடிய கொடியையுடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சுவலியையுடைய போரைவிரும்பும் மறவருமென நான்கு படையுங்கூட மாட்சிமைப்பட்டதாயினும் மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால், அவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு அயலாரென்று அவர் நற்குணங்களைக் கெடாது, ஞாயிற்றைப் போன்ற வெய்யதிறலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற வண்மையுமென்ற மூன்றையுமுடையையாகி இல்லாதோர் இல்லையாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக, நெடுந்தகாய்! தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை அலைக்கும் செந்திலிடத்து நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறைக்கண் பெருங் காற்றுத்திரட்டுதலால் குவிந்த வடு அழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் - எ - று.
குணம்கொல்லாதுஎன்பதற்கு முறைமையழிய நீ வேண்டியவாறு செய்யாதெனினுமாம்.
பூந்தார்மாற! நெடுந்தகாய்! நான்குடன்மாண்டதாயினும், அரசின் கொற்றம் அறநெறிமுதற்று; அதனால் கோல்கோடாது, குணங்கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையையாகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலம் நீடுவாழியவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.


யமன், சிவன், திருமால், முருகன், பலதேவன்
56
        ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
5       மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
10      றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
15      ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
20      ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25      நின்று நிலைஇய ருலகமோ டுடனே.

 (பி - ம்.) 5மண்ணிய
திணை - அது; துறை - பூவைநிலை.
அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் (பி - ம். அவர்) பாடியது.
(இ - ள்.) ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணி போலுந் திருமிடற்றையுடையோனும், கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கையொக்கும் திருநிறத்தையுடைய கொலையைவிரும்பும் கலப்பையையும் பனைக்கொடி யையுமுடையோனும், கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திருமேனி யையும் வானுற ஓங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்பு வோனும், நீலமணிபோலும் நிறத்தையுடைய 1மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய2அம்மயிலாகிய ஊர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட உலகங்காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலியினையும் தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வருள்ளும், விலக்குதற்கரிய வெகுட்சியாற் கூற்றத்தை ஒப்பை; வலியால் வாலியோனை ஒப்பை; புகழாற் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒப்பை; கருதியது
முடித்தலான் முருகனை ஒப்பை; அப்படி அப்படி அவரை அவரை ஒத்தலான் எவ்விடத்தும் அரியனவுமுளவோ நினக்கு? ஆதலால், இரப்போர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின் கண்ணே ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக; வென்றியானுயர்ந்த வாளையுடைய மாற! அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே நிறைந்த இருளைப்போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் மேலைத்திக்கிற்றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப்போலவும் இவ்வுலகத்தோடுகூட நின்று நிலை பெறுவாயாக-எ-று.
3பிணிமுகம்-பிள்ளையாரேறும் யானையென்றும் சொல்லுப.
காலமுன்பென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவுகாலத்தைச் செய்யும் வலியை (புறநா. 41 : 1-3)
4மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற்றொழிலையுடைமையான்.
வாலியோனென்றது, நம்பிமூத்தபிரானை (பலதேவரை, ; கலித். 26 : 1, ந.)
இகழுநரடுநனென்றது மாயோனை.
ஆரிருளகற்றும் வெங்கதிர்ச்செல்வனென்றது எழுகின்றஞாயிற்றை.
5மதி-இளம்பிறை.
இது, தேவரோடு உவமித்தமையாற் பூவைநிலைஆயிற்று.

சிவன் பற்றிய குறிப்பு
91
        வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
5       பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
10      தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே.

