Friday 31 March 2023

வான்கலந்த மாணிக்கவாசகம் தொடர் நாற்பது கட்டுரைகள் முழுவதும்

 

     வான்கலந்த மாணிக்கவாசகம் தொடர்

வான்கலந்த மாணிக்கவாசகம் 01

 மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்க-வாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழு-திய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்-கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் திருவாசகம்என்றும், ‘திருக்கோவையார்என்றும் வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்து-விட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போம்; ஏதாவது கிடைத்தால் சரி; இல்லன்னா மூடிவைப்போம் என்று முடிவெடுத்து, ஒரு பக்கத்-தைப் புரட்டினேன். கோயில் மூத்ததிருப்பதிகம்என்ற தலைப்பைப் பார்த்ததும் சப்பென்று போய்விட்டது. இருந்தாலும் ஒருவரி வாசிப்போம் என்று பார்த்தபோது, முதல் பாடலிலேயே நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதோ என்று தோன்றியது.

அந்தப் பாடலில் இறைவனிடம் அன்பு செய்வதற்கு, இறைவனிடமே ஒரு சின்ன ஒப்பந்தம் போடுகிறார் மாணிக்கவாசகர்: அப்பனே! அம்மையோ உன் இதயத்தின் நடுவில் இருக்கிறாள்! நீயோ அம்மையின் இதயத்தினுள் இருக்கிறாய்! நீவிர் இருவரையும் என் இதயத்துள் இருத்த எனக்கு ஆசை போட்டு அடிக்கிறது. அதற்கு நீர் ஒரு சிறிய உதவி எனக்குச் செய்தால் போதும். என்னை உன் அடியார்கள் நடுவில் கொண்டு வைத்துவிடும்என்பதுதான் அது.

உடையாள் உந்தன் நடு இருக்கும்! உடையாள் நடுவுள் நீ இருத்தி!

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்! பொன்னம்பலத்து எம்

முடியா முதலே! ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே! -திருவாசகம்:21-1

புரிந்துவிட்டது எனக்கு. திரையரங்கில் வழியும் கூட்-டத்தோடு கூட்டமாக நின்றாலே போதும். அக்கூட்-டத்தினரே நம்மை அரங்கினுள் சென்று சேர்த்து-விடுவதைப் போல, அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலே போதும். அவர்களுக்கு அரு-ளும் இறைவன் நமக்கும் அருள்வது உறுதி. அடிய-வர்கள் நடுவில் இருந்தால், அம்மை-அப்பனின் அருஞ்செயல்களைப் பேசுவர்; அவனின் திருவார்த்-தைகளைச் சிந்திப்பர்; அவனின் திருநாமங்களைப் பாடிக் களிப்பர். அந்தச் சூழலில், சொந்த முயற்சி இல்லாமலேயே, அம்மையப்பன் நம் இதயத்தில் குடியேறிவிடுவர். என்ன அருமையான சுருக்கு வழி. நாமும் இதற்கு முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று தீர்மானம்செய்துவிட்டு இறைவனைக் காணப்போகிறோம் என்ற நிறைவுடன் உறங்கினேன்.

ஏன் வானம் வசப்படவில்லை?

தமிழக சிவாலயங்களில் இப்போதெல்லாம் திருவா-சக முற்றோதுதல்அடியவர்களால் அதிகம் நிகழ்-த்தப்பெறுகின்றன. திருவாசகம் முற்றோதுதல்நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டபின்பு, திரு-வாசகம் ஓதுதலும், திருவாசகத்தில் உருகுதலும் அனுபவத்தில் கனிந்து வரும் நிகழ்வாக இல்லாமல், ‘திருவாசகம் முற்றோதுதல் நன்மை பயக்கும்என்ற நம்பிக்கை சார்ந்த ஒரு சமயச் சடங்காக நிகழ்வதாகவே ஒரு உணர்வு என்னுள் உண்-டாயிற்று. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்என்ற பழமொழி தமிழரிடை வழங்கி வருவதென்னவோ உண்மைதான். ஆயினும், ஏன் பலருக்கும் அந்த வானம் வசப்படவில்லை என்ற எண்ணமே பெரிதும் தலைதூக்கியது.

விசாரித்துப் பார்த்ததில், ஒரு சில அடியார்கள் சரியாக வழிகாட்டினார்கள். இராமலிங்க வள்ளலார் மாணிக்கவாசகரின் அடியொற்றி, இறைவனைக் கண்டவர் என்று கூறினார் அவர். அப்படியானால் சரி, வள்ளல் பெருமானையே கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து, திருவாசகத்தைப் பற்றி வள்ளலார் உரைத்த வான் கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்என்ற வாக்கைப் பற்றினேன். ஆம், வெறும் திருவாசக வாசிப்பு மட்டும் போதாது; ‘திருவாசகத்தில் நான்கலந்து பாடினாலே இறைவனைச் சிக்கெனப் பிடிக்க இயலும் என்பதை உணர்ந்தேன். அப்படி நான்கலந்து பாடினால் என்ன நிகழும்?

இதோ வள்ளல் பெருமானின் வாக்குமூலத்தைக் கேளுங்கள்:

நல்ல கரும்புச் சாற்றினில் தேன் கலந்து, பால் கலந்து, நன்கு பழுத்துக் கனிந்த பழச்சாற்றினைக் கலந்து ...”; சிறிது பொறுங்கள்; இத்தனையும் கலந்தால், திகட்டிவிடுமே? நன்றாக இருக்குமா? என்று கேட்டேன் வள்ளல் பெருமானிடம். பெருமான் கூறினார், “இத்தகைய சுவையுடன், உங்கள் ஊனையும், உயிரையும் கலந்து விடுங்கள்; திகட்டாமல் நிலைத்த இனிமை கிட்டும்என்றார்.

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”- வள்ளலார் பெருமான்.

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ? வள்ளல் பெருமான் வாழையடி வாழையாய் வந்த அடியார்த் திருக்கூட்ட மரபினுள்நம்காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தவர். அவர்வழி அடியொற்றி, திருவாசகத்தில் நாம் கலந்துசுவைத்து, இறைவனைச் சிக்கெனப் பிடித்து உயர்வடைவோம்.

 

 

02: தேவரும் அறியாச் சிவனே காண்க

வள்ளல் பெருமான் உரைத்த திருவாசகத்தில் நான்கலப்பது என்ற இறைவனுடன் இரண்டறக் கலக்கும் விதத்தை, பத்தாம் திருமுறை ஆசிரியரான திருமூ-லர் திருமந்திரத்தில்' அழகாகக் கூறியுள்ளார். அதையும் இங்கு நினைவுகூர்தல் நம் பார்வையைத் தெளிவாக்கும். வள்ளலார்க்கும் திருமூல தேவ நாயனார் ஒரு குரு அல்லவா?

திருமூலர் இறைக்கலப்பில் முழுமை அடைந்த மகான். தான் பெற்ற இறையின்பத்தை இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தருகிறார். உலகோர் அனைவருக்கும் குரு'வாக விளங்கும் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

இறைவன் எங்கோ விண்ணிலும், நாம் இங்கே மண்ணிலும் உறைவதாகக் கருதி, இறைவனைத் தேடும் அன்பர்களுக்கு, “இறைவன் எங்கோ உறைவ-தில்லை; இன்னும் சொல்லப்போனால், இறைவனுக்-கென்று தனியே ஓர் உறைவிடம் இல்லை; ஏனெனில், அவன் எங்கும் நிறைந்தவன்; எப்படி-யென்றால், தேனுக்குள் உறைந்துள்ள இனிப்புஎன்னும் இன்பத்தை எவ்வாறு கருப்பு, சிவப்பு என்று குறிப்பாக அடையாளம் காட்ட இயலாமல் எங்கும் அவ்வின்பம் செறிவாக நிறைந்துள்ளதோ, அதைப்-போலவே, எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் ஊனுடம்புக்குள்ளும் செறிவாக மறைந்து உறைகின்றான்”. என்கிறார் திருமூலர்.

தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!'' – திருமந்திரம்

ஒரு பாதிரியாரை திருவாசகம் கவரமுடியுமா?

திருவாசகத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் பெருமையை உலகோர் அனைவருக்கும் பறைசாற்றியவர் லண்டன் மாநகரி-லிருந்து தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்-டத்திலுள்ள சாயர்புரம் என்ற ஊரில் கிறிஸ்தவத் தொண்டாற்றிய ஆங்கிலேய அருட்தந்தை ஜி. யூ. போப் அவர்கள். தமிழ்மறையாம் திருவாசகம் உலகெங்கும் பேசப்பட்டது தமிழர்கள் அனைவ-ருக்கும் பெருமையான செய்தி. அதேவேளை, எல்லோருக்குமான ஓர் ஐயம், சிவனை முழுமு-தற்கடவுளாகப் பாடி உருகும் திருவாசகம் ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையை எப்படிக் கவரமுடியும்? இது ஒரு முரண்பாடாகத் தெரிகிறதே என்பதாகும்.

இதில் ஒரு முரண்பாடும் இல்லை; இறைவன் ஒரு-வனே ஆதலால், திருவாசகத்தில் சிவன்' ஆகக் காட்சியளிக்கும் அதே இறைவன்தான் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களுக்குப் பரமண்டலத்திலிருக்கும் பிதாவாக, இயேசு பெருமானால் அடையாளம் காட்-டப்பட்டார். வெறும் நம்பிக்கை சார்ந்து வாழாமல், ஊனுக்குள் ஒளிந்திருக்கும் பிதாவை' உணர்வில் கண்டுகொண்ட அருட்தந்தை போப் அவர்களுக்குத் திருவாசகத்தில்' ஒளிந்திருக்கும் 'சிவனே' அவர் வழிபடும் பரமண்டலப் பிதா' ஆவார் என்பதை எளிதாக அடையாளம் காண இயன்றது.

 

திருவாசகத்தின் உருக்கத்தில் கரைந்தார் அருட்-தந்தை; அவர் லண்டன் நகரின் தேவாலயத்தில்  முழந்தாளிட்டுச் செபம் செய்யும்போது, தன்னருகில் மாணிக்கவாசகரும் முழந்தாளிட்டு செபம் செய்ததாகத் தான் உணர்ந்ததைத் தன்னுடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் பதி-விட்டுள்ளார். இதுவே சமயம் கடந்த பக்திநிலை; பன்மைத்துவத்தைப் போற்றும் நிலை; இறைவனை உணர்ந்த அருளாளர்களுக்கு இம்மனநிலையும், இறை அருளும், அமைதியும், பேரின்பமும், வீடுபேறும் கிட்டும்.

மாணிக்கவாசகர் இறைவனை நேரிலே கண்டதாக அவர் வாக்கிலேயே கேளுங்கள்:

பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க

யாவரும் பெறவுறும் ஈசன் காண்க

தேவரும் அறியாச் சிவனே காண்க

கண்ணால் யானுங் கண்டேன் காண்க - திருவாசகம்: அண்டப்பகுதி-37,38,55,56,58

 

குருவடிவில் தோன்றிய இறைவன்

இளமைப் பருவத்திலேயே கல்வி-கேள்விகளில் தேர்ந்த மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பாண்டிய நாட்-டின் எல்லாவகைச் செல்வங்கள், பதவிகள், அதிகாரங்கள் அனைத்தும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்; அப்படிப்பட்டவர் பாண்டிய நாட்டின் குதிரைப்-படைகளை வலுப்படுத்த, அரசனின் ஆணைப்படிப் புதிய குதிரைகளை வாங்க திருப்பெருந்துறைக்குச் செல்கிறார்; சென்ற இடத்தில், திருமறை பயிற்-றுவிக்கும் குருவடிவில் தோன்றிய இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பாண்டியப் பேரரசின் முதலமைச்சராக, அதிகாரத்தின் உச்சத்தில், அனைத்-துவகைச் சுகபோகங்களுடனும் வாழும் ஒரு மனிதனைத் திருவாசகம்பாடத் தேர்ந்தெடுக்க இறைவனுக்கு ஒரு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.

உலகில் வாழ்ந்து பெற்ற பட்டறிவினால், உலகஇன்பங்களின் நிலையாமையை உணர்ந்து, தன்னை அறிந்து, தலைவனாம் இறைவனை' அடைய எத்தனையோ யோகிகளும், ஞானியரும் தவமாய்த் தவம் கிடக்க, இதைப்பற்றித் துளியும் சிந்திக்கவே வாய்ப்பும், நேரமும் இல்லாத பாண்டிய நாட்டின் முதலமைச்சர் மாணிக்கவாசகரை வலியத் தேடிவந்து, இறைக் காட்சித் திருவருள் தந்தது ஏன் என்பதே நாம் அனைவரும் அறிய விரும்புவது.

சராசரி மனிதனின் பார்வையில் மாணிக்கவாசகர் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் நுகரும் வாய்ப்பு கொண்ட சர்வவல்லமை கொண்ட ஒரு முதலமைச்சர். இவை அனைத்தையும் விட்டுவிட்டு, “அளவற்ற இறைப்பேரின்பம் பெற்ற அவரின் அனுபவப் பிழிவான திருவாசக வரிகள்மற்ற மனிதர்களுக்கு இறைத்தேடல் நிகழ்த்த நம்பிக்கையான வழிகாட்டியாக இருக்கும். அவ்வாறு, “மனிதன் இறைவனுக்குச் சொன்னதே திருவாசகம்மனிதனுக்கு இறைகாட்சியை உணர்த்தும் அற்புதமான ஆற்றுப்படைத் தமிழ்மறையே திருவா-சகம் என்று நாம் அறியவேண்டும்.

நம்முன் உள்ள மற்றொரு முக்கியமான ஐயம், இறைக்காட்சி கிடைத்தாலும்கூட, மனிதஉடலில் வாழும் எவருக்கும் இறையின்பத்தைச் சுவைத்து அறியமுடியாது என்றும் கூறப்படுகிறது. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்என்ற விதியை மாணிக்கவாசகருக்காக மட்டும் இறைவன் தளர்த்தியது ஏன் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

---------------

வான்கலந்த மாணிக்கவாசகம் 03:சொற்பதம் கடந்த தொல்லோன்

திருவாசகம் என்பதற்குப் பொருள்-அழகிய, தெய்வத்-தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய பாடல் என்கிறார் தமிழ்க்கடல் மகாமகோபாத்தியாய பண்டி-தமணி கதிரேசன் செட்டியார். எல்லையற்ற பெருங் கருணையாளனான சிவப் பரம்பொருளை, மனிதன் மனம், மொழி, ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் ஆகியன கொண்ட மெய்எனப்படும் மனிதஉடலால் அறிய முடியாது என்பது ஞானிகள் கண்ட உண்மை. அத்தகைய இறைவனை, திருவாசகம் உணர்ந்து ஓது-வதால் உணரலாம்; அடையலாம். இறை உணர்வு பெறாத மனித உடலிலுள்ள ஊனக் கண்களைக் கொண்டு இறைவனைக் காண இயலாது என்பது திருவாசகச் சான்று.

சொற்பதம் கடந்த தொல்லோன்

கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன்;

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் திருவாசகம்:3:111-113.

உரை உணர்வுகளான மன, மொழி, மெய் ஆகியன கடந்தால் மட்டுமே இறைஉணர்வு என்னும் கண்ணைப் பெற முடியும். ஆதலால், அத்தகைய இறைஉணர்வுஎன்னும் மாபெரும் ஆற்றலை மனித உடலில் வாழும் சாதாரண மனிதன் யாரும் பெற இயலாது.

நமக்கெல்லாம் அருளவே விதிமாற்றப்பட்டது

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்என்ற விதியை இறைவன் தளர்த்தியது, எந்த மனிதனும் இறைவுணர்வை எளிதில் பெறும் ஆற்றல் கொண்ட திருவாசகத்தை மணிவாசகரின் திருவாயால் பாடும்-படிச் செய்வதற்காகத்தானே தவிர மணிவாசகர் பொருட்டு அன்று; சாமானியர்களான நமக்கு அருள் புரிவதற்காகத்தான் இறைபேரின்பத்தைத் தம் அனுப-வத்தில் பெற்றமணிவாசகரைப் புவியில் சிலநாட்-கள் வாழ்ந்து, பின் தில்லை வருமாறு பணித்தான் இறைவன்.

எல்லையற்ற இறையின்பம் என்னும் இறையருட் கண்ணைப் பெற்றுப் பின் அக்கண்ணில்லாத வாழ்-வின் ஏக்கமே திருவாசகமாகப் பொழிந்தது. இறைய-ருட் கண்ணைப் பெறாத பிறவிக்குருடர்களான நம் போன்றோருக்கு இறையருட்கண் வழங்க மணிவா-சகப் பெருமானால் அருளப்பட்டதே திருவாசகமாகும். கண், வாய், காது முதலிய உடல் கருவிகளைக் கொண்டு இது’, ‘அதுஎன்று பொருட்களைச் சுட்டிக்-காட்டி, நாம் பெறும் அறிவே உரைஉணர்வுகொண்டு அறியும் அறிவு; அதைக் கடந்துசென்று, ‘இறைவனின் அருள்என்னும் கண்கொண்டே இறைவனைக் காணவும், உணரவும் முடியும். அத்-தகைய இறைவனை மனிதவுடலில் வாழும் நம்-மைப் போன்றோருக்கு உணர்த்தும் ஆற்றலைத் தமக்குத் தருமாறு மணிவாசகர் இறைவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதை அவர் வாக்காலேயே இதோ அறிவோம்..

உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே!

யான் உன்னை உரைக்குமாறு உணர்த்தே!” – திருவாசகம்:22-3

மாதவம் செய்தவர்கள் தமிழர்கள்

நாம் உய்ய, இறையுணர்வை உள்ளீடாகக் கொண்டு மணிவாசகப் பெருமான் அருளிய உயிர் உருக்கும் தமிழ்மறையே திருவாசகம். மெய்யன்புடன் ஓதுவார், கேட்பார், உணர்வார் அனைவருக்கும் பேரின்பப் பரவசம் தந்து இறையனுபவம் தருபவை. எத்து-ணைத் மாதவம் செய்திருந்தால் நாமெல்லாம் தமிழர்களாகப் பிறந்திருப்போம் என்று எண்ணிப்-பாருங்கள். அங்ஙனம் செய்த தவத்தை வீணாக்-காமல் திருவாசகம் படித்து, உணர்ந்து நாமெல்லாம் உய்தியடைவோம்.

திருவாசகத்தேனை சுவைக்க மொழி ஆளுமை மட்-டுமே போதாது. திருவாசகம் குறித்த பதஉரை, விளக்கஉரை, தெளிவுரை என்று பல அறிஞர்களின் நீண்ட விளக்க நூல்களைப் படித்த பின்னும் நம் இரும்பு மனங்கள் ஏன் உருக மறுக்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். திருவாசகம் கற்பதற்கான நூல் அன்று; இறைவனை உணர்வதற்கான வாசகம். திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்-தாலும், மொழி ஆளுமையினால் மட்டும் அதன் ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது; நிபந்தனை-யற்ற, எதிர்பார்ப்பில்லாத, வரம்பில்லாத இறை-யன்பே திருவாசகத்தின் அடிநாதம்-இயல்புமொழி. அந்த அன்புமொழி புரிந்தால்தான் திருவாசகத்திற்கு உருக இயலும்.

கற்றாவின் மனம்போலக் கரைக!

மணிவாசகத்தில் சொல்வதானால், இறைவனின் திருவடி அருளைப் பெற, கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போலக் கசிந்துருக வேண்டும்; கன்றை ஈன்ற பசுவின் மனம், தான் ஈன்ற கன்று வளர்ந்து, தனக்கு இதைச் செய்யும், அதைச் செய்யும்என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றியே, தன் கன்றின்மேல் கொண்ட அன்பு ஒன்றாலேயே அது உருகுகின்றது; “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்-டுகிறேன்என்று குற்றாலத்துறையும் இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறார் மணிவாசகர்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! திருவாசகம்:39-3

கன்றை இழந்த கறவை மாட்டிடம் நாம் எப்படிப் பால் கறப்போம் என்பதைச் சற்று சிந்திப்போம். வைக்கோல் பொம்மைக் கன்றுக்குட்டியைக் காட்டித்-தானே? “மாணிக்க வாசக! சிலநாட்கள் இங்கு வாழ்ந்து, பின் தில்லைக்கு வந்து என்னைப் பார்என்று இறைவன் மணிவாசகரைப் பிரிந்ததால்தான் மணிவாசகரின் மனம் கற்றாவின் மனம்போலக் கசிந்துருகியது; நமக்கான திருவாசகம் கிடைத்தது. இதுவே இறைவன் நமக்காக நிகழ்த்திய திருவிளையாடல்.

எவரொருவர் திருவாசகச் சூழலில் தன்னைப் பொருத்தி மாணிக்கவாசராகவே உருகிக் கரைகி-றாரோ, அவருக்கு இறைவனை அடைவது மிக எளிது. இதைத்தான் வள்ளலார் “ “நான்கலந்து பாடுங்கால்என்று நமக்குச் சொன்னார். திருமூலதேவர் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்என்றார்.

மாணிக்கவாசகரைப் பலப்பல கடினமான சோதனை-களும், துயரங்களும் பெருமழைபோல் தாக்கின. அவைகளின் காரணமாக, உலகின் பலதரப்பட்ட குறைபாடுள்ள மனிதர்களின் குற்றங்களைத் தாமே செய்ததாகத் தம்பால் ஏற்றிக்கொண்டார் மணிவாசகர்; அத்துன்பச்சூழலில், அவர்களாகவே மாறிப்போய் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதால் பிறந்தன பல்வேறுவகைத் திருவாசகப் பாடல்கள்.

திருவாசகப் பாடல்களில் கரையும் குறைபாடுள்ள பலதரப்பட்ட மனிதர்கள், “இதோ இப்பாடல்கள் எமக்காகவே படைக்கப்பட்டன; “இவை நமக்கா-னவை” “ என்று உணர்வார்கள், கடைத்தேறுவார்கள் என்பது உறுதி. மாணிக்கவாசகர் முதன் முதலில் சுவைத்த இறையின்பம் குறித்து விரிவாக அறிய நமக்கெல்லாம் ஆசை உண்டல்லவா? தாம் பெற்ற முதல் இறைஅனுபவத்தை மணிவாசகர் நம்முடன் அணுஅணுவாகப் பகிர்ந்துகொள்வதை அடுத்த வாரம் காண்போம்.

 

 

 வான்கலந்த மாணிக்கவாசகம் 04: நம்முள்ளும் அமுதே

 

மாணிக்கவாசகர் இறைவனின் கட்டளைப்படியே பல சிவத்தலங்களையும் தரிசித்து, தில்லைக்கு வருகின்-றார். தில்லைவாழ் சிவனடியார்கள் மாணிக்கவாச-கரை வணங்கி, வரவேற்று மகிழ்ந்தனர். பின் அடி-களிடம், “நாங்கள் சிவனடி-யார்கள்; சிவபெருமானின் பெருமையெல்லாம் அறிந்திருக்கின்றோம்; ஆயினும் கண்ணால் காணும் பேறு பெறவில்லை; பிரம்மனும், திருமாலும் காணமுடியாத சிவபெருமானைத் திருப்-பெருந்துறையில் தாங்கள் கண்டுகளித்த அனுப-வத்தை எங்களுக்கு அறியத் தாருங்கள்என்று விண்ணப்பித்தனர்.

அடியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டதும், இறைப்பேரின்ப நிகழ்வுகளின் நினைவுகள் மாணிக்-கவாசகப் பெருமானை ஆட்கொண்டன; தம்மைச் சுற்றி நிற்கும் அடியாரை மறந்தார்; தம்மையே மறந்தார்; இறைப்பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்; அடிகளின் மனம், மொழி, மெய் எல்லாம் கனிந்-துருகத் திருவாம் இறைவனில் கரைந்த அனுப-வத்தை விளக்கும் கோயில் திருப்பதிகம்என்னும் பத்துப் பாடல்களும், முன்னிற்கும் இறைவனுடன் பேசும் திருவார்த்தைகளாக, சிவனடியார்கள் அனை-வரின் ஊனினை உருக்கி, என்புருக்கும் இறைக்-காட்சியாய் விரிந்தது.

இறைவனை உள்ளவாறு காண ...

தேனினும் தெளிவான சிவபெருமானே, திருப்பெ-ருந்துறையில் உறையும் சிவனே! சொர்க்கப்பதவி, பிரம்மலோகப் பதவி, வைகுண்டப் பதவி போன்று முடிவில்லாத பல பதவிகள் எல்லாவற்றையும் கடந்த இன்பமே! என்னுடைய அன்பே! உன்னை எனக்கு உணர்த்தும் கடமைகளிலிருந்து மாறி நின்று, என்னை மயக்கிடும் மெய், வாய், கண், மூக்கு, செவியாம் ஐந்து வஞ்சகப் புலன்களின் வாயில்-களையும் அடைத்து, அமுதமாய்ச் சுரந்து நின்று, என்னுள்ளே உதிக்கின்ற இறையொளியே! யான் உன்னை உள்ளவாறு கண்டதை அடியவர்கள் காணும்படி வந்தருள்வாயாக!என்று அருளிய மாணிக்கவாசகப் பெருமான் பரவசத்தில் மூழ்கினார். (தேறலின் தெளிவே - தேனின் தெளிவானவனே)

மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே

ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய்

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையுறை சிவனே

ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.

திருவாசகம்:20-1

இந்திரன், பிரம்மன், திருமால், உருத்திரன் உள்ளிட்ட எண்ணற்ற தேவர்களுக்குரிய எண்ணற்ற பதவி இன்-பங்களினும் மேலான இன்பவடிவினன் சிவபெரு-மான்-எனவே, 'ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே' என்றார்; ‘அன்பே சிவம்ஆகை-யால், 'என்னுடை அன்பே' என்றார்; மாறி நின்று மயக்குதல் என்பது, இறைநெறியில் சென்று பேரின்ப முழுமையறிவைப் பெற விடாமல் வழிமாறச் செய்வது; ஏனெனில், மனம் என்னும் கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்துபுலன்களும் அவைக-ளுக்குரிய ஐந்துபொறிகள் வழியாக மனதைத் தம் வழியே திசைதிருப்பும் தன்மையுடையன.

மயக்கும் புலன்கள்

அறிவு பெறுவதில் நமக்கு வரமாகச் செயல்படும் பொறி,புலன்களே உலகச் சிற்றின்பம் துய்ப்பதற்கும் வாயில்களாக உள்ளமையால், பலவேளைகளில் மனதைத் தீய வழிகளில் திசைமாற்றும்போது சாபமாக மாறிவிடுகின்றன. எனவேதான், அவைகளை மயக்கும் வஞ்சப்புலன் ஐந்தின் வழிஎன்றார் மணிவாசகர். எனவே இவைகளின் துணையுடன் இறைவனைக் காண இயலாது. சுவை, ஒளி, தொடுதல், ஓசை, மணம் என்று சொல்லப்படும் ஐம்புலன்களையும், மனதையும் தன்வயப்படுத்தி அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனுக்கே இவ்வுலகம் வசப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

 

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. -திருக்குறள் 27

 

அப்பர் சுவாமிகளும் இறைவனின் அருள்என்னும் கண்கொண்டு கண்டாலொழிய, மற்றைப் பொருட்கள்போல இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது என்கிறார்;

இறைவனின் அருள் என்னும் பேரின்பம் உள்ளேயிருந்து ஊறி எழும்போது, மயக்கும் ஐம்புலன்களும் செயல்மறந்து போவதால், ‘அடைத்து அமுதே ஊறி நின்று' என்றார். உலகோர் அனைவரும் இறைவனை கண்டுகளிக்குமாறு வழிகாட்டும் விருப்பத்தால், 'உள்ளவா காண வந்தருளாய்' என்றார். இறைவன் வெளிப்பட்டுத் தோன்றும்போது, புற உலகத்தையே காணும் உடலும் புலன்களும் மாறி நின்று மயக்கும்செயல்மறந்து, இறைக்காட்சி காணும் புலன்களாக மாறும். தளைகள் அணுகவியலா இறைவன் உயிரை அணுகினால், உயிரைக் கட்டிய தளைகள் நில்லாமல் சென்று ஒழியும் என்பது திருமூலர் வாக்கு.

சார்ந்த வண்ணம் ஆதல்உயிரின் தன்மை (தத் த்வம் அசி) - நீ அதுவாக இருக்கிறாய்என்று வேதமும் கூறும். அதாவது, “நீ உடலைச் சார்ந்து, ‘உடலே நான்என்று வாழ்கிறாய்என்கிறது வேதம். உடல்-பொறி-புலங்களால் கட்டுண்ட நாம்உடல்-பொறி-புலன்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்; இறைவனைக் காண்பதற்கு இதுவே முதல்படி ஆகும். இதில் வெற்றி கிட்டும்போது, நம்முள்ளும் அமுதே ஊறிநின்று பரஞ்சோதியாம் இறைவன் எழுந்து, உள்ளபடியே நாம் காண வந்தருள்வான் என்பது உறுதி. இறைக்காட்சிக்கான இரண்டாவது தகுதியைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

 வான்கலந்த மாணிக்கவாசகம் 05: காதல் செய்து உய்ம்மின்

 

புலனடக்கத்தை இறைவனைக் காண்பதற்கான முதல்படியாகக் கண்டோம். மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினையாதேஎன்றால் குரங்கு மட்டுமே நினைவில் இருப்பதுபோல், மனதால் புலன்களை அடக்கும் கடினமான கூர்நோக்குப் பயிற்சிகள் மிகவும் கடினமானவை; பலன் தருவதைப் போல் தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் புலன்களின் வழியே மனம் வழிதவறிப் போகும் ஆபத்துள்ளது. புலனடக்கத்துக்கு மிக எளிதான வழி, இறைவனிடம் அன்பில் கரைந்து போதலாகும். தன்னுள்ளே அமுதாய் ஊறி எழுந்த இறைக்காதலால், “என்னுடை அன்பேஎன்றுருகிய திருவாசகத்தில் கரைந்தனர் சிவனடியார்கள்.

ஆனந்தமாய்க் கசிந்துருக

அனைத்திற்கும் முன்னுமாய், பின்னுமாய், முழுதுமாய், எங்கும் நிறைந்த, தளைகளற்ற தூயவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையையுடைய சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனது உயிரோடு உடம்பும் இன்பவெள்ளமாய்க் கசிந்து உருகும்படி, என் நிலைக்குத் தகுதியில்லாத, உனது இனிய அருளைப் புரிந்தாய்! இந்தப் பேருதவிக்கு, யான் உனக்குத் திரும்பச் செய்யக்கூடிய உதவி இல்லாதவனாயிருக்கிறேன்.என்று உருகினார் மணிவாசகர். (முத்தன்தளைகள் அற்றவன், முதல்-பரம்பொருள், ஆக்கை-உடம்பு, என் பரம்அல்லா - என் நிலைக்குத் தகுதியில்லாத)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக

என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு!

முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே!

தென்பெருந் துறையாய் சிவபெருமானே! சீருடைச் சிவபுரத்து அரைசே! திருவாசகம்: 22-2

அன்பினால் உள்ளக் கனிவோடு உடலும் நெகிழ்வதால், 'ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக' என்றார். எதுவும் வேண்டாத, பெருங்கருணையாளனான இறைவனுக்குச் சிற்றுயிர்கள் என்ன செய்ய இயலும் என்பதை 'யான் இதற்கு இலனொர் கைம்மாறு' என்றார்.

அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாதவன் தேவர் பிரானும், உண்மையான வீரனும், அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும்’, ‘பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாலும் அறிய முடியாத, முதல்வனாகிய, இன்ப வடிவினனும்’, ‘அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாத’, மலர் போன்ற ஒளியையுடைய இறைவனது, தூய மாமலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நம்தலை நிலைபெற்று நின்று விளங்கும், என்று சென்னிப்பத்து பதிகத்தில் அருளினார் மணிவாசகர்.

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,

மூவராலும் அறியொணா முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,

யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறியொணா மலர்ச் சோதியான்,

தூய மாமலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே! - திருவாசகம்: 42-1

மூவராலும் அறியொணாத முதல்' ஆயினும், அன்பராயின் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பார், மாம்பழத்தோட்டத்தில் இருந்தாலும், மாம்பழத்தைப்பற்றி அறியாதவன் பசியோடேயே இருப்பான். அறிந்தவனும், பறித்து உண்ணாவிட்டால் பசிதீரமாட்டான். இறைவனைப் பற்றிய ஞானமில்லாதார் இறைவனை அறிய மாட்டார்கள்; இறைவனைப் பற்றிய ஞானமுடையார் அவன் இருப்பையும், தன்மையையும் அறிவினால் அறிவரேயன்றி, ‘இறைவனிடம் காதல் செய்யாவிட்டால்அனுபவத்தில் உணர மாட்டார்கள் ஆகையால் ஞானத்தினாலும் அவன் உணரப்பட மாட்டான்.

ஞானம் இருந்தும், ஆணவத்தால், மாலுக்கும், பிரமனுக்கும் இறைவனின்அடி-முடி அறியமுடியாமல் போயிற்று. அன்பனுக்கே இறைவனின் சுவையறிய இயலுமாதலால், 'யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்று இறைவனது எளிமைத்தன்மையைக் கூறினார். இதனால், இறைவன் அன்பரல்லாதார்க்கு அறியமுடியாதவன் என்பது புலனாகும். காதல் ஒன்றே அவனை அடையும் வழி.

இளமையிலேயே காதல் செய்யுங்கள்

அடியவர்களிடம், “அன்பர்களே! காலம் நம்வசம் உள்ளபோதே, இறைவனிடத்தில் காதல் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள். நினைத்தற்குஅரிய, உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமன், மற்றைய தேவர்களும் எளிதில் பெறஇயலாதவன், நஞ்சத்தை அமுதாக உண்ட, எங்கள் பாண்டிப்பெருமானாம் இறைவன்,

தன் அடியவர்களுக்கு, மூலபண்டாரமாகிய தனது அருள் முதற்கருவூலத்தைத் திறந்து அள்ளிஅள்ளி வழங்குகின்றான்; அதனைப் பெறுதற்கு, விரைவாக வந்து முந்திக்கொள்ளுங்கள்என்று கருணையோடு அறிவுறுத்தினார் மணிவாசகர். (ஞாலம் உண்டான் - உலகத்தை உண்ட திருமால், நண்அரிய எளிதில் அடையஇயலாத, ஆலம்உண்டான் - நஞ்சை உண்ட சிவபெருமான், மூலபண்டாரம்- முதற்கருவூலமாம் அருள், உய்மின் பிழைத்துக்கொள்ளுங்கள்)

காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய

ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய

ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து, முந்துமினே. திருவாசகம்:36-5

இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின்பயன் ஆதலின், 'காதல் செய்து உய்ம்மின்' என்றார். அதனை இளமையிலே தொடங்கினால் மட்டுமே போதிய காலம் கிடைக்குமாதலால், ‘காலம் உண்டாகவே' என்றார். இளமையில் இறைச் சிந்தனை தேவையில்லை; இளமையில் பொருள் மட்டும் தேடிக்கொள்வோம்; ஓய்வு பெற்றபின் இறைப்பேற்றைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் பலரும், முதுமையில் கண், காது முதலிய பொறி-புலன்கள் குறைவுபட்டு, பல்வகை நோயில் அவதியுற்று, பிறவிப்பயனாம் இறைச் சிந்தை எழவொட்டாமல், படுக்கையில் வருந்துவதைக் காண்கிறோம். மனிதப் பிறவிகளின் இப்போக்கைக் கண்டு வருந்திய அய்யன் திருவள்ளுவர் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவான பிறவிக்கு மனிதனை இட்டுச்செல்லும் என்றார்.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. திருக்குறள்: 351

எனவேதான் காலம் உள்ளபோதே, இளமையிலேயே, பொருள் சேர்க்கும்போதே, அருளையும் சேர்க்கும் வண்ணம், இறைவனிடம் 'காதல் செய்து உய்ம்மின்' என்றார் மணிவாசகப்பெருமான். கொடியநஞ்சை உண்டு, நாம்வாழ அமுதம் வழங்கிய தியாகேசன் சிவபெருமானிடம் தாம்பெற்ற இறைஇன்பத்தை நாமும் பெற வேண்டும் என்ற அன்புள்ளத்தினால், 'மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்றார் மணிவாசகர். மூலபண்டாரம்-திருவருள் கருவூலம், அதில் உள்ள நிதி, வீடுபேறுப் பேரின்பம் ஆகும். கிடைத்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி, இப்பிறவியிலேயே நாம் இறையருளாம் வீடுபேறு இன்பத்தைப் பெற வேண்டும் என்பதே திருவாசகத்தின் நோக்கம்.

இறைவன்பால் காதல் செய்வது எங்ஙனம்? “மலரிட்டு பூசை செய்தலா?, பாலாபிஷேகம் செய்தலா?, தங்கஅணிகலன்களால் அலங்கரித்து வழிபடுதலா? நாம் செலுத்தும் அன்பை அவன் ஏற்றுக்கொள்கிறானா என்று எவ்வாறு உணர்வது? காண இயலாத இறைவனிடம் அன்பு செலுத்தும் விதத்தை எங்களுக்கு அருளுங்கள் என்று விண்ணப்பித்தனர் அடியார்கள். அடியவர்களின் வேண்டுகோளுக்கான விடைதரும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்

 வான்கலந்த மாணிக்கவாசகம் 06: உண்ணும்போது ஒரு கைப்பிடி

 

இறைவனைக் காதலிப்பது எப்படி? மலரிட்டுப் பூசை செய்வதா? பாலாபிஷேகம் செய்வதா? அல்லது தங்கஅணிகலன்கள் அணிவித்து வணங்குவதா? நம் கண்களால் பார்க்கமுடியாத இறைவன், நாம் செலுத்தும் அன்பை ஏற்றுக்கொள்கிறானா என்று தெரிந்துகொள்வது எப்படி என்று கேட்கும் சிவனடியார்களிடம் மாணிக்கவாசகர், “திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும்போது நம் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்று சொல்வது ஏன்?” என்றார். அடியவர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தனர்.

 

அசைவற்று இருக்கும் சிலையை இறைவனாகக் கற்பனை செய்து வழிபடும் உங்கள் மனத்தால், அதை இறைவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எனவேதான் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்றீர்கள் அல்லவா?” என்று மணிவாசகர் கேட்டதும் அடியவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். நீங்கள் உயிர்ப்புள்ள இறைவனைக் கண்டு, காதல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இறைவன் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும், குறிப்பாக, சக மனிதர்களைக் காதலியுங்கள்என்றார் மணிவாசகர்.

 

குடும்பக் காதல் இறைக் காதலாகுமா?

 

ஐயனே! நான் என் குழந்தைகள், மனைவி, அன்னை-தந்தை, உடன்பிறந்தோரிடம் மிக்க அன்பைச் செலுத்துகிறேன். நான் பாடுபட்டுச் சேர்க்கும் பொருளையும், பணத்தையும் அவர்களுக்கே தருகிறேன். அவர்களிடமும் இறைவன் நிறைந்திருப்பதால், எனது இச்செயல் இறைவனைக் காதலித்ததற்குச் சமம் என்று கொள்ளலாமா?” என்றார் ஒரு அடியவர்.

 

கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவன்

 

அன்பர்களே! பிறப்பாலும், திருமணத்தாலும் ஏற்பட்ட பாசத்தினால், உங்களுடையவை என்று கருதும் சொந்தங்களிடம் காட்டும் காதல் இயல்பானது; ஆயினும், என் குடும்பம் என்ற அளவில் அதுவும் சுயநலத்தின் ஒரு வகையே! பாரபட்சம் பார்க்காமல் எல்லா உயிர்களுக்கும் கருணைசெய்யும் இறைவனைக் காதலிக்க விரும்பினால், சொந்த பந்தங்களிடம் காட்டும் அதே காதலை, துன்பப்படும் ஏழைகளிடமும் காட்டுவதே சிறந்த வழியும், பக்தியுமாகும்.

 

இறைவனுக்கு நீங்கள் செலுத்த விரும்புகின்ற காணிக்கைகளைத் துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அவை உடனடியாக இறைவனிடம் சென்று சேரும். என் பணம், என் மனைவி, என் மக்கள், என் சாதி, என் அறிவு எனப் பித்துப்பிடித்து அலையும் இந்தஉலகத்தில், சிவபெருமான் தன் திருவடிகளை என் தலைமேல் வைத்ததுமே என்னிடமிருந்த சித்த விகாரக் கலக்கம் தெளிந்து, அனைவரிடமும் அன்புகாட்டும் தெளிவு பிறந்தது; நீங்களும் தெளிவடையுங்கள்என்று அருளினார் மணிவாசகர்.

 

வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்

பித்த உலகில், பிறப்போடு இறப்பு என்னும்

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (திருவாசகம்:10-6)

 

செல்வத்தின் பயன் ஏழையர்க்கும் கொடுத்தல் என்று உணராமல், அவை நிலையுடையன என்று நினைத்துப் பதுக்கி வைப்பது பேதைமைஎன்பதால், இவ்வுலகைப் பித்த உலகுஎன்றார். இறைவன் இதைத் தெளியவைத்ததால், ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்என்றார்.

இறைவனே ஏழைப்பங்காளன்

 

இறைவனின் அருள்வடிவே அம்மை. உயிர்களிடம் கொண்ட கருணையினால், அவரவர் செய்த நன்மை தீமைப்படி பிறந்த எல்லா உயிர்களுடன், ஏழைகளுடன் அம்மையப்பனாக, இறைவனும் அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதால், ஏழைப் பங்காளனைப் பாடித் துதிக்கலாம் வா என்று திருவெம்பாவையின் ஏழாவது பாட்டில் அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

ஏழைகளிடம் நாம் செலுத்தும் அன்பு, அவருள் வாழும் இறைவனாம் அம்மையப்பனைக் குளிர்விப்பதால், நம் புலன்கள் அன்பில் திளைத்து, இறைவன் அமுதாய் நமக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான்.

 

ஆனால், நாம் எல்லோரும் மனைவி, குழந்தைகள், சுற்றத்தாரிடம் கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தால், பேராசை கொண்டு, ஏழு தலைமுறைக்கும் பணம் சேர்க்கப் பித்துப்பிடித்துப் பைத்தியமாக அலைகிறோம். இதை நீக்கி, துன்புறும் ஏழைகளுக்குச் செய்யும் அன்பான உதவியே இறைவனிடம் உடனடியாகச் சேருகிறது என்ற மனத்தெளிவைத் தந்த வித்தகத் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீஎன்றார் மணிவாசகர்.

 

படமாடக் கோயிலும் நடமாடும் கோயிலும்

 

இறைவன் இருவகையான கோயில்களில் இருக்கிறான் என்கிறார் திருமூலர். ஒன்று, படமாடுகின்ற கோயில்கள். இதில் படம் அல்லது சிலை வடிவில் இருக்கின்றான்; இரண்டாவது, நடமாடும் கோயில்களான உயிர்களுடன், குறிப்பாக மனிதர்களுடன் வாழ்கிறான் இறைவன்.

ஏழைகளின் உள்ளே வாழும் இறைவன் பசித்திருக்கையில், படமாடக்கோயிலில் இருக்கும் இறைவனுக்குப் பொருளைக் காணிக்கையாக அளித்தால், அது நடமாடும் கோயில்களான ஏழைகளுடன் பசியில் வாடும் இறைவனுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான ஏழைகளுக்குத் தரும் பொருள், படமாடும் கோயிலில் வாழும் இறைவனுக்கு உடனே சென்று சேர்ந்துவிடும் என்கிறார் திருமூலர்.

 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே - திருமந்திரம்

 

நான் மிகவும் ஏழை. என் வயிற்றுப்பாட்டுக்கே துன்பப்படுகிறேன். என்னைப் போன்றவர்கள் இறைவனிடம் காதல் செய்ய முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, மனம் அன்பால் நிறைந்தால் எவரும் ஒருகைப்பிடி உணவாலும், பசுவுக்கு ஒருவாய்ப் புல்லாலும், இறைவனுக்கு ஒரு பச்சிலையாலும், பணம் இல்லாதவர்களும், பிற ஏழைகளுக்கு இனிய வாழ்த்துரையாலும் அன்புசெய்ய இயலும் என்கிறார் திருமூலநாயனார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை

யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. திருமந்திரம்

உண்மையாகவே இறைவனிடம் காதல் செய்வது எப்படி என்று அறிந்துகொண்டோம். திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.

 

 வான்கலந்த மாணிக்கவாசகம்07: துளையிடப்படாத முத்து

 

 

ஏழைகளுக்கு உதவி செய்வதும், உண்ணும்போது ஒரு கைப்பிடியும் அனைவரும் செய்யக் கூடிய இறைக்காதல் என்று கண்டோம். அவரவர் தகுதிக்கு ஏற்பத் தொண்டுசெய்யும் இறைக்காதல் குறித்த விளக்கம் கேட்டு அன்பர்கள் பலரும் பேசியதால், இன்னும் இரு கட்டுரைகளில் அது பற்றி விளக்கிய பின், திருவடிப் பேறு கிடைத்ததும் மணிவாசகர் உணர்ந்த இறைக்காட்சி அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனைப் பருகுவோம்.