(பி - ம்.) 1வளம்3முழவினதிகர்கோமான்’, ‘நறவினுதியர் கோமான்9 - 10தீங்கனிகுறையாதுகாதனின்11வெனக்கீத்தோயே’ ‘வெமக்கீத்தோயே
திணை - பாடாண்டிணை; துறை -வாழ்த்தியல்.
அவனை அவர் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது
(இ - ள்.) வென்றியுண்டான தப்பாதவாளையெடுத்துப் பகைவர் களத்தின்கட்பட வென்றகழல இடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையினையுடைமிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர்கோமான்! மாற்றாரைப் போரின்கட்கொல்லும்வீரச்செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்டமாலையையுமுடைய அஞ்சி! நீ, பால்போலும் பிறை நுதல்போலப்பொலிந்த திருமுடியினையும் நீலமணிபோலும் கரியதிருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல நிலைபெறுவாயாக;பெரும! நீ, பழைய நிலைமையையுடைய பெரியமலையிடத்துவிடரின்கண் அரிய உச்சிக்கட்கொள்ளப்பட்டசிறிய இலையினையுடைய நெல்லின் இனிய பழத்தைப்பெறுதற்கரிதென்று கருதாது அதனாற் பெறும் பெரும்பேற்றினைஎமக்குக்கூறாது நின்னுள்ளே அடக்கிச் சாதல் ஒழியஎமக்கு அளித்தாயாதலால்-எ - று.
நீல மணிமிடற் றொருவன் போலஎன்ற கருத்து, 1 சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும்நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல்வேண்டுமென்பதாம்.
அதியர்கோமான்! அஞ்சி! நெல்லித்தீங்கனிஎமக்கு ஈத்தாயாதலால், பெரும! நீ நீலமணிமிடற்றொருவன்போலமன்னுகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க.
பிறைநுதற் பொலிந்த சென்னிஎன்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னியெனினும்அமையும்.
கலித்தொகை 2:1-8;
சிவன் முப்புரம் எரித்தது.

2.தோழி கூற்று
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
5       உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
10      இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐஇய!

கலித்தொகை 38:1-5

சிவன் இராவணன் தலையில் பெருவிரல் ஊன்றியது:
       
தோழி கூற்று

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
5       எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:

கலித்தொகை 105:13
சிவனை கணிச்சியோன்எனவும் மணி மிடற்று அணிகொண்டவன் எனவும் கூறல்.
ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

10      தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,


கலித்தொகை 142:24-28

20      செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்?
கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
25      நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்?
'தெள்ளியேம்' என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே,
30      'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ,
உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்


கலித்தொகை 150.
சிவன்
தோழி கூற்று

10      பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?


திருமால் பற்றிய குறிப்பு
57
        வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
5       நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
10      கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே.

(பி - ம்.) 11யானைக்குக் கந்
திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி.
அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
(இ - ள்.) யாதொருகல்வியை மாட்டாராயினும் அதனை வல்லாராயி னும் புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனையொத்த சொல்லுதலமைந்த தலைமையையுடைய புகழ் அமைந்த மாற! நினது ஒரு காரியஞ் சொல்லுதலுடையேன் ; அது யாதெனின், நின்பகைவர் நாட்டைக் கொள்ளுங்காலத்து அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை நின்னுடைய வீரரும் கொள்ளைகொள்க; அகலிய இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயுஞ் சுடுக; மின்நிமிர்ந்தாற்போன்ற நினது 1பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல் பகைவரை அழிக்கினும் அழிக்க; யாவதும் காவன்மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக, நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டுநிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டாவாதலான்-எ-று.
2அவை இளமரமாதலால், நின் நெடுநல்யானைக்குத் தறியாதற்குப் பொறையாற்றாவென்று உரைப்பாருமுளர்.
3வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப்புகழ்ந்து முடியவொண்ணா மையான், மாயோனன்னவென்றார்; அன்றி அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின், அவ்வாறு கூறிற்றெனினும் அமையும்.
மாற! நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலால், கடிமரந்தடிதலோம் பெனக் கூட்டுக.
நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலாற் கடிமரந்தடிதலோம்பெனக் கூறுவான்போற் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சிஆயிற்று.