செய்தனவே தவமாகும்

மணிவாசகர் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய தவம்செய்யும் முறை அது. நம் சிந்தனையில் சிவம் என்னும் அன்பு நிறைந்தால், நாம் செய்யும் அன்புத் தொண்டு எதுவாக இருந்தாலும், அத்தொண்டையே இறைவன் தவம்ஆக்குவான்என்பதே.

சித்தம் சிவம்ஆக்கி, செய்தனவே தவம்ஆக்கும்

அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ! - திருவாசகம்:15-6

திருவாசகத்தின் அடிநாதமே இந்தச் செய்திதான்.

சலவைத் தொழிலாளி நாயனார் ஆனார்

சலவைத் தொழிலாளியாக ஏழ்மையில் வாழ்ந்தாலும், தினந்தோறும் ஒரு சிவனடியாரின் உடையைச் சலவை செய்யும் தொண்டைச் செய்த பின்பே மற்றவர் உடைகளைச் சலவை செய்யும் கொள்கையுடன் வாழ்ந்துவந்த ஒரு அன்பரைத் திருக்குறிப்புத் தொண்டர்என்னும் நாயனாராக உயர்த்திப் பெருமை தந்து அவரைச் சிவபெருமான் ஆண்டுகொண்டான்;

இறைவனிடம் அன்புடன் தொண்டு செய்வோர் வாழ்வின் கடைநிலையில் இருந்தாலும், அவர் செய்யும் தொண்டை வானுயர உயர்த்துவான் இறைவன். சிவாலயங்கள் தோறும் திருக்குறிப்புத் தொண்டர்அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராகச் சிவனடியார்களால் வழிபடப்படுகிறார். வானுயர அரண்மனைகளில் வாழ்ந்த மன்னர்கள் பலரும் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்; இறைப்பேறு அவர்களுக்குக் கிடைத்ததா என்பதும் நமக்குத் தெரியாது; ஆனால், அன்புடன் தன்னால் இயன்ற தொண்டு செய்த சலவைத் தொழிலாளி திருக்குறிப்புத் தொண்டராக இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மக்கள் இதயங்களில் என்றும் குடியிருக்கிறார்.

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி - திருவாசகம் - 2:125-126

எப்படிப்பட்ட பெருந்தன்மையையும், எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளால், ஆண்டுகொண்டு அருளுவான் இறைவன்.

குயவனார் நாயனார் ஆனார்

மண்பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்யும் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர், சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுக்கும் திருத்தொண்டை செய்துவந்தார். அவரின் நடத்தையில் ஐயம் கொண்ட அவர் மனைவி, ‘எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்என்று இறைவனின் மேல் ஆணையிட்டுக் கூறிவிட்டார்; எனவே, மனைவியை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காமல் இளமையைத் துறந்தார்;

திருநீலகண்டர் கடினமாக முயன்று பெண் இன்பத்தைத் துறக்கவில்லை; நஞ்சைக் கண்டத்தில் கொண்ட சிவனின் தியாக வடிவான திருநீலகண்டம்’, மேல் கொண்ட அளவற்ற அன்பு கூடிய பக்தியால், பெண்கள் நினைவுகூட அவரின் சிந்தையிலிருந்தே போயிற்று. முதுமையை அடைந்திருந்த திருநீலகண்டரின் அன்புத்தொண்டை உலகோருக்கு அறிவிக்கத் திருவிளையாடல் நிகழ்த்தி, கணவன், மனைவியைச் சேர்த்து வைத்து, மீண்டும் இளமையைத் தந்து, பின் ஆட்கொண்டு, திருநீலகண்ட நாயனாராக உயர்த்தினார் சிவபெருமான்.

இத்தகைய மக்கள் தொண்டினைச் சிறப்பிக்கும் பெரியபுராணத்தின் காப்பிய நாயகன் தொண்டுஎன்னும் பண்பே. எனவே, இறைவனின் அன்பைப் பெற, ஒவ்வொருவரும் இறைத்தொண்டு செய்ய வேண்டும்; பலர் கூடி, கோயிலுக்குச் சென்று உழவாரப்பணி செய்யும் திருத்தொண்டு சிறப்பானதே! திருக்குறிப்புத் தொண்டரைப் போல, திருநீலகண்டரைப் போல, அவரவர் செய்யும் தொழில் அல்லது உழைப்பின் ஒரு சிறு பகுதியை, சக ஏழை மனிதர்களுக்குப் பயன்படும்படி செய்யும் தொண்டு அதனினும் மிகச் சிறப்பானது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை ஒரு ஏழையின் படிப்பு, மருத்துவம், திருமணம், தொழில் போன்ற ஏதாவது ஒரு காரியத்துக்காகச் செலவிடலாம். அத்தகைய தொண்டு செய்ய, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு, ‘அன்பு மனம்ஒன்றே!

ஞானமும் கல்வியும்

உயிர்ப் பிறவிகளிலேயே அரிதான மனிதப் பிறவியில் கூன், குருடு, செவிடுபோன்ற குறைகள் இல்லாமல் பிறந்த ஒருவனுக்கு ஞானமும், கல்வியும் கைவரப்பெற்று, இறைச் சிந்தனையால், தானமும், தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறுவது உறுதி என்பது அவ்வையார் வாக்கு. கல்வி உலகியல் அறிவையும், ஞானம் தொண்டோடு கூடிய இறையன்புடன் இணைந்த பேரறிவும் தரும். ஞானமில்லாத கல்வி பயனற்றது என்பதால் ஞானத்தை முதலிலும், கல்வியை அடுத்த இடத்திலும் வைத்தார் அவ்வையார்.

ஆபரணங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

அதேபோல, ‘தானம்என்னும் தொண்டுஇல்லாத இறை வழிபாடு பயனற்றது என்பதால், தானத்தை முதலிலும், தவத்தைப் பின்னும் வைத்தார். உலகில் தோன்றிய செல்வங்கள் யாவும் அனைத்து உயிர்களும் துய்ப்பதற்கானவை; உயிர்களுக்குத் தொண்டு செய்வதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் காதலும், நன்றியும் வணக்கமும் என்ற ஞானம் இல்லாததால், பெரும்பணம் வேண்டித் தங்க, வைர நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பணம் சேர்ப்பது ஒன்றே குறியாகக் கொண்டு வாழ்நாளை வீணடிக்கிறார்கள் மனிதர்கள்; வேண்டுதல்-வேண்டாமை இல்லாத இறைவன் இத்தகைய ஆபரணங்களை ஒருபோதும் விரும்புவதில்லை.

அத்தகைய தொண்டு வழிபாட்டை வாளாத் தொழும்பு’, அதாவது அன்பில்லாத வெறும் தொண்டு என்கிறார் மணிவாசகர். முன்பு தாம் அத்தகைய வாளாத்தொண்டு செய்து கடைப்பட்டதாகவும், சிவத்தைக் கூடியபின் தம்முடைய தொண்டு அன்புகூடிய தொண்டாகியது என்னும் திருவாசகம் காண்போம்.

சுடர்பொன் குன்றை, தோளா முத்தை, ‘வாளா தொழும்புஉகந்து

கடைபட்டேனை, ஆண்டுகொண்ட கருணாலயனை, கருமால், பிரமன்,

தடைபட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆரமுதை,

புடைபட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? - திருவாசகம்:27-1

(தோளாமுத்து - துளையிடப்படாத முத்து, பொல்லாமணி - செதுக்கப்படாத மாணிக்கம்) முத்து துளைக்கப்பட்டே பயனைத் தரும்; இறைவனோ இயல்பாகவே பயனைத் தருபவனாதலால், ‘தோளாமுத்தேஎன்றும், மணி செதுக்கினால்தான் ஒளிதரும்; இறைவன் இயல்பாகவே ஒளியுடையவன்; எனவே, ‘பொல்லா மணியைஎன்றார்..

விதிப்படிஎன்றால் இறைவழிபாடு எதற்கு?

ஏழ்மையில் பிறப்பதோ, செல்வச் சூழலில் பிறப்பதோ, யாருடைய கையிலும் இல்லை; அவரவர் செய்த முன்வினைப் பயனால் பிறவி வாய்க்கிறது என்கிறது சைவசித்தாந்தம். வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடு கூட எதற்கு என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இதற்கான விடை கூறும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்08: மண்புகுந்து மனிதரை ஆட்கொண்டான்

 

வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு விடைகாணும் திருவாசகத் தேனை இப்போது காண்போம்.

விதியை வெல்ல மனிதனுக்குச் சுதந்திரம்

ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். தன் பெற்றோரை, தன் பிறவிச் சூழலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையின்மை, மனிதருக்குச் சுதந்திரம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். விளையாட்டுத் துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து பாரத் ரத்னாவாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, சூதாடி சிறை செல்வதோ அவரின் சுதந்திரம்.

மாற்றுத் திறனாளியாகப் பிறந்தாலும், உழைத்து, பாராஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதோ அல்லது அவ்வாறு பிறந்துவிட்டோமே என்று வருந்தியே காலத்தை முடிப்பதோ அவரவர் சுதந்திரமே. திருநீலகண்டரைப் போன்று, திருக்குறிப்புத் தொண்டரைப் போன்று, பெற்ற பிறவியைப் பயன்படுத்தி, இறைக்காதல் தொண்டு செய்து, நாயனாராக உயரலாம்; அல்லது உலக-உடலின்பங்களில் மட்டும் ஈடுபட்டு, வினைகளைப் பெருக்கித் துன்பமடையலாம் என்பதும் உயிர்களின் சுதந்திரமே.

இறைவனின் கருணை

இத்தகைய சுதந்திரத்தை உயிர்களுக்குத் தந்த இறைவன், அறிவு தரும் ஐந்து பொறி-புலன்களுடனான உடலும், மனதும், நினைவும் தந்துவிட்டு எங்கோ வானத்தில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஆனந்தமாக இருக்கிறானா என்றால் அதுதான் இல்லை என்கிறார் மணிவாசகர். குழந்தையை விளையாட்டு மைதானத்திலே சுதந்திரமாக விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்து தாய், தந்தையர் கவனித்துக்கொள்வார்கள்; இறைவன் அவர்களைவிடப் பன்மடங்கு கருணையானவன். நம் ஊன், உடம்புகுள்ளே புகுந்து, நாம் அறியாவண்ணம் நம்மைக் கவனித்துக்கொள்கிறான் என்று குயிலிடம் சொல்கிறார் மணிவாசகர்.

தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே! நீ இதைக் கேள்! நம் இறைவன் வானத்தை உதறிவிட்டு, இந்த மண்ணுலகுக்கு வந்து மனிதர்களை ஆட்கொள்ளும் வள்ளல்; மனிதர்கள் நல்லபடியாக ஞானமும் கல்வியும் பெற வேண்டுமே என்ற கருணையால் இவர்களின் ஊன்-உடம்பில் கலந்து மறைந்து வாழும் இறைவனை, நான் சற்றே தேடத் தொடங்கியதும், கருணையால் அன்பு பொங்க, என் ஊன்-உடலை உதறிவிட்டு, என் உள்ளம் புகுந்து, என் உணர்வோடு உணர்வாகக் கலந்துவிட்டான்; மானின் பார்வையிலும் இனிமையான பார்வையையுடைய உமாதேவியின் மணாளனை என்னிடம் வரச் சொல்லிக் கூவுவாயாக!என்று குயிலைத் தூதுவிடும் அழகு தமிழ் மணிவாசகம் சுவைப்போம்:

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,

வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;

ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;

மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்! திருவாசகம்:18-4

எளிய மனிதர்களை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே வான் பழித்து, மண்ணுலகிற்கு வந்தான் என்கிறார் மணிவாசகர்; நாம் பணக்காரனாக, அறிவாளியாக, தாசில்தாராக, அதிகாரியாக, கல்விமானாக, ஞானிகளாக, பேராசிரியர்களாக, அர்ச்சகர்களாக, பண்ணையாராக, வேத விற்பன்னராக இன்னும் எது எதுவாகவோ இருக்கிறோம்; மனிதராக இல்லை; இத்தகைய செருக்கில் இருக்கும் நமக்கு இறைவன் வசப்பட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் மணிவாசகர். நாம் எது எதுவாகவோ இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து இறங்கி, நம் மனங்களை அன்பினால் நிறைத்து மனிதர்களாகி, நம் எளிய சக-மனிதர்களின் துயரங்களை நீக்கத் தொண்டு செய்யும்போது, அத்தொண்டின் வடிவத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்படுவோம்.

மனிதப்பிறவியை மதிப்போம்

நாம் இறைக் காதலால் மனிதர்களுக்குச் செய்யும் திருத்தொண்டால் மனித குலம் அறிவில், ஆள்வினையில், வாய்மையில், இன்பத்தில் செழித்துக் குலுங்க வேண்டும்; “வாய்த்தது-நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு மின்என்ற அப்பர்பெருமானின் ஆணையை நிறைவேற்றுவோம். இன்னாததாக, துன்பம் நிறைந்ததாக இருக்கும் உலகத்தை உழைப்பால், தொண்டால் இனிமையாக்குவது மனிதனின் கடமை. இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்கஎன்கிறது புறநானூறு. நம் அன்புத்தொண்டு துன்பத்தை மாற்றும்; வாழ்க்கை செழிக்கத் தடையாயுள்ள கேடுகளைக் களையும். இதன்மூலம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

தனக்குச் சுற்றமும் விதியும் தானே

ஒருவருக்கு வரும் நன்மை, தீமைகளுக்கு, அவர் செய்யும் செயல்களே காரணம் என்பதால் அவருக்குச் சிறந்த நண்பரும் உறவினரும், பகைவரும் அவரே. ஆதலால், “அடியவர்களே, நீங்கள் எல்லோரும், நாம் யார், எம்முடையது என்பது யாது, எம்மைப் பிடித்த அறியாமையாம் பாசம் எது, இவையெல்லாம் என்ன மயக்கங்கள் என்று உணர்ந்து, இவை நம்மை விட்டு நீங்க, இறைவனுடைய பண்டைத் தொண்டரொடும் சேர்ந்து, இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக்கொண்டு, திருத்தொண்டு செய்வதன் மூலம் பொய் வாழ்வை நீத்து, எமையாளும் பெருமானின் பொன்திருவடியின் கீழ் போய்ச்சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்என்று அருளினார் மணிவாசகர்.

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;

யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,

கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,

போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.

- திருவாசகம்:45-3

தீதும் நன்றும் பிறர்தர வாரா’’ என்றார் கணியன் பூங்குன்றனார். நாம் நம்மை அறிவதற்காகவே இறைவனால் தரப்பட்ட உடல் உலகம் தொடர்ந்து மாற்றங்களை அடையும். அவை நிலையாமை உடையவை. அவற்றிடம் வைத்த கடும்பற்று நீங்கி, இறைவனிடம் இணைய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, 'யாமார்? எமதார்? பாசமார்? என்ன மாயம்' என்று அருளினார் மணிவாசகர்.

கற்றதனால் வரும் பயன் பெறுக!

மனிதப் பிறவிக்கு வந்த உயிர்கள் அனைத்தும் வீடுபேறு எய்த வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளக் குறிப்பாகையால், ஆறாம் அறிவாம் பகுத்தறிவைத் தந்துள்ளான்; மனிதர்கள் அனைவருக்கும் 'இறைவனின் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார் பெருமான்.

சிவனடியார் கூட்டத்தில் இருப்பதே இறைவனை அடையச் சிறந்த வழி என்பதைச் சொல்லவே கோமான் பண்டைத் தொண்டரொடும்என்றது மணிவாசகரின் அனுபவ அறிவுரை. தொண்டின் மேன்மை உணர, இறைவன் நம்முள் கலந்தது எப்போது என்பதைப் பற்றி விளக்கும் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

 

Keywords: மாணிக்கவாசக தொடர், திருவாசகம் தொடர், மாணிக்கவாசகம் விளக்கம், திருவாசகம் விளக்கம், மாணிக்கவாசக சிறப்பு, திருவாசக சிறப்பு

 

வான்கலந்த மாணிக்கவாசகம்: 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்

  

சூரியன் மறைவதால் நம் கண்கள் காணும் புறஇருள்’, எல்லாப் பொருள்களின் இருப்பைகண்ணுக்கு மறைத்தாலும், ‘இருள் உள்ளதுஎன்னும் தன்னிருப்பைமனிதர்களுக்கு வெளிப்படுத்துவதால், நாம் செயற்கை மின்னொளியை உருவாக்கி, இருள் நீக்கி வாழ்கிறோம்.

அறியாமைஎன்னும் அகஇருள்நம்மைப் பிடித்துள்ளது என்பதே நமக்குத் தெரியாததால், நாம் அறியாமையில் இருந்து விடுபட இயலாது; நம்மிடம் பெருங்கருணை கொண்ட இறைவன் நம்மைப் பிடித்த அறியாமைஎன்னும் அகஇருளை நீக்க, கண் முதலிய அறிவுக்கருவிகளுடன் கூடிய உடல் பிறவிகளைத் தருவதால், நல்வினை, தீவினை செய்து அதன் பலன்களைப் பெறுவதன் மூலம், நாமே நம்மை அறிகிறோம்; நம் தலைவனாம் இறைவனையும் அறிகிறோம்.

கருணையினால் நம்முள்ளே மறைந்து வாழும் இறைவன், நாம் அறியாமலேயே நமக்கு அருள் வழங்குகிறான். அறியாமை நீங்கிய நாம், இதே இறைப்பண்புடன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் துன்புறும் சகமனிதர்களுக்குச் செய்யும் தொண்டினால் இறைவனின் அன்புக்கு உரியவர்களாகி ஆட்கொள்ளப்படுவோம். இச்செய்தியின் உள்ளீடே திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்படுகின்றது.

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து

இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார். உடல் பிறவிக்கு வருவதற்கு முன்பே, அதாவது, உடலற்ற அருவமாக, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் போதே, கருணை கொண்டு உள்புகுந்தான் இறைவன்; தன் உள்ளத்தில் நிலையாக அமர்ந்து, ‘கருத்துஎன்னும் சிந்தனையை வைத்து, பின் உடலில் புகுந்து, பெருங் கருணையினால் ஆண்டுகொண்டு, தன்னுடைய மறைப்புச் சக்தியினால் உயிர்களுக்குத் தெரியாமலேயே அவைகளுடன் இறைவன் வாழ்கிறான்; உயிர்களின் செயல் சுதந்திரங்களில் இறைவன் தலையிடுவதில்லை.

வாழ்வின் நெடும் பயணத்துக்குப் பின், மணிவாசகர் இறையருளால் தன் பிறவி நோக்கத்தை அறிந்துகொண்டது போல், நாமும் ஊனுக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்ள வேண்டும்; “திருத்துருத்தி என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தித்திக்கும் சிவபதத்தை, ஆசை(அருத்தி)யினால் நாயடியேன் தில்லையில் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர். (மன்னி-நிலைத்து)

உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,

கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட

திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை

அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!

திருவாசகம்: 31-3

ஒருவர் இவ்வுலக வாழ்நாளில் செய்யும் நன்மை-தீமைகளின்(வினை) பயன் அவரை மட்டுமே சேரும். குழந்தைகளுக்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் சொத்துசேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள், வினைகள் சேர்வதைக் கவனிப்பதில்லை. அறமற்ற வழியில் ஒருவர் சொத்து சேர்க்கும்போது, அதனால் விளையும் தீவினைகள் அவரிடம் தானாகவே வந்துசேரும். துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் ஒருவரின் வினைப்பயனில் பங்கெடுக்க முடியாது; ஒருவர் உண்ட உணவை எப்படி வேறொருவர் செரிமானம் செய்ய முடியாதோ, அதைப் போன்றதே வினைப்பயன்.

ஒரு உயிரின் வினைப்பயனை வேறு உயிர்கள் பங்கிட இயலாது. ஆதலால், மணிவாசகர் உயிரை ஆதம் இலியான்’(ஆதரவற்றவன்) என்கிறார்; கடலிற்பெருகிய நஞ்சை உண்ட என்னுடைய பரம்பரனே! வினைப்பயனால், சுற்றத்தார் யார் துணையும் இல்லாமல் பிறப்பு இறப்புஎன்னும் தப்ப முடியாத அருநரகில் அழுந்தி மூழ்கிக்கொண்டிருந்த அடியேனுக்கு, ஐயோ என்று இரங்கி, உன் திருவடி மலர் காட்டி ஆட்கொண்டது உனது திருவருள் அல்லவா என்று பரவசம் அடைகிறார் மணிவாசகர். (ஓதம் மலி - கடலிற்பெருகிய, ஆர் தமரும் இன்றியே - சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே)

ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,

ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு, `ஆ! ஆ!' என்று,

ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்

பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம் பரனே!

- திருவாசகம்:38-3

இங்கு பெருமான், மிகவும் துன்பமுடைய பிறப்பு இறப்புகளையே நரகம் என்று கூறினார். அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்களைக் காத்ததைபோல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் திருவடியைக் காட்டிக் காத்தது உன் திருவருளே என்று வியக்கிறார்.

இறைவனே தனித்துணை!

இறைவன் ஒருவனே உயிருக்கு வினைப்பயன்களில் இருந்து விடுதலை தந்து பிறவித் துன்பத்தில் அழுந்தாமல் காக்க வல்லவன் என்பதால், இறைவனைத் தனித்துணை’, ‘மனத்துணை’, ‘வாழ்வுக்குமுதல்’, ‘எய்ப்பில்-வைப்பு (துன்பத்தில் வாடும்போது உதவும் என் வைப்புநிதி ஆனவனே!)என்றழைக்கும் பெருமான், வினையையே துணையாகக் கொண்டு பிறந்த தாம், இறைவன் துணை கிடைத்தமைக்குத் தலைக்கர்வம் கொண்டு நடந்ததால், இறைவன் தன்னை விட்டுப் பிரிந்ததாகவும் நீத்தல்விண்ணப்பப் பதிகத்தில் கதறியழுகிறார்.

தனித்துணை நீநிற்க யான் தருக்கித் தலையால் நடந்த

வினைத்துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய

மனத்துணையே! எந்தன் வாழ்முதலே!  எனக்கு எய்ப்பில் வைப்பே!

தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண்வலையே. திருவாசகம்:6-39

 

வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, பேரன்போடு செய்த மக்கள் தொண்டையே சிறப்பித்து, நாயன்மாராக உயர்த்திய இறைவன் தரும் செய்தி அன்புடன் செய்யும் மக்கள் தொண்டே என்னை அடையும் வழிஎன்பதே.

திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த விஸ்வரூப இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு

 

உடல், பொறி, புலன்களில் கட்டுப்பட்டு, புறஉடலையே முழுவதும் பார்க்கமுடியாத நமக்கு, முகம் பார்க்கவே ஒரு நிலைக்கண்ணாடி தேவை; நம்உயிருக்கோ, தன்னை அறிய குரு என்னும் அறிவுக்கண்ணாடி தேவை; உடல் முழுவதையும் காண, முன்னும்,பின்னுமாக இரண்டு நிலைக்கண்ணாடிகள் தேவை; மனிதன் முழுமை பெற, குருவருளும், இறையருளுமான இரண்டு அறிவுக்கண்ணாடிகள் வேண்டும். மணிவாசகரோ, இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு பெற்றார். கருவிலேயே இறையருள்பெற்று, சிறந்த கல்வி, கேள்வியறிவும், முதலமைச்சராக உலக அனுபவமும், கவிஞராகப் படைப்பனுபவமும் கொண்டு திகழ்ந்த மணிவாசகரைத் திருவாசகம் தேர்ந்தெடுத்தது.

இறைவனின் திருக்காட்சி

மணிவாசகரை எதிர்பார்த்துத் திருப்பெருந்துறையில் மனிதவடிவில் குருவாகக் காத்திருக்கிறான் இறைவன். படை, பரிவாரங்கள்சூழ, குதிரை வாங்குவதற்காக திருப்பெருந்துறை வந்த பாண்டியநாட்டின் முதலமைச்சர் திருவாதவூரர், நொடிப்பொழுதில் மணிவாசகரானார்.

கருணையின் பெருமை கண்டேன் காண்க

புவனியில் சேவடி தீண்டினான் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க – (அண்டப்பகுதி:60-63)

 

தவத்தால், அன்பால், முயற்சியால் தேடிச்சென்று அடையவேண்டிய பொருளே இறைவன் என்று அதுவரைக் கருதியிருந்த கல்விமானான முதலமைச்சர் திருவாதவூரார், கருணையால் இப்பூமியில் தன் திருவடிகளைப் பதித்த பரம்பொருளை, ‘சிவபெருமான்என்று ஒருவாறு தெரிந்து, தான் தேறியதாகக் கூறுகிறார்.

முதலமைச்சர் மாணிக்கவாசகரானார்

குருவாகத் தோன்றிய இறைவனை மனிதரென்றே முதலில் கருதிய முதலமைச்சர் திருவாதவூரர், அக்குருவின் ஈர்ப்புச்சக்தி தம்மை முழுவதும் ஆட்கொள்வதை உடனடியாகக் கண்டுகொண்டார்; இத்தகைய ஆற்றல்மிக்க ஈர்ப்பு அதிர்வுகளை எந்த மனிதனாலும் உருவாக்க இயலாது என்பதை உள்ளுணர்வினால் உணர்ந்துகொண்டதால், ‘சிவன் என யானும் தேறினேன் காண்கஎன்றார். இறைக் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு, குருவின் தாள்பணிந்து, உபதேசம் பெற்று மாணிக்கவாசகர் ஆனார். காளைவாகனமுடைய, திருப்பெருந்துறையில் உறையும் மனவாசகம் கடந்த இறைவன், மணிவாசகருக்குத் தன்னைத் தான் என்பது அறியாது, பகல் இரவுஆவதும் அறியாது, உன்மத்தனாக்கி ஆண்டுகொண்டார்; இந்த முதல் அனுபவத்தை உயிருண்ணிப்பத்துப் பதிகத்தில் ஒரு திருவாசகம் அழகாகக் கூறுகிறது.:

எனை நான் என்பது அறியேன்; பகல் இரவாவதும் அறியேன்;

மனவாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கிச்

சினமால் விடைஉடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்

பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே! திருவாசகம்: 34-3

 

மணிவாசகரின் திருவாசகம், பதிகத்துக்குப் பத்துப்பாடல்கள் என்றில்லாமல், ஊற்றாகப் பெருக்கெடுத்த மணிவாசகரின் இறையனுபவங்களுக்கு ஏற்ப, பத்துப்பாடல்களுக்குக் குறைவாகவோ, பத்துப்பாடல்களாகவோ, பத்துக்கும் அதிகமாகவோ அமைந்தன.

கல்வி, கேள்வி, உலக அறிவு போன்றவற்றால் உருவான திருவாதவூரர்’, இறையன்பில் கரைந்து, காணும் அனைத்திலும், நீக்கமற நிறைந்த கடவுளைக் காணும் மணிவாசகரானார். இறைவனைப் பூசிக்க மலர் பறிக்க முற்பட்டால், ‘பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்திஎன்ற தாயுமான சுவாமிகளின் நிலையும், ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடாஎன்ற பாரதியின் நிலையும் இதற்குச் சான்று.

 

இறைவன் பெரிதினும் பெரியவன்

குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத நான்என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன். திருவடிப்பேறு கிட்டி, இறைக்காட்சி வசப்பட்டதும் இறைவன் மட்டுமல்ல, இப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களுமே, உள்ளும் புறமுமாக, ஒரே நேரத்தில் மணிவாசகர் கண்களுக்குப் புலப்படுகின்றன. இதுவரை அவர் கண்ணால் கண்டுஅறிந்திராத, தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்தில் (Ever-Expanding Universe), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவப் மிகப்பெரிய பெருங்கோள்களைத் காண்கிறார்; அக்கோள்கள் ஒன்றனை ஒன்று மோதிக்கொள்ளாமல், இயற்பியல் விதிகளின்படி, அவை, அவற்றின் நியமப்பாதையில் இயங்கும் அழகு, கண்ணுக்கு வளமையான காட்சி என்று வியக்கிறார் பெருமான்.

எம் இறைவனின் விஸ்வரூப தோற்றத்தை ஒப்பிட, அத்தகைய மாபெரும் பிரபஞ்சம் என்னும் அண்டப்பகுதியில் மிதக்கும் பிரம்மாண்டமான உருண்டைவடிவக் கோள்கள் மிகச் சிறிய துகள்களாகக் காட்சியளிக்கின்றன; எதைப்போல் என்றால், ஓலைவேய்ந்த வீட்டுக்கூரையின் சிறியதுளை வழியே நுழையும் சூரியஒளிக்கற்றையில் மிதக்கும் மிகநுண்ணிய தூசுகளைப்போல மிகச்சிறியனவாகத் தெரிகின்றன என்கிறார் பெருமான். பெரிதினும் பெரியவனான பரம்பொருளாம் சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய உருண்டைவடிவக் கோள்களுடன் ஒப்பிட்டு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பு அரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல் நுழைக் கதிரின் துன் அணுப் புரைய

சிறியவாகப் பெரியோன் தெரியின் – (அண்டப்பகுதி:1-6)

 

நாம் வாழும் பூமிப்பந்து உள்ளிட்ட ஒன்பது கோள்களைக் கொண்ட சூரிய மண்டலத்தைப் போல, பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் பால்வெளியில் உள்ளன என்றும், பால்வெளியைப் போல் பல்லாயிரக்கணக்கானவை அண்டவெளியில் உள்ளன என்றும், அண்டத்தின் விளிம்பு, ஒளி அலைகளின் வேகத்தைவிட எல்லாத்திசைகளிலும் விரிவடைந்துகொண்டே செல்வதால் விரிவடையும் அண்டம் என்றும் இன்றைய வானியல் அறிவியலாளர் கூறுகின்றனர். இத்தகைய வியத்தகும் வானியல் அறிவியல் உண்மைகளை, போகிற போக்கில் மிக எளிதாகக் கூறிவிட்டார் மாணிக்கவாசகர்.

அண்டப்பகுதி இவ்வாறு விரிந்து செல்வதை மணிவாசகப் பெருமான் பிறக்கம்என்றும் விரிந்தனஎன்றும் குறிப்பிட்டார். எதை அறிந்தால் அனைத்தையும் அறிவோமோ, அதை அறிந்த மணிவாசகருக்கு, எந்த அறிவியற் கருவியின் உதவியுமில்லாமல் இம்மாபெரும் காட்சியை நுட்பமாகவும், விரிவாகவும் நான்காம் நூற்றாண்டிலேயே கூறமுடிந்தது. வாலறிவனாம் இறைவனை அறிந்த மணிவாசகருக்கு இது இயல்பாக முடியக்கூடியதே! திருவாசகத்தின் இந்தப் பதிவை வைத்துத் தமிழர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே வானியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கருதுவது தவறாகவே முடியும்.

எல்லைகாண முடியாததாய் விரிந்துகொண்டே இருக்கும் பேரண்டப்பகுதியின் பருண்மை வடிவத்தை உலகோருக்குக் காட்சிப்படுத்திய மணிவாசகப்பெருமான், அத்துணைப்பெரிய பேரண்டக் கோள்களும் நுண்ணிய தூசுகளைப் போல சிறியது (இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய’) என்று சொல்லுமளவு ஒப்பீட்டில் இறைவன் பெரியவனாக இருக்கிறான் என்று பிரபஞ்சத்தினும் பெரிதான இறைவனின் வடிவத்தை நமக்கெல்லாம் அற்புதமாகக் காட்சிப்படுத்துகின்றார். சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து தரிசிப்போம்.

 

 

Keywords: மாணிக்கவாசக தொடர், திருவாசகம் தொடர், மாணிக்கவாசகம் விளக்கம், திருவாசகம் விளக்கம், மாணிக்கவாசக சிறப்பு, திருவாசக சிறப்பு

வான்கலந்த மாணிக்கவாசகம் 11: நுண்மையிலும் நுண்ணியன்

 

எல்லாம் வல்ல இறைவன் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரிதினும் மிகப்பெரியவனாகியும், மிகமிகச் சிறியதைக் காட்டிலும் நுண்ணியனாகவும் உள்ளதையும் ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட மணிவாசகர், தம்முடைய அனுபவக் காட்சியை அற்புதமான அறிவியல் சொல் வளமையால் நமக்கு விளக்குகின்றார். இறையருளால் இறைக்காட்சி வசப்பட்டதன் விளைவாக, இறைவனும், தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்திலுள்ள (Ever-Expanding Universe with innumerable Galaxies), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவ மிகப்பெரிய பெருங்கோள்களும், உள்ளும் புறமுமாக ஒரே நேரத்தில் அவர் கண்களுக்குப் புலப்பட்டதால், இரண்டையும் ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் மணிவாசகரின் அறிவியல் சொல்லாடல்கள் நம்மை மீளமுடியாத வியப்பில் ஆழ்த்துகின்றன.

இயற்பியலைக் கடந்த விண்பகுதியும் மாயையும்

நாம் காணும் மாபெரும் கோள்கள், அண்டப்பேரொலியின் விளைவாகக் காணும் பருப்பொருளாக உருவாகும் முன்பு, எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமும் உடைய காணஇயலாத நுண்ணிய(சூக்கும) நிலையில், இயற்பியல் விதிகளுக்கு உட்படாத பகுதியாக இருந்தது. இத்தகைய காணஇயலாத அனைத்திற்கும் தோற்றுவாயான நுண்ணிய(சூக்கும)ப் பகுதியை மாயைஎன்று சைவசித்தாந்தம் கூறும். மாயை என்னும் மூலப்பொருளில், அணு நிலைக்கு முற்பட்ட, இயற்பியல் விதிகளுக்கு உட்படாத, காணவியலாத, இத்தகைய பகுதிகளும் கருந்துளைகளும் எப்போதும் உள்ளன.

கோள்கள் ஒன்றினையொன்று மோதிக்கொள்ளாமல், அவையவற்றின் நியமப்பாதையில் இயற்பியல் விதிகளின்படி இயங்கும் பிரபஞ்சப்பகுதியை அண்டம்என்று சொல்லாமல் அண்டப்பகுதிஎன்று மிகச் சரியாகப் பெயரிட்டு அழைக்கும் மணிவாசகரின் நுண்ணறிவு அபாரம். அவர் இறைவனிடம் பெற்ற வாலறிவுஎன்னும் முற்றறிவைக் கண்டு வியந்தல்லவா போகிறோம் நாம்! காணும் நிலையில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பெரிய மாபெரும் கோள்கள், இறைவனை ஒப்பிடும்போது, சிறிய அணுக்கள் போன்று காட்சியளிப்பதால், இறைவன் மிகப்பெரியவன் என்று நிறுவுகிறார் மணிவாசகர்.

நுண்மையிலும் நுண்ணியனான இறைவனின் தரிசனம்

இனி, பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.

வேதியன் தொகையுடன் மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

எறியது வளியில்

கொட்கப் பெயர்க்கும் குழகன்; – திருவாசகம்:அண்டப்பகுதி-7-12

 

1968 முதல் 1995 வரை ஹுபலே, ஸ்டீவன் ஹாக்கின்ஸ், ரோகர் பென்ரோஸ், எல்லிஸ், டேவிட் சிரம் போன்ற அறிவியலாளர் கண்டுபிடிப்புகளால் அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் அவைகளின் காலமுடிவில் காணஇயலாத பழைய நுண்ணிய நிலையை மீண்டும் அடையும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டது. பரமாணு என்னும் கடவுள்துகள்(God Particle) குறித்த கோட்பாடும் பெறப்பட்டுவிட்டது.

கோள்களும், விண்மீன்களும் தோற்றத்திற்கு வருவதும், இயற்பியல் விதிகளின்படி அவை இயங்குவதும், அவைகளில் உயிர்கள் உடல்வாழ்வுக்குத் தோன்றுவதும், வாழ்வதும், பின் மடிவதும், ஊழிக்காலமுடிவில் அக்கோள்களும், விண்மீன்களும் மீண்டும் அழிவதுமான பிரபஞ்சச் சுழற்சியை (தோற்றநிலையிலிருந்து காணஇயலாத நுண்ணியநிலை அடைதல்), இறைக்காட்சி கிட்டிய மாணிக்கவாசகர் அருமையாக விவரித்துள்ளார். நான்முகன், படைத்தலையும், திருமால் காத்தலையும் செய்கின்றனர். கணக்கிலடங்காத உலகங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளமையால், நான்முகர்கள் பலரும், திருமால்கள் பலரும் உள்ளனர் என்கின்றார் மணிவாசகர்.

நூறு கோடி பிரமர்கள் நுங்கினர்

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே

ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே! திருமுறை:5:100-3

 

என்று தேவாரத்தில் இச்செய்தியை அப்பர் பெருமான் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊழிக்காலத்தில் அனைத்தும் இறைவனிடத்தில் ஒடுங்குதல்

பெரும் எண்ணிக்கையிலான பிரமர்களும், அவர்கள் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர்கள் செய்யும் படைத்தலும், காத்தலும் ஒருசேர முடிவுக்கு வரும் மகாப் பேரூழிக் காலமும், பேரூழிக்கால நீக்கமும், மீண்டும் பிரமர்களையும், திருமால்களையும் தானே படைத்து, அவர்கள் மூலம் படைத்தலும், காத்தலும் செய்தல் என மாறி,மாறிச் சுழலச் சுழற்றும் குழகன்(இளையோன்) என்று இறைவனின் நிலைத்த, நுண்ணிய, எல்லையற்ற ஆற்றலை விவரிக்கிறார் மணிவாசகர். இரவு, பகல் போன்ற கால தத்துவத்துக்கு உட்படாத இறைவன் என்றும் மாறாத இளமை நிலை உடையவன் என்பதால், ஊழிக்காலத்தில் பிரமர்களையும், கூட்டத் தலைவரான திருமால்களையும் அழிக்கும்(நீக்கும்) சிவபெருமானே, மீண்டும் அவர்களைப் படைப்பவராகவும் உள்ளார்; இதையே, ‘மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்என்று கூறுகின்றார் பெருமான்.

ஊழிக்காலச் சூறைக்காற்றை சிவபெருமானுக்கும், அண்டப்பகுதியில் உள்ள பிரமர்கள், திருமால்கள், உயிர்கள், உலகங்கள் அனைத்தையும் வளி என்னும் சிறுகாற்றுக்கும் உதாரணமாகச் சொல்லி, நீக்கமும், படைப்பும் இவ்வாறே மாறிமாறிச் சுழன்று வருகிறது என அற்புதமாக விளக்குகிறார் பெருமான். இங்கு, சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளி என்பதில் சூறைக்காற்று நுண்பொருள்,(சூக்கம்), வளி என்னும் சிறுகாற்று பருப்பொருள்(தூலம்).

நுண்பொருளாகிய காற்றே பருப்பொருளாகிய காற்றாலையை இயக்கி மின்சக்தியை உற்பத்தி செய்கின்றது; எனவே, காற்று, மின்சக்தி போன்ற நுண்பொருட்களே பெரிய இயந்திரங்களை இயக்குகின்றன என்பது விளங்கும்.

கோள்களும், அண்டங்களும் தூலம் என்னும் பருமை பொருட்களாதலால், அவைகளைப் படைத்தும், காத்தும் வரும் தலைவர்களான பிரமர்களும், திருமால்களும் நுண்ணிய உயிர்களாக உள்ளனர் என்பது தெளிவு. நுண்ணிய உயிர்களான பிரமர்களையும், திருமால்களையும் தன்னுள் ஒடுக்கும் சங்கார இறைவன், அவர்களிலும் நுண்ணியன்; எனவே, இறைவனே நுண்மைக்கெல்லாம் நுண்ணியன் (nano of all nanos) என்கிறார் பெருமான். (புரைய போல, கொட்கல்-சுழலல், குழகன்-இளையோன், சூறை மாருதம்-சூறைக்காற்று, வளி-சிறுகாற்று)

சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் நமக்குத் தந்த மணிவாசகர் இறைவனைக் காண மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் விவரித்து, அவற்றால் இறைவனைக் காண முடிந்ததா என்பதற்கான விடையையும் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் காண்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க

 

சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் ஒரே சமயத்தில் காணமுடிந்த மணிவாசகர், இறைவனை அடைவதே பிறவியின் பயன் என்ற இறையுணர்வு பெற்ற மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் காண்கிறார்; இறைவனைக் காண இயலாத நிலையும், அதற்கான விடையும் மனிதகுலத்திற்குப் பயன்பெறும் அற்புதமான திருவாசகமாகப் பூத்தன. நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.

 

அற்புதன் காண்க அநேகன் காண்க

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க  - திருவாசகம்:அண்டப்பகுதி:39, 41-42

 

பிரமனும், மாலும் காண இயலாத பெரியோன் பரமன்; சொல்லும், சொல்லின் பொருளுமான நிலையைக் கடந்து நிற்கும் அற்புதன் காண்க; அநேக வடிவங்களில் தோன்றும் ஒருவனேயான இறைவன் காண்க; புறமனம், உள்மனம், மேல்நிலைச் சித்தம் ஆகியன கடந்த ஆழ்நிலைச் சித்தத்தாலும் எட்ட முடியாத பரமன், அன்பர்களின் பக்தி என்னும் அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வதைக் காணுங்கள் என்கிறார் பெருமான்.

தன் முனைப்பு இல்லாத முயற்சி

ஆழ்நிலைச் சித்தம் கொண்டு இறைவனைக் காணச் செல்வது நான் முயற்சிக்கிறேன்என்னும் தன் முனைப்புகாரணம் என்பதால் இறைவன் எட்டமுடியாதவனாகிறான். ஆனால், பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகுபவனிடம் தன் முனைப்புஅறவே இல்லையாதலால், அருள் சுரந்து, தானே வந்து, பக்தனின் அன்புவலையில் அகப்படுகின்றான் இறைவன். இந்த நுட்பம் உணராமல், மனிதர்கள் இறைவனை அடையச் செய்யும் பல்வேறு முயற்சிகளையும், அவற்றால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் நமக்கு அறிவிக்கிறார் பெருமான்.

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத்

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்.     - (திருவா:அண்டப்பகுதி:125-126)

 

தீப்பிழம்பாய் அம்மையப்பனிடம் தோன்றிய பச்சைமரகத மணியின் ஒளியும், மாணிக்கச் செம்மணியின் ஒளியும் அருளும் அறிவுமாய்ப் பெருகி, மின்னல் போன்ற பொன்ஒளி எங்கும் பரந்து விரிய, நான்கு முகங்களையுடைய திசைமுகனாம் பிரமன், எங்கும் சென்று தேடியும் காணக் கிடைக்காமல் தன்னை ஒளித்துக் கொண்டான் இறைவன் என்கிறார். உண்மையில், இறைவன் எங்கேயும் ஒளிந்து கொள்ளவில்லை; ‘நான் இறைவனது முடியைக் காண்பேன்என்னும் அகங்காரமே பிரமனின் கண்ணை மறைத்தது. பிரமனைப்போல் நான்என்னும் 'தன்முனைப்பு' கொண்ட மனிதர்கள் அனைவரையும் குறிப்பதற்காகவே, ‘தேடினர்க்குஎன்று பன்மையில் கூறினார் மணிவாசகர். (குவால்-மேடு, பிறக்கம்-பெருக்கம்)

கைகாட்டி மரமும் பயணமும்

ஆகமநூல்கள் கூறும் திருக்கோவில் திருத்தொண்டு, இறைவனுக்கு வீட்டில் செய்யும் பூசைகள், உள்ளத்தையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் யோகம் அல்லது யோகாஆகிய சரியை, கிரியை, யோகம்போன்ற படிநிலைகளை முறையுளிஎன்பார்கள். இப் படிநிலைகளில் முயற்சிப்பாருக்கும் இறைவன் அகப்படவில்லை என்கிறார் மணிவாசகர். இப்படிநிலைகள், ‘மதுரைக்குச் செல்லும் சாலைஎன்பதுபோல, இறைவனை அடைவதற்கான வழிசொல்லும் கைகாட்டி மரமாகும்.

சாலையில் பயணிக்காமல், கைகாட்டிக் கம்பத்தின் அடியில் நின்றுகொண்டு மதுரையை அடைந்துவிட்டதாக நினைப்பவரைப்போல், படிநிலைச் சடங்குகளை மட்டுமே செய்துவிட்டு, ‘அன்புத்தொண்டுஎன்னும் உணர்வுபூர்வமான சாலையில் பயணம் செய்யாதவர்கள் இறைவனைச் சென்று அடையமுடியாது என்பதை முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்என்றார் மணிவாசகர்.

அப்படியானால், ‘யோகாஎன்னும் யோகப்பயிற்சிகள் வீண் என்று பொருளா? இல்லை; இது உள்ளம், உடல் இரண்டையும் நலம்பெற உதவும் கருவிகள்; உள்ளமும், உடலும் நலமாக இருந்தால் மட்டுமே, ‘அன்புத்தொண்டுஎன்னும் பணியைத் திறம்படச் செய்யமுடியும்; அதன்மூலம், இறைவனை அடையும் சாலையில் ஆனந்தமாகப் பயணம் செய்ய இயலும்; அந்த அளவில் அவை பயனுள்ளவையே!

மனம், சித்தம் போன்றவைகளை ஒருமைப்படுத்தி, உற்றார், உறவினர் கண்டு வருந்துமளவிற்கு உறைபனி நீரினில் நின்றும், தீயிடை நின்றும், உடலை வருத்திக் கடுந்தவம் புரிவோருக்கும் இறைவன் அகப்படுவதில்லை என்கிறார் பெருமான். இத்தகைய கடுந்தவத்தின் பயனாக, நீர்மேல் நடக்கும் ஆற்றலைப் பெற்ற சாதகன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, கங்கைநதி நீரின்மேல் நடந்து காட்டினான். அத்தகைய ஆற்றல் எப்படிக் கிடைத்தது என்று ராமகிருஷ்ணர் வினவ, ஐம்பது ஆண்டுகள் அவன் செய்த பல்வேறு கடுந்தவங்களைப் பற்றி மூச்சுவிடாமல் கூறினான்.

ராமகிருஷ்ணர் பெருவியப்பு அடைந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்தவனுக்குப் பெரும் ஏமாற்றம். என் சாதனை தங்களை வியப்படையச் செய்யவில்லையா சுவாமி?” என்று பணிவாக வினவினான். ஓட்டைக் காலணாவைக் கொடுத்தால் ஓடக்காரன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்துவிடுவான்; இத்தகைய அற்பமான காரியத்துக்காக விலைமதிப்பில்லாத வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே! இனி, எஞ்சிய வாழ்நாளையாவது பயனுற வாழ்வாயாக!என்றார் பரமஹம்சர்.

கடும்தவம் செய்து இறைவனைக் காண முயற்சிப்பதைக் காட்டிலும் எளிதானதும் பயன் தருவதும் அன்பு வழியிலான தொண்டுஎன்று உணர்வோம்.

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்,

இத்தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு

அத் தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் - திருவாசகம்:அண்டப்பகுதி:130-132

 

மறைத்திறம்என்பது வேதநெறியின் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட யாகங்களைச் செய்தலும், உபாசனா காண்டத்தில் சொல்லப்பட்ட பலவழிகளைப் பின்பற்றுதலும், ஞானகாண்டத்தில் (உபநிடதங்களில்) கூறும் வழிகளைக் கடைப்பிடித்தலும் ஆன பல வழிமுறைகளையும் உள்ளடக்கியது. இத்தகைய வேதநெறி விதிப்படி தம்மை வருத்திக்கொள்பவர்க்கும் இறைவன் அகப்படுவதில்லை என்கிறார் பெருமான்.

அடுத்தபடியாக, பல்வேறு சைவ, வைணவ ஆகம நூல்கள், பிற சமய ஆகம நூல்களான வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம் போன்றவை தந்திரங்கள்எனப்படும். இத்தகைய தந்திரங்கள் என்னும் நூல்களில் சொல்லப்பட்ட வழிகளைக் கடைப்பிடிப்பவர்க்கும் இறைவன் தன்னைக் காட்டாமல் ஒளித்துக்கொள்கிறான் என்கிறார் பெருமான்.

வேதம், ஆகம நூல்களில் கூறப்பட்ட சாத்திர சடங்குகளின் அடிப்படையில் இறைவனைக் காண முயல்பவர்கள், அச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால், அன்பும், தொண்டும் வெளியேற்றப்படுகின்றன; அவற்றுடன் இறைவனும் வெளியேறிவிடுகிறான்.

இறைக்காட்சியினால் அனைத்து நிகழ்வுகளையும் காண இயன்ற மணிவாசகரின் திருவாசகத்தில் இன்னும் சில நிகழ்வுகளை அடுத்தவாரம் காண்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்

பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகி, தொண்டாற்றுபவர்களிடம், தானே வந்து, அருள் சுரந்து, ஆட்கொள்ளும் இறைவனின் தன்மை உணராமல், இறைவனை அடைய, தன் முனைப்புடன் மனிதர்கள் செய்யும் மேலும் சில முயற்சிகளையும், அவைகளால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் மணிவாசகரின் திருவாசகத்தால் இப்போது காண்போம்.

அன்பாலயமும் ஆகம ஆலயமும்

ஆகமவிதிப்படி மாபெரும் சிவாலயம் கட்டி, குடமுழுக்குச் செய்ய நாளும் நேரமும் குறித்த பல்லவ மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், மன்னன் குறித்த சமயத்தில் பூசலார் என்னும் அன்பர் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவிற்குச் செல்லவிருப்பதால், வேறு நேரம் குறிக்குமாறு கூறிமறைந்தான். கனவு கலைந்த பல்லவ மன்னன் பூசலார் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவுக்குப் போக, பூசலாரை அழைத்து விசாரித்தான். தன் மனத்தில் தான் அன்பால் கட்டிய சிவாலயத்தை மன்னனிடம் பெருமைப்படுத்திய இறைவனின் கருணையைப் பூசலார் விளக்க, ஆகமவழியினும் மேலான அன்பு வழியின் பெருமை உணர்ந்து, தன்முனைப்பு நீங்கி, இறையருள் பெற்றான் பல்லவ மன்னன்.

இறைவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; இருந்தும், அன்பினால் இறைவனை வழிபடுபவர்கள், அவரவர் சமயங்கள் காட்டிய வழிப்படி, இறைவனை ஆண் உருவிலோ, பெண் உருவிலோ, ஆணும்-பெண்ணுமான அம்மையப்பனாகவோ, ஆணும்பெண்ணும் கலந்த அர்த்தநாரி உருவிலோ வழிபடுவார்கள். இவர்கள் அனைவரையும் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ஒரேவிதமாக நோக்கி அருளும் இறைவன், பெண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு ஆண் உருவில் தோன்றியும், ஆண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு பெண் உருவில் தோன்றியும், அம்மையப்பன் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு அவ்விரண்டும் அல்லாத அர்த்தநாரி உருவில் தோன்றியும் காட்சி தந்து, அவரவர் அறிவின் சிறிய எல்லையையும், அவைகளுக்கு அப்பாற்பட்ட தன்னியல்பின் பேரளவினையும் அவர்களுக்கு உணர்த்தி, ஆட்கொள்கிறான்.

சிறிதளவு இறைவனின் தன்மையை உணர்ந்தவுடன், இறைவனைத் தானே முற்றிலும் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் இயல்புடைய மனிதர்களையும் வெறுக்காமல் ஆட்கொள்ளும் இறைவன், அவர்களின் ஆணவத்தை நீக்கிய பின்பே ஆட்கொள்கிறான் என்கிறார் மணிவாசகர்.

பிறவியின் நோக்கம்

அகஇன்பங்கள், புறஇன்பங்கள் அனைத்தையும் வெறுத்து, ஐம்புலன்களையும் அடக்கி, பெரிய மலையில் ஏறிச் சென்று, உணவு முதலிய அனைத்தையும் துறந்து, எலும்பும் தோலுமாகிய உடலுடன் கடும்தவம் செய்யும் முனிவர்களின் அறிவுக்கும் எட்டாதவன் இறைவன் என்கிறார் பெருமான்.

 

இவ்வுலகு, உலகின் நுகர்பொருட்கள், உடம்பு, உடம்பில் உள்ள ஐம்பொறிகளான புறக்கருவிகள், அகக்கருவிகளான ஐம்புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை அனைத்தையும் உயிர்களுக்கு இறைவன் படைத்துத் தந்ததன் நோக்கம், இவைகள் மூலம் உயிர்கள் அறிவு பெற்று, இறைவனின் கருணையையும், அருளையும் உணர்ந்து, சக உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்து, இறைவனின் அருளைப்பெற்று, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, முழுமைப் பேரின்பம் பெறுவதற்கே. இதை உணராது, இறைவன் தந்த உடம்பையும், கருவிகளையும், ‘யான், எனதுஎன்னும் தன் முனைப்புஅறிவால் வாட்டி, வதைத்துத் தவம் செய்வது, இறைவனின் கருத்துக்கு மாறானது என்பது மணிவாசகர் கருத்து.

அடக்குதலும் அறிதலும்

ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர்கள் அறிவிலாதவர்கள்; ஐம்புலன்களும் அடங்கிவிட்டால், அறிவற்ற சடப்பொருளாகிவிடும் இவ்வுடல் என்பதால், ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கிறார் திருமூலநாயனார். (அசேதனம்- சடப்பொருள்) இதன் பொருள், அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும், மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக்கொண்டு அறிய முயன்றால், அவ்வறிவுக்கு, ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணிசெய்யும் என்பதாகும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பார் மணிவாசகர்.

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;

அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே - திருமந்திரம் :233

மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.

இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளுக்கும் அகப்படாமல் ஒளித்து நின்ற கள்வனாகிய இறைவனை இன்று தம் கண்ணெதிரே கண்டோம் என்கிறார் மணிவாசகர். இங்கு கண்டேன் என்று தன்னை மட்டும் ஒருமையில் கூறாமல், ‘கண்டனம்என்று பன்மையில் கூறியது கவனிக்க வேண்டிய செய்தி. முதலமைச்சர் திருவாதவூரருடன் சென்ற அனைவரும் மறை-பயில் அந்தணன் வடிவில் குருவாக நின்ற இறைவனைக் கண்டிருக்கவேண்டும். மனிதவடிவில் இருந்த குருவை இறைவன் என்று மற்றவர்கள் கருதவில்லை. இறைவன் என்று உணர்ந்துகொண்டதால் மட்டுமே, முதலமைச்சர் திருவாதவூரர் மாணிக்கவாசகரானார்.

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப் பிணையலில்

தாள்தளை இடுமின்

சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் - திருவாசகம்:அண்டப்பகுதி:140-145

 

ஒருவருடைய பொருளை, அவர் அறியாமல் திருடிக்கொள்பவனையே சோரன்’(கள்வன்) என்று கூறுவோம். அனைத்து உடல்வாழ் உயிர்களின் ஆழ்மனத்தின் உள்ளே அவைகள் அறியாமல் கலந்து வாழ்வதால் ஒளிக்கும் சோரன்என்றார் பெருமான். இவ்வாறு நமக்குள் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சோரனாம் இறைவனை இங்கே, அங்கே என்று வெளியே தேடி அலையும் நாம், நமக்குள் தேட முயற்சி செய்யாததால்தான் அவன் அகப்படவில்லை.

இறைவனைக் கண்ட இறையனுபவ ஆனந்தத்தால் தன்னை மறந்து, “விரைந்து வாருங்கள்! புதிய நறுமண மலர்மாலைகளால் இறைவனின் திருப்பாதங்களைக் கட்டுங்கள்; அவனைச் சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்; தொடருங்கள்; விடாமல் பிடியுங்கள்என்ற முதலமைச்சர் வாதவூரரின் ஆணையை மீறி இறைவன் தன்னைப் பிறர் கண்களுக்கு ஒளித்துக் கொண்டான்.

இதன்பின், மணிவாசகராக மாறிவிட்ட திருவாதவூரரின் முழுமையான இறையனுபவப் பிழிவை, தேனை, பாலை, தெளிந்த கருப்பஞ்சாற்றின் இனிமையை, கனிந்த திருவாசகத் தேனால் சுவைக்க அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

தன்முனைப்புடன் முயன்ற பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கடுமையான தவம் புரிந்த முனிவர்களுக்கும், தன்னைக் காட்டாது ஒளித்துக்கொண்டான் சிவபெருமான். தனக்கு ஒப்புமை இல்லாதவனாகிய தனித்தலைமைக் கடவுளாம் சிவபெருமான், என்னைப் போன்ற ஒன்றுக்கும் அற்றவர்கள் பலரும் கேட்குமாறு, ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தனது முழுமுதல் தன்மையைத் தானே எடுத்துச் சொல்லி, என்னை வலிந்து அழைத்து, ஆட்கொண்டு அருளிய பேரருள் தன்மைதான் என்னே?” என்று இறைவனின் அடியவர்க்கு அருளும் எளிய தன்மையை வியந்து உருகுகின்றார் மணிவாசகப் பெருமான்.

தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை

என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டு அருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும் - திருஅண்டப்பகுதி:146-149

 

இறைவன் தானே நேரில் வந்து தம்மை ஆட்கொண்டார் என்று மணிவாசகரே கூறும் வாக்குமூலம் இதுவாகும். கடுமையான தவங்கள் தேவையில்லை; அன்பான எளியவர்களுக்கு நானே வலிய வந்து அருள் செய்கிறேன்என்று நம்மைப் போன்ற சாமானியர்களுக்காக இறைவன் அருளிய உறுதிமொழிப் பத்திரமாகும்.

கொம்புத்தேனால் உடல் செய்தான்

இறைவனின் ஒப்பற்ற அன்பு விளைவித்த இன்பத்தால் என் எலும்புகளும் உருகின; என்னுடல், கடலலை போல ஆர்ப்பரித்து ஓங்கி உயர்ந்து எழுந்து, தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தனைப் போல மயங்கி, மதக்களிப்பு அடையும் என்னைக் கண்டவர்கள், பாண்டியப் பேரரசின் முதலமைச்சருக்கு என்னவாயிற்று என்று கவலைப்படவும், ஊரார் மருளவும், என்னை நன்கு அறிந்தோர், என் நிலையைக் கேள்விப்பட்டு வியக்கவும், மதம் பிடித்த யானை தன் பாகனை மேலே ஏறவிடாமல் அங்குமிங்கும் ஓடுவதைப் போல், இறையின்ப வெள்ளத்தைத் தாங்கமுடியாமல் அரற்றி, என் ஊனுடல் நிலை தடுமாறிற்று; இந்நிலையை மாற்றி, இறையின்பம் தாங்கும் வகையில், இறைவன் என் மனதையும், என்னுடல் உறுப்புக்களையும், கொம்புத் தேனால் செய்ததைப்போன்ற இனிய சுவையுடைய நுண்ணுடம்பாய்ச் செய்தான்என்று தன் இறையனுபவத்தை நம்மோடு பகிர்கின்றார் மணிவாசகர்.

உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்

தலை தடுமாறா வீழ்ந்துபுரண்டு அலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

கடக்களிறு ஏற்றாத் தடம் பெருமதத்தின்

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு

கோல் தேன் கொண்டு செய்தனன் திருவாசகம்: அண்டப்பகுதி: 150-157

பேரின்பத்தின் பரவசநிலை

அறிவதற்கு அரிய இறைவன், உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு எளியவன் ஆனான்; என் இறையனுபவத்தைச் சொல்லால் விளக்கமுடியாமல் தவிக்கிறேன்; இறைவா நீ வாழ்க! முதலமைச்சராக வந்த என்னை, நீ இவ்விதம் பேரின்ப வெள்ளத்தில் இருக்கச் செய்ததை இன்னது என்றும் நான் அறியேன்! நாயேனாகிய நான் இவ்வின்பத்துக்குத் தகுதி உடையவன் அல்லேன்; இறையின்பத்தால், ‘நான்’, ‘எனதுஎன்னும் பேதங்கள் செத்து ஒழிந்தன! ஒன்றுக்கும் அற்ற அடியேனுக்கு இறைவன் அருளியது எதற்காக என்று அறியேன்! இறையின்பத்தை எவ்வளவுதான் பருகினாலும், விழுங்கினாலும், ஆரா வேட்கையுடன் பொறுக்க மாட்டாமல் உள்ளேன்!என்று பேரின்பப் பரவசத்தின் நிலையை நமக்குக் காட்டுகிறார் பெருமான்.

தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;

சொல்லுவது அறியேன்! வாழி! முறையோ!

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன்! ஆஆ செத்தேன்! அடியேற்கு

அருளியது அறியேன்! பருகியும் ஆரேன்!

விழுங்கியும் ஒல்ல கில்லேன்! - அண்டப்பகுதி: 162-167

 

அன்பால் உடலமைத்தான்

சொல்லால் எடுத்துக்காட்ட முடியாத இறைப்பேரின்ப அமுதம் என் உடம்பின் மயிர்க்கால்கள் தோறும் தேக்கி நிறைத்தான்; நாய் போன்ற என்னுடல் உள்ளேயே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்; என் உள்ளிருந்து, இனிய தேன் கொண்டு பாய்ச்சி நிரப்பிய அற்புதமான அமுதங்கள் கசிந்து ஒவ்வொரு எலும்பின் சிறுசிறு துளைகள்தோறும் ஏறும்படிச் செய்தான் இறைவன்; அன்பால் இடைவிடாமல் உருகும் என் உள்ளத்தையே மூலப்பொருளாகக் கொண்டு ஓர் உருவம் செய்து, அங்கு,

அன்பால் செறிந்து ஊறும் உடலை எனக்கு அமைத்தான்; நன்கு விளைந்து முற்றிய கரும்பையும், விளாங்கனியையும் வயிறார உண்ட இன்பத்தில் திளைத்திருக்கும் ஆண்யானையைப் போல, என்னையும், பேரின்பத்தில் என்றும் இருப்பதாகச் செய்தான்; பிரம்மனும் மாலும் அறியாத எம்பெருமானின் பெருங்கருணையாம் வான் தேன் என்னிடம் கலந்ததால், அருளோடு பேரின்பமும் என்னுள்ளேயே நிறையும்படி செய்தான்என்று தன் இறையனுபவப் பேரின்பப் பகிர்வை, அற்புதமாக நிறைவுசெய்கின்றார் மணிவாசகப் பெருமான். (குரம்பை - உடல், எற்பு எலும்பு, அள்ளூறு செறிந்து ஊறும், ஆக்கை உடல், கன்னல் கரும்பு, களிறு ஆண்யானை)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்

தேக்கிடச் செய்தனன்! கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே,

குரம்பைகொண்டு, இன்தேன் பாய்த்தி, நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்,

எற்புத் துளைதொறும் ஏற்றினன்! உருகுவது

உள்ளம் கொண்டு ஓர் உருச்செய்து ஆங்கு, எனக்கு

அள்ளூறு ஆக்கை அமைத்தனன்! ஒள்ளிய

கன்னல் கனிதேர் களிறு எனக் கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன்! என்னில்

கருணை வான்தேன் கலக்க,

அருளொடு பரா அமுது ஆக்கினன்,

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே! - அண்டப்பகுதி: 170-182

 

மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை; மனிதர் எவருக்கும், இறைவனை வசப்படுத்தப் பயன்படும் திருவாசகத்தின் மூலம், மணிவாசகரை, இப்பூவுலகிலே என்றும் இருப்பதாகச் செய்தான் இறைவன் என்பது இதன் உட்பொருள். இதைத் தனி அகவல் என்றே பரவசமடைவார் வள்ளலார்.

மற்றொரு முக்கியமான பகுதி பிரமன் மால் அறியாப் பெற்றியோன்என்பது; இதன் உட்பொருள், மணிவாசகர் பெற்ற கல்வியாலோ, முதலமைச்சராக அவர் பெற்ற செல்வத்தாலோ அவருக்கு இறையருள் கிட்டவில்லை; இறைவனின் பெருங்கருணையாலேயே கிடைத்தது என்பதே. இறைவன் முப்புரம் எரித்த பேரருள் செயலை, புராணங்களிலிருந்து வேறுபட்ட, அறிவுபூர்வமான புதிய பொருளுடன், திருவாசகத்தில் மணிவாசகர் விளக்குவதை அறிய அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 15:முப்புரங்களை எரித்த சிவன்

திருவாசகம் முழுவதுமே மணிவாசகரின் இறைவனுபவப் பிழிவு ஆகும். மனித உடலிலேயே இறையனுபவம் பெற்ற மணிவாசகரின் சொல்லால் விளக்க இயலாதபெருவிளக்கமே அண்டப்பகுதியில் நாம் காணும் திருவாசகம். பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருகஎன்ற இறைவன் ஆணையிடுகிறார்; இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தினும் கொடியதாய், பேரிருளாய் மணிவாசகரைச் சூழ்ந்து வருத்தியதால் பிறந்த திருவாசகப் பதிகங்கள் நீத்தல் விண்ணப்பம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, வாழாப்பத்து போன்றவை. இந்தத் துன்பநிலையைக் கடந்தபின் தோன்றும் பேரின்பம் விளைவித்த திருவாசகப் பதிகங்கள் இளைய தலைமுறையை இறைத்தொண்டிலும், வழிபாட்டிலும் நெறிப்படுத்தும் திருவெம்பாவை, திருவம்மானை, திருக்கோத்தும்பி, திருப்பள்ளியெழுச்சி போன்றவை.

முடிவாக, அனைத்தையும் ஒன்றாக உணர்ந்து, பெரும்பொருளோடு ஒன்றுபட்டு அமைந்த குறைவிலாது எழுந்த நிறையனுபவத்தால் தோன்றிய திருவாசகப் பதிகங்கள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், போற்றித் திருவகவல், அற்புதப்பத்து, பிடித்தபத்து, திருவார்த்தை, யாத்திரைப்பத்து போன்றவை.

இந்நான்கு வேறுநிலைகளின் இடைப்பட்ட நிலைகளில் விளைந்த திருப்புலம்பல், ஆசைப்பத்து, புணர்ச்சிப்பத்து போன்ற திருவாசகங்களும் உண்டு. துன்பம் மிகுதியும், இடைஇடையே இன்பவாழ்வும் கலந்த வாழ்வின் அனைத்து நிலைகளிலும், நம்மை உருக்கி, நெறிப்படுத்தும் திருவாசகங்களில் நமக்கான விடியலைக் காணலாம்.

அடியவர்கள் அனைவருக்கும் பேரின்பம

வலிமைமிக்க பழம்பெருநகர்களான முப்புரங்களையும், தன்னுடைய எழில்மிக்க அழகிய நகைப்பினாலேயே எரித்து வீழ்த்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்களைக் காப்பாற்றினான் இறைவன்; அப்பேரருள் செயலைப் போன்று, இறைவன் எம்மை ஆட்கொண்டபோது, அடிமைச் சிறுவீடுகளில் வசிக்கும் தன்னுடைய அடியவர்கள் ஒருவர்கூட விடுபட்டுப் போகாமல், தன்னுடைய அருள் என்னும் பெருந்தீயினால் ஆட்கொண்டு, தன்னுடன் ஒன்றாக்கிக்கொண்டான் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித்து ஆங்கன்

அருள் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில்

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் - அண்டப்பகுதி:158-161

 

வடமொழி மகாபாரத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் காணப்படும் இறைவன் திரிபுரம் எரித்த புராணத்தின் சுருக்கம் இது. பெரும்தவம் செய்து, வித்யுமாலி, கமலாட்சன், தாரகாட்சன் ஆகிய மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான பறக்கும்திறன்கொண்ட முப்புரங்களைப் பெற்றனர்; அவைகளை, இந்திரனால் பெரும்படைக்கலங்களைக் கொண்டும் அழிக்க முடியவில்லை; தேவர்கள் அனைவரும் மகாருத்திரரைச் சரணடைந்து, முப்புரங்களை அழித்து, தங்களைக் காக்க வேண்டினர்.

மகாருத்திரர், திருமாலை அம்பாகவும், அக்கினியை அதன் பல்லாகவும், எமனை அதன் இறகாகவும், வேதங்களை வில்லாகவும், சாவித்திரியை வில்லின் நாணாகவும், தேவர்களைத் தேராகவும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும் கொண்டு, மூன்று பல்லம்புகள் கொண்ட ஒரே அம்பினால் ஒரே நேரத்தில் திரிபுரங்களையும் தகனம் செய்தார். அந்த மூன்று அசுரர்களில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் ஏற்றுக்கொண்டார்.

சைவசித்தாந்த உயிர்த்தத்துவம்

ஆணவம்(அறியாமை) என்னும் மூலமலத்தால் கட்டுண்டு செயலற்றதன்மையில் கிடக்கும் உயிர்களை மீட்கக் கருணை கொண்டான் இறைவன்; உயிர்களின் ஆணவமலத்தை நீக்க, மாயையிலிருந்து இவ்வுலகத்தையும், உயிர்கள் வாழ்வதற்கான பொறி,புலன்களுடன் கூடிய உடல்களையும் படைத்து, செயல்களைச் செய்ய வைத்து, உயிர்களின் அறிவுப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறான்.

இவ்வாறு, உயிர்களைக் கட்டிய மூன்று கட்டுகளான ஆணவம், மாயை, கன்மம் என்பவையே சைவசித்தாந்த தத்துவத்தில் மும்மலங்கள்என அழைக்கப்படுகின்றன. மாயை, கன்மம் வழியாகப் பயணிக்கும் உயிர், தன்னை உணர்ந்து, தன் தலைவனாம் இறைவனிடம் அடைக்கலமாகிறது; இறைவன் அருளால் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் நீங்கி, முழுவிடுதலை அடைந்து, இறைவனுடன் இரண்டறக்கலந்து பேரின்பம் அடைகின்றது.

சித்தாந்தமும் புராணமும்

மாயையால் உருவான இந்திரியங்களுடன் (பொறி-புலன்களுடன்) கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே இந்திரன்என்னும் தத்துவம். மும்மலங்களே முப்புரங்கள்என்னும் தத்துவங்கள். முப்புரங்களின் (இந்திரியங்களின்) பிடியில் சிக்கிய இந்திரன் என்னும் உயிர் தன்னைக் காக்க இறைவனிடம் சரணடைகிறது; கருணை என்னும் அழகிய புன்னகையுடன் இறைவன் உயிரை நெருங்கி, அறியாமை உள்ளிட்ட மும்மலங்களையும் நீக்குகிறான்; இதுவே முப்புரங்கள் எரித்து அழிக்கப்படும் தத்துவம்.

மும்மலங்கள் நீங்கிய உயிர்கள் என்றும் இறைவனிடம் பேரின்பத்தில் திளைத்து நிற்கும். போர் செய்யத் தேவர்கள் செய்து கொடுத்த தேரைப் பயன்படுத்தாமல், தன்னுடைய எழில் நகைப்பினால் முப்புரங்களை சிவபெருமான் எரித்தான் என்பது, மும்மலங்களிலிருந்து விடுதலை பெற, தன் முனைப்பினால் உயிர்கள் செய்யும் புலனடக்கத் தவங்கள் பயன்படாமல்போக, இறைவனின் அருளாலேயே, உயிர்கள் மும்மலநீக்கம் பெற்றமைக்கு உவமையாயிற்று.

அறிவுசால் முதலமைச்சராய் இருந்த மணிவாசகர் இறைவனிடம் பெற்ற ஞானத்தால், திரிபுர தகனம் என்னும் முப்புரம் எரித்த புராணத்தின் தத்துவப்பொருளை உவமை காட்டி, அடியவர்கள் அனைவரும் அருள்பெற்றதை எவ்வளவு எளிதாக சொல்லிச் செல்கிறார் என்று வியக்கிறோம். தத்துவத்தை விளக்குவதற்காக உவமையாக எழுந்த புராணங்களில், கால ஓட்டத்தில் அறிவுக்குப் புறம்பான கற்பனைகள் பல கலந்து மக்களிடையே வழங்கிவரலாயின; திருவாசகத்தில், இப்புராணங்களுக்கான தத்துவவிளக்கங்கள், பகுத்தறிவுக்கு ஏற்ற உவமைகளுடன், தகுந்த இடங்களில் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

உலகச் சிற்றின்பங்களினால் விளையும் தீங்குகளை எடுத்துக்காட்டி, இச்சோதனைகளுக்கு இடையில் இறைவன் தம்மைக் கைவிடாமல் ஆதரிக்க விண்ணப்பம் செய்யும் மணிவாசகரின் திருவாசகங்கள், சாமானியரான நமக்காகப் பிறந்தவை; அத்திருவாசகத் தேன் சுவைக்கக் காத்திருப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 16: சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

 

இறையனுபவப் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது; ஏனெனில், மனிதஉடலில் வாழும் எவருக்கும் அது வாய்ப்பதில்லை; வாய்த்த அருளாளர்கள் யாரும் நமக்குச் சொல்லால் விளக்கியதில்லை; மனித உடலிலேயே தாம் பெற்ற இறையனுபவப் பேரின்பத்தைப் பெருவிளக்கமாக அண்டப் பகுதியில் நமக்குத் தந்தார் மணிவாசகர்.

மனித குலத்துக்கான இறைநெறி

இம்மாமனிதரைக் கொண்டே மனித குலத்துக்கு இறைநெறி வழிகாட்ட கருணை கொண்ட இறைவன், ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருகஎன்று பணிக்கிறார். மாபெரும் இறையனுபவக் கண்ணைக் கொடுத்துவிட்டு, அந்தக் கண்ணைப் பிடுங்கிக்கொண்டும் போய்விட்டான் இறைவன். பிறவியிலேயே பார்வையற்றவனுக்குக் கண்ணைத் தந்த பின், கண்ணைப் பறித்தால் எவ்வளவு துன்பப்படுவான்? இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தைவிடக் கொடியதாக, பேரிருளாக, மணிவாசகரை வருத்தியது. உலக வாழ்வில், உடல் சார்ந்த உலகச் சிற்றின்பங்கள் தம்மை விடாது துரத்துமே என்ற பெருங்கவலை மணிவாசகரை வாட்டியது.

குழந்தையின் நலன் கருதித்தான், பெற்றோர் தம் குழந்தையைப் பிரிந்து, பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். இறைவன், தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பிரிந்து, உலக வாழ்வுக்கூடத்துக்கு அனுப்பியது, மனித குலத்தின் நலம் கருதியதுதான்; மணிவாசகரின் நலன் கருதி அன்று. மனிதக் குழந்தைகளின் அழுகை, காலத்தில் கரைந்து மறைந்து போகும்; மணிவாசகக் குழந்தையின் அழுகை காலத்தை வென்று, எங்கும் நிறைந்து, நமக்கான இறைநெறி ஆற்றுப்படைதிருவாசகமாக என்றும் நிற்கும்.

ஊனுருக்கும் திருவாசகம்

மார்பிலும், தோளிலும் உறவாடித் தாய், தந்தை அன்பில் தோய்ந்த குழந்தை, பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அழுது முறையிடுகிறது; ஆட்கொள்ளப்பட்டு, இறைவனின் பேரன்பில் தோய்ந்த மணிவாசகர், இறையின்பத்தைத் தவிர்த்த உடல் வாழ்வில் தமக்குச் சிறிதும் பற்றுதல் இல்லை என்றும் இவ்வுலகில் தம்மால் வாழ இயலாது என்றும் இறைவனிடம் முறையிட்டுக் கல் மனமும் கசிந்துருகும் வண்ணம் அழுது அரற்றுகிறார்; வாழாப்பத்து என்னும் பத்துத் திருவாசகங்கள் திருப்பெருந்துறையில் பிறந்தன; நம் ஊனையும், உயிரையும் உருக்குகின்றன; நமக்கான ஆன்ம விடுதலையையும் தருகின்றன.

யாரிடம் நொந்துகொள்வது

இப்பிரபஞ்சம் முழுவதும், அதற்கு அப்பாலும் நீ ஒருவனே பரந்தும்-விரிந்தும்,உள்ளும்-புறமும், ஒளித்தும்-வெளிப்பட்டும் இருக்கிறாய்; ஆயினும் உன்னை அறிந்தவர் யாரையும் நான் காண்கிலேன்; ஆகையினால், நீ என்னை ஆட்கொண்ட பின், பூவுலகில் இருத்திச் சென்றதை நான் யாரிடம் சொல்லி நொந்து கொள்வது? நான் இறைப்பேரின்ப வாழ்வு வாழ்ந்ததை யாருக்கு எடுத்துச் சொல்வது? அப்படி நான் எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு என் நிலைமை புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கும்; ஏனென்றால், அவர்கள் அறிந்திராத இறைப் பேரின்பம்என்பதை அவர்கள் அறிந்த உலகியல் இன்பங்களைக் காட்டித்தான் நான் விளக்க இயலும்; இறையின்பத்தின் வேட்கை அவர்கள் அறியாத ஒன்றாகையால், என் பரிதாப நிலையை உலகோர் அறிய மாட்டார்கள். எம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபுரத்து அரசர்பெருமானார் நீவீரே அருளவில்லையானால், இனி இக்கடல் சூழ்ந்த உலகில் வாழ்தல் எம்மால் இயலாது என்பதை அறிந்து கொள்ளும்; ஆகையினால், எம்மை உன் திருவடிக் கண் வருக என்று அருள் புரிய வேண்டும் என்று உருகி வேண்டுகிறார் மணிவாசகனார்.

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்

வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே.

-திருவாசகம்:வாழாப்பத்து-1

நீ என்னை ஆட்கொண்டதால் நான் உன் உடைமை; எனது நன்மை தீமைகள் அனைத்தும் உனது; அவை குறித்து நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; உன் திருவடியைத் தவிர எனக்கு வேறு பற்றுக்கள் இல்லை; நீ அருளாமல் என்னைப் புறக்கணித்தால், உன்னைக் குறை கூறுவதையும் நான் உன்னிடம் மட்டுமே கூற இயலும் என்கிறார் மணிவாசகர்.

மணிவாசகர் ஆண்ட நீ அருளிலையானால், ஆரொடு நோகேன்! ஆர்க்கெடுத்து உரைக்கேன்!என்று அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ!

வாழாப்பத்துப் பதிகத்தின் இறுதிப் பாட்டில், “குற்றமற்ற தொன்மையான புகழையுடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாகவுடையவனே! செழுமையாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையுறை சிவனே! உன்னையன்றி வேறு ஒரு பற்றுக்கோடும் எனக்கு இல்லை; நீ என்னை ஆண்டுகொண்டதால் என் உடல், மொழி, மனம் மூன்றும் உன் உடைமை; ஆகையால், பிறரைத் தலையால் வணங்குவதும், வாயால் வாழ்த்துவதும், எனக்குத் துணை என்று மனத்தால் நினைப்பதும் என்னால் இயலுமா என்று நீயே சொல்வாயாக! இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! ஆகவே, வருக என்று நீ உடனே அருள் புரிய வேண்டும்”, என்று, தம்மை உலக வாழ்வில் நீடிக்கச் செய்தல் வேண்டாம் என்னும் விண்ணப்பத்தை வெளிப்படுத்துகிறார் மணிவாசகர்.

பழுதில்தொல் புகழாள் பங்க நீயல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ! எனக்கோர் துணையென நினைவனோ! சொல்லாய்!

மழவிடையானே! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்றருள் புரியாயே.

 திருவாசகம்:வாழாப்பத்து-10

மற்று நான் பற்றிலேன் கண்டாய்என்னும் திருவாசக அடியின் தாக்கமாக, தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தாமெழுதிய ஒரு நூலுக்கு, ‘மற்றுப் பற்றில்லாத மக்கள் பற்றாளர் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு சமர்ப்பணம்என்று குறித்துள்ளார். கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்; கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்என்று கவியரசர் கண்ணதானின் காதல் கவிதையிலும் திருவாசகம் ஊடுருவி நிற்கின்றது. தமிழ்ப் படைப்பாளிகளின், தமிழ் மக்களின் உணர்வோடு கலந்து உருக்கும் தன்மை கொண்டது திருவாசக மொழி.

இவ்வுலகில் தாம் வாழ இயலாமைக்கு மேலும் ஐந்து முக்கியக் காரணங்களைக் கூறும் மணிவாசகரின் திருவாசகங்கள் இலக்கியச் சுவையும், பக்திச் சுவையும் கலந்து தேனாய்த் தித்திப்பன; சாமானியரான நம்மை ஆட்கொள்ளும் தன்மையுடையன; அத்திருவாசகத் தேனைத் தொடர்ந்து சுவைக்கலாம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை!

 

மனிதகுலத்துக்கு இறையனுபவப் பேரின்பம் ஊட்ட, சிவபெருமான் செய்த திருவிளையாடலில் பிறந்தது திருவாசகம். வாழாப்பத்து முதற்பாடலில் தம்மை ஆட்கொண்ட இறைவனே அருளவில்லையானால், யாரிடம் நொந்து கொள்வது, யாரிடம் எடுத்துச் சொல்வது என்று இறைவனிடம் மருகும் திருவாசகங்களில் நாம் கரைந்து போனோம். அடுத்துவரும் மூன்றாம் பாடலில்  இறைவனிடம் உரிமையுடன் கேட்கும் சக்தியைப் பெறுகின்றோம்; நம்மில் ஒருவனாக இறைவனை அடையாளம் காட்டும் திருவாசகம் இது.

 

தம் இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த பெருமைக்குரிய திருமால் பாடிப்புகழும் சிவபெருமானின் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லை என்று தம் பற்று-இன்மை எதைக் குறித்தது என்று மிகத்தெளிவாக இப்பாடலில் குறிப்பிடுகிறார் மணிவாசகர்.

தேடிவந்து ஆட்கொண்ட சிவபெருமான்

அது மட்டுமல்ல; இன்னும் ஒரு முக்கியமான செய்தியை மிக அழுத்தமாக இறைவனிடம் கூறி நியாயம் கேட்கிறார்: சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! பாண்டிய நாட்டு முதலமைச்சர் என்னும் முறையில், படைகளுக்குக் குதிரைகள் வாங்குவதற்கே நான் திருப்பெருந்துறை வந்தேன்; உன்னைத் தேடி நான் வரவில்லை; மறைபயில் அந்தணன் வடிவில் குருவாகத் தோன்றி, நீதான் என்னைத் தேடிவந்து ஆண்டுகொண்டாய்!

இறைப்பேரின்பம் நீயாக எனக்குத் தந்த கொடையே தவிர, நான் கேட்டு வாங்கிய வரம் அன்று; ஆகவே, நான் பிணங்குவதும் உன்னோடுதான்; மகிழ்வதும் உன்னைத்தான்! என் உயிருக்கு உறுதியைத் தரும் உன் திருவடிப் பேற்றை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை உனக்கு நான் உணர்த்த விரும்புகிறேன்; உன் பிரிவினால் நான் வாடியிருக்கிறேன். இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகர்.

பாடி மால் புகழும் பாதமே அல்லால், பற்றுநான் மற்றிலேன் கண்டாய்!

தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை! உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி!

வாடினேன் இங்கு! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்று அருள் புரியாயே! – (திருவாசகம்:வாழாப்பத்து-3)

மணிவாசகரின் மனஉறுதி

தலைவியிடம் வலியச் சென்று தன் காதலைத் தெரிவித்த தலைவன் பிரிந்து சென்றால் தலைவி ஊடல் கொள்கிறாள். உரிமை உள்ள தலைவனிடம்தானே ஊடல் கொள்ள முடியும்? ஏனென்றால், ஊடலின் காரணங்களை அறிந்து போக்க வேண்டியவன் இங்கு தன்னைத் தேடி வந்து ஆண்ட தலைவனாகிய இறைவனே ஆவான்; இதையே ஊடுவது உன்னோடுஎன்றார். தன்னை உடையவனாகக் கொண்ட அத்தகைய உரிமையாளனைக் கண்ட பொழுதுதான் மகிழ்ச்சியும் தோன்றும்.

ஆகையால், ‘உவப்பதும் உன்னைஎன்றார். உடல் நலத்தைக் காட்டிலும், உயிர் நலத்தை இறைவனிடம் வலியுறுத்தவே உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதிஎன்றார் மணிவாசகர். வாடிய பயிருக்கு நீர் ஊற்றி, வாட்டம்தீர்த்து வளர்ப்பதுபோலத் தனக்கு அருள்புரிய வேண்டும் என்று குறிக்கவே, ‘வாடினேன்; இங்கு வாழ்கிலேன், வருக என்றருள் புரியாய்என்றார்.

மணிவாசகரும் பாரதியும்

இத்திருவாசகப் பாடல் தரும் நெகிழ்வை, பாரதியின் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்என்ற பாடல் கொண்டுள்ளது. இறைவனிடம் நேரடியாக வழக்குரைக்கும் மணிவாசகரைப் போல் அல்லாது, தோழிமூலம் தன் தலைவன்(இறைவன்) கண்ணனுக்குத் தூது அனுப்புகிறாள் தலைவி. இப்பாட்டில் தம்மை ஆட்கொண்ட கண்ணனிடம் தம் எண்ண ஓட்டத்தை மட்டும் சற்று கூறிவிட்டு வந்துவிடு; பிறகு, ஏதாவது செய்துகொள்ளலாம் என்று தோழியிடம் கெஞ்சுகிறாள் தலைவி.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ..

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்

ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!    - மகாகவி பாரதியார்

 

பாரதியிடம் காணும் மணிவாசகரின் உறுதி

தோழி தூது செல்ல சம்மதித்ததும், தலைவியின் வார்த்தைகளில் தன்னைப் பிரிந்த தலைவனிடம் கொண்ட கடும்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. உடனடியாகக் கண்ணன் என்னை அடைய வரவில்லை என்றால், அனைவரும் கண்ணனைத் தூற்றும் வகையில், ஆற்றங்கரையில் முன்னம் ஒருநாள் எம்மைத் தனியாக அழைத்துப் பேசிய ஆசைமொழிகளை எல்லாம் ஊரெங்கும் முரசு கொட்டி அறிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகக் கூறிவிடு என்று பொங்கி எழுகிறாள் தலைவி.

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை

அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று

சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!   - மகாகவி பாரதியார்

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் பாரதி முறையீடு

பின்பு, கோபம் சற்றே தணிந்த தலைவி, “எப்பொழுதும் அந்தப் பாவி கண்ணனையே நினைந்து, நினைந்து என் உள்ளம் மறுகி மறுகி உருகுகின்றது. அதனால், அவன் எப்பொழுது என்னை வந்து சேர்வான் என்பதை இறுதியாக ஒரு முறை கேட்டுச் சொல் தோழி! அவன் வரவில்லை என்றால், பின், நான் முறையிட, தெய்வம் இருக்குதடி! பார்த்துக்கொள்ளலாம்என்கிறாள் தலைவி தோழியிடம்.

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்

நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்

தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்

பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்! - மகாகவி பாரதியார்

 

கடவுளைப் பற்றிக் கடவுளிடமே மணிவாசகர் முறையீடு

 

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் மேல்முறையீடு செய்யும் உரிமை தந்த பலத்தில் வீரம் உரைக்கிறாள் பாரதி பாடலின் தலைவி. இங்கு மணிவாசகர் வழக்குரைப்பதோ மேல்முறையீட்டுக்கே வழியில்லாத முழுமுதற் கடவுளிடம்; எனவேதான், ‘ஊடுவதும் உன்னோடு, உவப்பதும் உன்னைஎன்று சிவபெருமானிடமே தன் வழக்கைப் பதிவு செய்கிறார் மணிவாசகர்.

மணிவாசகரும் கம்பனும்

இங்கு, உன்னைப் பிரிந்து வாழும் பிரிவைக் காட்டிலும் என்னைச் சுடுமோ கொடுங்காட்டில் வாழும் வாழ்க்கை?” (ஈண்டு, நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள். கம்பராமாயணம்:1917) என்று ராமபிரானிடம் வழக்குரைக்கிறாள் கம்பனின் சீதை. கம்பனின் இந்தக் கவிதைக்கு உரமாக இருந்தது என் தலைவனே! பெருங்காட்டில் வாழ்வது எனக்குக் கடினமாக இருக்குமென்று நீ சொன்னால், உன்னைப் பிரிந்து தனியாக வாழும் வீட்டுவாழ்க்கை எனக்கு இனிமையாக இருக்குமோ?” என்னும் குறுந்தொகைப் பாடல்.

பெருங்காடு இன்னாஎன்றீராயின், இனியவோ பெரும

தமியேற்கு மனையே’ - குறுந்தொகை:124

 

திருவாசகத் தேனைச் சுவைக்கும்போது, தமிழ்ச் சோலையில் பூத்த அதற்கு இணையான படைப்புகளையும் ஒப்பு நோக்கினால், சுவையும், இனிமையும் மென்மேலும் பெருகுகின்றன. வாழாப்பத்தில் இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

 

வான்கலந்த மாணிக்கவாசகம்18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்!

சிவபெருமானைத் தலைவாஎன்றழைத்தார் மணிவாசகர். வருங்காலத்தில் யாரும் யாரையும் தலைவாஎன்றழைக்கும் அவலங்கள் நடக்கும் என்பதை மணிவாசகர் உணர்ந்திருந்தாரோ என்னவோ? இறைவனை வெறுமனே தலைவா என்று அழைக்காமல், “தன்மை பிறரால் அறியாத தலைவா!என்னும் அடைமொழியுடன் ஒரு அற்புதமான திருவாசகம் அருளினார். இத்திருவாசகத்தில் உலகத் தலைவர்களுக்கும், இறைவனாகிய தலைவனுக்குமான வேறுபாடுகளை வெகுஅழகாக விளக்கியுள்ளார்.

உலகத் தலைவரின் தன்மை

உலகத் தலைவரின் தன்மை முழுவதும் அவர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும். விரும்பி உண்ணும் உணவு, விருப்பமான உடை, நிறங்கள், எந்த நேரம் எங்கே இருப்பார், யார் பரிந்துரை செய்தால் அவரிடம் காரியம் சாதிக்க முடியும் போன்ற அத்தலைவரின் குணம், செயல்கள் அனைத்தும் அவரின் கடைநிலைத் தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அத்தலைவருக்கோ, தன்னுடைய மக்கள், தொண்டர்களைப் பற்றியும், அவர்தம் குணம், செயல்கள் பற்றியும் எதுவும் தெரியாது.

இறைவனாம் தலைவனின் தன்மை

இறைவனின் தொண்டர்களுக்கோ, தம் தலைவன் எப்படி இருப்பான்; எப்போது தோன்றுவான்; எங்ஙனம் அருள்வான்; எங்கு இருக்கிறான் போன்ற தன்மைகள், சிறப்பு விவரங்கள் எதுவும் தெரியாது. ஆனால், இறைவனாகிய தலைவனோ, தன் தொண்டர்கள், மக்கள் அனைவரின் குணங்கள், செயல்கள் உள்ளிட்ட அனைத்துத் தன்மைகளையும், விவரங்களையும் நன்றாக முழுவதும் அறிவான்; ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாதுஎன்பதற்கேற்ப ஒவ்வொரு உயிரின் உள்நின்று உணர்பவன் இறைவன். இந்த நுட்பத்தையே தன்மை பிறரால் அறியாத தலைவாஎன்று இறைவனுக்குச் சிறப்பு இலக்கணமாகக் குறிப்பிட்டார் மணிவாசகர்.