பலராமன் திருமால் பற்றிய குறிப்பு
58
        நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5       நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
10      நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
15      நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
20      ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
25      தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
30      கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.
(பி - ம்.) 10. மெளியவரைய
திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை.
சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
(இ - ள்.) நீ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன், பரிய அடி மாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை அதன்வீழ் தாங்கினாற்போலத் தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராகத் தான் தளராது நல்லபுகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்துத் தான் சிறிதேயாயினும் கிளையுடனே பாம்பை எறியும் பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறுபோல இளமைக் காலத்தும் பகைவரைக் காணப்பொறாத போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறுபோல்வான்; நீ, அறந்தாங்கும் உறையூரின்கண் அரசன்; இவன், நெல்லும் நீரும் யாவர்க்கும் எளியவெனக் கருதி அவைபோலாது யாவர்க்கும் பெறுதற்கரிய 1பொதியின் மலையிடத்துச் சந்தனமும் கடலிடத்து முத்துமென இவற்றை ஒலிக்கும் குரலையுடைய 2முரசம் மூன்றுடனே ஆளும் தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; நீர், பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியையுடையோனும் நீலநிறம்போலும் திருமேனியையுடைய ஆழியையுடையோனுமென்று சொல்லப்படும் இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல உட்குப்பொருந்திய காட்சியோடு அச்சம்வர விளங்கி இத்தன்மையீராகுதலின், இதனினும் இனிய பொருள் உளவோ? இன்னமும் கேளீர்; நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; நும்முள் ஒருவீர்க்கு உதவுவீராக, நீங்களிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின் ஒலிக்கும் திரையையுடைய கடல்சூழ்ந்த இப்பயன் பொருந்திய உலகங்கள் கையகத்தே அகப்படுதல் பொய்யாகாது; ஆதலால் நல்லனபோலே யிருக்கவும் நியாயத்தையுடை யனபோலே யிருக்கவும் பழையோரொழுகிய ஒழுக்கமுடையனபோலே யிருக்கவும் அன்புபொருந்திய நெஞ்சையுடைய நும் இடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய 3சிறப்பில்லாத மொழியைக் கேளாது இன்று போல்க, நுமது கூட்டம்; வென்றுவென்று கொலைக்களத்தின்கண் மேம்படுக, நும்முடைய வேல்; வளைந்த வரியை நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென முற்றாக உரைப்பாரும் உளர்.
5தொடுபொறி : பெயர்மாத்திரையாய் நின்றது.
ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீரு மென்பாரும் உளர்.
இருவரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலை ஆயிற்று.


இந்திரன் கோயில் பற்றிய குறிப்பு
241
        திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப் புறு முரசங் கறங்க
5       ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.

திணையும் துறையும் அவை.
1 அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடியது.
(இ - ள்.) திண்ணிய தேரைஇரவலர்க்கு ஈத்த குளிர்ந்தமாலையை யுடைய ஆய்வருகிறானென்று ஒள்ளிய தொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனதுகோயிலுள்ளே போர்த் தலுற்ற முரசம் முழங்க வானத்தின்கண்ஓசை தோன்றிற்று- எ - று.
இப்பெற்றிப்பட்ட வள்ளியோனைவானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு.
இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது.
________________________________________
(கு - ரை.) 3 - 4. ‘’வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம்” (மணி. 1 :27)

முருகன் பற்றிய குறிப்பு
299
        பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்திற்
றண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.

(பி - ம்.) 2உழுத்தருண்ட’, ‘உழுத்ததழுண்ட4யருத்தகொய’, ‘யருந்தக்கொய்’, 5கோணடை’,‘தண்டை மன்னர் தாருடைக் கலிமான்7கலங்கொடா...நின்றனவே
திணை - நொச்சி; துறை - குதிரைமறம்.
பொன்முடியார்.


இராமன், சீதை, இராவணன், அனுமன் குறிப்பு
378
        தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
5       நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
10      எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
15      செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும்
கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
20      நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை யெய்தி
அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.