ஆட்கொண்டபின் புறமே போகவிடுவாயோ?

தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்; பிறப்பினால் இழிந்த நாய், நன்றி என்னும் குணத்தால் உயர்ந்தது. தம்மை ஆட்கொண்ட இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கும் பண்புகூட இல்லாத (புன்மை) சிறுமையுடையவன் என்று உணர்த்தவே பொல்லா நாயான புன்மையேனைஎன்ற சொற்களால் குறிப்பிட்டார்.

எனக்குத் தகுதி இல்லை என்பதால் ஆட்கொள்ளாமல் விட்டிருந்தால் ஒரு கேள்வியும் இல்லை! தகுதி இல்லாவிட்டாலும், உன்னுடைய பேரருள் காரணமாக என்னை ஆட்கொண்ட பெருமை உடையவன் நீ! அந்தப் பெருமைக்கு இழுக்கு வராமல் என்னைப் புறம் போக விட மாட்டாய்என்பதைக் குறிப்பால் சொல்லவே ஐயா! ஆண்டு, புறமே போக விடுவாயோ?” என்றார். அவ்வாறு நீ என்னைக் கைவிடுவாயானால்,எனக்கு வேறு கதி இல்லை! பொன்மயமான திருமேனியை உடைய என் தந்தையே! எங்கே நான் அடைக்கலம் புகுவேன்?”, என்று இறைவனிடம் உருகி முறையிடுகின்றார் பெருமான். இறைவனை உருக்கிய இத்திருவாசகத் தேன் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான

புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?

என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்! எம்பெருமான்!

பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே!

திருவாசகம்:திருச்சதகம்:59.

தலைவனாகும் தகுதி

பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தனக்கு நேர்ந்த துன்பங்களாக எண்ணி, அவ்வுயிர்களைக் காப்பாற்றா விட்டால் ஒருவன் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பது வள்ளுவம். நான், எனது என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, பாதிக்கப்பட்டோர் யாருக்காகவும், அந்தப் பாதிப்பு தனக்கே ஏற்பட்டதென்று வருந்தி அழுகின்றவனே மனிதன்; அவனே தலைவனாவதற்கும் தகுதியானவன் என்று கவியரசு கண்ணதாசனின் ஒரு கவிதை அழகாக வரையறுக்கின்றது:

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ...

யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்!

 

வையத்துள் சகமனிதர்களுக்காகத் தொண்டுசெய்து வாழ்வாங்கு வாழ்ந்தவனே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான் என்பது வள்ளுவர் கருத்து.

பொய்த் தெய்வங்கள்

தகுதியற்றவர்களைத் தெய்வமாகவும், தலைவராகவும் ஏற்றுக்கொள்ளும் அறியாமைப் போக்கைக் கண்டு மனம் பதைத்து நொந்த மணிவாசகர், வண்டினத்தின் அரசனான அரச வண்டைத் தன் தலைவனிடம் தூது விடுகின்றார்: அரச வண்டே! அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவரான அவரே கடவுள்என்று கடவுள் அல்லாத பொய்யர்களை எல்லாம் கடவுள் என்று புலம்புகின்ற மக்கள் நிறைந்தது இவ்வுலகம்; உலகப் பற்று சிறிதுமின்றி, என்னுடைய பற்றுகள் அனைத்தும் நீங்கும்படிக்கு, நான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிற உண்மையே வடிவான தேவர்பிரானிடம் போய் என் நிலையைச் சொல்வாய்என்றார்.

அத்தேவர் தேவர் அவர்தேவர் - என்று இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

( திருவாசகம்: திருக்கோத்தும்பீ)

(கோத்தும்பீ - அரச வண்டே! பத்தேதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி)

இறைவன் அல்லாத ஒருவரைக் கடவுள் என்பதும், நிரந்தரத் தலைவர் என்பதும், காரியம் சாதித்துக் கொள்வதற்காகக் கூறப்படும் பொய் உபசாரமே என்று சொல்லவே, ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தேஎன்றார்.

உலகப் பற்றை விடுவதற்கு இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, ‘பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற மெய்த்தேவர்என்றார். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்குஎன்பது வள்ளுவர் வாக்கு.

மனிதன் தெய்வமாதல்

உயிர்களின் அறியாமையைப் போக்கவே, அவற்றுக்கு உடல், உலகம் போன்றவைகளைப் படைத்து, அவைகளுடன் வாழ்கிறான் இறைவன்; உயிர்கள் தம்மை உணர்ந்து, தம் தலைவனாகிய இறைவனை அழைக்கும்போது வெளிவந்து ஆட்கொண்டு அருள்கிறான். வேண்டுதல், வேண்டாமை இன்றி, அனைவருக்கும் அருளும் இறைவனே உண்மையில் உயிர்களின் தலைவனாவான். தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையாஎன்ற கவியரசு கண்ணதாசனின் வாக்குப்படி, இறையனுபவத்தைத் தாமும் அறிந்து, உலகுக்கும் சொன்ன மணிவாசகர் நம் தலைவராவார்.

வாழாப்பத்தில் இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் மீண்டும் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்

இவ்வுலகில் தம்மால் ஏன் வாழ இயலாது என்பதைத் தேர்ந்த வழக்கறிஞரின் தெளிவுடன் நீதியின் தலைவன் இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர். வாழ்கிலேன் கண்டாய்என்று இப்பதிகப் பாடல்கள் நெடுகிலும் வருவதால் வாழாப்பத்துஎன்ற பெயருடன் இது விளங்குகிறது.

இறைவனைக் கட்டும் கயிறு

வம்பனான என்னை ஆண்டுகொண்ட மாணிக்க மணிபோல் ஒளிவீசும் இறைவனே! எனக்கு உன் திருவடியைத் தவிர வேறு பற்று ஒன்றும் இல்லை! தேவர்களும் அறிய முடியாதவனே! மூவுலகையும் ஊடுருவி செந்தீ உருவில் நின்ற சிவபெருமானே! சிவபுரத்து அரசே! என்னை ஆளும் எம்பெருமானே! உயிர்த் தொகுதிகளில் தலைசிறந்தவர் காக்கும் கடவுள் திருமால்; அடுத்தவர் படைக்கும் தேவன் நான்முகன்; இவர்களே தான்என்னும் அகந்தையால் பாதிக்கப்பட்டனர்; ‘அன்புஎன்னும் உணர்வு இறந்து, உனது அடி முடி காண முடியாமல் தவித்தனர்; எத்தகுதியுமற்ற வம்பனான என்னால் இவ்வுலகில் வாழ்ந்து எப்படி உன்னை அடைய இயலும்? எனவே, என்னை வா என்று கூவி அழைத்துக்கொண்டு அருள்வாயாக!என்று உள்ளமுருகி வேண்டுகின்றார் மணிவாசகர்.

வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்!

உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்

செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே!

(திருவாசகம்:வாழாப்பத்து-2)

சிற்றறிவைக் கடந்து நிற்கும் வாலறிவனாம் இறைவனை அன்புஎன்னும் உணர்வுக் கயிற்றால் மட்டுமே கட்ட முடியும். ஆனால், எளியனான தமக்கு அத்தகைய அன்புவயப்படுமோ என்று அஞ்சினார் மணிவாசகர்.

ஒழுக்கமில்லாத புலன்கள்

இனிய பண்ணிசைமொழி பேசும் உமையம்மையின் பங்கனே! உன்னைத் தவிர வேறுபற்று இல்லாதவன் நான்! என்னை உண்மையாகவே நனவில் ஆட்கொண்டருளியவனே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! உன் அருளால் என்னை ஆட்கொண்டு திருவடிப் பேறு நல்கிய நீ, இவ்வுலகில் யாருடன் வாழச் சொல்கிறாய் என்பதைச் சற்றே எண்ணிப் பார்! உன் திருவடி காண, ‘எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண்ஆகிய பொறி புலன்கள் எப்போதாவது எனக்கு உதவியதுண்டா? என்னைத் தீயவழியில் கொண்டுபோவதையே தொழிலாகக் கொண்ட இவைகளை, நினது திருவடிச் சிந்தனையில் ஈடுபடுத்தி, என்னால் மண்ணுலகில் வாழவே முடியாதைய்யா! எப்படியாவது என்னை வருக என்று அழைத்துக்கொண்டு அருள் செய்வாயாக!என்று கல் மனமும் கரையுமாறு உருகி வேண்டி நின்றார் பெருமான்.

பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்!

திண்ணமே ஆண்டாய்! சிவபுரத்தரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எண்ணமே, உடல்,வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின் கணே வைத்து

மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்! வருக! என்று அருள் புரியாயே!

(திருவாசகம்:வாழாப்பத்து-5)

இறைவனை அடைவதற்கு உடல், அகப்புறக் கருவிகள் தடையாக உள்ளன என்பதைத் திருச்சதகம் 79-ம் திருவாசகத்தில் பெருமான் அற்புதமாக விளக்குகின்றார். ஐயனே! உலகியலிலேயே செல்கின்ற சிந்தை, செயல், கேள்வி, சொல் ஆகியவற்றுடன் எப்போதும் கூட்டணி கொண்டவை சிறப்பில்லாத ஐம்பொறிகள்; இவைகளால், முற்காலத்தில், உன்னை அடைந்திடாத மூடனாகிய நான், தீயில் வெந்து இறந்தேனில்லை; என் மனம் நாணி, நெஞ்சு வெடிக்கவில்லை; எம் தந்தையாகிய உன்னை அடைய விரும்பி, இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்என்று பரிதவிப்புடன் தன்னையே நொந்துகொள்கிறார் பெருமான்.

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்,

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்!

வெந்து, ஐயா! விழுந்திலேன்! என் உள்ளம் வெள்கி விண்டிலேன்!

எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று இருப்பனே!

(திருவாசகம்:திருச்சதகம்- 83)

ஐம்புலன்களும், சிந்தை முதலிய கருவிகளும் இவ்வுலகத்தில் உள்ள பொருள்களைப் பற்றிக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து அறிவதற்கே உதவுகின்றன; அவை இறைவனை அடைவதற்குத் துணையாக இல்லாமல், தடையாகவே உள்ளன; எனவே, ‘அவற்றால் நின்னை எய்திடாத மூர்க்கனேன்' என்றார். இறைவனை அடையாமல் வாழ்ந்து பயனில்லை என்பதை, ‘வெந்து விழுந்திலேன்' என்றும், 'உள்ளம் விண்டிலேன்' என்றார். இறைவன் மணிவாசகரை ஆட்கொண்டமையால், இறைவனை எப்படியாவது மீண்டும் அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் வாழ்வதை, ‘நின்னை இன்னம் எய்தலுற்றிருப்பனே' என்றும் கூறினார்.

கடமை தவறிய மனம்

ஆண்டு கொள்வதற்கு முந்தைய காலங்களில், சிந்தை முதலிய கருவிகளால் இறைவனைப் பற்றும் அறிவு தமக்கு இல்லை என்பதை எய்திடாத மூர்க்கனேன்என்றார். மனமே எல்லாக் கருவி-கரணங்களுக்கும் மூலம்; தன்னுடன், ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் உள்ளிட்ட மற்ற கருவிகளையும் இறைவழியில் செலுத்தும் கடமை மனதுக்கு உண்டு; தீய உலகியலில் தானும் சென்று, மற்றைய கருவிகளையும் தீய வழியில் செலுத்தியமைக்காகக் கடமை தவறிய மனம் வெட்கப்பட்டு, உடைந்து அழிய வேண்டும். அவ்வாறு தம் மனம் நாணமுற்று அழியவில்லையே என்று வெதும்பும் மணிவாசகர் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்என்று வருந்துகிறார்.

உடலின் கடமையாகிய இறைவனைத் தொழுதல், வணங்குதல் போன்றவைகளைச் செய்யாமைக்காக உடலை நெருப்பில் வீழ்த்தாது வீணாக இருக்கிறேன் என்பதை, ‘வெந்து, ஐயா, விழுந்திலேன்என்றார் பெருமான். மனம் உடைந்து அழிவதும், உடல் வெந்து அழிவதும் கடமை தவறியமைக்காகச் செய்யும் கழுவாய் (பிராயச்சித்தம்) ஆகும்.

ஒரு குழந்தை, தன் தந்தையை அடைவதற்கு இவ்வளவு துன்பம் அடைதல் தகுமா என்பதைக் குறிக்கவே எந்தையான நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனேஎன்றார்.

சிவார்ப்பணம் என்பது

ஐம்புலன்களையும் சிவமயமாகக் கண்டார் வரகுணத்தேவர் என்னும் சிவனடியார். உதிர்ந்து கிடந்த வேப்பங்கனிகளைச் சிவலிங்க வடிவங்களாகக் கண்டார். குளத்தில் உள்ள தவளைகளின் ஒலியை சிவபெருமானைப் போற்றிப் பாடும் துதிப்பாடல்களாகக் கேட்டார். உள்ளம் நெகிழ்ந்து, உதிர்ந்த அவ்வேப்பங் கனிகளுக்கு எல்லாம் விதானம் அமைத்தார். தவளைகளின் ஒலி வந்த அக்குளத்துக்குக் காசும், பொன்னும், மலரும் தூவி வழிபட்டார். இந்நிகழ்வைப் பட்டினத்தடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் காணலாம்.

ஏழை ஒருவன் பசித்திருந்தால், சிவபெருமானே பசித்திருந்ததாக எண்ணித் தொண்டு செய்யும் மனமே சிவார்ப்பணம் ஆகும். ஒரு சிவஞானி, உலகில் நுகரும் ஐம்புல இன்பங்களையும் சிவார்ப்பணம் செய்தல் வேண்டும். இவ்வாறு, உலகியல் தொடர்பான ஐம்புலன்களையும் இறைவனுக்குச் சமர்ப்பித்துவிட்டு, சிவமயமாக அப்புலன்களை மாற்றிக் கொள்ளுவதே ஐம்புலன்களால் இறைவனை அடைதலாகும் என்பதைச் சொல்வதே இத்திருவாசகங்கள்.

நம் ஊனை உருக்கி, இறையொளி தந்த திருவாசகத்தேன் சுளைகளைச் சுவைத்தோம். இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் மீண்டும் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்

இறைச்சிந்தனை என்பது நடமாடும் கோயில்களான சக உயிர்களுக்குச் செய்யும் தொண்டு. துளியும் இறைச்சிந்தனையின்றி, ‘நான், எனதுஎன்று பெரும்பகுதி வாழ்நாளைக் கழித்துவிட்டோர் பலர்; இவர்களுக்கும் இறையருள்(முத்தி) கிடைக்கும் என்ற நம்பிக்கை தருவது அதிசயப்பத்துஎன்னும் இப்பதிகம்.

வழிகாட்டும் துருவநட்சத்திரம்

வாழ்கிலேன் கண்டாய்என்று இறைவனைப் பிரிந்த துயரம் பொறுக்க இயலாமல் மணிவாசகர் தன்னை மறந்து அழுது, உருகிப் பாடிய திருவாசகங்கள் நம் உள்ளத்தை உருக்குவனவாக உள்ளன. தம் கண்ணசைவில் எதனையும் ஏவல் கொள்ளும் முதலமைச்சராக, சகல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தவர் மணிவாசகர்; ஒருவேளை, ஏழ்மையில் வாழும் கடினமான துறவு வாழ்வு பொறுக்க முடியாமல் வாழ்கிலேன்என்று இறைவனிடம் முறையிட்டாரோ என்ற கேள்வி எழுவதும் இயல்புதானே! இக்கேள்விக்கான மணிவாசகரின் பதில், துருவ நட்சத்திரமாக நமக்கு வழிகாட்டுகின்றது.

ஏழ்மை எதனால்?

பொருட்செல்வம் இல்லாதவன் இவ்வுலகில் மட்டுமே ஏழை. இறைவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தை எண்ணாமல் வாழ்ந்துவிட்டதால், பேரின்ப அருட்செல்வத்தை இழந்து, தாம் ஏழ்மை அடைந்ததாக வருந்துகிறார் மணிவாசகப் பெருமான். எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!என்பதே அற்புதமான அத்திருவாசக வரிகள்.

இறைவன் திருவடியைப் புகழும் செல்வமே உண்மையான செல்வம்என்னும் பொருள்தரும் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமேஎன்று திருஞானசம்பந்தர் அருளிய தமிழ்மறை இதை உறுதி செய்கின்றது. நிலைத்த அருட்செல்வத்தைப் பெற, சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருநாமத்தையும், திருவடியையும் எப்போதும் வணங்கும் எண்ணம் நமக்கு ஏற்படவேண்டும்.

தினமும் ஐந்துமுறை இறைவனைத் தொழவேண்டும் என்னும் இசுலாமியச் சிந்தனையும், வாரத்தில் ஞாயிறுஎன்னும் ஒரு நாளையாவது இறைச்சிந்தனைக்காகவே வைக்கவேண்டும் என்னும் கிறித்துவச் சிந்தனையும் எவ்வளவு அற்புதமான வழிகாட்டல்கள்! இறைச்சிந்தனையாம் மல்லிகை எத்தோட்டத்தில் மலர்ந்தாலும் தரும் மணம் ஒன்றல்லவா!

இறைவனின் திருவருள் பெற, பயன் கருதாத இறைத்தொண்டாம் நல்வினைகள் செய்திருக்கவேண்டும்; அதற்கு வழிகாட்டும் அருட்கலைகளை அறிந்த ஞானிகளோடும் தாம் சேரவில்லை; அத்தகைய பேறு தமக்கு இல்லை; மண்ணுலகிலே பிறந்து, தொண்டு செய்யாமல் வெற்று வாழ்க்கை வாழ்ந்து, இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போவதற்கே தமக்குத் தகுதி உள்ளது; இருந்தும், சிறப்பு மிக்க அண்ணல் இறைவன், தகுதியற்ற தம்மையும் ஆண்டுகொண்டு, இறையடியவர்களுடன் சேர்த்துக்கொண்ட அதிசயத்தை விளக்க, ‘அதிசயம் கண்டாமேஎன்று உருகுகிறார் பெருமான் மணிவாசகர்.

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு, நல் வினை நயவாதே!

மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை!

அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்:அதிசயப்பத்து-6)

இதுவரை வீணான வாழ்நாளை எண்ணி வருந்தாமல், எஞ்சியுள்ள வாழ்நாளில் இறையருளைப் பெற இயலும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும் நமக்கான திருவாசகம் இது.

இறைத்தமிழ் திருவாசகம்

எதிர்பாராததும், நினைப்புக்கு அப்பாற்பட்டு நடப்பதையுமே அதிசயம் என்போம். வாதவூரார் முதலமைச்சர் பதவியைத் துறந்து மணிவாசகரானது அதிசயம்; மணிவாசகருக்காக, நரிகளைப் பரிகளாக்கியதும், இறைவனே கொற்றாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்ததும் பெரும் அதிசயமாகும். இதுவரை நாம் அனுபவித்த இயல், இசை, நாடகம் என்னும் முப்பரிமாண முத்தமிழ், என்புருக்கித் தேனூறும் திருவாசக இன்பத்தமிழாக அமைந்து இறைத்தமிழ்என்னும் நான்காம் பரிமாணத்தைப் பெற்றதும் அதிசயம் தானே!

இறைவனே எழுத்தனானான்

திருவாசகத்தின் இறைத்தமிழில் மயங்கி, இறைவனே தன் கையால் திருவாசகத்தைப் படியெடுத்து வைத்துக்கொண்டான்; எதற்காக? ‘இறைவனின் பேரூழிக்காலத் தனிமைக்குத் துணையாகஎன்பார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார்.

கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்

உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே! தமிழ்த்தாய் வாழ்த்து.

இறைவனை நீதியேஎன்றழைத்தார் மணிவாசகர்; “வேண்டுதல்-வேண்டாமை இல்லாது, அனைத்து உயிர்களையும் மக்களாகப் பாவித்து, சமமாகக் கருதுதல் நீதி! அவரவருக்கு உரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! எடுப்பதும் கொடுப்பதும் அதிகமில்லாமலும் குறைவில்லாமலும் நடப்பது நீதி! இன்ப துன்பங்களில் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்பது நீதி! நீதியே உலகத்தின் இயங்கு முறைகளை உருவாக்குகின்றது. அரச நீதிகள் தவறினாலும், இயற்கையாய் அமைந்த நீதிகள் ஒருபோதும் தவறியதில்லை!என்று நீதியை வரையறுப்பார் தவத்திரு.குன்றக்குடி அடிகளார்.

இறைநீதியும் மனிதநீதியும்

ஆதிகால மனித வாழ்க்கையில் கூட்டு வாழ்க்கையும், கூட்டு உழைப்பும் இருந்தது; ஆக்கிரமிப்போ, சுரண்டல்களோ இல்லாத நீதி இருந்தது. கடவுளுடன் பேரம் பேசும் பரிகார முறைகள்அறிவு வளர்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்டது; அவை பாவச்செயல்களைப் பெருக்கின; ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்என்று இயற்கை நியதிகளையும், நீதியையும் மாற்றும் சட்டங்களை உருவாக்கினான் மனிதன்; அதையும் வளைத்து மாற்றத் தயங்குவதில்லைஎன்பார் அடிகளார்.

இறைநீதியோ, வேண்டுதல் வேண்டாமை இன்றி, அனைவருக்கும் பொதுவானது. அறிவின் தலைவன் நான்முகன்; செல்வத்தின் தலைவன் திருமால்; நீதியே வடிவான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் இவ்விருவரின் அறிவாலோ, செல்வத்தாலோ காணமுடியவில்லை. இதை பங்கயத்து அயனும், மால் அறியா நீதியேஎன அருட்பத்து ஒன்றாம் பாடலில் அருளினார் மணிவாசகர்.

முதலமைச்சராக அரசாணையை நிறைவேற்றும் கடமையில், நீதி சாராதவைகளும் அடக்கம். குதிரைகள் வரும் என்று அரசனுக்குச் செய்தி சொன்னதும் நீதிக்கு முரணானது. இவையெல்லாம் மணிவாசகரின் சிந்தனையைப் பாதித்த விடயங்கள்; எனவே, “நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்என்றார்.

தாம் நீதியைச் சார்ந்து நடக்கும் இறையன்பர்களுடன் உறவு கொண்டிருந்தால், அவர்கள் தம்மை நீதி தவறாத தொண்டுநெறிக்கு வழிகாட்டியிருப்பார்கள்; அவ்வாறும் தாம் நடக்கவில்லை என்பதை நினைப்பவரோடும் கூடேன்என்றார். நீதி சாராத வாழ்க்கை, தீ வினைகளை ஈட்டி, பிறந்து இறந்து உழலும் நிலையையே தரும்; இதை ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனைஎன்னும் திருவாசகவரி உணர்த்துகிறது.

தாயின் கருணை

அத்தகைய கீழ்நிலையை அடைந்துவிட்ட தம்மைக் காக்க தொடக்கம் முடிவு அற்ற (அநாதி) நிரந்தமாய் உள்ள இறைவன், ஆதியானான்; அம்மையப்பனாக வந்து என் அடியான்' என்று அறிவித்து ஆட்கொண்டான்; தன் அடியவருடன் கூட்டி அதிசயம் நிகழ்வித்தான் என்றார் மணிவாசகர்.

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்! நினைப்பவரொடும் கூடேன்!

ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை, ‘என் அடியான்என்று

பாதி மாதொடும் கூடிய பரம்பரன்! நிரந்தரமாய் நின்ற

ஆதி! ஆண்டு, தன் அடியரில் கூட்டிய, அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்: அதிசயப்பத்து-2)

நீதி தவறி வாழ்ந்ததை மன்னிக்கும் கருணை அன்னைக்கே உரிய பண்பு; இதைக் குறிப்பிடவே, “பாதி மாதுடன் கூடிய பரம்பரன்என்றார் பெருமான்.

சக மனிதனை நேசிப்பது; போற்றுவது; தொண்டு செய்வது; பிறர் பொருளைக் கவராமல் இருப்பது; பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவது; இவையே நீதியான இறைவனை அடைய, முறையான வாழ்க்கை நெறிகள்; இவைகளைச் சிக்கெனக் கடைப்பிடித்து முழுவிடுதலை (முத்தி) என்னும் நிலைப்பேறு பெறுக! என்கிறது இத்திருவாசகம்.

நம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக் கூத்தைத் தரிசிக்கும் தேர்ந்த மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே

 திருப்பெருந்துறையில் மணிவாசகரை ஆட்கொண்டார் இறைவன்; இறையின்பத்தில் திளைத்த மணிவாசகர் தம்மை மறந்தார்; பகல் இரவாவதும் மறந்தார்; தாம் பாண்டிய நாட்டின் முதலமைச்சர் என்பதையும் மறந்தார்; பாண்டிய மன்னனுக்காகக் குதிரைகள் வாங்கவே பொன் கொண்டுவந்ததையும் மறந்தார்; எத்தனைக் காலம் அப்படியிருந்தாரோ தெரியவில்லை; கொண்டுவந்த பொன்னும் காப்பாரில்லாமல் கரைந்தது; குதிரைகள் எப்போது வரும் என்ற பாண்டிய மன்னனின் ஓலையைக் கண்டதும் துணுக்குற்றார்; இறைவனிடம் சென்று முறையிட்டார்; இறைவன் ஆணைப்படி, “ஆவணி மூல நன்னாளில் குதிரைகள் வரும்என்று பதில் ஓலை அனுப்பினார்.

குதிரைகளுடன் தான் பின்னே வருவதாகவும், முன்சென்று அரசனுக்குச் சொல்லும்படியும் இறைவன் மணிவாசகரைப் பணித்தான். மணிவாசகர் வந்து பல நாட்கள் ஆனபின்னும் குதிரைகள் வரவில்லை; கோபங்கொண்டு, மணிவாசகரைக் கொடுஞ்சிறையிலிட்டான் மன்னன். இறைவனின் கருணையை நினைத்து, திருவருள் துணை கொண்டு, துன்பங்களைப் பொறுத்தார் மணிவாசகர்.

நன்றும் பிழையும் நீயே செய்வாய்!

கடமை தவறாத முதலமைச்சரான மணிவாசகர், இறைவன் ஆட்கொண்ட பின் கடமை தவறியதற்கு இறைவனே பொறுப்பு! இதை இறைவனும் அறிவான்; இத்திருவிளையாடலை மணிவாசகரின் ஒரு அற்புதமான திருவாசகம் நமக்கு அறிவிக்கின்றது. குன்றுபோல் என்றும் மாறாத தன்மை கொண்ட இறைவனே! ஆட்கொண்ட அன்றே என் ஆவியையும், உடலையும், உடைமை அனைத்தையும் நீ ஏற்றுக் கொண்டுவிட்டாயே! இன்று எனக்கென ஓர் இடையூறு எப்படி வரும்? எட்டுத் தோள்களும், முக்கண்களும் உடைய எம்மானே! நானே உன் உடைமை என்பதால் என் செயல் என்று எதுவுமில்லை; நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! அனைத்தும் சிவார்ப்பணம்! நானோ இச்செயல்களின் நாயகன்?” என்றார் மணிவாசகர் உறுதியுடன்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ!

இன்றோர் இடையூறு எனக்குண்டோ! எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய்! பிழைசெய்வாய்! நானோ இதற்கு நாயகமே!!

(திருவாசகம்: குழைத்தபத்து-7)

கொண்டுவந்த பொன்னுக்கு, குதிரைகள் வாங்க விடாமல் செய்த இத்திருவிளையாடல் மூலம் இறைவன் மனிதகுலத்துக்குச் சொல்லும் முக்கியச் செய்தி இப்பூமியின் வளங்கள் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காகத் தரப்பட்டவை; அவ்வளங்களைக் கொண்டு குதிரைகள் உள்ளிட்ட படைபலங்கள் பெருக்கி, பிறநாடுகளின் மீது படையெடுத்து அமைதியை அழிப்பதும், அவர்தம் பொருட்களைக் கவர்வதும் நீதியற்ற செயல்கள்என்பதே!

பட்டினிச்சாவு கண்டும் சிந்தை கலங்காதோர்

பல நாடுகளில் சக மனிதர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது, ராணுவத் தளவாடங்களை வாங்க, உலகப் பொருளா தாரத்தின் பெரும்பகுதி செலவிடப்படுவது கொடுமை! அநீதி! மனித குல மேம்பாட்டுக்கான அறிவியல் தொழில்நுட்பத்தை ராணுவ ஆயுதங்களையும், போர் முறைகளையும் கூர்செய்யப் பயன்படுத்து கிறோம்; நாடு, தேசபக்தி என்ற பெயர்களால் மனித குலம் செய்யும் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் இது. பிளவுபடாத இந்தியாவின் ஒருகுடும்பத்து மனிதர்கள், விடுதலை, மதம், தேசபக்தி என்ற பெயர்களில் ஒருவருக்கு ஒருவர் பகையாளியானார்கள். மனிதருக்குள் அன்பென்னும் பூப்பூத்தால், ஆயுதங்கள் வாங்கும் பணத்தில், பசிப்பிணி போக்கும் தொண்டாக மலர்ந்திருப்பார்கள்.

நீதிமறந்த மனிதகுலம்

அறிவு வளர்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மனித குலம் அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் என பூமிக்குச் செய்யும் பேரழிவைச் சொல்லி மாளாது; இனக்குழுக்களாக இயற்கையோடு வாழ்ந்த மனிதன், இப்புவியில் யானை முதல் எறும்பு வரையான அனைத்து உயிர்களின் வாழும் உரிமையையைக் காத்து வாழ்ந்தான். இறைவனின் திருவிளையாடல்கள், இயற்கை நீதியை மறந்த மனித குலத்தை நெறிப்படுத்தவே என்பதை உணர்வோம்.

தவறே செய்யாத மணிவாசகரை ஆட்கொண்டு, பொதுப்பணத்தைக் காக்கும் கடமையிலிருந்து தவறச் செய்தான் இறைவன்; இதற்கு அவனே பொறுப்பு என்பதால்தான் குதிரைகள் வரும் என்று ஓலை அனுப்புமாறு மணிவாசகரைப் பணித்தான் இறைவன்.

நீதிக்குத் தலைவணங்கிய இறைவன்

தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பொதுப்பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக பாண்டியன் சிறையிலிட்டபோது, இறைவன் உடனே குதிரைகள் கொண்டுவந்து காப்பாற்ற வில்லை; அரச நீதியின்படி, தவறுக்கான தண்டனையை மணிவாசகர் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டான். நரிகளை ஏன் குதிரைகளாக்கிக் கொண்டுவந்தான் இறைவன் என்பதைச் சிந்திப்போம்.

கடமையை நிறைவேற்றிய இறைவன்

மன்னன் பொதுப் பணத்தின் காவலன் மட்டுமே! பொதுப்பணம், மக்களுக்கான நலப்பணிகள் செய்யவே தவிர, மண்ணாசை கொண்டு போர் செய்ய அன்று. இதை உணர்த்தவே, நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான். மணிக்கணக்காக வெகுவிரைவாகச் செல்லும் திறன் கொண்ட குதிரைகள் மனிதனுக்கு எளிதில் கட்டுப்படுகின்றன; ஆனால், தந்திர குணம் கொண்ட நரிகளை மனிதனால் பழக்கப்படுத்தவே முடியாது. எனவேதான் உண்மையான குதிரைகளுக்குப் பதிலாக நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான் இறைவன். குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்துக் கயிறு மாற்றியதுடன் குதிரைகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது; தான் ஆட்கொண்ட மணிவாசகரின் கடமையை இறைவன் நிறைவேற்றிவிட்டான்.

நீதி தவறிய மன்னன்

குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடியதும், மன்னன் சிந்தித்திருக்க வேண்டும்; பரிப்பாகனாக வந்தவன் இறைவனே என்பதை அறிந்திருக்க வேண்டும்; மண்ணாசையால் மக்களை அழிக்க முயலும் தன் தவறை உணர்ந்திருக்க வேண்டும்.

மாறாக, மணிவாசகரைக் கடும் வெயிலில் வைகை மணலில் நிற்கவைத்துக் கொடுமை செய்தான் மன்னன். உடனே பெருமழை பொழியவைத்து, வைகை ஆற்றில் பெருவெள்ளம் பொங்கச் செய்தான் இறைவன். வைகை ஆற்றின் கரை உடைந்து மதுரை வெள்ளக்காடாகியது; வீட்டுக்கொருவர் வந்து வைகைக்கரை உடைப்பைச் சரிசெய்ய ஆணையிட்டான் மன்னன்.

பிட்டுக்கு மண் சுமந்தான்

பிட்டு விற்கும் மூதாட்டி வந்தியின் கூலியாளாய் வந்த இறைவன், மண்சுமக்கும் வேலையை முடிக்காதது கண்ட பாண்டிய மன்னன் பிரம்பால் இறைவனின் முதுகில் ஓங்கி அடித்தான். இறைவனின் முதுகில் பட்டஅடி, மன்னன் உள்ளிட்ட வாழும் அனைவரின் முதுகிலும் அடிபட்டது; அனைத்து உயிர்களிலும் இறைவனே கலந்துள்ளான் என்பதையும், அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஆள்பவனே பொறுப்பு என்பதையும் உணர்த்தியது இத்திருவிளையாடல். பட்ட அடியால், மன்னன் உள்ளிட்ட அனைவரும் தம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக்கூத்தைத் தரிசித்தனர்!

புண் சுமந்த பொன்மேனி

அம்மையை ஒரு பாகத்தில் சுமந்த எம்பெருமான் திருப்பெருந்துறையான், இனிய பண்ணிசை சுமந்த பாடல்களைப் பரிசாகப் படைத்து அருள்கின்றவன்; விண்ணளவு புகழ் கொண்ட விரிந்து பரந்த இப்பிரபஞ்ச மண்டலத்துக்கு ஈசன்; நெற்றிக்கண் உடைய கடவுள், மனிதர்களின் பாவங்களைப் போக்கக் கலிகால மதுரையின் மண்ணைத் தன் தோளில் சுமந்தான்; ஏழை மூதாட்டி வந்தி கொடுத்த பிட்டைக் கூலியாகக்கொண்டு, மன்னன் கொடுத்த அடியை வாங்கிக்கொண்டு, மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன் பொன்மேனியில் புண் சுமந்த தியாகத்தைப் பாடி அம்மானை ஆடுவோம்என்று இறைவனின் ஆனந்தக் கூத்தை, அம்மானை விளையாடும் சிறுமிகளுடன் பாடி நம்மையெல்லாம் பேரானந்தக் களிப்பில் ஆழ்த்துகின்றார் பெருமான்.

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன்! பெம்மான் பெருந்துறையான்!

விண்சுமந்த கீர்த்தி! வியன்மண்டலத்து ஈசன்!

கண்சுமந்த நெற்றிக் கடவுள்! கலிமதுரை

மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!

திருவாசகம்:திருவம்மானை-8

பாண்டிய மன்னன் மணிவாசகரிடம், தன் பிழை பொறுத்து, மீண்டும் முதலமைச்ச ராகப் பணிஏற்க வேண்டினான். மன்னனை வாழ்த்திய மணிவாசகர் திருப்பெருந்துறைக்கு இறைப்பணி செய்ய விடுக்குமாறு வேண்டி, அவ்வண்ணமே விடைபெற்றார்.

இத்திருவாசகத்தில் தாம் கலந்து, மணிவாசகரின் மனநிலையை எண்ணிக் கரைந்த வள்ளல் பெருமானின் அருட்பாக்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை

 புண்சுமந்த பொன்மேனி பாடுதும் காண்! அம்மானாய்என்று முடியும் திருவம்மானைப்பாடல் வடலூர் வள்ளல் இராமலிங்க சுவாமிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருவாசகம். சுமந்தஎன்ற மணிவார்த்தையை அடியாகக் கொண்டே, மணிவாசகரைப் போற்றிப் பாடிய ஆளுடையஅடிகள் அருள்மாலைப் பதிகத்தின் ஒன்பதாவது திருவருட்பா அமைந்துள்ளது.

மணிவாசகருக்காகப் புண்சுமந்தான்

மாதொருபாகனாம் எம்பெருமான் நரிகளைப் பரிகளாக்கினான்; குதிரைச் சேவகன் என்று அனைவரும் எண்ணும்படி மதுரை மாநகரெங்கும் குதிரையின் மேலேறி வலம்வந்து, பாண்டிய மன்னனிடம் அக்குதிரைகளை ஒப்படைத்தான்; வைகை நதியில் பிட்டுக்கு மண் சுமந்து நின்று, பாண்டிய மன்னன் மாறன் பிரம்படியால் தன் பொன்மேனியில் புண் சுமந்தான்; இவ்விரண்டு அற்புதங்களையும் இறைவன் நிகழ்த்தியது புண்ணியனான உமக்காக அல்லவா? என்று மணிவாசகரிடம் உருகிக் கேட்கிறார் வள்ளல் பெருமான்.

பெண்சுமந்த பாகப் பெருமான், ஒருமாமேல்

எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும்! வைகைநதி

மண்சுமந்து நின்றதும்! ஓர் மாறன் பிரம்படியால்

புண்சுமந்து கொண்டதும்! நின் பொருட்டு அன்றோ புண்ணியனே!

- திருவருட்பா:3265

 

இறைவன், மதுரை மக்கள் அனைவரும் குதிரைச் சேவகன் என்று எண்ணும்படியாக வந்தான் என்பதை எண்சுமந்தஎன்றார் வள்ளல் பெருமான். இறைவன், மணிவாசகருக்காகக் குதிரைச் சேவகனாகி, மண் சுமந்து, புண் சுமந்தது ஏன்? எப்போதும் நம்முள்ளே உறையும் இறைவனின் தன்மைகளை, என்புருக்கும் மணிவாசகத்தால் விளக்கி, மனிதர்களின் பாவங்களைக் கழுவி, வீடுபேறு தரும் திருவாசகத்தைத் தரப்போகும் வள்ளல் அல்லவா மணிவாசகர்?

இடிபட்டது வள்ளலாரின் நெஞ்சம்

இராமலிங்க வள்ளலின் சிந்தை, காலச்சக்கரத்தைப் பின்னுக்குத் தள்ளி, விடாத வான்மழையால் வைகை வெள்ளம் புகுந்த மதுரைக்குச் சென்றது. மணிவாசகருக்காக இறைவன் கூலியாளாய் வருகின்றான்; வானளவு பெருமை கொண்ட வைகையின் கரை உடைப்பை அடைக்க, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி படுகின்றான்; இறைவனின் பொன்போன்ற திருமேனி புண்பட்டுப் போகின்றது; கண்டதும் நெஞ்சில் இடிபட்டு மூச்சற்று விழுந்தார் வள்ளலார். நினைவு திரும்பியதும், ‘இந்நிகழ்வைச் சிந்தையில் கண்ட என் நெஞ்சம் இடிபட்டுப் போனதே! நேரில் கண்ட வாதவூரர் மணிவாசகப் பெருமானின் தூய நெஞ்சம் என்ன பாடுபட்டதோஎன்று எண்ணிக் கலங்கினார் வள்ளல் பெருமான்; ஓர் அற்புதமான திருவருட்பா உதயமாயிற்று!

வன்பட்ட கூடலில், வான்பட்ட வையை வரம்பிட்ட, நின்

பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில், புவிநடையாம்

துன்பட்ட வீரர், அந்தோ! வாதவூரர் தம் தூய நெஞ்சம்

என்பட்டதோ! இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே!

- திருவருட்பா:2251.

வன்நெஞ்சக் கூடல்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவள்ளலாரின் உள்ளம் மணிவாசகரின் துயரைத் தாங்குமா? ‘வன்பட்ட கூடல்என்பதற்கு வைகை வெள்ளப் பெருக்கால் எளிதில் கரையாத வன்மைமிக்க கூடல்நகர் மதுரைஎன்பதே வெளிப்படையான பொருள். ஆயினும், வள்ளல் பெருமானின் மனநிலையை நோக்கும்போது, ஒருவேளை, 'வைகை மணல்வெளியில், கடும் உச்சிவெயிலில் மணிவாசகரை நிற்கவைத்து மன்னன் வன்கொடுமை செய்ததைக் கண்டும் நெஞ்சுருகாத வன்னெஞ்ச மக்களைக் கொண்ட கூடல்நகர் மதுரை' என்ற பொருளில் பாடியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

துன்பம் வென்ற வீரர்

புவிநடை என்னும் உலக நடைமுறை எளிதில் வெற்றிபெற முடியாதது; மனத்தை மயக்கும் ஆசைகளால், சுற்றிச் சுற்றி உயிரின் அறிவை விளங்கவிடாமல் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. புவிநடையை வெற்றிகொண்ட வீரர் மணிவாசகர் என்பதை 'புவிநடையாம் துன்பு அட்ட(வென்ற) வீரர்' என்கிறார் வள்ளலார். இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுப் புண் சுமந்த காட்சியை மனக்கண்ணால் காண இறைவன் அருளியதால், வள்ளலாரிடம் மேற்கண்ட திருவருட்பா உதித்தது.

வணிகத்தில் நேர்மை

குதிரைக்கெனக் கொண்டு சென்ற பொன் திருக்கோயில் திருப்பணியில் செலவானது; பெற்ற பொன்னுக்கு ஈடுகட்ட, நரிகளைப் பரிகளாக்கினான் சிவபெருமான்; இறைவன் தந்த குதிரைகளின் அழகைக் கண்டு மகிழ்ந்த பாண்டியன், மீண்டும் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தான்; குதிரைகளுக்காக ஏற்கனவே பொன்பெற்றுக் கொண்டதால், குதிரைச் சேவகனாக வந்த இறைவன், பாண்டியன் தந்த பொன்னை(கனகம்) வாங்க மறுத்துவிட்டான். தம் பொருட்டே மண்சுமந்தான் என்பதை மணிவாசகரே திருவாசகத்தினுள் பதிவுசெய்த சான்றுகள் திருவாசகம் கீர்த்தித்திருவகவல் 35-40, 44-47 வரிகளில் காணலாம்.

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,

ஈண்டு கனகம் இசையப் பெறா(அ)து,

ஆண்டான்! எம்கோன் அருள்வழி இருப்ப!

(திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்:38-40.)

அடியார் குற்றம் நீக்கினான்

தமக்கு ஏற்பட்ட குற்றப் பழியை நீக்கவே குதிரைச் சேவகனாக வந்தான் இறைவன் என்பதையும் திருவாசகத்திலேயே குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன் அடியார்

குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர் அறுப்பான்

(திருவாசகம்: திருவம்மானை.20)

 

நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த இறைவன், தானும் ஒரு நரிக் குதிரையில்தான் வந்தானோ என்ற ஐயம்தீர, வேதங்களைக் குதிரையாக்கி அதன்மேல் வந்தார் என்றார் வள்ளலார்.  இறைவன்  குதிரைச் சேவகனாகி வந்தபோது கண்ட பூங்கொடி இடையுடைய பெண்கள் அவரது கண்கொள்ளாப் பேரழகை வியந்து தம்மையும் மறந்து பாடித் துதித்தனர். . இறைவனின் இத்திருக்காட்சியை

புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்

மரவியல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

(திருவாசகம்: திருப்பாண்டிப்பதிகம்.20)

 

என்று அழகுறச் சொல்கின்றது திருவாசகம்.  இறைவனே அழகிய குதிரைச் சேவகனாக திருக்கோலம் கொண்டு, சேவடியால் குதிரையின் மேலேறி, மக்கள் அனைவரும் காண, மதுரை மாநகரெங்கும் வலம்வந்து காட்சிதந்தான்.

கனவிலாவது காட்டுக

அத்திருக்காட்சியைக் காணப் பெருவிருப்பு கொண்டு விண்ணப்பிக்கின்றார் வள்ளலார். . ஆனால், இறைவன் பரிப்பாகனாக வந்த திருக்காட்சி காணக் கிடைக்கவில்லை. இறைவா! என் பிறவி நோய் நீங்கிட  என் கனவிலாவது உன் அழகிய குதிரைச் சேவகன் திருக்கோலத்தைக் காட்டி அருள வேண்டும்என்று விண்ணப்பம் செய்யும் அழகிய திருவருட்பா பூத்தது.

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு, அன்று தென்னன் முன்னே,

வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற

ஒருவாத கோலத்து ஒருவா! அக்கோலத்தை உள்குளிர்ந்தே

கருவாத நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

(திருவருட்பா:2304.)

பாண்டியன் கண்காணக் குதிரைச் சேவகனாக வந்ததை, “தென்னன் முன்னேஎன்றார் வள்ளலார். நரிக்குதிரைகளில் ஒன்றல்ல சிவபெருமான் ஏறிவந்த குதிரை; மிக உயர்ந்தவகைக் குதிரையானாலும், சிறிய நிழல் கண்டால் வெருண்டு கலையும் இயல்புடையதாகவே இருக்கும்; ஆனால், சிவபிரான் ஏறிவந்த குதிரை, “அச்சமே இல்லாத வேதமாகிய குதிரைஎன்று வெருவா வைதிகப் பாய்பரிஎன்றார் வள்ளலார். என்றென்றும் நிலைபெற்ற ஒப்பற்ற இறைவனின் திருக்கோலமே குதிரைமேல் காட்சியளித்ததுஎன்பதை ஒருவாத கோலத்து ஒருவா!எனச் சிறப்பிக்கின்றார். கருவாதம் என்றால் பிறவி நோய்.