(பி - ம்.) 3தொடையமைக்கண்ணி4குடைஇய’, ‘வடிம்பின றறைக்கிளளிசொழர்10வகுதகுவல்ல11னழுங்கல வெறுக்கை15விரறசெறிகுநருஞ16மனக்கமைமரபினமிடறு18கடுந்தேர்19 - 20ஞான்றுநிலஞ்21மிழைப்பொலிந்22வருநதை23கிணைத்தலைமை
திணை - அது; துறை - இயன்மொழி.
சோழன் செருப்பாழி யெறிந்த இளங்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் (பி - ம். மொழி......திபசுங்குடையநர்)
________________________________________
(கு - ரை.) 1. மிடல் - வலி.
2. வடுகர் - வடுகவீரர்; இவர் வடநாட்டினருள் ஒருவகையார்; "கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),
"குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி", " கதநாய் வடுகர்" (அகநா. 107 : 11, 213 : 8, 281 : 8, 295 : 15, 375 : 14, 381 : 7). ஓட்டிய - ஓட்ட.
1 - 2. "பரதவர் - தென்றிசைக்கட் குறுநில மன்னர்; அது, ‘தென்பரதவர்...................வாளோட்டியஎன்னும் புறப்பாட்டானும் உணர்க" (மதுரைக். 144, ந.)
3. தொடை அமை கண்ணி - கட்டுதலமைந்த தலைமாலை. வேலுக்கு மாலைசூட்டல் மரபு; புறநா. 332 : 1 - 5.
4. கடைஇய - செலுத்திய. வடிம்பு - இங்கே காலின் விளிம்பு; "மாவுடற்றிய வடிம்பு" (பதிற். 70 : 2)
5. கோயில் - அரண்மனை.
6. சுதை - சுண்ணச்சாந்து; "வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணி. 6 : 43); "திங்களுங் கரிதென வெண்மை தீட்டிய, சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை" (கம்ப.நகரப். 133); "வெண்சுதை தீற்றிய மாடம்" (நைடதம், நகர. 5)
7. பனிக்கயம் - குளிர்ந்த நீரையுடைய குளம் ; நகருக்குக் குளம் உவமை ; "கயங்கண் டன்ன வயங்குடை நகரத்து" (மதுரைக். 484) ; "நிழற்கயத் தன்ன நீணகர்" (அகநா. 105 : 7)
8. அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை ; "அரிக்கூ டின்னியம்" (மதுரைக். 612)
9. வஞ்சி - பகைமேற் செலவு ; புறநா. 15 : 24, 33 : 10
11. அருங்கல வெறுக்கை - பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமும் ;புறநா. 146 : 1.
13. இலம்பாடு - இல்லாமை உண்டாதல்; ஒக்கல் - சுற்றம் ; "இலம்படு காலை யாயினும், புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்" (புறநா. 380 : 15 - 6, 390 : 19, 394 : 16)
14 - 5. விரலிற் செறித்தற்குரிய மோதிரமுதலியவற்றைக் காதிலும், காதிற் செறித்தற்குரிய குழை முதலியவற்றை விரலிலும் செறித்துக்கொண்டாரென்றபடி.
16. அரை - இடை. யாக்குநர் - கட்டுகின்றவர். மிடறு - கழுத்து.
18. வடசொற் சிதைந்து பொருத்தமுடையனவாகச் சான்றோர் செய்யுளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல் எச்ச. சூ. 6, ந. ; இ. வி. சூ. 175, உரை.
19. அரக்கன் - இராவணன். ஞான்றை - சமயம் ; ஐ : சாரியை.
20. மதரணி - கதிர்த்த ஆபரணங்கள்.
20 - 21. குரங்கின் செம்முகப் பெருங்கிளை - செவ்விய முகத்தையுடைய பெரிய குரங்கின் குழு ; சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் ; "செம்முக மந்தி" (நற்.151 : 8) ; "துய்த்தலைச், செம்முக மந்தியாடும்" (அகநா.241 : 14 - 5). இழை - ஆபரணம் ; இழைக்கப்படுதலான் வந்த பெயர். 22. அறாஅ - நீங்காத. பெற்றிகும் - பெற்றோம்.
24. அரும்படரெவ்வம் - நினைவாலுண்டாகும் நோயின் வருத்தம் ; புறநா. 145 : 10.
மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘பெற்ற பின்னரும் பெருவளனேத்தி, நடைவயிற் றோன்றிய விருவகை விடை’ (தொல்.புறத்திணை. சூ. 30, இளம்.; சூ. 36, ந.) என்பதற்கு இது மேற்கோள்.