கண் படுமோ!

ஏன் கனவில் காட்ட விண்ணப்பம் செய்கின்றார்? பாதமலர் அழகினை நேரில் கண்டால் தம் கண்ணே பட்டுவிடும் என்று அஞ்சினார் வள்ளலார்.

பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்

கண் ஏறு படும் என்றோ கனவிலேனும்

காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ!

(திருவருட்பா:103)

 

கருணைக் கடல் வள்ளலாரின் வழிபடுநூல் திருவாசகம். தில்லை அம்பலக்கூத்தனின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்த கருணைத் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்

 

 

தில்லை அம்பலக்கூத்தனின் ஆனந்தக்கூத்தின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்து, பேரானந்தத்தில் திளைத்த கருணைத் தேன் திருவாசகங்கள் பத்தும் கண்டபத்து என்ற தலைப்பிலும், பதிகத்தின் உட்பொருள் நிருத்த தரிசனம்என்றும் குறிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.

தில்லையில் எல்லையில்லா ஆனந்தம்

தில்லை நடராசப்பெருமானின் ஆனந்தக்கூத்தைக் காண்கின்றார்; எல்லையில்லாத பேரானந்தம் அடைகிறார். திருப்பெருந்துறையில் குருவாக வந்தவன் இக்கூத்தபிரானே என்பதைக் கண்டவுடனே உணர்கிறார். உடனிருந்த சிவனடியார்களிடம், “அன்பர்களே! இந்திரியங்கள் தரும் உலகச் சிற்றின்பங்களில் மயங்கித் திரிவது, பிறப்பின் பயனை அடையாமல் இறந்துபோவதற்கே காரணமாகிவிடுகிறது; அப்படி இறந்து, அந்தரத்தில் பலகாலம் திரிந்து, மீளமுடியாத கடும் நரகத்தில் விழ இருந்தேன் நான்; சிவபெருமான் என்சிந்தனையைத் தெளிவித்து, என் சீவனைச் சிவமாக்கி என்னை ஆட்கொண்டான்; திருப்பெருந்துறையில் எல்லையற்ற பேரானந்தம் தந்த சிவபெருமானை, இந்த அழகிய தில்லையம்பலத்தில் முடிவில்லாத ஆனந்தநடராசனாகக் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர்.

இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணமாய்,

அந்தரமே திரிந்து போய், அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி, எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம், அணிகொள்தில்லை கண்டேனே!

(திருவாசகம்-கண்டபத்து:1)

 

இந்திரியங்கள் என்பவை யாவை?

மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும் ஐம்பொறிகளும், அவைகளுக்கான தொடுவுணர்ச்சி, சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல்என்னும் ஐம்புலன்களும் சேர்ந்தது ஐந்தறிவு ஆகும். ஐந்தறிவுடன், மனிதகுலத்துக்கு மட்டுமே உரிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம்என்னும் அகக்கருவிகளையும் சேர்த்து இந்திரியங்கள் என அழைக்கப்படுகின்றன. மனித உடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் இந்த இந்திரியங்களின் ஆளுகைக்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றன.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

(தொல்காப்பியம்:மரபியல்:571)

கண்கள் காண்பதைக் காது அறியாது. காது கேட்டதை கண்களோ நாவோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற பொறிகள்; கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தெரியப்படுத்துவன(புலப்படுத்துவன) ஐந்து புலன்கள். மூளையில் இப்புலன்களுக்கென்று தனித்தனி இடங்கள் உண்டு. இப்புலன்களிலிருந்து வரும் தகவல்களை உணர்வுகளாக மாற்றி ஒருங்கிணைத்து அறியும் கருவியே மனம். மனம் என்ற அகக்கருவியையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்காக விரிப்பர்.

புத்திஎன்பது கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறியும்மனத்தின் பகுதி. (பிறந்தது முதல் கண் முதலிய ஐம்பொறிகளால் அறிந்தது, அனுபவத்தில் கற்றது, பள்ளியில் படித்தது போன்ற அனைத்தும் புத்தி'யில் பதிவாகியுள்ளது.)

சித்தம்என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புலன்களால் அறிந்ததை, புத்தி தரும் தகவலின் அடிப்படையில், இது, இப்படி, ஏன் என்று முடிவு செய்வது சித்தம். வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது; எப்படிச் செய்யலாம் என்று திட்டமிடுவது என்பன சித்த'த்தின் வேலைகள்.

அகங்காரம்என்பது 'நான்', ‘எனது' என்ற உணர்வுடன் மனம், புத்தி, சித்தம் மூன்றையும் இயக்குவது. இந்திரிய வயம் மயங்குதல்என்பது இந்திரியங்கள் மூலம் ஈட்டும் நிலையற்ற பொருட்களையும், நுகரும் அற்ப சுகங்கள் மட்டுமே வாழ்வு என்றும் வாழ்வின் பயன் என்று எண்ணுதல்; நன்றாக உண்டு, உடுத்து, உறங்குவது மட்டுமே வாழ்வின் நோக்கம் என்று எண்ணுதல்; இவ்வுலகில் ஈட்டும் பொருள்கொண்டு அனைத்தையும் பெற இயலும் என்று நம்புதல் ஆகியவையே இந்திரிய வயம் மயங்குதல்எனப்படும்.

அன்பு ஒன்றே நமக்கான வெற்றி

இந்திரியவயம் மயங்கி இறப்பவர்கள் பலரும் கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவியை வீணடித்துவிட்டோம் என்று அறியாமலேயே இப்பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கித் தவிக்கின்றனர். மனிதவாழ்வில் நாம் பிறருக்குச் செலுத்தும் அன்பு ஒன்றே நமக்கான வெற்றியாகும்என்று உயிர்பிரியுமுன்னர் கூறிச்சென்றார் புற்றுநோயால் மரணமடைந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ்.

எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ், செல்வாக்கு எல்லாமே பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்கின்றன. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்; அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்ஸ்டீவ் ஜாப்ஸ் மனிதகுலத்துக்கு தந்த ஆப்பிள் ஐ-ஃபோனைக் காட்டிலும், இப்பொன்மொழிகள் பன்மடங்கு உயர்ந்தவை.

அன்பை விதைத்தால் அருளைப் பெறலாம்

இறைவன் வாழும் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குச் செய்யும் ஈகை, திருக்கோயில் இறைவனுக்குச் சென்றடையும் என்கிறது திருமந்திரம். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்”, என்று விவிலியம் கூறும். ஈகையை நாற்பதுநாட்கள் 'ரமலான்என்னும் ஈகைத் திருவிழாவாக இசுலாம் கொண்டாடும்.

இத்தகைய தெளிவையே சிந்தைதனைத் தெளிவித்துஎன்றார் மணிவாசகர். சிவபெருமான் தந்த சிந்தனையின் தெளிவு’, அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்தும் பாங்கை மணிவாசகருக்குத் தந்தது. இவ்வாறு, மணிவாசகரை அன்பினால் சிவமாக்கி, திருப்பெருந்துறையில் ஆண்டுகொண்ட சிவபெருமான் தந்த எல்லையற்ற ஆனந்தத்தை அழகிய தில்லையில் கண்டார் மணிவாசகர்.

 

தன்னை அறிய உதவும் பகுத்தறிவு

இந்திரியங்களின் நன்மை, தீமைகளைப் பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு! பகுத்தறிவு பெற்ற உயிர் முதலில் தன்னை அறியும்! தன்னை அறிதல் என்பது, தான் வாழும் மனிதவுடல் நிலையற்றது; உடலுக்கான வாழ்நாள் முடிந்ததும் அழியக்கூடியது; வாழ்வைப் பயனுள்ள வகையில் வாழ்ந்து, கற்றதனால் வரும் பயனாக, வாலறிவன் இறைவனின் திருவடிகளைத் தொழுது, ஈகையாம் இறைத்தொண்டு செய்து (வீடுபேறு) முத்தியைப் பெறவேண்டும் என்பதாகும்.

இறைவனைக் காண இந்திரியம் வெல்க!

கூத்தபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை மனிவாசகரைப்போல் நம்மால் ஏன் உணர முடிவதில்லை? நாம் அனைவரும் இந்திரியவயம் மயங்கிக் கிடப்பதால்தான்.

மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம்என்னும் அகக் கருவிகள் இல்லை; எனவே, அவைகளுக்கு இந்திரிய வயம் மயங்குதல்என்னும் சிக்கல் இல்லை. ஓரறிவு கொண்ட புல், மரம் போன்ற தாவரங்கள் தொடங்கி ஐந்தறிவு கொண்ட விலங்குகள் வரை பொறி புலன்களால் மட்டுமே துன்புறுகின்றன; ஆனால் மயக்கம் அடைவதில்லை. இந்திரிய வயம் மயங்கிய மனிதனோ, வல்வினைகளைச் செய்து, அவ்வினைகளின் பயனாக விளையும் துன்பங்களில் அவதிப்படுகிறான். இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் தேனான திருவாசகங்களை அடுத்தவாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  24: தில்லை அம்பலத்தே கண்டேனே

 மனிதன் அல்லாத உயிரினங்களுக்கு ஏன் மனம்இல்லை என்றீர்கள்? நாய் மகிழ்ச்சியில் வாலைக் குழைக்கிறது; பயத்தில் வாலைக் கால்களுக்கிடையில் புதைக்கிறது; கோபத்தில் வாலை நிமிர்த்திக் குரைக்கிறது; நாய்க்கு மனம் இருப்பதால்தானே இவ்வளவும் சாத்தியம்”. என்று சில அன்பர்கள் வினவினர்.

விலங்குகளுக்கு ஏன் மனம்இல்லை?

ஐந்து பொறி-புலன்கள் வழியாக உள்ளே வரும் தகவல்களைப் பெற்று (Input), ஏற்கனவே புத்தி என்னும் மூளைப்பதிவில் (Memory) உள்ள தகவல்களின் அடிப்படையில் நல்லது, கெட்டது, இது-இன்னது, செய், நட, பேசு (OutPut) என்று தீர்மானிக்கும் கருவியே(Processing-CPU) ‘மனம்' என்றால், அத்தகைய கணினி' போன்ற மனம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு என்று சொல்லிவிடலாம்.

தொல்காப்பியர் சொல்லும் மனம்' என்பது - மேற்கூறிய செயல்களுடன், மனமே ஒரு அறி-புலனாகவும் (Input), ஒரு சிந்திக்கும் பொறியாகவும், சிந்தனையில் கிடைத்த தகவலை மீள்-புலனாகப் (FeedBack Input) பயன்படுத்தும் செயல் அமைப்பாகவும், மனிதன் செய்யும் வினைகளுக்குச் சாட்சியாகவும் (மனசாட்சி) இருந்து, செய்தது சரி/சரியன்று என்ற உணர்வையும் தருவது; இத்தகைய மனம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

மற்ற உயிரினங்கள், வாழ்க்கைக்கு நேரடியாக சம்பந்தப்படாத எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை. விலங்குகள் பசித்தால் இரைதேடும்; களைப் புற்றால் உறங்கும்; முழுவதும் புறஉணர்வு களைச் சார்ந்தே உயிரினங்களின் செயலும், அறிவும் அமைகின்றன. விலங்குகளின் செயல்களுக்கு நேரடியான காரணம் மட்டுமே இருக்கும். என்னதான் புத்திசாலித்தனமான உயிரினமாக இருந்தாலும், அதன் எல்லை மிகக் குறுகியது.

செயலும் வினையும்

செயலுக்கும் வினைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவோம். செயல் என்பது தானாகவோ, பசி, தாகம் போன்ற இயற்கை உந்துசக்திகளால் ஏவப்பட்டோ செய்யப்படுபவை. வினை என்பது நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்யப்படுபவை.

இதயம் இயங்குவது, சுவாசிப்பது, உறங்குவது, உண்பது, காண்பது போன்றவை அனைத்து உயிரினங்களும் செய்யும் செயல்கள். விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் செயல்கள் மட்டுமே செய்கின்றன; வினைகள் செய்வதில்லை. ஒரு புலி தன் உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகிறது. அது பசியால் தூண்டப்பட்ட ஒரு செயல்; அவ்வளவுதான். அதே புலி, நான்கு தலைமுறைக்கும் சேர்த்து வேட்டையாடினால் வினை செய்கிறது என்று சொல்லலாம்.

பிறப்பை நீக்கிய இறைவன்

வினையினால் உண்டாகிய பிறவியாகிய துன்பத்தில் சிக்கி, இறைவனாகிய உன்னைச் சற்றும் நினையாமலேயே தளர்வடைந்து இருக்கும் என்னை, மிகப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறவித்தளையை நீக்கிய ஒப்பிலாப் பெருமானை, எல்லா உலகங்களும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்என்றார் மணிவாசகர்.

வினைப்பிறவிஎன்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனை சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை!

எனைப்பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை,

அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:கண்டபத்து:2)

வினையினால் வந்த பிறப்பையும், முன்வினைகளையும் மணிவாசகருக்கு, இறைவன் குருவாய் வந்து நீக்கியருளினான். வினை உள்ளபோது, இறைவனை அறியும் அறிவு இல்லை. வினை நீங்கியபோது, இறைவனை அறியும் அறிவு விளங்கிற்று.

வாதவூரரும் மாணிக்கவாசகரும்

முதலமைச்சர் வாதவூரருக்கும், இறைவன் சிவமாக்கி ஆட்கொண்ட மணிவாசகருக்கும் இடையில் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்ப்போம். உடல் இருவருக்கும் ஒன்றே! வாதவூரரின் கருவி-கரணங்கள் (பொறி-புலன்கள்) அவரை மயக்கி நரகத்தை நோக்கிச் செலுத்தின. குருவாக வந்து சிவபெருமான், வாதவூரரின் கருவி-கரணங்களை மாற்றி, ஆண்டுகொண்டு, சிவமாக்கியதால் மணிவாசகரானார்.

பிறர் கண்களுக்குச் சிலையாகக் காட்சிதரும் தில்லை நடராசர், சிவமான மணிவாசகரின் கருவி-கரணங்களுக்கு ஆனந்தக்கூத்தனாகக் காட்சி அருளினார். பரவசமடைந்த மணிவாசகர் 'சிவமாக்கி எனை ஆண்ட அந்தமிலா ஆனந்தம்' எனப் பாடுகின்றார்.

வினைப்பயனால் உடல்பிறவி

உயிரினங்களின் உடல்பிறவிகள், அந்தந்த உயிர்களின் முன்வினைப் பயனாகக் கிடைத்தவையே என்கிறது இந்தியத் தத்துவமரபு. மனிதர்கள் பிறந்து இறப்பதற்கும், விலங்குகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் பிறந்து இறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். மற்ற உயிரினங்கள், வினைப்பிறவியை நுகர்கின்றன; புதியவினைகளை ஈட்டுவதில்லை; பொறி-புலன் சார்ந்த செயல்களை மட்டுமே செய்கின்றன. மனிதகுலம் மட்டுமே புதிய வினைகளைச் செய்கின்றன.

கடைக்கோடி மனிதன் முதல், கல்வி-செல்வம்-அதிகாரம் என்று உச்சம் தொட்ட முதலமைச்சர் வாதவூரர் உள்ளிட்டோர், முன்வினைப்பயனால் மனிதப்பிறவிகள் பெற்றனர்; இந்திரியவயம் மயங்கி, இவ்வுலக இன்ப-துன்பங்களிலேயே உழல்கின்றனர்; மேலும் மேலும் வினைகளைச் செய்து, பிறவியின் பயனை அறியாமலும் உணராமலும் இறந்து போகின்றனர்.

அன்னதானம், கல்விக்கொடை, பொருள்கொடை போன்றவை நல்வினைகள்; கொலை, களவு, பொய்கூறுதல் போன்றவை தீவினைகள்; இவ்வினைகளை 'நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்பவர்கள் மனிதர்களே.

மண்ணும் மனிதரும் பயனுற...

புல் முதல் மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள், தொடுவுணர்வு என்னும் ஓரறிவு மட்டுமே கொண்டவை; நன்மையையே செய்பவை; ஒரே இடத்தில் நிலையாக வாழ்பவை; தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்பவை; ஈரறிவு முதல் ஐந்தறிவு பெற்ற உயிரினங்கள், விலங்குகள், ஆறறிவு கொண்ட மனிதகுலம் ஆகியன வெளியேற்றும் கரியமிலவாயுவையும், கழிவுநீர்களையும் உட்கொள்கின்றன; அவைகள் உண்ண தானியங்கள், கீரைவகைகள், கிழங்குகள், பழங்கள் போன்றவற்றைத் தந்து, உயிர்வாழ ஆக்சிஜனையும்(உயிர்வளி) தருகின்றன. ஓரறிவுத் தாவரத்தின் இச்சிறப்பு, ஈரறிவு முதல் ஆறறிவு கொண்ட எவ்வுயிரினத்துக்கும் இல்லை.

செயல்கள் நிகழ்த்தும் மற்ற உயிரினங்கள் இயற்கைக்கும், உலகுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து இறப்பவை. அவைகளில் பல இம்மண் பயனுற வாழ்பவை; தாம் இவ்வுலகில் நுகர்வதற்கும் மேலாகவே பிறஉயிரினங்களுக்குக் கொடுத்து வாழ்பவை.

உலகை அழிக்கும் மனித இனம்

அனைத்து உயிர்களும் பிறப்பினால் சமமே என்றார் வள்ளுவர்! எடுத்த உடல்பிறவியால் அவை செய்யும் தொழில்கள் வேறுபடுவதால், அவைகளின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்ற பொருளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்என்று அறிவுறுத்தினார்.

பேராசை கொண்ட மனிதகுலம், வள்ளுவரின் அறிவுரையைப் புறம்தள்ளியது; இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியால், வளர்ச்சி என்ற பெயரில் இவ்வுலகின் இயற்கை வளங்களைச் சுரண்டி வருகிறது; சுற்றுச் சூழலை நாசமாக்கி, இப்பூமியையே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கின்றது; மற்ற உயிரினங்களை ஏய்த்தும் அழித்தும் வாழ்வதால், அவற்றுக்கு மிகுந்த கடன்பட்டிருக்கிறான் மனிதன்.

வினைப்பிறவிஎன்ற வேதனையிலிருந்து விடுபட . . .

பகுத்தறிவு கொண்ட மனிதன், வினைகளை ஈட்டாமல், இறைவனை அடையவேண்டும்; மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தாமல், தன் உழைப்பால் பொருள் ஈட்ட வேண்டும்; பெற்ற பொருளைக் கொண்டு, ஈகை என்னும் உயிர்க்கருணைத் தொண்டு செய்ய வேண்டும். உழைத்து ஈட்டிய பொருளின் பயன், உழைக்க இயலாமல் துன்பப்படுவோர்க்குத் தருவதற்கே என்பது குறள்நெறி. அத்தகைய நெறியை வேளாண்மை செய்தல்' என்றே குறித்தார் வள்ளுவர். அன்புவிதை விதைப்பவனே, ‘இறைவனின் அருள்' என்னும் விளைவை அறுவடை செய்வான்.

வினைப்பிறவி என்கின்ற வேதனையிலிருந்து மீள்வதற்கு வழி இறைச்சிந்தனை. உழைத்துப் பொருள் ஈட்டி, அப்பொருளைப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பே சிவமாகும்; நம்மைக் கட்டுகளிலிருந்து விடுவிக்க உதவும் நெறியையும், துன்பத்திலிருந்து விடுபடும் வழியையும் விளக்கும் தேன் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  25: கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ

 கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனைஎன்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர். ஒருவன் ஏதேனும் தவறு செய்தால், ‘படித்தவன் செய்கின்ற காரியமா இது?’ என்று பெரியவர்கள் கடிந்துகொள்வதைக் காண்கிறோம்; ஏனெனில், ‘படிப்புஎன்பதே அறத்தைஉள்ளீடாகக் கொண்ட கல்வி; ’படித்தவன்அறவழியில் பொறுப்புடன் நடப்பான் என்ற எதிர்பார்ப்பினால் வந்த சொற்கள் அவை.

வாழ்வியல் அறங்களின் விளைநிலமே பள்ளிக் கல்வி

ஒரு நாட்டின் கல்விமுறை, அன்பையும், பண்பாட்டையும் உள்ளீடாகக் கொண்ட அறிவு, திறன்கள், மதிநுட்பம், ஆராய்ச்சி, தொழில் என்பவற்றில் ஒளிவீசும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த உள்ளீடுகள் இல்லாத கல்வி, சமூகப் பொறுப்பில்லாத தலைமுறையையே உருவாக்கும். ஒருவனை மனிதனாகப் பண்படுத்தும், அடிப்படை வாழ்வியல் அறங்களைக் கற்றுக்கொடுக்கும் விளைநிலமே பள்ளிக் கல்வி. அன்பு’, ‘அறம்என்னும் விதைகளை விதைக்காமல், பண்பாடு என்னும் விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.

வறட்டு வணிகக்களங்களான கல்வி முறை!

இன்றைய கல்விமுறை எதைக் கற்றுக்கொடுக்கிறது? பத்தாண்டுகள் ஆங்கில மொழி, தாய்மொழி, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் இணைந்த சமூகவியல் கல்வி; இரண்டு ஆண்டுகள் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான மேல்நிலைக் கல்வி. இதில் தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி படிப்போர் பலர்.

பொருள் ஈட்டும் வேலைவாய்ப்பை மட்டுமே குறியாய்க் கொண்டது, தற்போதைய கல்விமுறை. இக்கட்டமைப்பில் அன்பு, அறம், பண்பாடு ஆகிய கூறுகள் இல்லாமையால் நெகிழ்வுத் தன்மையற்று இறுகிப்போய்விட்டது. பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள், மதிப்பெண்கள், பட்டங்கள் என்று சுருங்கிவிட்ட கல்வி தரும் அறிவைக் கல்லாத புல்லறிவுஎனலாம்.

இதன் விளைவாகத் தேடல், புதியன கற்கும் ஆர்வம், படைப்பாற்றல், கேள்வி கேட்டல், கண்டுபிடிப்புகள் போன்றவை வற்றிப்போன, வறட்டு வணிகக் களங்களாகக் கல்வி நிறுவனங்கள் மாறிவிட்டன.

முற்றறிவு பெறவே நான் பிறந்தேன்

ஆணவம் என்னும் அறியாமையில் கிடந்த உயிருக்கு அறிவு தரவே, அறிவுப் பொறி, புலன்களுடன் கூடிய உடலைத் தந்தான் இறைவன்; உயிர் உடலில் வாழவும், அன்பைக் கற்றுக்கொள்ளவும், அனைத்து வளங்களுடன் கூடிய உலகை உருவாக்கித் தந்தான். உயிர் என்னும் மாணவன், மனிதஉடல் என்னும் தங்கும் விடுதிக்கு, உலகு என்னும் பல்கலைக்கழகத்தில் தன்னை அறிதல்என்னும் நூறு ஆண்டுக் கால முற்றறிவுப் பட்டம் பெற வருகிறது.

உயிர் தன்னை அறியவும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்தவும், தன் தலைவனை அறியவும், களம் அமைத்தவன் இறைவன். அத்தகைய பெருங்கருணையாளனின் திருவடிகளில் நன்றி செலுத்துதல் என்பதை உயிர் அறியாவிட்டால், கற்றதனால் ஒரு பயனுமில்லை என்பது தமிழ் மறை. (கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்!’ – திருக்குறள்-2).

கல்லாத-புல்லறிவு நீக்கிய இறைவன்

இறைவனை அறியாத கல்லாத புல்லறிவில்ஆழ்ந்து கடையவனாகி, நாய்போல் தாம் இழிநிலையடைந்திருந்ததாக வருந்தினார் மணிவாசகர்; திருப்பெருந்துறை இறைவன், மணிவாசகரைத் திருத்தி வல்லவனாக்கினான்; இறைவனின் திருவருள் பெற்றுப் பொலிந்திருக்கும்படி, அங்கிருந்த அடியவர் பலரும் காண, மணிவாசகருடைய உயிர்அறிவைப் பிடித்துள்ள பசுபாசமாம் அறியாமை (ஆணவம்), பழவினைகள்(கன்மம்), மாயை என்னும் மும்மலங்களையும் நீக்கியருளினான்; அத்திருப்பெருந்துறை இறைவனையே, ‘எல்லோரும் வந்து வணங்கும் ஆனந்தக்கூத்தனாகத் தில்லையம்பலத்தில் கண்டதாகக் கூறுகிறார் மணிவாசகர்.

கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை!

வல்லாளனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம்!

பல்லோரும் காண எந்தன் பசு-பாசம் அறுத்தானை!

எல்லோரும் இறைஞ்சும் தில்லை |

அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:31:4)

இங்கு வனப்பு எய்துதல் என்றது சீவன் சிவமாதல்என்னும் திருவருள் ஆகும்; புல்லறிவுபெற்ற தம்மை அறிவுடையவனாக்கி அருளிய இறைவனின் கருணையை இவ்வாறு போற்றினார் மணிவாசகர்.

பொருளற்ற கல்வி என்னும் பல கடல்களிலிருந்தும் தாம் தப்பிப்பிழைத்ததை

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்

(திருவாசகம்:4:38')

என்று போற்றித் திருவகவலில் பதிவுசெய்துள்ளார்.

புல்லறிவு கற்றோரைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள்!

புல்லறிவு கற்றோர், தாம் அறிவு பெற்றோம் எனத் தலைக்கனம் ஏறித் திரிவர். இவர்தம் குற்றத்தைத் தம் குற்றமாகப் பாவித்து, கற்றும் அறிவில்லாத தம்மைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள் என்று பாடியுள்ளார் தாயுமானசுவாமிகள்.

நூல்களைக் கற்றும், கற்றபடி நடக்கும் அறிவில்லாத என்விதியை என்னவென்று சொல்லுவேன்! விதிவழி நடக்கும் என் அறிவினை என்னவென்று சொல்லுவேன்! வீடுபேறு தரும் இறைஞான நீதியை நல்லவர்கள் சொன்னால், அதைவிடக் கர்மமே முக்கியம் என்று நிலைநாட்டுவேன்; கர்மத்தின் சிறப்பைப் பேசுவோரிடம் ஞானமே சிறப்புடையது என்பேன்! வடமொழி வல்லுநர்கள் கருத்தைத் தமிழ் மறைநூல்கள் கொண்டு மறுப்பேன்! நல்ல தமிழறிஞரைக் கண்டால், சில வடமொழி வசனங்களைக் கூறி மிரளச் செய்வேன்! இப்படி எவரையும் மிரளச்செய்யும் நான் கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ?” என்றார் தாயுமானசுவாமிகள்.

கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள்! கற்றும் அறிவில்லாத என்

கர்மத்தை என் சொல்கேன்! மதியை என் சொல்லுகேன்! கைவல்ய ஞானநீதி

நல்லோர் உரைக்கிலோ, ‘கர்மம் முக்கியம்என்று நாட்டுவேன்! கர்மம் ஒருவன்

நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன்! வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததாக விவகரிப்பேன்!

வல்ல தமிழறிஞர் வரின், அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்!

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட, வகைவந்த வித்தை என் முத்தி தருமோ?

(தாயுமானசுவாமிகள்)

கற்றவர்கள் சிலர், இவ்வாறு தம் கல்வியறிவுத் திறமை குறித்து, தலைக்கனம் கொண்டு அலைவதை எக்காலத்தும் காணலாம். சகல ஆகமப் பண்டிதர்என்பதில் தலைக்கனம் கொண்டவர் சகலாகமப் பண்டிதர். மெய்கண்டார், சந்தானக் குரவர்கள் நால்வரில் முதல்வர்; சைவ சித்தாந்த சாத்திர நூல் சிவஞானபோதம் அருளியவர். தம் மழலைப் பருவத்திலே மாணவர்களுக்கு மெய்கண்டார் அருள் உபதேசம் செய்வதைக் கேள்விப்பட்டு மெய்கண்டாரின் வீட்டுக்குச் சென்றார் சகலாகமப் பண்டிதர்.

ஆணவத்தின் சொரூபம்

ஆணவம்குறித்து விளக்கிய மெய் கண்டாரிடம், ‘ஆணவத்தில் சொரூபம் யாது?’ என்று பண்டிதர் வினவ, தமது திருவிரலால் அவரையே சுட்டிக் காட்டினார் மெய்கண்டார். பிழை பொறுக்கத் திருவடியில் வீழ்ந்து வணங்கிய பண்டிதருக்கு சிவ தீட்சை தந்து, அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஞானப் பெயரிட்டு மெய்யுணர்வு அருளினார் மெய்கண்டார். அருணந்தி சிவாச்சாரியார், மெய்கண்டாரின் ஆணைப்படி, ‘சிவஞான சித்தியார்எனும் சிவஞானபோத வழிநூலை இயற்றினார்.

ஞானமிலாப் பொல்லாக் கல்வி!

தாயுமானவர், மணிவாசகர் போன்ற குற்றமற்ற ஞானியர், குற்றமுள்ள மனிதர்களின் குறைகளைத் தம்முடையதாகக் கருதி, இறைவனிடம் அவர் நிலையில் நின்று, குறை நீக்க வேண்டிக்கொள்வர். இந்நெறி, ‘அறிவினால் ஆவது உண்டோ! பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடைஎன்று தமிழ் மறை வகுத்த ஞானியர் நெறி. ஞானத்தைத் தராத கல்வியைப் பொல்லாக் கல்விஎன்றார் மணிவாசகர்; அப்பொல்லாக் கல்வியால், வீண் செருக்குற்று, அழுக்கடைந்த மனத்தைக் கொண்ட தமக்கு அடைக்கலம் தருமாறு வேண்டுகிறார்.

அதனால், கல்லாத புல்லறிவு நீங்கிச் சிவஞானம் பெறுவோம். விலங்குகளைத் தாக்காத, மனிதனை மட்டுமே தாக்கிச்சுழற்றி, உள்ளிழுத்துப் படுபாதாளத்தில் அழுத்தும் நோய் எது என்பதையும், அதிலிருந்து விடுவிக்க வழி கூறும் தேன் திருவாசகத்தையும் அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  26: நெஞ்சம் அன்பானால் நொடிப்பொழுதில் சிவனருள்!

 உயிர் அழிவற்றது; தொடக்கமும் முடிவும் இல்லாதது என்னும் பொருளில் ஆதம் இலிஎன்றார் மணிவாசகர். (ஆதம்=ஆதி+அந்தம்; ஆதி-தொடக்கம்; அந்தம்-முடிவு; இலி-இல்லாதது.) எனவே உயிர்களுக்குள் மூத்தது, இளையது என்று இல்லை. காலம்என்னும் பரிமாணத்துக்கு உட்பட்ட உலகில், உயிர்கள் வாழும் உடல்பிறவியில்தான், தாய், தந்தை, அண்ணன்(மூத்தவன்), தம்பி(இளையவன்) போன்ற உறவுகளும், வயது வழக்குகளும்  வருகின்றன. இதை விலங்குகள் அறிவதில்லை; இதை அறியாத மனிதர்கள் விலங்குகளுக்குச் சமம்; அத்தகையவர்களின் நிலையைத் தம் குற்றமாகப் பாவித்து நாயேன்என்றார் மணிவாசகர்.

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழிப்பட்டு. . .

சாதி என்பது  நால்வகை வருணம் மூலம் மனிதர்களுக்குள் தோன்றிய பல பிரிவுகள்; குலம், சாதியின் உட்பிரிவுகள்; பிறப்பு என்பது, தொன்று தொட்டு வரும் குடும்பப் பெருமை. சில சாதியுள் வரும்  குடிஅல்லது 'கோத்திரம்என்பதும் இதுவே. இச்சுழலில் அகப்பட்ட உயிர், சாதியைத் தன் அடையாளமாக  நினைத்துத் தடுமாறுகின்றது;  சாதிச்சுழலில் சிக்கி, வீண்பெருமையில், கிடைத்தற்கு அரிய மனிதப்பிறவியை வீணாக்குகிறது. இதை, 'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்' என்றார் பெருமான். விலங்காகப் பிறந்த உயிர்களுக்குச் சாதி-குலம்-பிறப்பு என்ற தடுமாற்றமில்லை.

துன்பம் நீக்கி ஆட்கொண்ட இறைவன்!

உடல் தோன்றிய குடும்பத்தின் அடிப்படையில், உயிருக்குச் சாதி, குலம், பிறப்பு என்னும் அடையாளங்கள் ஏற்றப்படுகின்றன. பிறப்புக்குமுன்னும், பின்னும், உயிர்களுக்கு இவ்வடையாளங்கள் இல்லை; ‘சாதி-குலம்-பிறப்புஅடையாளமிட்ட உடல்களைவிட்டு உயிர்கள் நீங்கியதும், எல்லா உடல்களுக்கும் பெயர் பிணம்தான்; பின் அவை புதைக்கப்பட்டோ,  எரிக்கப்பட்டோ அழிக்கப்படுகின்றன. இதை உணராமல், சாதி-குலம்-பிறப்பு, நான், எனது என்ற சுழியில் அகப்பட்டு மயங்கி நிற்கின்றனர். சாதி மயக்கம் தெளிவித்து, பிறவித்துன்பங்கள் நீக்கி, தம்மை ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவனையே, தில்லையில் கண்டுகொண்டேன் என்கின்றார் மணிவாசகர். 

சாதி! குலம்! பிறப்பு! என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை! அல்லல் அறுத்து ஆட்கொண்டு!

பேதைகுணம்! பிறர்உருவம்! யான்! எனது! என்னும் உரை மாய்த்துக்

கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே! - திருவாசகம்:31.5

  முன்பே செய்த வினைகளில் அடிப்படையில் உடல்பிறவிகள் கிடைக்கின்றன; மனிதப்பிறவியில், ‘நான் யார்? என்னைப் படைத்தவன் யார்?’ என்ற பகுத்தறிவால் இறைவனை உணரும் ஆற்றல் வருகின்றது; இறைவனை அடையவிடாமல் சாதி தடுக்கின்றது. மனிதன் சாதி-மத மயக்கத்தால் விலங்கினும் கீழ்நிலையடைகிறான்.

அறியாமையால் வரும் பேதைகுணம்!

ஆணவம்என்னும் அறியாமையே உயிர்களின் உண்மையான குறைபாடு; உயிர்கள் தாமே அறிய இயலாதவை; ஆனால், சொல்லிக்கொடுத்தால் அறிந்துகொள்பவை; உயிருக்குச் சொல்லிக்கொடுக்கும் கருவி, இறைவன் தந்த உடல்;  மனிதப்பிறவியில்தான், உயிர்கள் தன்னையும், தன் தலைவனையும் அறிந்து முழுமைபெறும். அதற்குத் தடையாக உள்ள பேதைகுணங்கள் சாதி-குலம்-பிறப்பு-மதம்என்னும் சுழிகள் என்கிறார் பெருமான்.

குற்றமற்ற இன்பப்பொருள் இறைவன்!

 தம் தவறுகளுக்குப் பிறரைக் குற்றம்கூறும் மனப்போக்கைப் 'பிறருருவம்'  என்கிறார்;  சில நற்செயல்களுக்கு தாமே காரணமாக நினைக்கும் போக்கை . 'யான்என்றார்; அனைவரின் பயன்பாட்டுக்காக இறைவனால் கொடுக்கப்பட்டதை, ‘என்னுடையபொருள்என்று பறித்துக்கொள்வதை எனதுஎன்றார்; இவை அனைத்தையும் இறைவன் நீக்கியதை யான், எனது என்னும் உரை மாய்த்துஎன்றார். இவ்வறியாமை நீங்கிய அனுபவ நிலையில், குற்றமற்ற இன்பப்பொருளாய் இறைவன் விளங்குதலால், 'கோது இல் அமுது ஆனானை'  என்றார்.

சாதி-பேதம் சாடும் கவிஞர் கண்ணதாசன்

மனிதகுலத்தை வேறுபடுத்தும் பொய்நீதி, சாதிபேதங்களை வேதம்-விதி என்று மதத்தின் பெயரால் புகுத்தும் போக்கைச் சாடும்  கவியரசு கண்ணதாசனின்  திரைக்கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது. அன்பும், இன்பமுமே இயற்கையின் நீதி என்கிறார் கவியரசு.

நிலை மாறினால் குணம் மாறுவான்! பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான்! தினம்

ஜாதியும் பேதமும் கூறுவான்! - அது

வேதம் விதி என்று ஓதுவான்!

மனிதன் மாறிவிட்டான்! மதத்தில் ஏறிவிட்டான்! . . .

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி!

ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி! 

(கவியரசு கண்ணதாசன்)

சாதிக்கொள்கை தமிழ்மறைக்கு ஏற்புடையது அன்று. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்என்று அனைத்து உயிர்களின் சமத்துவத்தையும், வாழும் உரிமையையும் முழங்கியது திருக்குறள்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

சாதியைச்  சைவ அருளாளர்கள் தொடக்கமுதலே எதிர்த்து வந்துள்ளனர். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்என்பது திருமூலர் தந்த வாழ்வியல் கொள்கை. சைவத்திலும், உயர்ந்த சாதி, மிக உயர்ந்த சாதி, மிகமிக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மிகத் தாழ்ந்த சாதி, மிகமிகத் தாழ்ந்த சாதி எனச் சாதிப்புற்றுநோய் பரவியதைக் கண்டு, பொங்கிஎழுந்தார் அமைதியே வடிவான அப்பரடிகள்.

சாதிக்கெதிரான நாவுக்கரசரின் சீற்றம்!

சமய உண்மைகளைப் பேசும் சாத்திரங்களைக் கடைப்பிடிக்கவே ஒழுக்கவிதிகளும், சடங்குகளும் தோன்றின. காலப்போக்கில், போலிச் சாத்திரங்கள் தோன்றி, போலி விதிகளும், போலிச் சடங்குகளும் பெருகி, சாதிகள் உருவாயின. சாதிப்பாகுபாடு பார்க்கும் குற்றத்தால் தாம் இறைநீதி என்னும் சட்டகத்துள் இல்லை; எனவே, இறைவனை அடைய முடியவில்லை என்றார் மணிவாசகர்.

"சட்டம் நேர்பட வந்திலாத சழக்கனேன்! உனைச் சார்ந்திலேன்! - திருவாசகம்:30:2.2

 

மனிதர்களின் குற்றத்துக்காக, தம்மையே 'சழக்கன்' என்றழைத்து  வேதனையுற்றார் மணிவாசகர்.

 

அறிவுநூல்-சாத்திரங்களைப் பேச்சளவில் பேசிக்கொண்டு, அறிவுக்குப் பொருந்தாத சாத்திரம் பேசி, சாதிப்பாகுபாட்டைத் தூக்கிப்பிடிப்பவரைச் "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்" எனக் கடுமையாகக் கண்டித்தார் அப்பரடிகள்.

சழக்கு என்னும் சொல்லுக்கு அறியாமை, பொய், பயனின்மை, குற்றம், தீமை எனப் பலபொருள் உண்டு. சாதிப்பாகுபாடு என்பது அறியாமையின் விளைவு, உண்மைக்குப் புறம்பானது, பயன் இல்லாதது, குற்றம் மிகுந்தது, தீமை விளைவிப்பது என இத்துணைத் தீமைகளையும் ஒருசேரக் கண்டிக்கும் பொருட்டே  `சழக்கர்எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றார்; ‘நாவுக்கு அரசர்என்று இறைவனால் அழைக்கப்பட்டவர் அல்லவா அப்பர் பெருமான்.

சாத்திரம் பேசும் சழக்கர்களே! கோத்திரத்தையும், குலத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”, என்று சினம் கொண்டு  வினவுகின்றார் நாவுக்கரசர். சமயத்தையும், சமுதாயத்தையும், தம்மையும் கெடுத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர கோத்திரம், குலம் கொண்டு வேறு பயனில்லை.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!

மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே!

(தேவாரம் 5.60.3)

 

அன்பே சிவம்என்ற திருமூலர் தமிழும், “பாத்திரம் சிவம்என்ற நாவுக்கரசர் தமிழும் சொல்லும் செய்தி இதுதான்: மனிதகுலம் கொள்ளவேண்டுவது அன்பு; தள்ளவேண்டுவது சாதி என்பதே!

நெஞ்சம் அன்பானால் நொடிப்பொழுதில் சிவனருள்!

சாதி உணர்வை விடுத்து, அன்பால் நெஞ்சை நிறைத்துப் பணிவீர்!!  நொடிப்பொழுதில் சிவனருள் கிட்டும்என்கிறார் நாவுக்கரசர். சாதிஉணர்வின் தீமையையும், அன்பின் ஆற்றலையும் உணர்த்தவே "மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே" எனச் சைவநெறி, அன்புநெறி என்று அப்பர் நம்மை நெறிப்படுத்துகின்றார்.

  மலை-பள்ளத்தாக்கு, அருவி-கடல் என இவ்வுலகையே ஏற்றத்தாழ்வுடன் படைத்திருக்கிறான் இறைவன்; எனவே, ஏற்றத்தாழ்வுகளே இறைநீதி என்று ஏன் கொள்ளக்கூடாது என்று வினவும் கேள்விகளுக்கு விடைதந்து உங்கள் சிந்தனையை இனிமையாக்கும் திருவாசகத் தேன் அடுத்தவாரம் துளிர்க்கும்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  27: விளங்கு தில்லைக் கண்டேனே

 இறைவனின் படைப்பில் மலைகளும், அருவிகளும், பள்ளத்தாக்குகளும், கடல்களுமாய் ஏற்ற-இறக்கங்களான பன்மைத்துவமே உலகின் அழகு! இறைநீதிக்கு எதிராக மனிதர்கள் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதித் துயரம்! இவை விளக்கும் மணிவாசகரின் திருவாசகங்களை இங்கு சிந்திப்போம்!

இறைவன் பேதமிலாப் பெருமையன்!

பேதங்கள் அனைத்துமாய், பேதம் இலாப் பெருமையனை!என்றார் இறைவனை! வேறுபாடுகள்(பேதங்கள்) அனைத்தும் தானேஆகி, தான் எந்த வேறுபாடும் அடையாத பெருமையுடையவன் இறைவன்.

இறைவன் கொள்ளும் வேறுபாடுகள் யாவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்து ஆகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களாகி, உலகின் ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, அவைகளில் இரண்டறக் கலந்திருக்கிறான் இறைவன்; இதை, “பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி, பேதங்கள் அனைத்துமாய்!!என்றார் மணிவாசகர். அவ்வாறு இரண்டறக் கலந்திருந்தும், இறைவன் அப்பொருட்களின் தன்மைகளால் பற்றப்படாதவன், மாற்றமடையாதவன் என்பதைப் பேதமிலாப் பெருமையனை!என்று வியக்கிறார் பெருமான். எம் துன்பங்களைப் போக்கி, ஆண்டுகொண்ட, கிளர்ந்து எழும் ஒளியாக, பச்சை மரகதமணியாக, சிவசக்தி வடிவானவனை தில்லையில் கண்டேன் என்றார் மணிவாசகர்.

பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி!

பேதங்கள் அனைத்துமாய்! பேதம் இலாப் பெருமையனை!

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர்ஒளியை!-மரகதத்தை!

வேதங்கள் தொழுது ஏத்தும், விளங்கு தில்லைக் கண்டேனே! (திருவாசகம்:31.10)

மேற்கூறியவைகள் இன்னும் சற்று ஆழமாய் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை. கண்ணுக்குப் புலனாகாத சடப்பொருளான மாயையிலிருந்தே, கண்ணுக்குப் புலப்படும் ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் இறைவனால் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், உயிர்களின் அறியாமையை நீக்க, இறைவனால் படைக்கப்பட்ட கல்விக்கூடங்கள். ஐம்பூதங்களால் ஆன உடல்களிலேயே உயிர்கள் வாழ்ந்து, தங்கள் அறிவுப்பயணத்தைத் தொடர்கின்றன; மனிதப்பிறவியில்தான், தன்னையும், தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து, முழுமையான அறிவு பெற்று விடுதலையடைந்துப் பேரின்பம் என்னும் இறைமுத்தி அடைகின்றன.

இறைவனே பிறவிச் சங்கிலியை நீக்குவான்!

ஒரு உயிர், பலபிறவிகளில் ஈட்டிய ஒட்டுமொத்த நல்வினை-தீவினைகளில்(பழவினைகள்/சஞ்சிதகர்மம்) சிலவற்றை துய்த்துத் தீர்ப்பதற்கே (ஊழ்வினைகள் /பிராரர்த்தகர்மம்) உடல்பிறவி ஏற்படுகிறது. எடுத்த பிறவியில் செய்யும் நல்வினைகள்-தீவினைகள்(வருவினைகள்/ஆகாமியகர்மம்), அவ்வுயிரின் பழவினைக் கணக்கில் ஏறிக்கொள்ளும். இவ்வாறு, வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று பிறவித்தொடர்-சங்கிலி விடாது துரத்தும். அச்சங்கிலியை அறுக்க வல்லவன் இறைவன் ஒருவனே! அவ்வுயிர் இறைவனிடம் மனமார வேண்டினால் மட்டுமே இறைவன் பிறவித்தொடரை நீக்குவான். உலகியல் பொருட்களை வேண்டியே வழிபாடும், வேண்டுதல்களும் நடக்கும்வரை உடல்பிறவிகளும் தொடரும்.

எல்லா உயிர்களும் வசதியோடு, செல்வச் செழிப்பாக வாழவே விரும்பும். பிறவிச் சூழ்நிலையை, தாய்-தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உயிர்களிடம் இல்லை! ஏற்றத் தாழ்வுகளோடு பிறவிகளைத் தந்த இறைவனை வேண்டுதல்-வேண்டாமை இல்லாதவன்என்று கூறுவது தவறு”, என்று சிந்தனை செல்கிறதல்லவா?

மோசமான பிறப்பு வருவது என்?

உண்மை! மோசமான பிறவிச் சூழ்நிலையை எந்த உயிரும் தேர்வுசெய்வது இல்லைதான். ஆனால், மோசமான பிறவி பெறுதற்குரிய தீவினைகளை மகிழ்வோடு செய்துவிட்டு, நற்கதியை விரும்பினால் எவ்வாறு கிடைக்கும்? எல்லா மாணவர்களும் மாநிலத்தில் முதலாவதாக வரவே விரும்புவார்கள். ஆனால், அதற்கான உழைப்பைச் செய்யாமல், இனிமையாகப் போழுதுபோக்குவதிலேயே காலத்தைப் போக்கினால் விரும்பியது கிடைக்காதல்லவா!

விருப்பத்துக்கும், செயலுக்குமான இடைவெளியே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கிறது! அதை உருவாக்கியது நாமே! இறைவனல்லன்! நம் தீவினைக்கான பலனைச் சந்திக்க நேரிடும்போது, விதி (ஊழ்வினை) அல்லது இறைவன்மேல் பழியைப் போட்டுத் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுகின்றோம்.

விதியை மதியால் வெல்க!

ஒரு உயிர், ஏழ்மைச் சூழலில் அல்லது செல்வச் செழிப்பில் பிறப்பதற்கு மட்டுமே அவ்வுயிரின் ஊழ்வினை காரணமாகிறது. இவ்வூழ்வினை, அவ்வுயிர் செய்த பழவினைகளின் ஒரு பகுதியே! இதையே, “தீதும் நன்றும் பிறர்தர வாரா!என்றார் கணியன் பூங்குன்றனார். கிடைத்த பிறவியில் நன்கு செயல்பட்டு விதியை வெல்லவோ, அல்லது விதியில் ஒன்றி வீழவோ, அவ்வுயிருக்கு, முழுமையான சுதந்திரம் உண்டு. இங்குதான் உயிர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி முத்தி என்னும் விடுதலை அடைவதோ, தீவினைகள் செய்து, மீண்டும் பிறவிகள் பெறுவதோ நிகழ்கின்றன.

விதியை வெல்லும் தொண்டு!

செல்வச் சூழலில் பிறந்த உயிர்கள், அன்பே சிவமாம் கருணையுடன் துன்புறும் பிற மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும், தொண்டு செய்தால், இறைவன் உள்ளம் குளிர்ந்து, முத்தி என்னும் வீடுபேறு நல்குவான். மாறாக, வேதத்தின் பெயராலும், இறைவனின் பெயராலும் சாதி, குலம், பிறப்பு என்று பொய்நீதி நூல்கள் செய்து, பிற மனிதர்களையும், உயிர்களையும் அடிமைப்படுத்தும் தீவினைகள் செய்தால், விலங்கினும் கீழ்நிலையடைந்து, கடும்நரகில் சிக்கி உழல்வர்.

உண்மையுமாய்! இன்மையுமாய்!

வான் முதலிய ஐம்பூதங்களாக மட்டுமல்லன், ஊன் உடலாகவும், உயிரில்-உயிராகவும் உள்ளான் இறைவன்; இறைவன் மெய்யன்பர்களுக்குஉண்மை என்னும் உள்பொருளாகவும், “இறைவன் இல்லைஎன்போர்க்கு இன்மை என்னும் இல்பொருளாகவும் உள்ளான். (இக்கருத்தையே, திருவம்மானை-13ம் பாடலில் அல்லாதார்க்கு அல்லாத வேதியனைஎன்று தெளிவாக விரித்துக் கூறியுள்ளார் மணிவாசகர்.) உலகப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தலைவனாகி, இவைகளின் ஊடே பயணிக்கும் ஒவ்வொரு உயிரையும் யான்’, ‘எனதுஎன்று கூத்தாட்டுபவனும் அவனே; இவைமூலம் உயிர்கள் தம்மையும், தம்தலைவனையும் அறியுமாறு செய்து நின்ற இறைவனை என்ன சொல்லி வாழ்த்துவேன் என்று நெகிழ்கின்றார் மணிவாசகர்.

வான் ஆகி! மண் ஆகி! வளி ஆகி! ஒளி ஆகி!

ஊன் ஆகி! உயிர் ஆகி! உண்மையும் ஆய்! இன்மையும் ஆய்!

கோன் ஆகி! யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு-

வான் ஆகி நின்றாயை! என் சொல்லி வாழ்த்துவனே! (திருவாசகம்: 5-15)

தீமையான வல்வினைகள் காரணமாக ஒரு உயிர் மிக மோசமான சூழ்நிலையில் பிறக்கின்றது; அப்பிறவிக்கு அவ்வுயிரின் தலைவிதி (ஊழ்வினை) காரணம். ஆனால், அவ்வுயிர்-உடலுடன் உடன் கலந்து வாழ இறைவனுக்கு என்ன தலையெழுத்து? வசதியாக வாழும் மகன் வீட்டில் ஓரிருநாள் மட்டுமே வாழும் தாய்-தந்தையர், வறுமையில் வாடும் மகனுக்குத் தம் ஓய்வு ஊதியத்தைத் தந்து, அவனுடன் கடினவாழ்க்கை வாழ்வது கருணையால் அல்லவா?

இறைவனை அறியாதவர்கள்!

வேண்டுதல் வேண்டாமை இல்லாமல், உயிரின் வினைப்பயனில் ஒருபகுதியை, ஊழ்வினையாகத் தருபவன் இறைவன்; ஊழ்வினையால் ஏழ்மையில் வாடும் மனிதர்கள் மீது மிக்க கருணைகொண்டு, அவர்களுடன் தானும் வாழ்கின்றான். நல்-ஊழ்வினையால் நற்பிறவி பெற்றவர்கள், பிறவியையும், செல்வத்தையும் காரணங்களாக்கி, பொய்நீதி செய்து, சாதியால் ஏழைகளை அடிமைப்படுத்தும்போது இறைவனுக்கே கொடுமை செய்கின்றனர்; ஏனெனில், அவர்கள் செய்யும் சாதி அநீதியை முதலில் நுகர்பவன் அந்த ஏழைகளுடன் உறையும் இறைவனே! அனைத்து உயிருடம்புகளிலும், அனைவர் உள்ளங்களிலும் இறைவனே உறைகின்றான் என்பதை இத்தகையோர் உணர்வதில்லை என்கிறார் திருமூலர்.

உள்ளத்து ஒருவனை! உள்ளுறு சோதியை!

உள்ளம்விட்டு ஓரடி நீங்கா(த) ஒருவனை!

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவு அறியாதே! திருமந்திரம்: 417

உயிருக்கு உயிராய் உள்ளத்தில் நீங்காது நிற்கின்ற ஒப்பிலாத இறைவனையே உள்ளத்து ஒருவன், உள்ளுறு சோதி என்றார் திருமூலர். இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தையும் விட்டு ஓரடிகூட விலகாமல் நின்றருள்கின்றான். உயிர்-உள்ளமும் சிவமும் இரண்டறக் கலந்திருந்தாலும், உள்ளமாகிய உயிர், தன் சுட்டறிவைக்கொண்டு இறைவனைக் காண்பதில்லை. கருணையும், அன்புமே இறைநீதி. சித்தம் என்னும் உறுதியான கயிற்றைக்கொண்டு, இறைவனின் திருவடிகளைக் கட்டிப்போடும் வித்தையைக் நமக்குக் கற்பிக்கும் மணிவாசகம் உங்களுக்காக அடுத்தவாரம் துளிர்க்கும்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் : 28: பசு பாசம் என்னும் உலகப்பற்று

 பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிஎன்று இறைவனின் கருணையைப் போற்றுகிறார் மணிவாசகர். பசு என்றால் உயிர்; “பசுபாசம்என்பது உயிரைப் பிடித்துள்ள உலகப்பற்று. விலங்குகளின் பசுபாசம், இனப்பெருக்கம் செய்யவும், குட்டிகள் வளர்ந்து, அவைகளின் தேவையை அவைகளே பார்த்துக்கொள்ளும் வரை மட்டுமே உள்ளன. அதனால், அனைத்து விலங்குகளும் தங்களின் தேவைக்குத் தாங்களே உழைக்கின்றன. சொத்துப்பாசம், பணப்பாசம், உறவுப்பாசம், சாதிப்பாசம், இனப்பாசம், மொழிப்பாசம், மதப்பாசம் போன்ற தளை(பாசங்)கள் விலங்குகளுக்கில்லை. மனிதனே இப்பாசங்களால் துயரமடைகின்றான்; ஆயினும், மனிதனே இறைவனின் கருணையையும் உணரவல்லவன்.

பசுபாசத்தால் உருவாகும் வேடிக்கை மனிதர்கள்

பசுபாசமாம் உலகப் பற்றில் சிக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை விளக்குகிறார் பாரதியார். தினம் தேடிச் சோறு உண்ணுவது, வெட்டிக்கதைகள் பல பேசுவது, தேவை தகுதி கடந்த ஆசைகளில் மனம் வாடித் துன்பபப்படுவது, பிறரை வாட்டிக் காயப்படுத்தும் செயல்கள் பல செய்வது, இறுதியில், நரைத்து, வயதாகி, மரணமடைவது. பசுபாசத்தில் சிக்கிய மனிதர்கள் தேடிய பொருட்செல்வங்கள், அவர்களின் வாரிசுகளுக்கு உழைப்பில்லாமல் கிடைப்பதால், பல வேடிக்கை மனிதர்கள் உருவாகின்றனர்.

தேடிச்சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக வுழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

(மகாகவி பாரதியார்)

வேடிக்கை மனிதன் ஒருவன் இறந்தால், சுற்றத்தார் என்ன செய்வார்கள்?

இறந்தவுடன் மறக்கப்படும் மனிதன்!

ஊரையே கூட்டி, உரக்க அழுவார்கள்; இறந்தவன் பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள்; அப்பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று சுட்டு எரித்துவிட்டு, நீரினில் மூழ்கிக் குளித்துவிட்டு, அவனை ஒரேயடியாக மறந்துவிடுவார்கள் என்கிறார் திருமூலர்.

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பெயர் இட்டுச்

சூரையங் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!

(திருமந்திரம் :189)

முதலாளியின் பெயரைச் சொல்லமாட்டோம் என்று போலி மரியாதை காட்டி, கூழைக் கும்பிடு போடும் அடிவருடிகள், முதலாளி இறந்ததும், “பொணத்தை எப்போ எடுப்பீங்க?” என்று கூசாமல் கேட்பார்கள். வாரிசுகளோ, பிணத்தை வைத்துக்கொண்டே, சொத்துப் பிரிக்கச் சண்டையிடுவார்கள். காதற்ற ஊசியைக்கூட எடுத்துச் செல்ல முடியாத உயிர், வாரிசுகளின் செயல் கண்டு, “இவர்களுக்காகவா இத்தனைக் காலம் உழைத்து, வாழ்வை வீணடித்தோம்?; கிடைத்த பிறவியில் தொண்டு செய்து, இறைவனை அடையும் அரிய வாய்ப்பைத் தொலைத்தோம்?” என்று வருந்தும். தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப, தனது அடுத்த உடல் பிறவிக்காகக் காத்துக் கிடக்கும் அவ்வுயிர். இந்நிலையிலிருந்து தம்மை இறைவன் மீட்டான் என்பதையே பத்திமையும், (முத்திப்)பரிசும் இலாப் பசுபாசம்அறுத்து அருளிஎன்றார் மணிவாசகர்.

பசு பாசம் அன்பாக மலரவேண்டும்

பசுபாசம் என்னும் உலகப்பற்றே, ‘நான்என்னும் வட்டத்தை விட்டு, “தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, குழந்தைகள்”, என்று பிறருக்காக வாழும் பண்பை மனிதனுக்குக் கற்றுத்தந்தது. அப்பாசம் முதிர்ந்து, அனைத்து உயிர்களுக்கும் தொண்டு செய்யும் பக்தி கலந்த இறையன்பாக மலர வேண்டும். அப்படிப்பட்டவனின் வாழ்வே, அவன் மனைவி, மக்கள், சுற்றத்தார்க்கு நல்வழி காட்டும் வாழ்வியல் நூலாகி, நல்ல சமுதாயத்தைப் படைக்கும்.

மனிதனின் தகுதியை உயர்த்த...

மனிதப் பிறவியின் நோக்கம், இல்லறக் கடமைகளை அறவழியில் நடத்தி, இறைவனுக்குத் தன் தொண்டால் பக்தி செலுத்தி, இறைவனுடன் இரண்டறக் கலக்கும் முக்திப் பரிசைப் பெறுவதே! உலகப் பொருட்களிடம் மட்டுமே பாசம் வைக்கும் (பசு)உயிர்கள், பாசத்தை இறைபக்தியாக்கி அன்பைச் செலுத்த மறக்கின்றன. இறைவன் வாழும் சகஉயிர்கள் மீது அன்பு வைத்தால் தன் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம் என்பதை மனிதன் ஏனோ உணர்ந்துகொள்வதில்லை.

பசுபாசம் அறுத்தருளி . . .

பத்திமையும், (முத்திப்) பரிசும் இல்லாத உலகப்பற்று என்னும் பசுபாசம்என்னைச் சேராமல் நீக்கி அருளிய திருப்பெருந்துறைச் சிவபெருமானே! என்னை உலகவர் பித்தன் என எண்ணும்படியாக, உன்பால் எனக்கு நீங்காத அன்பைத் தோற்றுவித்து அருளிய எம்பெருமானே! என்னுடைய மனத்தை இங்கும் அங்கும் அலையவிடாமல், எனது சித்தம் என்னும் உறுதியான கயிற்றால், உன்னுடைய அழகிய பாதமலர்களை என்னைக் கொண்டு கட்டுவித்து அருளிய வித்தகப் பெருமானே! உன் கருணையை என்னென்பது! உனது திருவிளையாடலை விளங்கித் தோன்றும் இத்தில்லையம்பலத்தே கண்டுகொண்டேன்!என்று பக்திப் பிழம்பானார் மணிவாசகர்.

பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி!

பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து! பேராமே,

சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த!

வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

(திருவாசகம்:31:7)

பசுபாசம் நீங்கி, தன்னிடம் கொண்ட அன்பால் பித்தனாக மாறிய மணிவாசகரின் உள் புகுந்தான் இறைவன்; அண்ட பேரண்டங்கள் யாவையும் கடந்து, யாராலும் காண இயலாத தன் திருவடிக் காட்சியை மணிவாசகர் காணுமாறு தந்தான்.

திருப்பாதம் கட்டுவித்த பேரருள்

அன்பில் உருகிய இறைவன் தாமாகவே முன்வந்து, மணிவாசகரின் சித்தம் என்னும் திண்கயிற்றால், தனது திருவடிகளைக் கட்டிப்போட அருள்செய்து, ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினான் என்பதை, “கட்டுவித்தஎன்ற சொல்லால் உணர்த்துகிறார் மணிவாசகர்.

சித்தமென்னும் திண்கயிற்றால்என்னும் திருவாசகத் தமிழ், பரந்தாமன் திருவடிகளைப் பரமஞானி சகாதேவன் கட்டிய நிகழ்வை, வில்லிபுத்தூராரின் சொல்லாட்சியில் தமிழ்க் காவியமாக்கிற்று. வில்லிபாரதத்தில், பாரதப் போரைத் தவிர்க்க கண்ணபிரானைத் தூது செல்லத் தருமன் வேண்ட, பாண்டவர் ஐவரின் கருத்தையும் கேட்டான் பரந்தாமன். தருமன் சமாதானம் வேண்ட பீமன், அர்ஜுனன், நகுலன் ஆகியோர் போர் வேண்டினர். பரந்தாமனை உணர்ந்த பரமஞானியான சகாதேவனோ, “இடையர் குடியில் வளர்ந்த திருமாலே! உன் திருவுளக் கருத்து எதுவோ, அதுவே என் கருத்தும்என்றான். வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே! (திருவாசகம்-33:6)” என்னும் திருவாசகத் தமிழை வில்லிபாரதத்தில் சுவைக்கிறோம்.

அன்பால் பரந்தாமனைக் கட்டிய சகாதேவன்

மற்றவர்கள் முன் பேசினால் காரியம் கெடும் என்று சகாதேவனைத் தனியே அழைத்துச் சென்ற கண்ணன், “சகாதேவா! போர் நிகழாதிருக்க முடிந்தால் வழி சொல்!என்றான்; “கண்ணா! போரை நிறுத்த வேண்டுமானால், கர்ணனை நாட்டை ஆளச்செய்து, பார்த்தனைக் கொன்று, பாஞ்சாலியின் கூந்தலைக் களைந்து, பீமன் காலில் விலங்கிட்டு, கைபிடித்து உன்னையும் நான் கட்டினால், பாரதப் போரைத் தடுக்கலாம்எனப் பக்தியோடு விடை சொன்னான் சகாதேவன். நீ கூறிய மற்றவற்றை முடித்தாலும், என்னை எவ்வாறு கட்டுவாய்?” என்று வியந்தான் பரந்தாமன். உன் வடிவை நீ காட்டினால், உன்னை நான் கட்டுகிறேன்எனப் பணிவோடு சொன்னான் சகாதேவன்.

சகாதேவன் அன்பின் ஆற்றலை உலகுக்குணர்த்த, பார்க்குமிடமெங்கும் பரந்தாமனேயாக விஸ்வரூபம் எடுத்து எண்ணற்ற வடிவு கொள்கிறான் உலகளந்த பெருமான்! விஸ்வரூப-மூலத்தை உணர்ந்த சகாதேவனின் சித்தமாம் திண்கயிற்றால், தன் திருவடிகளைச் சிக்கெனக் கட்டுவதற்கு அருளினான்; சகாதேவன் கண் களிக்க முன் நின்று, “பற்றிய பாதம் விடுகஎன்று இறைஞ்சினான் பரந்தாமன் என்கிறார் வில்லிபுத்தூரார். பாரதப் போரில் ஐவரையும் காத்தருள்க!என்று வேண்டி, “ஓம்எனும் வரம்தந்த கண்ணனை விடுவித்தான் சகாதேவன்.

அன்பர்கள் சிலர், 'நாயேன், 'நாயினும் கடையேன்', 'ஊர் நாயின் கடையானேன்' என்னும் சொற்கள் வரும் பல திருவாசகப் பாடல்களைப் பாடச் சங்கடப்படுவதாகத் தெரிவித்தனர். ஐயம் தெளிவிக்கும் மணிவாசக விளக்கம் அடுத்த வாரம் துளிர்க்கும்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் : 29: நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

 

அறுநூற்றி ஐம்பத்தியெட்டுப் பாடல்களை ஐம்பத்தியொரு பதிகங்களில் கொண்டது திருவாசகம். ஊனையும், உயிரையும் உருக்கும் திருவாசகத்தின் முப்பது பதிகங்களில், அறுபத்தியெட்டு இடங்களில், நாயேன், நாயடியேன், என நாய்க்கு இணையாக, நாயினும் கீழாகப் பாவித்துப் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள் அறுபத்திஒன்று உள்ளன. மனமறிந்து தவறோ, யாருக்கும் தீங்கோ, செய்ததில்லை. நாயேன்' என்ற சொல் வரும் திருவாசகங்களைப் பாட, மனம் சஞ்சலப்படுகிறதுஎன்னும் அன்பர்களின் ஐயம் குறித்து இக்கட்டுரையில் சிந்திக்கலாம்.

கருணையுள்ளம்!

மக்களிடம் பரவலாகக் காணும் இழிகுணங்களான நோய்களை, உயிர்களிடத்து அன்புடைய, அறிவார்ந்த பெரியோர்கள் எவ்வாறு காணுவார்கள் என்று திருக்குறள் சொல்வதைக் காண்போம். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.” (குறள் 315) “பிற உயிர்களின் நோய் தமக்கே வந்ததாக எண்ணாவிட்டால் அறிவைப் பெற்றதால் என்ன பயன்?”, என்ற வினாவை முன்வைக்கிறது இக்குறள். அறிவின் அடையாளமாக இங்கு காட்டப்படுவது கருணையான தன்வேதனையே (empathy), பரிதாபம் (sympathy) அன்று. அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்தும் அறிவுடைய இறையன்பர்கள், பிற உயிரின் மனம் சார்ந்த இழிகுணங்கள், உடல் துன்பங்கள் முதலிய நோய்கள் தமக்கே வந்ததாக எண்ணுவர்.

இக்குறளை, அரசியல்-அறிவுடைமை அதிகாரத்தில் வைக்காமல், துறவறம்-இன்னாசெய்யாமை அதிகாரத்தில் வைத்தது ஊன்றிக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. முதலமைச்சர் வாதவூரருக்கு, “கொலையாளியை வேந்தன் தண்டித்தல், களையெடுப்பதற்குச் சமம்”, எனத் திருக்குறள்-550 கூறும் அரசியல் அறமே அறம்.

அருளாளரான மணிவாசகருக்கு (வாதவூரர்), மனிதர்களின் இழிகுணங்களைத் தனதாகக் கொண்டு பாடும் கருணை இயல்பானது என்று தெளிவோம். இறையருள் வேண்டும் நாமும், கருணையுள்ளத்தோடு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், மகிழ்வுடன் அத்தகைய திருவாசகங்களை ஓதி இறைவனருளைப் பெறுவோம்.

குறிக்கோள் இன்றி அலைவதில் மனிதர்கள் நாய்க்கு இணையானவர்கள் என்பதால் நாயே அனைய நம்மையெல்லாம்’, ‘நாயேன்என்று பாடியுள்ளார் மணிவாசகர். இனி, ‘நாயினும் கடையேன்என்று மணிவாசகர் கூறுவதால், பல மனிதர்களிடம் இல்லாத, நாயிடம் மட்டுமே சிறப்பாகக் காணப்படும் சில குணங்களைப் பற்றி, பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவணமுதலியார், வாரியார் சுவாமிகள், பண்டிதமணி கதிரேசச்செட்டியார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியவற்றை இங்கு சிந்திப்போம்.

தலைவனை அடையாளம் காணும் குணம்

மாபெருங்கூட்டத்திலும், எங்கோ அமர்ந்திருக்கும் தன் தலைவனைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளும் தன்மை நாய்க்கு உண்டு. மனிதப் பிறப்பே, தலைவனாம் இறைவனை அறிவதற்கும், இறைவனிடம் இரண்டறக் கலந்து முக்திப் பேரின்பம் பெறுவதற்குமானது. ஆனால், இறைவனைப் பற்றிய சிந்தனை துளிக்கூட இல்லாத மனிதர்களே (agnost) உலகில் அதிகம். இறைவனை அடையாளம் காணும் தேவையே இவர்களுக்கு வருவதில்லை.

இறைவன் இல்லை என்றும், நானே தலைவன் என்றும், பணம் படைத்தவனைத் தலைவன் என்றும், இறைவனுக்குரிய குணங்கள் இல்லாதவரைத் தலைவன் என்றும், “இறைவன் இருக்கலாம்; ஆனால், அந்தத் தலைவனை யாருக்கும் தெரியாது”, என்றும், பல நிலைகளில், தலைவனை அறியாத மனிதர்கள் உள்ளனர்.

. . . யான் யாவரினும் கடையன் ஆய

நாயினேன்! ஆதலையும் நோக்கிக் கண்டு!

நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்!

ஆயினேன்! ஆதலால் ஆண்டுகொண்டாய்!

(திருவாசகம்-5:23)

தலைவனை அடையாளம் காணவியலாத, நாயினும் கடையனான தம்மை, இறையன்பன் என்று ஆனதாலேயே ஆண்டு அருளினான் என்னும் நமக்கான மணிவாசகம்இது.

செய்நன்றி பாராட்டும் பெருங்குணம்

எப்போதோ ஒரு நேரம் உணவிட்டவனை, தன் வாழ்நாள் முழுவதும், எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு, வாலைக் குழைத்துத் தன் நன்றியைத் தெரிவிக்கும் இயல்புடையது நாய். அறியாமை என்னும் இருளில், அறிவற்ற குருடர்களாய்க் கிடந்த உயிர்களுக்கு, பொறிபுலன் கருவிகளுடனான உடல்களைத் தந்து, வாழ இவ்வுலகம் தந்து, காத்து, அவ்வுயிர்களுடன் ஒன்றாக வாழ்பவன் இறைவன்;

உயிர்களுக்குப் பொருட்களை அறியுமாறு அறிவிப்பதற்காக, உயிர்களை விட்டு வேறாகக் காணப்படுபவன் இறைவன். அறிந்த பொருட்களை, அறிந்தபடியே நுகர்விப்பதற்காக, உயிர்களின் உடனாகவும் நிற்பவன் இறைவன். இவ்வாறு, உயிர்களின் அறிவுப் பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும், அசைவிலும், பயன் கருதாமல், உணவு முதல் அனைத்தும் படைத்து, காத்து, அருளும் இறைவனின் கருணைக்கு நன்றி செலுத்தும் கடமை, ஆறறிவு பெற்ற மனிதனுக்கே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இறைவனுக்கு அவ்விதம் நன்றி செலுத்துவது இல்லை.

செய்நன்றி செலுத்துவதில் மனிதர்கள் நாயினும் கடைநிலையில் இருக்கிறார்கள். இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க! என்னும் மணிவாசகம் ஓதி, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்..

தலைவனின் கட்டளையை உடனே ஏற்றுச் செயலாற்றுதல்

தன் உயிரே போகும் ஆபத்தான வேலையாக இருந்தாலும், தலைவன் கட்டளையிட்டால், அவ்வேலையில் உடனே இறங்கும் பண்பு கொண்டது நாய். இறைவன், மனிதர்களை நெறிப்படுத்தத் தன் திருவருள் பெற்ற அருளாளர்கள் மூலம், அற நூல்களையும், அறிவு நூல்களையும் அருளி, இரண்டு கடமைகளைச் செய்யப் பணித்தான்.

முதலாவது, அற நூல்களில் கூறியபடி, இன்முகம், நல்மொழி, தூய உள்ளம், நடுவுநிலை, நன்றியுடைமை, அடக்கம், தவறாத ஒழுக்கம் ஆகியன கடைப்பிடித்து அற நெறியில் வாழ்தல்; பிறன்மனை நோக்காது, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இல்லறக் கடமை தவறாமல், நன்மக்களைப் பெற்று, அன்பால் விருந்தோம்பி, வறியவர்க்கு ஈகை, தொண்டுகள் செய்து, இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக வேண்டும். இரண்டாவது, அறிவு நூல்களில் விளக்கப்பட்ட, உயிர்களின் அறிவை மறைக்கும் மும்மலத்தின் தன்மை, உயிர்களின் இயல்பு, இறைவனின் தன்மை போன்றவை அறிந்து, இறையருள் பெற்று முத்திபெற வேண்டும்.

எளிதாகச் செய்ய முடிந்த இவ்விரண்டு கடமைகளையும் செய்யாத மனிதர்களே அதிகம். நாய் செய்து முடிக்கும் பணியின் பலனைஅடைவது நாயின் தலைவனே! ஆனால், மனிதனுக்கு இறைவன் இடும் பணியின் பலனை அடைவது மனிதனே! இறைவனல்லன்! இருந்தும், தனது நன்மைக்காகத் தலைவனிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாத மனிதர்களே அதிகம்; தலைவனின் கட்டளை எதுவாயினும் தலைமேற்கொள்ளும் நாயுடன் ஒப்பு நோக்கினால், மனிதன் நாயினும் மிகக் கீழானவன்.

தலைவனிடம் கொள்ளும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை!

தலைவனிடம் காட்டும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை நாய்க்கே உரியது. ரத்தம் வரக் கொடுமையாக அடித்தாலும், கோபப்படாமல், வாலைக் குழைத்துத் தலைவனின் கருணையை நோக்கி அமைதியாக நிற்கும் நாய்.இறை நம்பிக்கை கொண்ட மனிதர்களில் பலரும், தமக்கு நேர்ந்த துன்பம், தாம் முன்செய்த தீவினைப்பயன் என்பதை மறந்து, “பாழாய்ப்போன இரக்கமற்ற கடவுளே! உனக்குக் கண்ணில்லையா!”, என்று பழித்து, நம்பிக்கையற்று, ‘கடவுள் இல்லைஎன்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர்.

பற்று-நம்பிக்கையிலும் மனிதன் நாயைவிடக் கீழானவனாகிறான்.

எந்தச் செயலையும் காரணத்துடன் செய்யும் இயல்பு!

நாய் எந்தச் செயலையும் காரணத்துடனேயே செய்யும். எடுத்துக்காட்டாக, கல்லால் அடிபட்ட நாய், தன்மேல் பட்டுக் காயம் உண்டாக்கிய கல்லைக் கடிக்காமல், கல்லை எறிந்தவன்மேல் பாய்ந்து கடிக்கும்.

எய்தவன் இருக்க, அம்பை நோகும் மனிதனோ, கல்லில் மோதிவிட்டு, கல் தன்னை இடித்ததாகக் கூறுவான்; இதுபோலவே, தன்னுடைய முன்வினைப் பயனால் தனக்கு வந்த துன்பத்திற்கு, பிறரைக் குற்றம் கூறுவான்.

காரணம் காணும் தன்மையில், மனிதன் நாயினும் கடையவன்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (திருவாசகம்-1:60-61)

என நாயினும் கடைப்பட்ட நமக்கெல்லாம் தாயினும் சிறந்த கருணையை வாரி வழங்கும் இறைவனின் அருளைத் தரும் திருவாசகத்தை உள்ளம் ஒன்றி ஓதி உயர்வோம். நம் உயிரையே குழைத்து இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்க உதவும் திருவாசகத் தேனை வரும் வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  30: சிவபூசைக்கான சிறந்த மலர்!

 

சிவபூசை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கும் படையல்களில் இறைவனுக்கு மிகவும் உகந்த மலர் நம் இதயத்தாமரையே! மூடாமல் மலர்ந்திருப்பதால்தான் மலர் என்கிறோம். இதயமாகிய தாமரை, அர்ப்பணிப்பு உணர்வால் இறைப்பணியில் முழுமையாக மலர்ந்து, தன் உயிரையே இறைவனுக்குப் படையலாக்குவதை ஆத்தும நிவேதனம்என்று வடமொழியில் வழங்குவர்.

பெற்றோரைக் காணாத சிறு குழந்தை, மழலை மொழியில், “அம்மே! அப்பா!என்று அகம் குழைந்து அழுதால், நம் மனம் குழைந்து பதைத்தோடி வந்து, குழந்தையைத் தாவி அணைத்து ஆரத்தழுவி நிற்போம் அல்லவா? இங்கு, நம்மைக் குழைத்து உருக்கியது, குழந்தையின் மழலை மொழி.

ஆற்றல்மிக்க அன்பை உருவாக்கும் வழி!

திருப்பெருந்துறையில் இறைவனின் திருவடி தீண்டப்பெற்று, இறையனுபவம் பெற்ற மணிவாசகர், அம்மையப்பனைக் காணாது, அகங்குழைந்து, பெரிதும் பணிந்த மொழிகளால் பாடிய பதிகம் குழைத்த பத்து. இப்பத்து மணிவாசக மொழிகளையும் கேட்ட இறைவன், திருவுள்ளம் குழைந்து, ஓடி வந்து அருளினான். இப்பாடல்களை மனமுருகிப் பாடி வேண்டுவோருக்கு, நொடிப் பொழுதில் திருவுள்ளம் குழைந்து இறைவன் அருள்வான் என்பதால் சான்றோர்கள் இப்பதிகத்துக்குக் குழைத்த பத்துஎன்ற பெயரிட்டு, ‘ஆத்தும நிவேதனம்என்னும் உட்குறிப்பும் தந்தனர்.

இங்கு, ஆத்தும நிவேதனம் என்பது, நம்மிடம் உள்ள `யான்என்னும் அகங்காரத்தைச் சமைத்து அன்பாக்கி, இறைவனுக்குப் படைத்தலாகும். வாயிலார் நாயனார் தமது மன வழிபாட்டில் செய்தது இதுவே. ஒரு பாடலின் முடிவு, அடுத்த பாடலின் தொடக்கமாக இருப்பதால் இப்பதிகம் அந்தாதியாய் உள்ளது. முதலிலும், முடிவிலும், `குழைத்தல்என்னும் சொல் வருவதால், `குழைத்த பத்து என்பது மிகவும் பொருத்தமான பெயரே!

துன்பத்திலிருந்து மீட்கும் குழைத்தபத்து!

குழைத்தல்என்பதற்கு வாடச்செய்தல்என்றும் ஒரு பொருள் உண்டு. திருவாசகம் அருளும் பொருட்டு மணிவாசகரை, இறைவன் உலகத்தில் இருந்து வாடச்செய்ததைக் கூறும் பதிகமாதலால், குழைத்த பத்து என்றும் சிலர் கூறுவர். நம்மைத் துன்பத்திலிருந்து மீட்கும் வல்லமை கொண்ட பதிகம் இது.

உடையவனே! கொடுவினையிலிருந்து காத்தருள்க!

முதல் பாடலில், “என்னை உடையவனே! வாட்டி வதைக்கும் என்னுடைய பழைய கொடுவினைகளின் கொடுமையிலிருந்து என்னைக் காத்தருள்வாய்! எனதுஅன்னை உமையவளின் மணவாளனே! என்னை ஆள்பவனே! கொடுவினையேனாகிய நான் உழைத்தாலும் கொடுவினைப்பயன்களிலிருந்து உறுதியாக விடுபட இயலாது என்பது நீ அறியாததா? பிறைநிலவைச் சடையில் சூடிக்கொண்டவனே! உன்னுடைய உடமையான நான் பிழைசெய்தால் பொறுத்தருள வேண்டாமா? என் அம்மானே! முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தும், அருளாமல் மறைந்துபோவது உனக்கு அழகாகுமா? உன் அடியவனான நான் எங்கு செல்வேன்?”, என்று கரைந்துஉருகி நிற்கின்றார் மணிவாசகர்.

குழைத்தால், பண்டைக் கொடுவினை நோய், காவாய்! உடையாய்!; கொடுவினையேன்

உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்!

பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ?

`பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று

அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே! உன் அடியேற்கே?

(திருவாசகம்-33:1)

இறைவனிடம் சரணடைந்து நம்மை ஒப்புவித்துவிட்டால், நாம் இறைவனின் உடைமை ஆகிவிடுவோம்! இறைவன் நம்மை உடையவன் ஆவான்!

சரணாகதியின் சக்தி!

உடைமைகளைப் பாதுகாப்பது உடையவனின் கடமை! முன்செய்த கொடுவினைகள் வாட்டினால், நம்மைக் காக்க வேண்டிய கடமை, நம்மை உடையவனான இறைவனுடையதாகும். உடையாய்!என்னும் ஆற்றல்மிக்க திருவார்த்தையைக் கொண்டது இம்மணிவாசகத்தின் முதல் வரி.

நம்மைக் காக்கும் உமையன்னையின் அருள்!

செய்த கொடுவினைப் பயனை அனுபவிப்பதற்கே இவ்வுடல் பிறவி! இன்னும் துய்க்க வேண்டிய பழவினைகளுடன், இப்பிறவியில், ‘நான்என்னும் உணர்வால் உழைத்துச்செய்த புதுவினைகளும் சேர்ந்து, மீண்டும், மீண்டும் பிறவிகளைத் தரும்; எனவே, உழைத்தால் பிறவி நீக்கம் கிடைப்பது உறுதியில்லை! எனையாளும் இறைவா! உன் திருவடிகள் மட்டுமே எனது பிறவி நோயை நீக்கும் அருமருந்து! கருணையே வடிவான எனதன்னை உமையாள் என்பொருட்டு உன்னிடம் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பாள்!என்ற உட்குறிப்பைச் சொல்லும் இரண்டாம் வரி அருள்வாசகம்.

உலகியலில், தாயே, தவறுசெய்த மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு தன் கணவனிடம் பரிந்துரைப்பதைக் காணுகின்றோம். இங்கு, நமக்குப் பரிந்துரை செய்ய, அன்னை உமையம்மை உண்டு என்கின்றார் மணிவாசகர். இறைவனருள் மட்டுமே பிறவியை நீக்கி, வீடு பேறு தரவல்லது என்பது இவ்வரியின் உட்குறிப்பு.

பிழை பொறுக்கும் பேரருளாளன்!

மூன்றாவது வரி சொல்லும் செய்தி இன்னும் சிறப்புமிக்கது.. பிறைசேர் சடையாய்!, பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ? ’ என்று கேட்கும் மணிவாசகம், இறைவன் தனது மெய்யடியார்கள் செய்த பிழைகளை மன்னிக்கும் பேரருளாளன் என்பதைச் சொல்லும் அற்புதமான இடமாகும்.

சந்திரனை மன்னித்துத் தலையில் சூடிக்கொண்டவன்!

இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் பிழைகள், உடல்பொறி-புலன்கள் தூண்டுவதால் நிகழ்வன. மனிதர்களைவிட பல மடங்கு உயர்ந்த சந்திரதேவன், தன் தலைவன் இறைவனை அவமானப்படுத்தியவன் என்று தெரிந்தும், தக்கன் வேள்வியில் பங்கெடுத்தது மன்னிக்க முடியாத குற்றம். அத்தகைய சந்திரனையே மன்னித்து, எப்போதும் தன்னுடன் இருக்குமாறு தன் தலையில் இறைவன் சூடிக்கொண்டதைப் பிறைசேர் சடையாய்என்று குறித்தார். தாழ்ந்தநிலை மனிதனான என் பிழையை நீ பொறுத்து அருள வேண்டாமோ?” என்று உரிமையுடன் இறைவனிடம் வேண்டும் வரி, மனிதனுக்குத் தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை அணுக நம்பிக்கை தரும் மணிவாசகம்.

உன்னைவிட்டால் எங்கு செல்வேன் இறைவா!

இவ்வாறெல்லாம் உன் அடியவனான நான் அழைத்தும், நீ அருளாமல் செல்வது என் அம்மையப்பனாகிய உனக்கு அழகோ! எனக்கு உன்னை விட்டால் போக்கிடம் ஏது?”, என்ற பொருள் தரும் கடைசி வரி இறைவனின் உள்ளத்தைக் குழைத்து அருள் சுரக்கச் செய்யும் ஆற்றல் மிக்க வாசகம்.

நாம் என்ன தவறு செய்தாலும் இறைவன் மன்னிப்பான்; எனவே, மன்னிப்புக் கேட்டுவிட்டு, மீண்டும் தவறு செய்யலாம் என்று இத்திருவாசகத்துக்குப் பிழையாகப் பொருள் கொள்ளக் கூடாது. இறைவனிடம் சரணடைவதே நாம் மீண்டும் பிழை செய்யாமல் இருக்கத்தான் என்பதைத் தெளிவாக்கும் சுந்தரரின் திருவாரூர் திருமுறை முதல் திருப்பாட்டு இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறு செய்யாமல் காப்பான் இறைவன்!

இறைவன், இவ்வுலகில் வாழத் தேவையான செல்வமும்(பொன்னும்) நிலைத்த மெய்ப்பொருளான அவன் திருவடிகளை அடைவதற்கான மெய்யுணர்வையும் தருபவன்; செல்வத்தினால் கிடைக்கும் உலகின்பத்தையும், மெய்ப்பொருள்-விளக்கத்தால் கிடைக்கும் வீடு பேறையும் ஒன்றாக இணைப்பவன்; உலகின்பங்களை நுகரும்பொழுது நான் செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக் கொள்பவன்; அவனைச் சரணடைந்த பின், என் செயல்களிலெல்லாம் பிழைகளே வாராமல் தவிர்க்குமாறு என்னைப் பணித்து அருள்பவன்; இன்ன தன்மையை உடையவன் என்று அறிய முடியாதவனான எம்பெருமான், அடியவர்க்கு எளியவன்; இவ்வளவு பெருமைபெற்ற, அன்னப் பறவைகளுக்கு வாழ்விடம் தரும் வயல் பண்ணைகளையுடைய, அழகிய திருவாரூர் இறைவனை என்னால் எப்படி மறக்க இயலும்?” என்று வினவுகிறார் சுந்தரர்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை! போகமும் திருவும் புணர்ப்பானை!

பின்னை என் பிழையைப் பொறுப்பானை! பிழை எலாம் தவிரப் பணிப்பானை!

இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை!

அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே?

- திருமறை: 7.59.1

உலக இன்பத்தை நுகரும் மனிதன் செய்யும் பிழை, இறைவனை மறந்து, இவ்வுலகப் பொருள்களிலேயே நாட்டம் கொள்வதாகும். வீட்டின்பத்தை மனிதன் நுகரும்பொழுதும்கூட, பழைய பழக்கத்தால், மனம் சிற்றின்பத்தையே நாடும் பிழையைச் செய்யும்; இறைவனைச் சரணடைந்த தன் அடியார்க்கு, இப்பிழை வராமல் இறைவன் தவிர்த்து அருளுவான் என்று (இங்கு குறிப்பிட்ட) திருவாசகத்துக்குச் சரியான விளக்கமாகிறது சுந்தரர் தேவாரம்.

மெய்யறிவு அருளவே, இறைவன் உடல் பிறவி தந்தான். ஆனால் தீமை தரும்(செடிசேர்) உடலை ஏன் இன்னும் சிதைக்கவில்லை என்று இறைவனிடம் கேட்கும் மணிவாசகத்தின் உண்மைப் பொருளை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்

 

 இறைவா! உன் அருள்பெறும் விதியில்லா விட்டாலும், திருவடியால் ஒரு அடியாவது தருவாய்!', என்று அகம்குழைந்து வழிபடும் இம்மணிவாசகம், கொடு வினைப் பயனால் அல்லலுறும் மனிதர்களுக்கு வழிகாட்டும் இன்னுமொரு விடியலாகும்.

கொடிஇடையாள் உமையன்னையின் பங்கனே! என்அரசே! நீ முன்னம் என்னை ஆட்கொண்டபோதே என் கொடுவினையால் விளைந்த அல்லல்கள் யாவும் நீங்கிவிட்டன என்றல்லவா எண்ணியிருந்தேன்! எங்கள் சிவலோகனே! என்னை வா என்று அருளி, துன்பம் தரும் என் உடலை ஏன் இன்னும் அழிக்கவில்லை? என்னை உடையவனே! என்னைக் கூவிப் பணிகொள்ளாதிருக்க என்ன காரணமிருந்தாலும், நின் திருவடிகளால் என்னைத் தண்டித்தாலே எனக்குப் போதுமானது!என்று இறைவனிடம் மனமுருகி விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர்.

அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!

கொடியேர் இடையாள் கூறா! எங்கோவே! ஆவா! என்று அருளிச்

செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!

உடையாய்! கூவிப் பணிகொள்ளாது, ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(திருவாசகம்:33.2)

உயிர்களிடம் இறைவன் கொண்ட கருணையை உணர்ந்துகொள்ளவும், மணிவாசகரே மனித உடலைப் புகழ்ந்தும் பழித்தும் பல்வேறு இடங்களில் ஏன் பாடியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளவும் இத்திருவாசகம் உதவும்.

அருள்பெற்றும் துன்பங்கள் ஏன்?

என்னை ஆட்கொண்ட இறைவனின் திருவடிகளைத் தீண்டி நான் பேரின்பம் அடைந்தேன்! இறைவன் ஆட்கொண்டதால், கொடுவினைப் பயனான துன்பங்கள் உடன் அகன்றுவிடுமே! ஆட்கொள்ளப்பட்டும், இறைவனைப் பிரிந்து, மனித உடலிலேயே துன்பத்தில் துயருருகின்றேன்; இது எங்ஙனம்?”, என்ற தன் ஆற்றாமையையே அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!என இறைவனிடம் வெளிப்படுத்துகின்றார் மணிவாசகர்.

துன்பம் தரும் உடலை அழிக்காதது எதற்காக?

அடுத்ததாக, “எங்கள் சிவலோகா! என்னை ஆட்கொண்ட பின், எனக்குப் பாவமும், துன்பமும் தரும் இவ்வுடலை அழித்து, என்னை வா என்று அருளி, உன்னுடன் அழைத்துச் செல்லாதது எதற்காக?” என்ற கேள்வியை இறைவனிடம் வைக்கிறார்; திருவாசகத் தேனில் மூழ்கி, அவ்வின்பக் கடலில் நீந்திக் குளிக்கும் நமக்கோ பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது!; இறைவன் மனமிரங்கி, மணிவாசகரை உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ திருவாசகம் இங்கு முற்றுப்பெற்றுவிடுமோ அடுத்து என்ன நடக்குமோ என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது! அதேவேளை, மணிவாசகரின் தவிப்பையும் இறைவன் உடனே நீக்கியருள வேண்டும் என்ற வேண்டுதலும் நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கின்றது. இது திருவாசகத்தில் 'நாம்' கலந்ததால் பெற்ற அன்புருவத்தின் வெளிப்பாடு! அருளுருவத்தின் பரிமாணம்!