பாண்டவர் அரக்கு மாளிகைக்குத் தீ

25.தோழி கூற்று
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர்என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,


துரியோதனனை வீமன் கொன்றது

52.தோழி கூற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்


பாண்டவர் குறிப்பு

104.தோழி கூற்றும் தலைவி கூற்றும்
வரி புனை வல்வில் ஐவர் அட்ட

திருமால் உலகு அளந்தது

124.தோழி கூற்று
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்

பரிபாடல்

இந்திரன் சாபம் பெற்ற நிகழ்ச்சி
19. செவ்வேள்
உரை

'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:

சிவபெருமான் குறித்த பாட்டும் தொகையும்

கலி.38:1-5; அக. 181:16-19-அருந்தவத்தோன் புற. 1:12-13-ஆதிரையான் கலி.150:20-ஆயுதம் அகம். க. வா.1:5-6; புற. 56:1-2-உமையுடன் இருத்தல் முரு. 153; புற. 1:7-8-உமைபங்கன். ஐங். க.வா.பதி. ப. க.வா. 7-8; அக. க வா. 1:7- ஊர்தி பரி. 8:2; கலி. 150:13; அக. க.வா. 1:7; புற. 1:3-4; -கங்கை கொண்டமை பரி. 9:5-7; கலி. க.வா.1:2- கறைக் கண்டன் பதி. க.வா. 9-10-கறை மிடற்றன் பரி. 8:125-127; கலி. க.வா.1:3-4; 105:13; 142:24-28 புற. 1:5-6; 55; 1-5; 561-2- காட்டில் ஆடுதல் பதி. க. வா. 3-4-காபாலம் ஆடுதல் கலி.க.வா. 1:11-13-கொடி முரு. 151-152; கலி.26:5; புற. 1:3-4; 56:1-2-கொடு கொட்டி ஆடுதல் கலி. க.வா.1:5-7; -சடையன் பதி. க.வா.5; அக. க.வா. 1:9-10- சூலப்படை உடையான் பதி. க.வா.11-12; அக. க.வா.1:5-6:-நெற்றிக்கண் அக. க.வா.1:4; புற. 55:1-5-பாண்டரங்கம் ஆடுதல் கலி. க.வா.1:8-10-பிறைசூடி பதி. க.வா. 9; கலி.103:15; 142:24-28; 150:17; அக. க.வா.1:11; புற. 1:8-9; 55:1-5 - புலித் தோல் ஆடையன் அக. க.வா.1:14-15-மழுப்படை கொண்டிருத்தல் மது. 453-455; முக்கண் கொண்டமை முரு. 153; கலி. 104:11-12 முப்புரம் அழித்தல் முரு. 154; பதி. க.வா.3; பரி. தி. 1:76-78; பரி. 5:22-27; கலி. க.வா. 1:2; 2:1-8; புற. 55:1-5

திருமால் குறித்த பாட்டும் தொகையும்

பரி. 3:12-14, 81-82; 4:47, 67-69; பரி. தி.1:3-5; புற. 58:14-16; 198:9-அமரர்க்கு அமுதம் அளித்தமை பரி. 3:33-34 அரவணைக் கிடத்தல் பெரு. 371-373 -அரவின் பிடியிலிருந்து மதியை விடுவித்தல் கலி. 104:37-38-அவுணரை அழித்தல் மது. 590-591-அன்னமாய் வந்தமை பரி. 3:25-26-இராமாவதாரம் அக. 70:13-16; புற. 378:18-21-இருவர் தாதை பரி. 1:31-உந்தித் தாமரை பரி. 3:91-94; 4:60-61-ஊர்தி பரி. 3:16; -எல்லா நிலங்களையும் காட்டினமை மது. 763-கடல் கடைதல் பரி. தி. 1:64-71 கன்று கொண்டு விளவு எறிந்தமை முல். தனி 1:3; -கிருஷ்ணவதாரம் அக. 59:3-6; -குன்றம் எடுத்தமை முல். தனி 1:4; -கேசியைக் கொன்றமை பரி. 3:31-32-கொடி முரு. 150-151; பரி. 1:11, 60; 2:60; 3:17-18; 4:36-40; 8:2; 13:4, 38, 39, 41; புற. 56:5- 6-சக்கரபாணி நற். க.வா. 7; பரி. 1:61-சங்கு கலி.105:9 -சூரியனைத் தந்தது புற. 174:1-5 -திருவிக்கிரமாவதாரம் முல். 1-3; பரி. 3:54-56; கலி.124:1-3- திருமகள் கேள்வன் பரி. 3:90- திருமுறு மார்பன் பெரு. 29-30; பரி. 1:7-8; 38-39; 2:30-31; 4:59, கலி. 104:9-10; 108:55-56; 145:64-திருவோணத் திரு விழா மது. 590-591-நரசிங்காவதாரம் பரி. 4:12-21 -நான்முகனைப் பயந்தமை பெரு. 402-404- பரசுராமாவதாரம் அக. 220:3-9-பலராமனுக்கு இளையான் பரி. 2:20-23-பலராமாவதாரம் பரி. 1:1-5; 2:20-23; 13:33; கலி. 26:1; 36:1; 104:7-8; 105:11; புற. 56:3-4-பாற்கடலில் அரவணைத் துயில்தல் பரி. 13:26-29; கலி. 105:71-72; 123:3-4-மணிகள் பரி. 1:8-9-மல்லரைச் சாய்த்தல் கலி. 52:5; 134:1-3-மாலை பரி. 4:58; அக. 175:14-15-வராகாவதாரம் பரி. 2:16-17; 3:23-24; 4:22-24; 13:34-36

முருகன்  குறித்த பாட்டும் தொகையும்
முரு. 107-108; 116-117; 206-211; 264; தனி. 1-3; மது. 181; கலி. 105:17; அக. 120:1, 266:20-21-அசுரரை அழித்தல் குறு. 1:1-3-ஆடு பெற்றமை பரி. 5:61-62; -ஆறெழுத்து மறை முரு. 186-187- ஊர்தி புற. 56:7-8-கிரவுஞ்சமலையைப் பிளந்தமை முரு. 266-267; தனி 1:1-2குறு. க.வா.3-5; பரி. 5:9-10; 19:101-103; 21:8-9-குன்றம் அக. 149; 14-16; கொடி முரு. 38-39; 122; குறு. க.வா.3-5; பரி. 17:48-49; அக. 149:14-16; புற. 56:7-8-கொற்றவை சிறுவன் முரு. 258-259; பெரு. 457-459-கோழிக் கொடி பெற்றமை பரி. 5:55-58-சிவகுமாரன் முரு. 256-259; தனி. 3; கலி. 83:13-15-சூரனை வென்றமை முரு. 45-46; 275; தனி.1.2:பெரு.457-459; பதி. 11:3-6; பரி. 5:1-7; 9:70-71; 14:18; 18:3-4; 19:101-103; 21:8-9; 28-29; கலி.27:15-16; 93:25-26; 104:13; அக. 59:10-12-செந்தில் நகர் புற. 55:18-19; -தெய்வயானை கணவன் முரு. 4-6; 175-176; பரி. 9:8-11 தேவசேனாபதி. முரு. 260-தேவர் துயர்தீர்த்தல் முரு. தனி 1-2-பகைவரை அழித்தல் முரு. 98-100; பதி. 26:12; பரி. 21:66-67-பிறப்பு முரு. 253-255; பரி. 5:12, 27-54; 8:12-13, 125-127; 9:5-7; மயில் ஊர்தி பரி. 17:48-49; 21:2-மயில் பெற்றமை பரி. 5:58-60- மாமரத்தை அழித்தது முரு. 59-61; பரி. 5:1-7; 9:70-71; 18:3-4; 19:101-103; 21:8-9, 28-29; கலி.27:15-16; 104:13-மாலை முரு. 10-11; 43-44; பெரு. 75; பரி. 21:10-11; -யானை முரு. 81-82; 247: குறு. 1:1-3; பரி. 17:48-49-வள்ளி திருமணம் முரு. 100-102; பரி. 9:8-11:14:21-22; 19:5-7, 95; பரி. தி. 8:7-8