இறைப் பேரின்பமடைந்த எவரும் மனித உடலில் வாழ்ந்ததில்லையே! அதனாலன்றோ, ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்னும் பழமொழி நிலவுகின்றது! மனித உடலிலேயே இறைப் பேரின்பத்தை நுகர்ந்த மணிவாசகரின் அநுபவத்தைத் திருவாசகமாகத் தருவதற்காக அல்லவா இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்துகின்றான்! நமக்கான திருவாசகம் முழுவதையும் படைத்து முடிக்கும்வரை, மணிவாசகரின் கேள்விக்கு இறைவன் விடைதரப் போவதில்லை!

உடலைப் போற்றுவதும்! பழிப்பதும்! - மயக்கத்துக்கு விடை!

இங்கு, 'செடிசேர் உடலை' என்று பழிக்கும் மணிவாசகரே, கோயில் திருப்பதிகத்திலும், இன்னும் பல இடங்களிலும், “இறைவன் என் உடலில் இடம் கொண்டதற்கு எப்படி நன்றி செலுத்தப்போகின்றேன்!என்ற பொருளில் இறைவனே! நீ என் உடலிடம் கொண்டாய்! இனியுன்னை என் இரக்கேனே!என்றும் எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!என்றும் பாடியுள்ளார். இதில் எதை நாம் சரி என்று ஏற்றுக்கொள்வது என்ற மயக்கத்துக்கு இப்போது விடை காண்போம்.

அமுதமும் மலமும்

உயிர், இவ்வுடலில் வாழ, நீர், உணவு, காற்று ஆகியன, தவிர்க்க முடியாதவை என்ற வகையில் அவை உடலுக்கு அமுதாகின்றன. உடல் உட்கொள்ளும் அமுத நீர், தன் வேலை முடிந்து, எஞ்சிய கழிவுகளுடன் மூத்திரப் பையில் சேரும்போது, நஞ்சு (மலம்) ஆகின்றது; உடல் உட்கொள்ளும் அமுதமான உணவு, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுத்துவிட்டு, எஞ்சியது மலம் ஆகின்றது. உடல் சுவாசிக்கும் அமுதமான உயிர்க் காற்று, தன் பணி முடிந்து கரியமிலவாயுவாகும்போது நஞ்சு(மலம்) ஆகின்றது. அமுதமாகும் பொருட்களின் பணி முடிந்தது எஞ்சிய பகுதிகள், மலமாகின்றன, நஞ்சாகின்றன; மலமான அவை உடலை விட்டு வெளியேறாவிட்டால், உடலையே அழிக்கும் நஞ்சாகிவிடுகின்றன.

உடல் எப்போது ஆலயமாகும்?

அதேபோல், உயிருக்கு, மரணமில்லாப் பேரின்பம் பெற உதவும் கருவியாக உடல் செயலாற்றும்போது, மறைப்பு சக்தியால் உயிருக்குத் தெரியாமலேயே இறைவன் அவ்வுடலில் வாழ்ந்து உயிருக்கு வழிகாட்டுகிறான்; இங்கு, 'ஊனுடம்பு ஆலயம்' என்ற நிலைப்பாடு எடுக்கின்றார் மணிவாசகர்.

உடல் எப்போது அழிய வேண்டும்?

பக்குமடைந்த உயிர், உடலை விட்டு நீங்கி, இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் எய்துகிறது. உயிர் பக்குவமடைந்தும், உடலுடன் வாழ்ந்தால், புலன் மயக்கங்களில் உயிரை ஆழ்த்தி, மீண்டும் பிறவி என்னும் படுகுழியில் வீழ்த்தும் மலமாகிறது; உயிர் இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறத் தடையாகிறது உடல்; துன்பம்தரும் (செடி-சேர்) உடலாகிறது. செடி-சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு?”, என்ற கேள்வியை பக்குவ நிலையில் கேட்கிறார் மணிவாசகர். (எரிப்பதற்காக விறகின் மேல் வைக்கப்பட்ட பிணத்தைச் 'சிதை' என்பர்; 'சிதைக்குத் தீ வைத்தல்')

ஒறுத்தால்கூடப் போதுமே!

என்னை உடையாய்! நீ என்னைக் கூவியழைத்துப் பணியாளாக வைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை! சினம்கொண்டு, உன் திருவடிகளால் எனக்குத் தண்டனையாவது தா! அதுவே எனக்குப் போதும்!என்னும் கடைசி வரி, உள்ளத்தை உருக்கிக் குழைக்கும் மணிவாசகம்!

'ஆயுள் பதினாறு' என்ற விதி முடிந்ததால், சிவபெருமானின் திருவடிகளைச் சரணடைந்திருந்த மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசி, சிவபெருமானின் திருவடிகளால் உதைபட்டு வீழ்ந்தான் காலன். 'சிவபெருமானின் எதிரிலேயே வந்து, சிவபூசையில் ஈடுபட்டிருந்த மார்க்கண்டேயரின் உயிரை எடுக்கமுயன்று, இறைவனின் தாமரை மலர்த் திருவடிகளால் தண்டனை பெற்ற, கூற்றுவனின் கொள்கையைப் போன்றது என் கொள்கை' என்னும்,

ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்

கூற்றம் அன்னது ஓர் கொள்கை,

என் கொள்கையே!

(திருவாசகம்:5.5.3-4)

மணிவாசகமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடமைக்குப் பரிசு!

தன் தலைவன் சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்புக்கு எதிரானது என்று தெரிந்தும், கடமையைச் செய்யத் துணிந்தான் காலன். உதைபட்டாலும், சிவபெருமானின் திருவடிகளால் தீண்டப்பட்டதால், மார்க்கண்டேயருடன், காலனும் நிலைத்த வீடுபேறு பெற்றான். அனைத்து தேவர்களிலும் உயர்ந்தவர்களான, நான்முகன் மேலும்மேலும் உயரச் சென்றும், திருமால் ஏழுலகுக்குக் கீழ் சென்றும், அறிய முடியாத இறைவனின் திருவடிகளை, சிவ வழிபாடு செய்த பாலன் மார்க்கண்டேயனிடம் சென்று, பாசக்கயிற்றை வீசிய காலன் எளிதில் அறிந்தான்என்று வியக்கிறார் நாவுக்கரசர் பெருமான்.

மேலும் அறிந்திலன்!,

நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து

மாலும் அறிந்திலன்! மால் உற்றதே;

வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று,

பாசம் விசிறி, மறிந்து சிந்தைக்

காலன் அறிந்தான்!,

அறிதற்கு அரியான் கழல்அடியே!

(தமிழ் மறை: அப்பர்: தனி விருத்தம்)

இறைவன் திருவடிகளால் பெற்ற உதைகடுந்தண்டனையாக நமக்குத்தோன்றினாலும், எமனுக்கு இன்பமயமான திருவடிப் பேறானதால், “காலன் அறிந்தான், அரிதற்கு அரியான் கழலடியே!!என்கின்றார் அப்பர் பெருமான்.

கிறித்துவ அருட்தந்தையின் திருவாசகக் காதல்!

நம் ஆத்தும விடுதலைக்காக, நம் அனைவரின் கொடுவினைகளாம் சிலுவைகளைத் தன் தோளில் சுமந்து, நமக்கான திருவாசகம் படைத்த மணிவாசகருக்கு நாம் என்றென்றும் நன்றி செலுத்துவோம்! மணிவாசகரிடம் இயேசுபிரானைக் கண்டுகொண்ட அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்கள் திருவாசகத்தில் உருகியதும், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரையெழுதியதும் இயல்பே அல்லவா! உண்மையையும், இறைவனையும் தேடும் அருளாளர்களுக்கு மொழியேது? மதமேது?, சின்னங்கள் ஏது? “ஓர் நாமம்! ஓர் உருவம்! ஒன்றுமிலா ஈசனுக்கு! ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!என்ற திருவாசகம் தெளிவோம்! அன்பில் மலர்வோம்!

தந்தையிடம் உரிமையுடன் வாதாடும் மகனைப்போல, இறைவனிடம் உரிமையுடன் வாதாடி, அருள் வேண்டும் சுவாரசியமான மணிவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம் : 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!

 

பிழை பொறுக்கும் பேரருளாளன்!

தண்டனை பெற்றாவது இறைவனின் நேரடிக் கவனத்தில் இருக்க விண்ணப்பித்த மணிவாசகர், தகுதிபார்க்காமல்  தம்மை அழைத்து ஆட்கொண்ட இறைவனின் கருணை இன்று இல்லாமல் போய்விட்டதோ என்று ஏக்கம் கொண்டு, இறைவனிடம் உறுதியானதொரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

குற்றங்களைக் குணமாகக்கொண்டால் என்ன கெட்டுப்போய்விட்டது?

"ஏழை பங்கா! எம் அரசே! ஒன்றுக்கும் அற்ற நாயான என்னை, அன்று ஆட்கொண்டு உயர்வளித்த  உன்கருணை, இன்று எனக்கு அறவே இல்லாமல் போயே  போய்விட்டதோ? என்னை நீ ஆட்கொண்டும், அழைத்துச்செல்லாமைக்குக் காரணம், நான் செய்த மலையளவு குற்றங்களே என்றால், உனக்கு ஒன்று சொல்கிறேன்! மலைபோன்ற என் குற்றங்களை, நீ, "(உயிர்க்)குணம் அப்படித்தான் இருக்கும்", என்று எண்ணி, மன்னித்தால், என்ன கெட்டுப்போய் விட்டது? உன்னை யார் கேள்வி கேட்பார்கள்? எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையுமுடைய எம்மானே! எனக்கு இரங்கி அருள்வாய்!", என்றார் பெருமான்.

ஒன்றும் போதா நாயேனை! உய்யக் கொண்ட நின் கருணை!

இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!

குன்றே அனைய குற்றங்கள்!, குணமாம் என்றே, நீ கொண்டால்!,

என் தான் கெட்டது? இரங்கிடாய்!; எண்தோள், முக்கண், எம்மானே!    (திருவாசகம்:33-3)

ஆட்கொண்டவுடனேயே கொடுவினைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதுதானே இறைத்தன்மை! வினைகளே இல்லாத நிலையில், முன்வினைப்பயனால் மணிவாசகர் பெற்றஉடல் வீழ்ந்திருக்கவேண்டும்; அப்படி வீழாமல், சாமர்த்தியமாக, மணிவாசகரின் உடலைத் தன் அருள் என்னும் ஆதாரம்கொண்டு, இவ்வுலகில் நிறுத்தினான் இறைவன்! இது திருவாசகம் தருவதற்காக இறைவன் செய்த திருவிளையாடல்.

உய்யக்கொண்ட கருணை எங்கே?

இதையறியாத குற்றமற்ற மணிவாசகர், "தகுதிஏதும் அற்றவனான, எதற்கும் பயன்படாத நாயேனை, நீ ஆட்கொண்டதற்கு ஒரே காரணம், என்னிடம் நீ கொண்ட கருணை மட்டுமே! அக்கருணை, இப்போது இல்லாமல் போனது எவ்வாறு?", என்று மறுகினார்.

கருணைப்பெருங்கடலில் கரையும் மலையளவு குற்றங்கள்!

இறைவனிடமிருந்து விடையேதும் கிடைக்காததால், ஆட்கொண்டபின், பெற்ற கருணையை இழக்கும்வகையில், பலபுதிய குற்றங்களைத் தாம் செய்துவிட்டதாக ஒரு விடை கற்பித்துக்கொண்டு, "ஐயா! உன் கருணைப் பெருங்கடலில் நான் செய்த மலையளவு குற்றங்களும் கரைந்துவிடுமல்லவா? எனவே, என் குன்றே அணையக் குற்றங்களை, நீ, "உயிர்க்குணம் அப்படித்தான் இருக்கும்", என்றுகொண்டு மன்னித்து அருள்வதால், எந்தக் குறைவும் வரப்போவதில்லை! என்னை உடையவனான நீயே எனக்காக இரக்கப்பட்டு இதைச் செய்வாய்!", என்றார் பெருமான்.

 

'குன்றே அனைய குற்றங்கள், குணமாம் என்றே நீ கொண்டால், என்தான் கெட்டது?', அட! விரக்தி நிலையிலிருந்து மீண்டுவர, இறைவனிடம் மன்றாடுவதற்காகக் கிடைத்த  நமக்கான மணிவாசகம் இதுவல்லவா?

மணிவாசகரின் இத்திருவாசகத்தில் தாம்கலந்து திளைத்த வள்ளலார், தம் இறையனுபவத்தை இரண்டு திருவருட்பாக்களில் அருளியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசையுடன் வள்ளலாருக்கு அணிவித்த சிவமாலை!

 தெருவினில் விளையாடித்திரிந்த சிறுகுழந்தையான தம்மை ஆசையுடன் வலிய அழைத்து, தன்அருள் என்னும் சிவமாலையை தமக்கு அணிவித்து மகிழ்ந்தான் இறைவன் என்கின்றார் வள்ளலார். "என்னிடம் நீ கொண்ட அத்தகைய ஆசையெல்லாம் இன்று உன்னிடம் இல்லாமலே ஓடிவிட்டதோ?", என்று ஆதங்கத்துடன் இறைவனிடம் விண்ணப்பிக்கிறார் பெருமான்.

தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை, வலிந்தே

சிவமாலை அணிந்தனை! அச் சிறுவயதில், இந்த

உருவிடத்தே நினக்கிருந்த ஆசை எலாம், இந்நாள்

ஓடியதோ? .....                  (திருவருட்பா: 3808:1-4)

 

வள்ளலாரின் திருவருட்பா,  இங்குதரப்பட்ட திருவாசகப் பாடலின்  முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட இறையனுபவமாகும்.

குற்றம் குணமாகக்கொண்டு அருட்பெருஞ்சோதி அருள்க!

இறைவன் தன் அடியவரின் குற்றங்களைக் குணமாகவே கொண்டு அருளுவான் என்று தெளிந்த வள்ளல்பெருமான், ஆறாம் திருமுறைத் திருவருட்பா பாடல் ஒன்றில், "எனக்கு இயல்பு குற்றம் புரிதல்! அதைக் உயிர்க்குணமாகக்கொண்டு, பொறுத்தருளுதல் உனக்கு இயல்பு! சிற்றம்பலத்தாடும் பெருமானே! இச்சிறியேன் உன் பேரருள் குறித்துச்சொல்லும் வாழ்த்து எதுவும் உண்டோ? சட்டென்று அடியேனுடைய சிந்தனையைத் தெளிவித்து, அச்சம், துயர் ஆகியன தீர்த்து, இப்பொழுதே அருட்பெருஞ்சோதி நீ எனக்குத் தருவதற்கான சரியான சமயம் இதுவேயாகும்", என்று இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்.

குற்றம் புரிதல் எனக்கியல்பே! குணமாக் கொள்ளல் உனக்கியல்பே!

சிற்றம்பலவா! இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாது உளது?

தெற்றென்று, அடியேன் சிந்தைதனைத் தெளிவித்து! அச்சம் துயர்தீர்த்தே!

இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே! (திருவருட்பா: 5350)

 

வள்ளல் பெருமானின் இத்திருவருட்பா, இங்கு விளக்கப்பட்ட திருவாசகப்பாடலில், மணிவாசகப்பெருமான் இறைவனிடம் வைத்த கேள்விக்குப் பதிலாகவே அமைந்துவிட்டது! என்னே இறைவனின் கருணை!

குற்றங்களைக் குணமாய்க்கருதும் இறைவனின் கொள்கை!

இறைவன் தன் அடியவர்கள் குற்றம் செய்யினும், உயிர்க்குணம் எனக்கருதி மன்னிக்கும் கொள்கையுடையோன் என்பதால் அவன் திருவடிகளைச் சரணடைந்ததாகப் பாடுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். "பொன்திரள் போன்ற அழகிய தாமரைமலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! 'நல்லதமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தன், நாவுக்கரையன், நாளைப்போவான், சூதாடுதலை நன்குகற்ற மூர்க்கன், நல்ல சாக்கியன், சிலந்தி(கோட்செங்கட்சோழ நாயனார்), கண்ணப்பன், கணம்புல்லன்' என்ற இவர்கள் செய்த குற்றமான செயல்களைக் குணமானவே கருதும் உன் கருணைத் திருவுள்ளத்தின் கொள்கைகண்ட அடியேன், உனக்கே மீளாஅடிமையாய், நின் ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைச் சரணடைந்தேன்! என்னை ஏற்றுக் கொண்டருள்க!", என்றார் சுந்தரர்.

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்! நாவினுக்கு அரையன்! நாளைப்போவானும்!

கற்றசூதன்! நற்சாக்கியன்! சிலந்தி! கண்ணப்பன்! கணம்புல்லன்! என்று இவர்கள்

குற்றம் செய்யினும்! குணம் எனக்கருதும் கொள்கைகண்டு! நின் குரைகழல் அடைந்தேன்!

பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே!         (திருமறை:சுந்தரர்:55.4)

 

சுந்தரர் குறிப்பிட்ட அருளாளர்களான நாயன்மார்கள், (உலகவர் பார்வையில்) செய்த குற்றங்கள்: திருஞானசம்பந்தர்: (சம்பந்தரின் அனைத்துப் பாடல்களுக்கும் பண் அமைத்துப் பெருமைசேர்த்த) திருநீலகண்ட யாழ்ப்பாணர், பண் அமைக்க இயலாதவாறு யாழ்முறிப்பாடல் ஒன்று பாடியது;

நாவுக்கரசர்: இறைக்கொள்கையில்லாச் சமணசமயம் ஏற்று இறைவன் திருவருளை இகழ்ந்தது;

நாளைப்போவார்: இறைவன் உறையும் தன்னுடலையே இழிவாகக் கருதியது;

மூர்க்க நாயனார்: சூதாடியது; சாக்கியநாயனார்: இலிங்கத் திருமேனியைக் கல்லால் எறிந்தது;

(கோச்செங்கண்சோழன்) சிலந்தி(யாகஇருந்போது) செய்தது: வாய்நூலால் இலிங்கத்தின் மேல் வலைவேய்ந்தது;

கண்ணப்பர்: செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும், வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும், எச்சில்பட்ட இறைச்சியைப் படைத்ததும் ஆகியன;

கணம்புல்லர்: திருக்கோயிலில் தம் தலைமயிலை விளக்கென்று எரித்தது.

உலகவர் பார்வையில் இவை குற்றங்கள்; இவ்வருளாளர்கள், தூயமனதுடன், அருள்வழியாலும்,  அன்பாலுமே இவற்றைச் செய்தார்கள் என்பதை உலகவர் அறிய மாட்டார்கள்! திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பெருமையை உலகோர் அறியச்-செய்வதற்காகவே யாழ்முறிப்பாடல் பாடினார் ஞான-சம்பந்தர் என்பதை இறைவன் மட்டுமே அறிந்து, அருள்செய்தான் என்றறிந்து, திருவடிகளை வந்தடை-ந்ததாகக் குறிப்பிட்டார் சுந்தரர். எனவே, சுந்தரர், தன் காதலுக்காக, இறைவனைப் பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டியதைக் குற்றமாகக் கொள்ளமாட்டான் என்பது இப்பாடலின் உட்பொருள்.

வினைத்தொகுதியிலிருந்து விடுதலைபெற...

மனிதர்களின் குற்றங்களே குன்றளவு வினைத்தொகுதிகளாக நிற்கின்றன. வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று இக்குற்ற வினைத்தொகுதிகள் வளருமே அன்றி, மனிதர் எவரும் தன்முயற்சியால் தீர்க்கக்கூடியதன்று. மனமுருகவேண்டி, இறைவனின் திருவடிப்பேறு பெறும்போதுதான் வினைத்தொகுதியிலிருந்து முழுவிடுதலையை உயிர் பெறுகின்றது.

 

"இறைவா! உன் பெருமையனைத்தும்  மறக்கச்செய்து ஊனுடம்பில் என்னைப் புகுத்திவிட்டாயே! உன்னைக் காணாது திகைத்து நின்கும் என்னைத்தேற்றி, அழைத்துச் செல்வாய்!" என்று வேண்டும் தேன்வாசககங்களை அடுத்தவாரம் சுவைப்போம்.

   

வான்கலந்த மாணிக்கவாசகம் : 33: உன் சீர் புகழ்பாடி இன்புற்றிருப்பேன்

 

பதவி, பணம், பெரும் செல்வாக்கு, புகழ் ஆகியவற்றுடன் பவனிவந்த பாண்டியப் பேரரசின் முதலமைச்சரான திருவாதவூராரைக் கூவிய-ழைத்துத் திருவடிப்பேறு தந்து, மணிவாசக-ராக்கினான் இறைவன். மெய்யடியவர்களுடன் கலந்து, இறையின்பச் சுவையை மனிதவுடலிலேயே பெற்று, இறைவனின் சீர்மையை அறிந்தும், உணர்ந்தும் உயிர் அனுபவம் அடைந்தார் மணிவாசகர்.

 

கல்வி-கேள்விகளில் கரைகண்டு, கவிபாடவும் வல்லமைகொண்ட மணிவாசகரின் திருவாக்கால் இவ்வனுபவத்தைத் திருவாசகத் தேனாக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், தன் சீர்பாடித் திளைத்திருந்த மணிவாசகரை, அச்சீர் மறக்கச் செய்தான்; மனிதவுடலிலேயே மணிவாசகரை இன்னும் சிலநாள் இருக்குமாறு பணித்தான்.

மனிதவுடலில் மீண்டும்

இந்நிகழ்வை, “மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்வூனே புக, என்தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!”, என இறைவனிடமே தம்மை இவ்வுலகில் அலையச் செய்ததை முறையிடுகிறார்.

தாங்க முடியாத இத்துயரை எனக்கு ஏன் தந்தாய் என்று உன்னைக் கேட்கமாட்டேன்! ஏன் தெரியுமா? உன் திருவடிப்பேறு பெறும் தகுதியோ அறிவோ உழைப்போ என்னிடம் இல்லை என்பது எனக்கே தெரியுமே! எதற்கும் உதவாத என்னை உன் பேரருளாலும், பெருங்கருணையாலும் உய்யக்கொண்டாய்; சிறிது காலம் உன் திருவடிப் பேறு அருளி, இறையின்ப விடுதலை நல்கினாய்! அதுவே, என் தகுதிக்கு மிகமிக அதிகம்! இப்போது, நீ என்னை, மனிதவுடலில் கிடந்து உழலுமாறு செய்தது, முற்றிலும் சரியானதே!”, என்றார் மணிவாசகர்.

உன் சீர்பாடும் நாள் எப்போது வரும்?

மீண்டும், இறைவனை நோக்கி, “என் தலைவனே! நான் தகுதியற்றவனே ஆனாலும், பெருமானே! முன்பு செய்ததுபோல, அடியேனுடைய அறியாமையை அறிந்து, மன்னித்து, நீயே அருள்செய்து, மறுபடியும் என்னைக் கூவியழைத்துப் பணிகொள்ளும் நாள் எப்போது என்று கூறுவாய்! அந்நாளை எண்ணி, உன் திருவடிகளைச் சிந்தித்து, உன் சீர்புகழ்பாடி இன்புற்றிருப்பேன்”, என்று அகம்குழைந்து வேண்டும் நமக்கான திருவாசகம்:

மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்

ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!;

ஆனால், அடி யேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,

கோனே! கூவிக்கொள் ளும் நாள் என்று? என்று? உன்னைக் கூறுவதே! (திருவாசகம்:33-4)

 

இறைவன் திருவடிகளில் அவன் சீர்பாடும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எண்ணி ஏங்குகின்றார் மணிவாசகர். இத்திருவாசகத்தை ஒத்த அப்பர் பெரு-மானின் தனிப்பாடலொன்று இங்கு குறிப்பிடத்-தகுந்தது.

உன்னை மறந்தும், உனக்கு நான் இனியனாய்...

"இறையவனே வாழ்க! உன்னை எப்போதும் நினைத்திருக்க என்னை நீ விடுவதில்லை! உறுதி-கொண்டு உன்னையே எண்ணுவதற்கு நான் முயற்சித்தால், அப்போதே அவ்வெண்ணத்தை மறக்கச் செய்து, வேறொரு பொருளில் என் மனம் ஈடுபடுமாறு செய்கிறாய்! எப்போதாவதுதான் உன்னை நினைக்கிறேன்; இருந்தாலும், இனியவனாய், பல துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்கிறாய்! உன்னையே மறந்துவிட்டு, உனது அன்பினைப் பெறுகின்ற என்னைப்போல் எவரேனும் இருக்கின்றனரா என்பதை எனக்குச் சொல்வாய்!", என்றார் அப்பர்.

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய்!, நீ; நினையப் புகில்,

பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;

உன்னை எப்போதும் மறந்திட்டு, உனக்கு இனிதா இருக்கும்

என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே! (தமிழ்மறை: 4.112.4)

 

இறைவனைத் தொடர்ந்து நினைக்காத குறையைப் பொருட்படுத்தாமல் அருள்பவன் இறைவன் என்கிறார் அப்பரடிகள். தன்னைத் தவிர, இறைவனின் அருளைப் பெறும் அனைவரும், இறைவனையே தொடர்ந்து நினைப்பதாகக் கூறுகிறார் அப்பர்பிரான்.

தீமை, நன்மை முழுவதும் இறைவனே!

பேசுகிற நாவாகவும், நினைக்கிற மனமாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறார் மணிவாசகர் இறைவா!, பேசுகிற நாக்கு முதல், அந்நாவுக்குக் கட்டளைகூறும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட அகக் கருவிகள் அனைத்தும் நீயே! நினைக்கும் மனத்துக்குத் தெளிவும், திகைப்பும் தருபவனும் நீயே! மனதின் தெளிவால் விளையும் நன்மையாகவும், திகைப்பால் வரும் தீமையாகவும் இருப்பவனும் நீயே!என்று கூறும் பெருமான், உண்மை இறைவனைப் பற்றி விரிவாகச் சொன்-னால், அவனையன்றி வேறாய் நிற்கும் பொருள் எதுவுமில்லை என்கிறார். சிவலோகநாதனே! உன்-னையன்றி, தெளிவடையும் வழி எனக்கு ஏது-மில்லை! நான் திகைப்படைந்து கலங்கினால், என்னை நீ தேற்றித் தெளிவிக்க வேண்டாவோ?” என்று கசிந்துருகிக் கேட்கும் மணிவாசகரின் திருவாசகம் இதுதான்:

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!

தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!

வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,

தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ? (திருவாசகம்: 33-5)

 

நம் பேச்சு, செயல் யாவும் இறைவன் தந்தது. நாம் ஒன்றை அறிவதும், அறியாமலிருப்பதும் (தேறும்-வகை/திகைப்பு) அவனருளாலே நிகழ்வது. தீமை, நன்மை என்று நாம் ஏது செய்தாலும் இறைவ-னையே சென்றடையும்.

இறைவனுக்கு மேலாக, வேறாக எப்பொருளும் இல்லை!

மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, முழுவதும் விரித்துச் சொன்னால் இறைவனைவிட மேலான, இறைவனுக்கு வேறாய் நிற்கும் தன்மை உள்ள பரிசுப்பொருள் என்று இங்கு எதுவும் இல்லை (மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை) என்றார் பெருமான்.

அத்தகைய மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, எங்ஙனம் விரித்துச் சொல்ல? (தேறும் வகை என்?) அதைச் சொல்லும் வழிதெரியாமல் மணிவாசகர் திகைக்கிறார். இறைவனே எல்லாமாய் நிற்கும் தன்மையை எடுத்துக்கூறி, தம் திகைப்பை, மயக்கத்தை நீக்கித் தெளிவு தருமாறு வேண்டுகிறார் மணிவாசகர்.

நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போகும்!

இறைவன் அனைத்து உயிர்களுக்குமான பல்வகை உடல்களைப் படைத்து, அனைத்து உயிர்களின் உள் உறைந்தும் இருக்கிறார். எனவே, நாம் சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போய்ச் சேருகின்றன. இதை அறிந்துகொண்டால் மனிதர்கள் எவ்விதத் தீமையையும் செய்யத் துணிய மாட்டார்கள்!

பித்தனைப் போலேகைப்பிரம்பாலே பட்ட அடி!

வந்தியின் கூலியாளாய், பித்தனைப் போல் பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் முதுகில், பாண்டிய மன்னன் கைப்பிரம்பாலே பட்ட அடி, மன்னன், மணிவாசகர் உள்ளிட்ட மக்களனைவரின் முதுகிலும் விழுந்த-தைக் கண்ட பட்டறிவால் மணிவாசகர் இதைச் சொல்கிறார். இறைவன் எங்கும் நிறைந்துள்ளதால் இது நிகழ்ந்தது. இன்றைய உலகில் இறைவனின் திருப்பெயரால் சிலர் நிகழ்த்தும் கொடுஞ்செயல்-களை முக்காலமும் உணர்ந்த மணிவாசகர் கண்டுகொண்டே, அற்புதமான இத்திருவாசகத்தை நமக்கு அருளியுள்ளார். பேச வாயும், செயலாற்றக் கை,கால்களையும், வழிநடத்த அறிவையும் தந்த இறைவனே, அறிவு எழுப்பும் குழப்பங்களையும் நீக்கியருள வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்!

முரண்பாடுகளில் முழுமுதற் கடவுளைக் காணும் நுட்பம்!

மணிவாசகப் பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று, முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் கண்டுகொள்வது எப்படி என்னும் நுட்பமே! திருவாசகமெங்கும் இந்த நுட்பம் திகழக் காணலாம்.

இறைவனுக்கு எதிரானதீய சக்தியின் இருப்பு

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன்என்ற உண்மைக்கு முரண்பாடாக, அத்தகைய கருதுகோள் அமைந்துவிடும் அபாயத்தை மிக எளிதாகக் கடக்கவும், முழு முதற்கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் திருவாசகம் நமக்கு உதவுகிறது.

முரண்பாடுகளில் முழுமுதலாம் இறைவனைக் கண்டுகொள்வதும், களிப்பதும் சைவ அருளாளர்-களின் இறைவழிபாட்டில் நாம் காணும் தனிச்சிறப்பு! தமிழ் மறைகள் நெடுகிலும் இதைக் காணலாம், நாம் முரண்களாகக் கருதும் பொய்/மெய், குற்றம்/குணம், நன்மை/தீமை, பகை/நட்பு ஆகியன இறைவனைப் பொறுத்தமட்டில், ஒன்றையே சுட்டுகின்றன என்பதே மணிவாசகரின் பட்டறிவால் விளைந்த திருவாசகம் தரும் செய்தி! இச்செய்தியைக் கூறும் மற்ற தேன்-வாசக விளக்கங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம் : 34: தோன்றாப் பெருமையன் இறைவன்

 

 முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் காணும் நுட்பம்-மணிவாசகப்பெருமான் நமக்குத் தந்த பெருங்-கொடைகளுள் ஒன்று! இதைப் பாடும் திருவா-சகங்கள், தமிழர்களின் தத்துவ மரபின் செறிவை உலகுக்குப் பறைசாற்றும் சான்றாவணங்கள்!

ஒளியும் இருளும் இறைவனே!

நாமறிந்த ஒளியும் இருளும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை; ஒளி தோன்றினால் இருள் விலகும்; ஒளி மறைந்தால் இருள் சூழும். ஆனால், “சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!என, இறைவனே ஒளிமயமாகவும், செறிந்த இருளாகவும் இருக்கிறான் என்கின்றார் மணிவாசகர்.

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் சூரியன், சந்திரன் உள்ளிட்ட, சுடர்வீசி ஒளிரும் பொருளனைத்தும் இறைவன் எனும் திருவுருவின் விளக்கமே. அக இருளை (ஆணவம்) நீக்கும் அறிவொளியான இறைவனை சோதியனேஎன்றழைப்பது பொருத்-தமே. ஆனால், ‘துன்னிருளேஎன்றழைப்பது ஏன் என்று நாம் திகைக்கிறோம்; மணிவாசகர் நம்மைத் தேற்றுகிறார்.

 

உயிரைப் பிடித்த அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்கவே, மாயையை இயக்கி, உடல்பிறவிகள் தந்தான் இறைவன்; பல்வேறு பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளால் தொடர்ந்து பிறவிகள் வருகின்றன.

மறைத்து அருளும் இறைவன்

மனிதன் செய்த முன்வினைகளிலிருந்து ஒரு பகுதியை அனுபவித்துத் தீர்க்க விதிக்கப்பட்டு, பிறவிக்கு வருகிறான். இவ்விதியையும், இன்னும் பலப்பல பிறவிகளுக்காகக் காத்திருக்கும் மீதமுள்ள பழைய வினைகளையும், மனிதன் அறிந்தால், அவனால் கவலையின்றிச் சுதந்திரமாக இப்பிறவியில் வேலை செய்ய முடியாது. எனவே, இவற்றை மனிதனிடமிருந்து மறைத்து அருளுகிறான் இறைவன். இறைவனின் இச்சக்தி மறைப்பாற்றல் (திரோதானம்)எனப்படும். மறைத்தல்இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று.

எங்கெல்லாம் அறிவொளி இல்லையோ, அங்கெல்-லாம், அறியாமை இருள் சூழ்கிறது. மனிதனின் அறிவை மறைக்கும், அக இருளாம் ஆணவத்தால், இறைவனை மறைக்க முடியாது; ஏனெனில், இறைவன் எங்குமிருப்பவன்; ஆணவத்துக்குள்ளும் இருப்பவன்.

மனிதனின் அறியாமை இருளைப் போக்க, ஒளிமயமான (சோதியனான) இறைவனே, துன்னிருளாகி (இருளுக்கும் இருளாகி), தன்னுடன் வாழ்வதை மனிதன் அறிவதில்லை; கருணையுடன் துன்பத்தில் பங்கெடுத்து, மனிதனுடன் வாழ்கிறான் இறைவன். எனவேதான் சோதியனே! துன்னிருளே!என்கிறார் பெருமான்.

இருளும் அறிய முடியாத நுட்பமான இருளாக மறைந்திருப்பதால், இறைவனை துன்னிருளேஎன்றார் மணிவாசகர். வெளிப்பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றுவதே, உற்றுநோக்கினால் முழுமையாகத் தெரியும். சரிதானே?

முரண்பாடுகளில் முழுமை கண்ட ஞானக்குழந்தை

மதுரை சொக்கநாதப்பெருமானைப் பாடும், முரண்-பாடுகளில் முழுமை தரிசித்த திருஞானசம்பந்தரின் பாடல் இது.

குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!

சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!

கற்றநூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை

முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே! (திருமறை:3:52:3)

அனைவரும் செய்கின்ற குற்றங்களாகவும், நல்ல குணமாகவும் இருப்பது நீயே! எம் அன்புத்-தலைவனும், தொடர்ந்து ஒளிரும் ஜோதியும் நீயே! படித்த நூல்களும், நூல்தரும் கருத்துகள், பொருள், இன்பம் அனைத்தும் நீயே! முன்னிருந்து இப்படிப் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்படும் எங்கள் இறைவனே! சர்வமும் நீயே!என்றார் ஞானக்-குழந்தை சம்பந்தர்.

முரண்பாடுகளில் முழுமை காணும் பாடலாசிரியர் வைரமுத்துவின் ஓர் அற்புதமான தாய்மைக் கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்’). ‘சோதியனே! துன்னிருளே!என்னும் இவ்வான்கலந்த மாணிக்கவாசகம் கவிப்பேரரசின் சிந்தையிலும் கலந்து வைரவரிகளாக மாறியது. தாய்மை உணர்வின் நிபந்தனையற்ற எல்லை கடந்த அன்பு, முரண்பாடுகளை வென்று முழுமையடைந்து, மானுடமும் முழுமை இறைமையும் சங்கமிக்கும் காவியத்தை, கவிப்பேரரசின் சொல்லோவியத்தில் காணுங்கள்.

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

...

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் ஈன்ற ஜனனம் நீ! . . .

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!

இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!. . .

என்கிறார் வைரமுத்து.

நமக்கெல்லாம் தாயாகிய இறைவன், நம் ஒவ்வொருவரின் பின்னும் புறம் புறம் திரிந்து, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, அன்பைப் பொழிகிறான். நாமோ, அவனுக்குப் பகையாகவும், முள்ளாகவும், இடியாகவும், எழுத்துப்பிழையாகவும் மாறித் துன்பம் தருகிறோம். தாயான இறைவன், நம் பிழைகளை மன்னித்து, நம் குற்றங்களைக் குணமாகக் கொண்டு, அருள்கிறான். முரண்-பாடுகளில் முழுமையைக் காணும் இக்கவிதையில், இறைமையும் மானுடமும் சங்கமிக்கின்றன.

மெய்ம்மையும்! பொய்ம்மையும்!

பொற்சுண்ணம் இருபதாவது பாடலில், முரண்பாடு-களை இறைவனின் வடிவமாகப் போற்றிப் பாடுகிறார் மணிவாசகர். வேதமும் வேள்வியும் ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், ஒளியும் இருளும் ஆனவரும், துன்பமும் இன்பமும் ஆனவரும், பாதியும் முழுதும் ஆனவரும், உயிர்களுக்குப் பந்தமுமாகவும் வீடுபேறாகவும் ஆனவரும், அனைத்துலகுக்கும் முதலும் முடிவும் ஆனவருமான இறைவனை நீராட்டுவதற்குப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்என்கிறார் பெருமான்.

 

வேதமும்! வேள்வியும்! ஆயினார்க்கு! மெய்ம்மையும்! பொய்ம்மையும்! ஆயினார்க்குச்

சோதியுமாய்! இருள்! ஆயினார்க்குத் துன்பமுமாய்! இன்பம்! ஆயினார்க்குப்

பாதியுமாய்! முற்றும்! ஆயினார்க்குப் பந்தமுமாய்! வீடும்! ஆயினாருக்கு!

ஆதியும்! அந்தமும்! ஆயினாருக்கு! ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே! (திருவாசகம்: பொற்சுண்ணம்.20)

 

முரண்பாடுகளில் முழுமையான இறைவனைக் காட்டும் மேற்கண்ட திருவாசகத்தை இப்போது மீள் வாசிப்பு செய்யலாம். வேதமும்என்பதற்கு வேதமுடிவு உணர்த்தும் ஞானமும் என்றும், ‘வேள்வியும்என்பதற்கு வினைகளைப் பெருக்கும் கருமகாண்ட வேள்விகள் என்றும் பொருள். கருமம் செய்வதால் உண்டாகும் வினைப்பயன்களைத் துய்த்த பிறகு, வேதமுடிவு உணர்த்தும் ஞானமாக இறைவனை உயிர்கள் உணர்கின்றன.

மெய்ம்மைஎன்னும் நிலைத்த பொருளான இறைவனே, ‘பொய்ம்மைஎன்னும் நிலையாத பொருளுக்கு உள்ளும் இருக்கிறான்; உடலில் உயிர்போல, நிலையாப்பொருள் உள்ளிட்ட எல்லாப் பொருட்களிலும் நீக்கமறக் கலந்து நிற்பதால், இறைவனே நிலையாப்பொருளும் ஆகிறான்.

சோதி (ஞானம்), இறைவனது இயற்கை தன்மை; இருள் என்னும் அஞ்ஞானத்திலும் (ஆணவம்), மறைப்பாற்றலாய் நிற்பதால், இறைவனே இருளும் ஆகிறான். இயல்பில் பேரின்ப வடிவானவன் இறைவன்; இறைவன் செய்யும் மறைத்தல் தொழிலால் பிறவித் துன்பம் வருவதால், இறைவன் துன்பமாகிறான்.

புறநானூறு காட்டும் இறைவனின் தொன்மைக்கோலம்!

ஒரு பாதியில் இறைவனும், மறுபாதியில் அம்மை-யுமாய், அம்மையப்பன்வடிவில் நிற்கும் நிலை-யையும், இரண்டும் ஒன்றுபட்டு, முழுமையான சிவப்பரம்பொருளாகும் நிலையையும் பாடுகிறார் மணிவாசகர். இதே கருத்தை, புறநானூறு இறைவாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார்

பெண்உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறநானூறு: இறைவாழ்த்து)

 

என்று பதிவு செய்துள்ளார். ஒருபாதி எம்பிராட்டியும் மறு பாதி எம்பெருமானுமாக, ஒரே வேளையில், ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் அம்மையப்பன் திருக்கோலம் மிகத் தொன்மையானது. சக்தியைத் தமக்குள்ளாக்கிச் சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலத்தில், சிவம் மட்டுமே தோன்றும்.

சிவத்தில் தோன்றும்! அடங்கும் சிவத்துள்!

தோற்றுவிக்கும் முறையில், சிவத்திலிருந்து சக்தியும், சக்தியிடத்திலிருந்து மற்ற தத்துவங்களெல்லாம் தோன்றும். ஒடுங்கும் முறையில், தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறுதியில் யாவும் சக்தியுள் அடங்கி, அப்பால் அச்சக்தியும் சிவத்துள் அடங்கும், ‘ஒடுங்கும்முறையை இப்புறநானூறு இரண்டாவது வரி சொல்கிறது.

ஆணவ மலத்தின் கட்டிலிருந்து உயிரை விடுவிக்க, தனது மறைப்புச் சக்தியால் உடல்பிறவிப் பந்தத்துள் உயிர்களைச் செலுத்தி, உயிரின் அறிவைத் தொழிற்படுத்தும் இறைவனே, பேரின்பப் பிறவா நிலையான வீடுபேறும் ஆவான். அத்தகைய இறைவனிடம் நாம் எப்பொருட்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம்  : 35: அன்பினில் விளைந்த ஆரமுதே

 உடலும் மனமும் நலம் பெற யோகா செய்யுங்கள்என்ற சர்வதேச யோகா தினச் செய்தியைக் கண்டதும், ‘நலவாழ்வின் பயன்தான் என்ன?’, என்று கேட்டது மனம். நலமாக வாழ்வதே பயன்தானேஎன்று பதில் கிடைத்தது. வாழ்வின் பயன்தான் என்ன?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டது மனம். வாழ்வு என்றால், கற்பது, கற்றதைப் போல் நின்று வாழப் பயிற்சி பெறுவது, அதன்வழி தொடர்பயணம் செய்வதுமாகும்; வாழ்வின் பயன், உயிர் நலம் பெற்றுத் திருவடிப்பேறு (முழு விடுதலை) அடைவதுமாகும்.

பெற்ற பிள்ளைகள் செய்த தவறுகளைப் பெற்றவர்-கள் மன்னிப்பார்கள். நம் எல்லோருக்கும் தாய் தந்தையான அம்மையப்பனோ, தன்னை நினைத்துக்-கூடப் பார்க்காத மனிதர்களின் தவறுகளையும் மன்-னித்து, எதையும் எதிர்பாராமல், தேவைப்படும் அனைத்தையும் தருகிறான். கருணையே வடிவான இறைவனுக்கு ஒப்பு யாருமில்லை என்பதை அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!என்கிறார் மணிவாசகர்.

அமுதினும் உயர்ந்த ஆரமுது

பாற்கடல் அமுதம் உண்டு பெற்ற நீண்ட ஆயுளும் ஒருநாள் முடிவுக்கு வந்து, தேவர்களும் மரணமடை-வார்கள்; தேவர்களுக்குப் பாற்கடல் அமுதத்தைத் தந்துவிட்டு, கொடிய நஞ்சைத் தானுண்ட சிவபெ-ருமானோ சாவா மூவா இறைவன்; என்றென்றும் இருந்து பேரின்பம் அருள்பவன் என்கிறது சிலப்பதிகாரம்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்.

(சிலப்பதிகாரம் : வேட்டுவவரி).

 

தன் திருவடிகளை வந்தடைந்த அடியவர்களுக்குப் பாற்கடல் அமுதினும் உயர்ந்த, அன்பினில் விளைந்த, அரிய அமுதாகிய மரணமில்லாப் பேரின்பப் பெருவாழ்வைத் தருகிறான் சிவபெருமான். அன்பினில் விளைந்த ஆரமுதே!என்று இறைவனைப் பாடும் மணிவாசக வரி, இறைவனை அடைந்தால் மரணமில்லாப் பெருவாழ்வும் பேரானந்தமும் பெறலாம் என்ற தெளிவைத் தருகிறது.

முழுமைக் கல்வி

உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவ-தற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது. உலக வாழ்வுக்குக் கைப்பொருள் (பணம்) சம்பாதிக்க வேண்டும்; பிறவிப் பயன் அடைய மெய்ப்பொருள் சம்பாதிக்க வேண்டும். இவ்விரண்-டையும் தருவதே முழுமைக் கல்வியாகும்.

பொய்மையே பெருக்கி . . .

கல்வி என்றாலே பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்றாகிவிட்டது; இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ, குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர் நலத்தைப் பேணுவதற்குப் பணம் அவசியம்தான். அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும், சம்பாதித்ததைப் பொன்னாகவும், சொத்தாகவும், பணமாகவும் சேமித்-துப் பாதுகாக்கவும், பொருட்களைப் பெருக்கவுமே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துவிடு-கிறோம்; அதனால் மெய்ப் பொருளைச் சம்பாதிக்க வேண்டிய காலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்என்று தம் நிலைமையை இறைவனிடம் சொல்லி வருந்துகிறார் மணிவாசகர்.