கொற்றவை குறித்த பாட்டும் தொகையும்
முரு. 258-259; பெரு. 457-459; குறு. 218:1-2

பலராமன்     

பரி. 1:1-5; 2:20-23; 13:33; கலி.26:1; 36:1; 104:7-8; 105:11; புற. 56:3-4

பாரதக் கதைகள் -

அரக்கு இல்லில் தீ     கலி. 25:1-4-அருச்சுனன் சிறு. 238-241-கன்னன் சூரியனது புதல்வன் கலி. 108:13; துச்சாதனன் துரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்தல் கலி. 101:18-20-பாண்டவர் பெரு. 415-417-பாரதப் போர்க்களம் கலி. 104:57-59; புற. 2:13-16-பீமன் சிறு. 238-241-பீமன் அரக்கு இல்லி லிருந்து ஐவரைக் காத்தல் கலி. 25:7-8-பீமன் துச்சாதனன் நெஞ்சத்தைப்பிளந்து வஞ்சினம் முடித்தமை கலி.101:18-20-பீமன் துரியோதனனின் துடையை முறித்தது கலி. 52:2-3

பிரமன் பரி. 3:12 - 14; 8:3; பரி. தி. 8:7-8-தாமரையில் தோன்றியவன் முரு. 164-165
பிரகலாதன்    பரி. 4:12-21
அகத்தியன்    மது. 40-42; பரி. 11-11
அகலிகை      பரி. 19:50-52
ஆதிசேடன்    பரி. தி. 1:58-59-உலகைத் தாங்குதல் பரி. ப. 1:74-75-கடல் கடைய நாண் ஆனமை பரி. தி. 1:64-71; -சிவன் வில்லுக்கு நாண் ஆனமை பரி. தி. 1:76-78
இந்திரன்       பரி. 5:58-60; 9:2-4; 19:50-52; பரி. தி.2:96-97; கலி. 105:15-யானை முரு. 157-159-வேள்வி பல செய்தமை முரு. 155-156
இயமன்                பரி. 5:61-62
இரதி-காமன்   பரி. 19:48-49
இராம காதை - தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்து, பறவைகளின் ஒலியை அடக்கியது
அக. 70:13-16-சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தமை புற. 378:18-21-சீதையை இராவணன் கவர்ந்து சென்றது புற. 378:18-21
இராவணன் கயிலை மலை எடுத்தமை       கலி. 38:1-5
இரு பெருந் தெய்வம்  அக. 360:6-9
ஒளவையார்   புற. 87; 88; 89; 90; 91; 93; 95; 99 அ.கு.; 100 அ.கு.; 140. அ.கு; 206 அ.கு.; 235
கடவுளுக்குப் பலி கொடுத்தல்        நற். 358:6
கடவுளை வாழ்த்துதல்        பெரு. 391
ஞாயிறு போற்றுதல்  முரு. 1-2; நற். 283:6-7
தாழியில் இட்டுப் பிணங்களைப் புதைத்தல்  நற். 271:11-12; பதி. 44:22-23; புற. 228:12-15, 238:1-5,364; 11-13
தெய்வ உருவிற்குக் கல் கொள்ளுதல்        பதி. ப. 5:4
தெய்வக் காணிக்கை  சிறு. 96-99
தெய்வங்கள் துாணில் இடம்பெற்றிருத்       புற. 52:12-13
தெய்வங்களுக்கு அந்திக் காலத்துப் பலி கொடுத்தல்        மது. 458-460
தெய்வத்தால் தெளிவித்தல்   கலி. 98:32
தெய்வத்தினிடம் வேண்டும் பொருள்கள்     பரி. 5:78-80
தெய்வத்திற்கு உயிர்ப் பலி கொடுத்தல்       அக. 166:6-7
தெய்வத்திற்குக் கையுறை கொடுத்தல்       அக. 156:13-16
தெய்வத்திற்கு நிலம் தானம் செய்தல்        பதி. ப. 7:8-9
தெய்வத்திற்கு பலி கொடுத்தல்       நற். 343:3-5; பதி. 30:33-37
தெய்வத்திற்குப் பலியிட்டு வணங்குதல்      ஐங். 259:3-4
தெய்வத்திற்குப் பூப்பலி செய்தல்     கலி. 93:24
தெய்வத்திற்கு மஞ்சளும் பூவும் அணிதல்    அக. 269:7-13
தெய்வத்தைச் சுட்டிச் சபதம் செய்தல் அக. 266:20-21
தெய்வத்தைத் தொட்டுச் சபதம் கூறல்       கலி. 108:55-56
தெய்வத்தைத் தொழுதல்     புற. 260:5
தெய்வத்தைத் தொழும் வகை        பரி. 8:97-102
தெய்வத்தைப் பரவுதல்        குறு. 263:4-6; பரி. 1:65-67, 2:75-76, 21:16-17
தெய்வத்தைப் போற்றும் இடங்கள்   பரி. 4:67-69
தெய்வத்தை வணங்கி வஞ்சினம் உரைத்தல் குறு. 208-210
தெய்வத்தை வழிபடுதல்      பரி. 14:30-31; புற. 99:1
தெய்வத்தை வேண்டிக் குழந்தை பெற்றமை ஐங். 257:1-2
தெய்வத்தை வேண்டுதல்     பரி. 18:54-56 தி. 1:81-82
தெய்வம் எல்லாப் பூவையும் ஏற்றுக் கொள்ளுதல்   புற. 106:1-3
தெய்வம் பலி பெறுதல்       நற். 251:8
தெய்வம் பேணித் தொழுதல்  பதி. ப. 9:10; பரி. 15:46-48 கலி. 101; 12-14
தெய்வ வழிபாட்டு முறை     நெடு. 42-44; குறி. 5-7
நடு இரவில் பேய்கள் வழங்கும் எனல்       நற். 171:9. 319:6
நடுகல் இருக்கும் நிலம்       புற. 314:2-3
நடுகல் நாட்டுதல்     அக. 67:8-10, 131: 8-11; புற. 221:11-13
நடுகல்லில் அம்பைத் தீட்டுதல்       அக. 297:6-7
நடுகல்லில் செய்தி பொறித்தல்      ஐங். 352:2
நடுகல்லிற்குக் காலை வழிபாடு ஆற்றுதல்  புற. 329; 1-5
நடுகல் வழிபாடு      புற. 232:3-6, 260: 25-28,263:8, 264:1-4, 265:1-5, 306:3-4

பார்ப்பனச்சிறுவர் குடுமி வைத்திருத்தல்     ஐங். 202:2-3
பார்ப்பார்க்குத் தானம் கொடுத்தல்    புற. 367:4-5
பார்ப்பார்க்குப் பசுவும் நிலவும் ஈதல் பதி. ப. 6:4-5
பார்ப்பார் நோவனவற்றை அரசர் செய்யாமை        புற. 43:12-14
பார்ப்பான் தூது செல்லுதல்   அக. 337:7-8; புற. 305:1-4


பெரும்பாணாற்றுப்படையில் தெய்வங்களும், இதிகாசப் பாத்திரங்களும்

கௌரவர் நூறுபேர் : அடி 415

ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய,


சூரபத்மனை முருகன் கொன்ற நிகழ்ச்சி : அடி 457-458

வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற      உரை
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,    


திருமால் உந்தியில் நான்முகன் தோன்றியது : அடி 402-403

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
உரை
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்  


பாண்டவர் ஐவர் : அடி 417
ஆராச் செருவின் ஐவர் போல


தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை.

தொல்காப்பியக் குறிப்பு
'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(பொருள். கற்பியல்: 190)

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

(பொருள். அகத்திணையியல் - 5)

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. வினையின் நீங்கிய முனைவன்என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.

காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.

திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(பொருள், புறத்திணையியல் : 85)

''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

எட்டுத்தொகை

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.

சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலித்தொகை
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........

(கலித்தொகை, 38)

(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....

இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)

கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடல்:

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்

(கலித்தொகை, 2)

(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)

இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.

புறநானூறு

உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே.....
(புறம் :91) (மிடறு - கழுத்து)
என்கிறார்.

பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்
(புறம் :166)

புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)

ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.

(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)

அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.

சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்என்று சிவனைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.

பத்துப்பாட்டு

சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய்
(சிறுபாணாற்றுப்படை, 96-97)
(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)

இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.

மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.
நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடனியற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக
(453-455)
(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்) என்ற குறிப்பு வருகிறது. இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.