உடைந்த ஊசியைக்கூட இவ்வுலகத்திலிருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவ-ருக்கும் தெரியும். தெரிந்தும், தேவைக்கும் அதிகமாகப் பணம் சேர்த்து, தேவையுள்ள சகமனி-தர்களுக்கு அவை கிடைக்கவிடாமல் பெரும்பாவம் செய்து, வாழ்நாளையும் வீணடித்து விடுகிறோம். இறுதியில் பிறவிப் பயனை அடையாமலேயே இறக்கிறோம்.

பொய்ப் பொருட்களைப் பெருக்குவதிலேயே வாழ்-நாளைக் கழித்துவிட்டு, இறைவனை அறியும் மெய்-யறிவு பெறுவதற்கான பொழுதைச் சுருக்கி-விடும் செயலானது, தீவினைகள் பெருகி, பிறவி-களில் உழலும் கொடிய நரகத்தில் நம்மைத் தள்ளி விடும்.

மெய்யறிவுக்குப் பயன்படாத புழுத்தலை

மனித உடலில் எப்போதும் இளமையாக இருப்பது மூளைதான். மனித மூளையின் படத்தைப் பார்த்தால், கொழுத்த புழுக்கள் பல, பின்னிக் கிடப்பதுபோல இருக்கும். இறைவனை அறியும் மெய்யறிவுக்குப் பயன்படுத்தப்படாத மூளை இருக்கும் தம் தலையை, பயனற்ற புழுக்களைக் கொண்ட புழுத்தலைஎன்கிறார் மணிவாசகர். பொய்யறிவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அது புழுத்தலையாகிறது. தலையில் என்ன களிமண்ணா இருக்கு?’ என்று தவறுசெய்த மாணவனைக் கடிந்துகொள்ளும் கணித ஆசிரியரைப் போல், வாழ்க்கைப் பாடத்தில் மெய்ப்பொருள் கணக்கை மொத்தமாகத் தொலைத்துவிட்ட நம் எல்லோருக்குமாகச் சேர்த்துத்தான் புழுத்தலைப் புலையனேன் தனக்குஎன்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர்.

சிவபதம் அளிக்கும் செல்வம்

அத்தகைய புழுத்தலைப் புலையனாகக் கீழ்நிலை-யில் இருந்தாலும், அன்பினால் இறைவனைத் தொழுதால், அவன் நமக்கு மாற்றுக் குறையாத அருட்செல்வமாகிய செம்மையான சிவபதம் அருள்-வான்; ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்-வமே! சிவபெருமானே’, என்று இறைவனே உண்மை-யான செல்வம் என்கிறார் மணிவாசகர், “இவ்வுல-கிலேயே உன்னை உறுதியாகச் சிக்கெனப் பற்றிக் கொண்டேன். நீ என்னைவிட்டு இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?” என்றார் இறைவனிடம் உறுதியாக. (இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!‘)

மனிதப் பிறவி என்னும் வாய்ப்பு இருக்கும்போதே, அன்பால் இறைவனைச் சிக்கெனப் பிடித்து, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வழி இது என்று நமக்குச் சொல்லித் தருகிறார்.

இறைவனைச் சிக்கெனப் பிடிப்போம்

நாம் இறைவனையே நினைக்காமல் இதுவரை இருந்துவிட்டாலும், ‘அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!என்று தொடங்கும் இத்திருவாசகத்தைப் பாடினால் சிவபதம் கிடைப்பது உறுதி என்று முழங்குகிறது, ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானேஎன்னும் வரி. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; இப்பிறவியிலேயே அன்பினால் இறைவனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டால், அவன் நம் இதயக்கோயிலிலேயே எழுந்தருளுவான். திருவாசக-த்தின் ஆற்றல் அப்படி!

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!

(திருவாசகம்:பிடித்த பத்து:3)

 

ஆற்றல்மிக்க அன்பால் இறைவனை அழைக்கும் இத்திருவாசகத்தைப்பாடி வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்குவோம்.

 

தன்னை அறிந்தால் சிவனை அறியலாம்

மெய்ப்பொருளை ஈட்டுவது, தன்னை அறிதல், சிவனை அறிதல், சிவனை அடைதல் என்னும் மூன்றுபடிகளில் நிகழும்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே.

(திருமந்திரம் 2355).

 

தன்னை அறிதல் என்பது உடல் அல்ல, மனம் அல்ல. தான் என்பது உயிர் !என்று அறிவதும், எல்லையற்ற கருணைகொண்ட இறைவன் உயிர்களுக்குத் தந்த கருவிகளே இவ்வுலகமும், உடலும், மனமும் என்றும், சிவபதம் அடைவதே வாழ்வின் பயன் என்றும் அறிவதாகும். தன்னை அறியும் அறிவைப் பெற்றவன், தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான் என்கிறது திருமந்திரம். இனி, இறைவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டிய பொருட்கள் எவை என்று கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம்  : 36: ஓருருவாய நின் திருவருள்

 

 மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்கான மெய்யறிவைப் பெறுவதே நம் பிறவி நோக்கம் என்பதை மறந்துவிட்டு, நிலையில்லாத பொய்ப்-பொருளான கைப்பொருளைச் சம்பாதிக்கவே வாழ்நாளை வீணாக்கிவிட்டோம். மீதமிருக்கும் குறைந்த நேரத்தை வீணாக்காமல், இறைவனிடம் நாம் வேண்டுவது எது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டுவிடுவது புத்திசா-லித்தனம் என அறிவுரை தருகிறார் மணிவாசகர்.

 

முட்டிய பின் பணிவதைவிட . . .

சாவதற்காக யாரும் மருந்து உண்ணமாட்டார்கள்என்பது பழமொழி. நன்மை தருவதை விட்டுவிட்டு, தீமை தருவதை இறைவனிடம் எவரும் கேட்க மாட்டார்கள்தாம். ஆனாலும், நமக்கு நன்மை தருபவை எவை, தீமை தருபவை எவை என்று சரியாகத் தீர்மானிக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அறியாமையால், நமக்குத் தீமை தருவதைக் கேட்டுப் பெற்று, தீமையை அனுபவித்து முட்டிய பிறகு, இறைவனிடமே மீண்டும் பணிந்து சென்று வேறு ஒன்றைக் கேட்பதை விட எளிதானது, நாம் கேட்டுப் பெறவேண்டியவை எவை என்று முடிவுசெய்வதை இறைவனிடமே விட்டுவிடுவதாகும்.

பாதாளம் ஏழுக்கும் கீழ் சென்று தேடிய திருமாலுக்கும், பல உலகங்களுக்கு மேலே பறந்து நோக்கிய பிரம்மனுக்கும் காட்சி தராத சிவபெரு-மான், நம் உடலில் இருந்து, விரும்பி நம்மை ஆட்-கொள்கிறான்; இந்நிகழ்வு, இறைவனின் எளிமை-யாலும், கருணையாலுமே தவிர, நம் திறமையால் இல்லை. இறைவனாக விரும்பி நமக்கு எதைத் தருகிறானோ, அதுவே நமக்குரிய சிறந்த பொருளாக இருக்கும் என்பது உறுதி. எனவே, அவன் விரும்பித் தருவதையே, நாமும் மகிழ்வோடு வேண்டிப் பெற்றுக்கொள்வோம்.

உன்னிடம் நீங்காத அன்பைத் தருவாய்இறைவா

ஒருவேளை இறைவன் நம்மிடம், “உனக்கு வேண்டும் பரிசு ஒன்றை கட்டாயம் என்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டே தீரவேண்டும்”, என்று சொன்னால், நாம் மறக்காமல் அவனிடம் கேட்க வேண்டிய பரிசு, “உன்னையே விரும்பும் மனமும், எப்போதும் நினைக்கும் சிந்தனையும், உன்னிடம் நீங்காத அன்பும் தருவாய்”, என்று கேட்கச் சொல்கிறார் மணிவாசகர். இந்த அறிவுரையை நமக்கு வழங்கிய திருவாசகம் இதுதான்:

வேண்டத் தக்கது அறிவோய்நீ; வேண்ட முழுதும் தருவோய்நீ!

வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ; வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீயாது அருள்செய்தாய்; யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே!

(திருவாசகம்:33-6)

 

எவ்வளவு பொருத்தமான அறிவுரை என்று எண்ணிப் பாருங்கள்.

வேண்டத்தக்கது சிவமே

இத்திருவாசகத்தை நுட்பமாக கவனித்தால், "நான் வேண்டத்தக்கபொருள், மெய்ப்பொருளாகிய நீயே (அறிவோய்நீ); நான் வேண்டுவதால், உன்னையே முழுவதும் தருவாய் நீயே!" என்று மணிவாசகர் கேட்பது புரியும். வேறு எந்தப் பொருளும் மெய்ப்பொருளாகிய இறைவனுக்குச் சமமாகாது. அவனையேதருமாறு நாம் வேண்டினால், எல்லையற்ற கருணையாளனான இறைவன் ஞானப்-பொருளான தன்னையேநமக்குத் தந்துவிடுவான். பிறகென்ன? அனைத்தும் நிகழ்ந்துவிடும் அல்லவா?

இப்படி, சிவத்தையே கேட்டுப்பெற்றுச் சிவமாகவே ஆனார் மணிவாசகர். இதை, தில்லையில் அருளிய கோயில் திருப்பதிகத்தில், அவர் திருவாக்காலேயே சொல்லிவிட்டு, இறைவனுக்கு ஏமாளிஎன்று பட்டமும் சூட்டுகிறார் பெருமான்.

நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தன்

இறைவனைப் பார்த்து, “எந்த வியாபாரத்திலும், கொடுப்பதும் வாங்குவதும் முறையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். இறைவா! நான் உன்னிடம் ஒரு பண்டமாற்று வியாபாரத்துக்காக வந்தேன். என்னிடம் இருந்ததோ, என்னுடைய உயிர் குடிகொண்டிருந்த, இருள் திணிக்கப்பட்ட, கொடுமையான வல்வினைகள் குடிகொண்டிருந்த ஒரு வீடு; அதாவது, என் பொத்தை ஊன்உடம்பு.

உன்னிடம் இருப்பதோ, ஒளி பொருந்திய, வினைகள் தீண்டமுடியாத, பேரின்ப நிலைத்த முத்தி வீடு; நீ ஒரு சரியான ஏமாளி! நான் தந்த வல்வினைகள் குடிகொண்டிருந்த இருண்ட வீட்டை வாங்கிக்கொண்டு, உன்னுடைய ஒளிமயமான பேரின்ப வீடாகிய திருவடிகளை எனக்குச் சூட்டிவிட்டாய்! நம் இருவரில் யார் சாமர்த்தியசாலி? இந்த வணிகத்தில் நான் பெற்றதோ, முடிவில்லாத ஆனந்தம்! நீ என்னிடமிருந்து பெற்றது என்று ஏதும் உண்டா?

என் சிந்தையே கோயிலாகக் கொண்ட திருப்பெருந்-துறையில் வாழும் எம் சிவபெருமானே! என் உடலையே உன் இருப்பிடமாகக் கொண்டதால், பேரின்ப வீடாகி விட்டது என்னுடல்! என் தந்தையே! ஈசனே! உன்னுடைய எல்லையற்ற இக்கருணைக்கு கைமாறாக உனக்குத் திருப்பிச் செய்ய என்னிடம் உருப்படியான பொருள் எதுவும் இல்லாமலி-ருக்கிறேன்!என்றார் மணிவாசகர்.

தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை;சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே! (திருவாசகம்:22.10)

 

நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தனைப் போல் ஆகிவிட்டாய் நீஎன்று இறைவனைப் பழிப்பதுபோலப் பாடி, இறைவனது பிரதிபலன் கருதாத, பெருங் கருணைப் பேரருளைப் போற்றிப் புகழ்கிறார் மணிவாசகப் பெருமான்.

இப்படி, லாபமே இல்லாத வணிகம் செய்யும் கருணை, இறைவனின் கருணை மட்டுமே ஆகும். இங்கு, மணிவாசகர் கேலி செய்வதுபோல் புகழ்ந்து பேசுவது, இறைவனுடைய எல்லையற்ற கருணையின் பெருமையைச் சொல்லித் துதித்து, நமக்கெல்லாம் வழிகாட்டவே என்பதை நினைவில் வைப்போம்.

நமக்கான திருவாசகம்

இப்படி, வேண்டத்தக்கது எது என்பதை இறைவனிடமே விட்டுவிடுவது நல்லது என்றாலும், மனசுதான் கேட்கமாட்டேன் என்கிறதே! நமக்கு மட்டுமல்ல, மணிவாசகருக்கும்தான். இப்படிப் பாடி, தாம் பெற்ற பெரும்பேற்றை நம்முடன் பகிர்ந்துகொண்ட பெருமான், நம் போன்றோர் இறைவனிடம் பேசும் வகையில், நமக்கான திருவாசகம் ஒன்றை, வடித்துத் தந்தார்; நம் எண்ணத்தை இறைவனிடம் பகிர்ந்துகொள்ளும் நமக்கான திருவாசகம் ஒன்றை இப்போது கேட்போம்.

சிறப்பையே வடிவமாக உடைய எங்கள் சிவபிரானே! அழகான செந்தாமரை மலர் போன்ற அரிய உருவத்தையுடையனே! என்னருமை ஆரமுதே! இப்பூமியில் தோன்றுகிற பல்வேறு உடல் பிறவிகள் எனக்கு வாராமல் அறவே நீக்கி, நீ அருள வேண்டும். உன்னிடத்தில் நீங்காத பேரன்புப் பக்தியையும் நான் பெறவேண்டும்.

அப்படிப்பட்ட பேரன்புப் பக்திமைப் பண்பு, என்னிடம் நிலையாக இருக்க, உன்னடியவர்கள் கூட்டத்தின் நடுவில் இருக்கும் தகுதியை நான் பெறவேண்டும்; உன் அடியவர் கூட்டத்தில் இருக்கும் தகுதியைப் பெறுவதற்கு, ஈடு இணையற்ற, உன் திருவருளை நான் பெறவேண்டும். அத்தகைய ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் ஆட்கொண்டு அருள்வாயாக”, என்று அற்புதமாகப் பாடினார் பெருமான்.

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;

சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல

ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,

ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே!

(திருவாசகம்:44.1)

 

இறைவன், அருளே வடிவமானவன் என்பதால், அதனை ஓருருவாய நின் திருவருள்என்றார். பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளும் வேண்டும். இதனால், ‘அடியவர் கூட்டம்பிறவி நீங்குவதற்குரிய கருவிஎன்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார் மணிவாசகர்.

இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம்  : 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!

 திருவாசகத்தின் சிறப்பே, சாமானிய மனிதர்களும், அவரவர் நிலையில், அவரவர் மொழியில், இறைவனிடம் நேரடியாகத் தங்கள் குறையைத் தெரிவிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களைக் கொண்டுள்ளதாகும். எண்ணப் பதிகத்தில், மணிவாசகர் இறையருள் கிட்டுவதற்குத் தாமதமாவது குறித்து மிகவும் வருந்தி, மனமுருகி, ஊனையும், உயிரையும் உருக்கும் ஆறு பாடல்கள் அருளியுள்ளார்.

சிவனோடு உரையாட, சிவனோடு உறவாட . . .

ஆயிரம் வார்த்தைகளில் விளக்கப்படவேண்டிய செய்தியை, ஒரு ஓவியம் எளிதில் விளக்கிவிடும். ஆயிரம் ஓவியங்கள் விளக்கும் கருத்தை, ஒரு இன்னிசைத் துணுக்கு ஆழ்மனதில் பதித்துவிடும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மும்மூர்த்திகளின் பாடல்களுக்கான பண்ணிசையை அவர்களே அமைத்துக் கொடுத்துள்ளார்கள்; திருவாசகப் பாடல்களுக்கு யாப்பு உண்டே தவிர, எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற இசை வழிகாட்டுதல் இல்லை;

அதனால் பொருத்தமான இசையில் திருவாசகப் பாடல்களைப் பாடமுடியாத பெருங்குறை அன்பர்களுக்குண்டு. இதனால், “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்என்னும் பழமொழி நடைமுறை அனுபவத்தில் வராமல் போனது.

எண்ணப் பதிகத்திலிருந்து பாருருவாயமற்றும் பத்திலனேனும்என்று தொடங்கும் சாமானிய-ருக்கான இரு பாடல்களை, இசையமைப்பாளர் இளையராஜா அவர்களே தேர்ந்தெடுத்து, இசையமைத்து வெளியிட்டுள்ளது தமிழர்களுக்குக் கிடைத்த வரம்.

மணிவாசகரே இசையானார்

இவ்விரு பாடல்களும் இளையராஜாவின் இசையில் உயிர்பெற்றெழுந்து நம் ஊனையும் உயிரையும் உருக்குகின்றன; பண் அமைப்பதற்காக, மணிவாசகரே இளையராஜா ஆனாரோ என்றே எண்ணுகின்றன நம் மனங்கள். இப்பாடல்களின் ஆழ்ந்த பொருளில், பல காலங்கள் ஊறித் திளைத்திருந்தால் மட்டுமே, இத்தகைய தெய்வீக இசை சாத்தியம்.

இவ்விசை, வான்கலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து நம்மை இறைவனுடன் சங்கமித்தது. நாதத்துக்கே தலைவனான நாதாந்த நாயகன் சிவபெருமான், இசைஞானிக்குத் தன்னையே தந்திருப்பான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. திருவாசகப்பொருள் உணர்ந்த இசை ஞானியின் இசையில் அனைத்துத் திருவாசகங்களும் சாமானியர்களைச் சென்றடைய, சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து வேண்டுவோம்.

இறைவனிடம், பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்-டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளையும் நாம் வேண்ட, நமக்குத் திருவாசகம் தந்தவர் மணிவாசகர். இறைபக்தி இல்லாதவர்கள், இறைப்பற்று இல்லா-தவர்கள், இறைவனை வணங்காதவர்கள், அவன் திரு-வடிகளைக் காண விருப்பம் இல்லாதவர்கள் என்று ஆன்மவிடுதலைக்கான எந்தத் தகுதியும் இல்லையே என்று வருந்துபவர்களுக்காக, 'பத்திலனேனும்" என்று தொடங்கும் திருவாசகத்தை அருளினார்;

மணிவாசகரின் கருணையைப் போற்றுவதா, மணிவாசகராகவே மாறி, இசை வடிவத்தில் நம் உள்ளமெல்லாம் நிறைந்த இசை வாசகம் இசைத்த இளையராஜாவைப் போற்றுவதா, இவ்விருவருள்ளும் நிற்கும் சிவபெருமானின் கருணையைப் போற்றுவதா என்று உருகும் மனதோடு இப்பாடலின் பொருளைக் காண்போம்.

பத்திலன் ஏனும், பணிந்திலன் ஏனும்

எம்பெருமானே! உன் மேல் பக்தி இல்லாதவனாக இருந்தாலும், பற்று இல்லாதவனாக இருந்தாலும், இதுவரை உன்னைப் பணிந்து வணங்காதவனாக இருந்தாலும், ஞானியர் போற்றிப் பாடி, அடைய விரும்பும் உன் உயர்ந்த பைங்கழல் திருவடிகளைக் காணும் பித்து இல்லாத வெற்று மனிதனாக நான் இதுவரை இருந்துவிட்டாலும், உன்னையே நினைந்து பிதற்றும் எல்லையற்ற அன்பு உன்பால் இதுவரை எனக்கு இல்லை என்பது உண்மையே ஆனாலும், என்னுடைய பிறவிநோயை நீக்கி, உன் திருவடிகளில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முத்துப் போன்றவனே! மாணிக்க மணியைப் போன்றவனே! எப்போதும் உன்னையே நினைந்து, “என் முதல்வனே! முறையோ?” என்று உன்மேல் எல்லையற்ற அன்போடு முறையிட்டு, நான் உன்னைத்தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறேன்; இனிமேலும் உன்னைப் பிரிந்து இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது; எனவே என்னை அழைத்துக்கொள்”, என்று இறைவனிடம் முறையிடுகிறார் மணிவாசகர்.

பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப்

பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே!

முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ? என்று

எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 4)

மணிவாசகரின் இறையன்பையும், பக்தியையும், இறைப்பற்றையும் உலகே அறியும். இருந்தும்கூட, இவை எதுவும் இல்லாத நம்போன்றோரின் தகுதிக் குறைவை, தமக்கே நேர்ந்ததுபோல் கசிந்துருகும் மணிவாசகரின் ஈடு இணையற்ற கருணைக்கு நெஞ்சார நன்றி செலுத்துவோம். இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகம் இது.

காணவும் நாணுவனே

கடும் வறுமையில் வாடிய கண்ணபிரானின் ஆருயிர் நண்பர் குசேலர், தம் மனைவியின் ஆலோசனைப்-படிக் கண்ணபிரானைக் காணச்சென்றார்; வெகுநாட்-கள் நண்பனைக் காணச்செல்லாத குற்றவுணர்வில் கூனிக் குறுகினார்; மிகுந்த அன்போடு, தம்மை ஆரத்தழுவி வரவேற்ற கண்ணபிரானைக் காணவும் நாணினார் குசேலர்.

இக்காட்சியை நினைவுபடுத்துகிறது எண்ணப் பதிகத்தின் ஐந்தாவது பாடல். எம் பெருமானே! நிலையானவனே! உன் திருவடிகளைக் காண்பதையும் இழந்ததால் வறுமையுற்றேன்; கண்கள் களிப்புறப் பார்த்துப் போற்றுவதையும் இழந்தேன்; வாயால் போற்றித் துதிப்பதையும் இழந்துவிட்டேன்; என்னுடைய அற்பத்தன்மையால் உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பையும் நான் இழந்துவிட்டேன்; இவற்றால், பிறகு முழுமையாகக் கெட்டுவிட்டேன். அதனால், இனிமேல் நீயே என் கண்முன்னே வந்தாலும், உன்னைப் பார்ப்பதற்கும் நாணுகின்றேன், கூசுகின்றேன்!”, என்று கதறினார் மணிவாசகர். (தாணு-நிலையானவன்)

காணும் அது ஒழிந்தேன் நின் திருப்பாதம்; கண்டு கண் களிகூர,

பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,

தாணுவே, அழிந்தேன்; நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்

காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 5)

அடியவர்கள் இடைவிடாது மனதாலும், கண்களாலும் திருவடிகளைக் காணவேண்டும், வாயால் போற்றிப் பாடித் துதிக்கவேண்டும்; அவ்வாறு செய்தால் இறைவனையே எண்ணி உருகும் இயல்பு நம்மிடம் தாமாக வந்துவிடும். பிறகென்ன? இறைவனின் திருக்காட்சியை கண்ணாரக் கண்டு, பதமுத்தியைப் பெற்றுப் பேரின்பமடையலாம் என்பது இத்திரு-வாசகத்தினைப் பாடுவதால் கிடைக்கும் பெரும்-பேறாகும். பத்திலனேனும்பாட்டுக்கு இளையராஜா அமைத்த பண்ணிலேயே இப்பாடலையும் தேன்-மழையாகப் பாடி சிவனருளைப் பெறலாம்.

இறைவனே இல்லை என்று மறுத்து, இறைநிந்தனை செய்து வாழ்ந்ததற்காக வருந்துவோரும் விடுதலை-யடைந்து, உய்வு பெறுவதற்காக, மணிவாசகப் பெருமான் மனமுருகி வேண்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  : 38: விழுகின்ற என்னை விடுதி கண்டாய்

 மனிதகுலம் என்பது பல்வேறு குணங்களையும் பல்வேறு செயல்பாடுகளையும் பல்வேறு நிலைப்பாடுகளையும் கொண்ட மனிதர்களின் கூட்டம். குணம், செயல்பாடு, நிலைப்பாடு ஆகியன ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுவதைப் போல், ஆன்மிக வழிபாட்டுத் தேவைகளும் வேறுபடும். தேவாரம் உள்ளிட்ட மற்ற திருமுறைப் பாடல்கள் இறைவனின் பேராற்றலைப் போற்றித் துதிக்கவும், கருணையைப் பாடிப் பரவசமடையவும் மிகவும் துணைசெய்கின்றன.

ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சிறுமைக-ளையும், குற்றங்குறைகளையும் மனம்விட்டு இறை-வனிடம் பேசி, தனக்கான விடுதலையையும் கரு-ணையையும் இறைவனிடம் கேட்க உதவும் மொழி-யையும் வெளியையும் அவற்றிலிருந்து பெற இயலவில்லை.

மனிதனுக்கான இறைமொழி

இறைவனுடன் மனம்விட்டுப் பேச விரும்பும் மனித-னுக்கான மொழியாகவும், வெளியாகவும் திருவாசகம் திகழ்கிறது. திருவாசகத்தின் ஒவ்வொரு பாடலிலும், தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியந்து ஒருவரால் பாட முடியும் போது, இறைவனின் கருணையின் பெருமையை அவர் நெஞ்சார உணர்கின்றார்; ‘தான்என்னும் அகங்காரம் அடியோடு ஒழியுமாறு, ஒருவர் தன் சிறுமைகளை, தன் வாயாரக் கூறிப்பாடத் துணைசெய்யும் திருவாசகங்கள், மொத்த மனிதகுலத்துக்கே விடுதலைதரும் ஆற்றல்மிக்க இறைமொழிகளாகின்றன.

வாழ்க்கையில் தவறே செய்யாதவர் என்று யாரு-மில்லை. செய்யக்கூடாத தவறைச் செய்துவிட்டேன்; எனக்கு மன்னிப்பே இல்லை என்ற குற்றவுணர்வில் அல்லல்படுபவரும், தவறுக்கு வருந்தி இறைவனிடம் அடைக்கலம் புகுந்தால், கடைத்தேற்றிக் காப்பான் கருணைவள்ளல் இறைவன் என்ற உறுதிப்-பாட்டையும் ஆறுதலையும் தருவது திருவாசகம். திருவாசகத்தின் இவ்வாற்றலை உணர்த்தும் உரைகல், திருவாசகம் படிக்கும்போது ஆறாக ஊற்றெடுக்கும் கண்ணீர்; பக்குவப்படும் மனம் சொல்லும், இது எனக்கான திருவாசகம் என்று.

இடைச்செருகல் இல்லாத திருவாசகம்

ஒவ்வொரு தனிமனிதனும் இறைவனிடம் பேசும் மொழி ஆற்றலை, திருவாசகப் பாடல்கள் எவ்வாறு தருகின்றன என்று நோக்குவோம். தன் சிறுமை-களையும் குற்றங்குறைகளையும் விரிவாகக் கூறி, இவ்வளவு கீழ்மையான நிலையில் இருக்கும் தனக்கு, அருள்புரிந்ததை வியக்கும் வகையில், வருந்தி அதிலிருந்து மீட்குமாறு விண்ணப்பிக்கும் வகையில் திருவாசகப் பாடல்கள் அமைந்துள்ளதால், இறைவனிடம் பேசும் மொழியாற்றல் தனிமனி-தர்களுக்குச் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. இத்த-கைய உணர்வுதரும் திருவாசகப் பாடல்களை, வேறு யாராலும் எழுத முடியாததால், இடைச்செருகலாகப் போலிப் பாடல்கள் திருவாசகத்தில் இல்லை.

மனிதகுலத்துக்கான விடுதலை

மணிவாசகர் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் சிறுமைகள் மனிதகுலம் முழுவதற்கும் பொருத்தமாக இருக்கிறபோது, தனக்குப் பொருத்தமான திருவாச-கத்தை அடையாளம் காணும் ஒருவன், எளிதில் தனது சிறுமைகளையும் இறைவனின் பெருமை-களையும் மனப்பூர்வமாக உணர்கிறான்; ஆணவமும், ‘தான்’ ‘தனதுஎன்னும் பார்வைகளும் தவறு என்றுணர்ந்து மாற்றம் அடைகிறான்; சக மனிதர்-களின் தேவைகளின் நியாயத்தை உணர்கிறான்; தன்-னைத் தொண்டுக்கு ஆட்படுத்தும் மனநிலை பெறு-கிறான். ஆன்ம விடுதலைக்கான எளிய பாதையை மனித குலத்துக்குக் கட்டமைத்துத் தந்தது திருவா-சகம் மட்டுமே.

கைப்பொருள் ஈட்டவும், புறவுலகைத் தொழில்-நுட்பத்தால் மாற்றவும் அறிந்துகொண்ட மனிதனின் புற அறிவு, அனைத்தையும் இயக்கவும், மாற்றவும் தன்னால் முடியும் என்ற கர்வம்கொண்டு, இறைவனின் இருப்பையும் கருணையையும் மறுக்கும்; அத்தகைய மனநிலையில், இறைவனே முன்னால் நின்று, அருள்அமுதை ஊட்டினாலும், ‘நீ இறைவனல்லன்என்று மறுக்கவும் செய்யும்; இறைமறுப்புக் கொள்கை மிகப் பழமையானது.

இறைமறுப்பு என்னும் ஏழ்மை

இறைமறுப்புக் கொள்கையில் பலகாலம் வாழ்ந்து, இறைவனை இகழ்ந்ததை, ‘ஏழைத் திருத்தாண்டகம்பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடி வருந்து-கிறார் அப்பர் பெருமான் . மெய்ப்பொருளாம் இறை-வனை இழந்ததையே ஏழ்மை என்கிறார் மணி-வாசகர்; “எண்ணிலேன் திருநாமம் ஐந்தெழுத்தும், என் ஏழைமை அதனாலேஎன்பது திருவாசகம். அருளமுதம் தரவந்த இறைவனைப் பித்தன்என மறுத்து இகழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், பின்பு, செந்தமிழால் பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!என்று பாடித் துதித்தார். சமயக் குரவர்கள் நால்வரில், மாணிக்கவாசகரும் அப்பரும் சுந்தரரும் இறைவன் அருளமுதத்தை முதலில் மறுத்தவர்கள்தாம்.

தீயில் விழும் விட்டில்பூச்சி

இறைமறுப்புச் செயலைத் தாம் செய்ததாகக் கூறும் மணிவாசகரின் வாக்குமூலத்தைக் கேட்போம்: தேனினை உண்ட வாயோடு, வண்டுகள் கிண்டிக்-கொண்டிருக்கின்ற கொன்றைமலர் மாலையை முடி-யில் அணிந்த உத்தரகோசமங்கைக்கு அரசே!, வளர்கின்ற தீயினைச் சுற்றி வட்டமிட்டு, இறுதியில், அதிலேயே விழுந்து தன்னை அழித்துக்கொள்ளும் விட்டில்பூச்சி; அதுபோல, இந்த உலக வாழ்வே இன்பம் என்று நினைத்து, அதிலேயே விழுந்து என்னை நானே அழித்துக்கொண்டிருக்கிறேன். என் வழியில் நின்று, நீ உன் அருள் அமுதை, என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேனே!என்று வருந்தும் திருவாசகம், நம் ஊனையும் உயிரையும் உருக்குகிறது. (வெறி - தேன்; அறுகால் - ஆறுகால் உடைய வண்டு)

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்

விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்

உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே!

வழி நின்று, நின் அருள் ஆர்அமுது ஊட்ட மறுத்தனனே!

(திருவாசகம்: நீத்தல்விண்ணப்பம்:5)

தானே வந்து, வழிமறைத்த இறைவன், ‘அமுதை வாங்கிக்கொள்என்று கையில் தந்திருந்தால். ஒரு-வேளை, அதை உண்ணாமல் வீணாக்கிவிடலாம் என்று ஊட்டிவிட அல்லவா முயன்றிருக்கிறான்! அப்படி முயன்றும், அருளமுதை வேண்டாம் என்று மறுத்துவிட்டதற்காக மிகவும் வருந்துகிறார் மணி-வாசகர். இறைவன் நமக்குத் திருமுறைகள் மூலம் அருள்தருவதைச் சுலபமாக அலட்சியம் செய்து-விடுகிறோம். அல்லது, மறுத்துவிடுகிறோம்.

இறைமறுப்பைச் செய்யும் மனிதர்கள், தங்கள் தேட-லின் முதிர்ச்சி நிலையில், இறைவனின் இருப்பை அறிந்து, இறைவனைப் பழித்ததற்காகவும், ‘இறைவனே இல்லைஎன்று மறுத்ததற்காகவும் வருந்துவர். கார-ணம் கூறி, பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுவர். அத்தகைய மனிதர்களுக்காகப் பிறந்த திருவாசகத்தைக் காண்போம்.

அருள் அறியாமையால் மறுத்தனன்

என் கண்மணியினும் சிறந்த மாணிக்கமணியே! என்னுடைய அறியாமையால், நீ ஊட்டிய அருள-முதத்தை உண்ண மறுத்துவிட்டேன். அதற்காக, நீ என்னை வெறுத்து, கைவிட்டு விடாதே! உத்தர-கோசமங்கைக்கு அரசே! என்னுடைய மொத்த வினையையும் நீக்கி, அடியேனை ஆண்டுகொள் இறைவா! சிறுநாய்களின் பொய்களைப் பொறுக்கும் பெரியவர்களைப் போல், நீயும், உன்னை மறுத்த என்னை மன்னித்து ஆட்கொண்டு அருள வேண்டும்என்கிறது இத்திருவாசகம்.

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே!

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி

ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,

பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

(திருவாசகம்:நீத்தல் விண்ணப்பம்:6)

கிடைப்பதற்கரிய தங்கக் கிண்ணம் ஒன்று கையில் கிடைக்கப்பெற்ற குழந்தை, அதைப் பாதுகாக்காமல், கண்ட இடத்திலும் போட்டுத் தொலைத்து-விடுவதற்குக் காரணம், தங்கக் கிண்ணம் மதிப்பு-மிக்கது என்பதைக் குழந்தை அறியாததே ஆகும். உலகப் பொருள் தொலைந்ததால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை; இங்கு தொலைக்கப்பட்டதோ, அறிவே வடிவான அருளமுதம். அருள் அறியாமைக்குக் காரணமான வினைகளை நீக்கி, ஆண்டுகொள்ள வேண்டுகிறார். என்னைப் போன்ற சிறுநாய்களின் பொய்யினை இவ்வுலகின் பெரியவர்கள் பொறுத்த-ருள்வார்கள்; நீயோ, எல்லாப் பெரியவர்களையும்விட, மிகப் பெரியவன். ஆகவே, நான் அறியாமையால் மறுத்த உன் அருளமுதத்தை, சிந்தாமல், சிதறாமல் எனக்குத் திருப்பித்தருவது உன்னுடைய கடமைஎன்று இறைவனிடம் உரிமை வழக்காடும் இப்பாடல் நமக்காகப் பிறந்த திருவாசகம்.

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவராகிய மணி-வாசகர், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரா என்ற கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை அடுத்த வாரம் காண்போம்.

 

வான்கலந்த மாணிக்கவாசகம்  : 39: அறுபத்து மூவரில் மணிவாசகர் உண்டா?

  திருவாசகத்தேன் தந்த வள்ளலும் சைவ சமயக் குர-வர்கள் நால்வரில் ஒருவருமாகிய மாணிக்கவாசகர், சைவத் திருத்தொண்டர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கொள்ளப்படவில்லை என்பது பெரும்பான்மையான சைவசமய அன்பர்-களுக்கே பெருவியப்பைத் தரும். நாயன்மார்களின் எண்ணிக்கையைப் பாடும் சுந்தரரின் திருத்தொண்-டர்தொகையை அடியொற்றி, திருத்தொண்டர் திரு-வந்தாதியை நம்பியாண்டார் நம்பிகள் அருளினார். இவ்விருவர் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார் சேக்கிழார் பெருமான்.

திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்-டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இக்கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை வர-லாற்றுப் பார்வையுடன் தேடுவோம்.

கணக்கீடு தோன்றிய முறை

இறைவன் தில்லைவாழ் அந்தணர்என்று (தொகை-யடியாரைக் குறித்து) சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுக்க, பதினொரு பாடல்களில், அறுபத்தொரு தனியடியார் திருத்தொண்டர்களையும் எட்டுத் தொகையடியார்களையும் பாடி, திருத்தொண்டர் தொகையை நிறைவுசெய்தார் சுந்தரமூர்த்தி நாயனார். இறைவனே எடுத்துக்கொடுத்த முதலடியில், தொகை-யடியார்களான தில்லையில் வாழும் அந்தணர்-களையும் மற்ற தொகையடியார்கள் எழுவரையும் பத்தாவது பாடலிலும் பாடியுள்ளார்; மற்ற பாடல்கள் அனைத்திலும் தனியடியார்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளனர்.

திருத்தொண்டர் திருவந்தாதி

திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள், இத் திருத்தொண்டர் தொகையிலிருந்து திருத்தொண்டர் திருவந்தாதஎன்னும் சார்புநூல் ஒன்றைச் செய்தார்.

சுந்தரர் பாடிய ஏழாம் பாடலில் வரும் பொய்-யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்னும் அடியைத் தொகையடியாராகக் கருதிய நம்பி-யாண்டார் நம்பி, அதற்கு, தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், ‘கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்து ஒன்பது கடைச் சங்கப்புலவர்கள்என்று குறிப்பிட்ட தொகையடியார்களுக்கு ஏற்றிப் பாடி-விட்டார். மற்ற அறுபது தனியடியார்களுடன், சுந்த-ரரையும், அவர்தம் பெற்றோர் சடையனார் இசை-ஞானியம்மையார் இருவரையும் சேர்த்து, திருத்-தொண்டர்கள் அறுபத்து மூவர் என்று கொண்டு பாடிவிட்டார்.

சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர்தொகையையும் திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையா-கக்கொண்டு, பெரிய புராணம் என்னும் திருத்-தொண்டர் புராணத்தை இயற்றினார். பெரியபுரா-ணத்தில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு விரிவாகச் சொல்லப்படுகிறது.

பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்ற வரிக்கு நம்பியாண்டார் நம்பிகள் கூறும் பொய்-யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர்என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளார் சேக்கிழார் பெருமான்.

திருத்தொண்டர் தொகையை உற்றுநோக்கினால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்போல் பல சிறப்புப் பெயர்களைக் காணலாம். இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று பல தனியடியார்களையும் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமி-கள் குறித்துள்ளது தெளிவு.

சேக்கிழாரின் அறிவுநுட்பம்

பொய்யடிமையில்லாத புலவர்என்று அறியப்படுபவர் ஒரு தனியடியாரேஎன்பதால்தான், ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறிபூண்டு வாழும், அவரல்லாத ஏனைய தொகையடியார்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘பரமனையே பாடு-வார் அடியார்க்கும் அடியேன்என்று சுந்தரமூர்த்தி அடிகள் மீண்டும் குறிப்பிட்ட நுட்பத்தைத் தெளிந்-துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

இத்துணை தெளிவாக விளக்கினாலும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பு ஏதும் கூறாது, சரியான விளக்கத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிச் சென்றது, நம்பியடிகள் பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாம் கொண்ட கருத்தில் சேக்கி-ழாருக்கு இருந்த உறுதியையும் விளக்குகிறது.

மணிவாசகரின் காலம்

பொய்யடிமையில்லாத புலவர்என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பட்ட அத்தனியடியார் மாணிக்கவாசகர்தாம் என்பதை நிறுவுமுன், மாணிக்கவாசகரின் காலம் சுந்தரருக்கு முற்பட்டது என்று நிறுவ வேண்டும்.

மணிவாசகர் காலத்தை ஒன்பதாவது நூற்றாண்டு என்பது பெரும்பான்மைத் தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அவர்களது ஆய்வு முடிவுகள் புறச்சான்றுகள் கொண்டே முடிவு செய்யப்பட்டுள்ளன.

தில்லை மரங்களே சாட்சி

சிதம்பரம் நடராசர் திருக்கோயில், ஒருகாலத்தில் கடல் சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும் பகுதி காடாக இருந்ததால் தில்லைவனம்என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத்தலத்தின் தலவிருட்சம் தில்லை மரமேயாகும்.

காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகி உப்பங்கழி சூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கி, தில்லையை அடுத்து பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவு சென்று பிச்சாவரத்தில் நிற்கிறது; பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லை மரங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம்.

தில்லையை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கி உப்பங்கழி சூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கி பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாகக் காட்சிய-ளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப்போ-கிறது என்று சலிப்படைய வேண்டாம். அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது மாணிக்கவாசகரின் கால வரலாறு.

ஞானசம்பந்தர் பார்த்த உப்பங்கழி சூழ்ந்த தில்லை

திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலில்

மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்(திருமறை: 1.866.1-2)

மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்து ஓச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்-லையுள்என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒருபக்கம் உப்-பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவாகிறது.

மணிவாசகரின் பாடல்களில் தில்லைக் கோயிலை எப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று அடுத்த வாரம் காண்போம்.

வான்கலந்த மாணிக்கவாசகம்  40: பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்

 

 திருவாசகத்தில் நான்கு பாடல்களில் தில்லையைக் குறித்து மணிவாசகர் கூறிய சான்றுகள் கிடைக்-கின்றன. திருவாசகத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்--தின் 20-ம் பாடலில் வரும் அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்றஎன்ற வரிக்கு கடல் நீரலைகள் ஒசை எழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்றஎனப் பொருள்கொண்டால், தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்திருந்ததாகக் கொள்ள இடம் உண்டு; ஆனால், பல உரையாசிரியர்கள் வயலில் தேங்கியுள்ள நீர் அலம்புகின்றது என்றே பொருள் கொள்கின்றனர்.

திருவாசகத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் ஒன்றாம் பாடலில் அணையார் புனல்தில்லைஎன்ற பதிவின் மூலம் தில்லையின் வயல்வளத்தையும் 14-ம் பாடலில் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமாஎன்று பதிவின் மூலம் தில்லைக் கோயில், பெரிய மதில்களைக் கொண்டிருந்ததையும் கண்டபத்துப் பதிகத்தின் ஆறாம் பாடலில் செறிபொழில்சூழ் தில்லைநகர்என்று வருவதால் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் அறிகிறோம்.

ஞானசம்பந்தர் பாடல் கழிசூழ்ந்த தில்லைஎன்று சுட்டிக்காட்டியதைப் போல, மேற்கண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை நிறுவ-வில்லை. எனவே, நானூறு பாடல்கள் கொண்ட மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை ஆராய்வோம்.

திருக்கோவையாரில் (பாடல் எண்கள்: 20, 49, 85, 122, 182, 183, 222) ஏழு பாடல்கள் தில்லைப் பெருங்கோயி-லுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்ப-டுத்துகின்றன.

தவறாகத் தீர்மானிக்கப்பட்ட மணிவாசகரின் காலம்

இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வாளர்கள் மாணிக்கவாசகர் காலத்திலிருந்த மன்-னனின் பெயர் வரகுணப்பாண்டியன் என்பதைத் திருக்கோவையாரிலிருந்துதான் எடுத்துக்காட்டினார்-கள்; அம்மன்னன், முதலாவது வரகுணனா இரண்டா-வது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, புறச்சான்றுகளைக் கொண்டு, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை ஒன்பதாவது அல்லது பத்தாவது நூற்-றாண்டு என்று முடிவுசெய்தனர். அதே திருக்-கோவையாரில்தான், தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெளிவாகச் சுட்டும் அகச் சான்றுகளான ஏழு பாடல்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

விநாயகர் வழிபாட்டுக்கு முன் தோன்றியது திருவாசகம்

முருகப்பெருமானைக் குறித்துத் திருவாசகம் திருவுந்தியார் 17-ம் பாடலில் குமரன்தன் தாதைக்கே உந்தீபற!என்றும், திருப்பொற்சுண்ணம் 3-ம் பாடலில் நல்வேலன் தாதைஎன்றும் இரண்டு பதிவுகள் கிடைக்கின்றன.

இளையவரான குமரக் கடவுளைக் குறித்து மணிவாசகர், மூத்தவரான விநாயகப் பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தில் தமிழகத்தில் விநாயக வழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத் தெளிவு.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றியது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு, மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ திருக்கோவையாரிலோ முற்றி-லும் இல்லாதது, மாணிக்கவாசகரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதற்கும், தேவார மூவருக்கும் முந்தையது என்பதற்கும் ஒரு வலுவான புறச் சான்று.

மூவருக்கும் மூத்த திருமூலரை சம்பந்தரும், அப்ப-ரும் பாடவில்லை.

ஒன்று அவன்தானேஎன்று தொடங்கும் பாடலே திருமந்திரத்தின் முதல் பாடல் என்று சேக்கிழார் பெருமான் சொல்வதிலிருந்து திருமூலரின் திருமந்-திரத்திலும் விநாயகர் வழிபாடு இல்லை என்பதும், திருமூலரும் தேவார மூவருக்கும் மூத்தவர் என்பதும் தெளிவு.

திருமூலரைத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் பாடவில்லை; ஆனால், சுந்தரர் பெருமான் திருத்தொண்டர் தொகையில் நம்பிரான் திருமூலன்என்று தனியடியாராகப் பாடியதுபோல், ‘பொய்யடிமையில்லாத புலவர்என்று மணிவாச-கரையும் தனியடியாராகப் பாடியிருப்பதற்கான வாய்ப்பை மறுக்க இயலாது. சுந்தரர் பெருமான் பொய்யடிமையில்லாத புலவர்என்றது மணிவாச-கரைத்தான் என்று நிறுவினால், அறுபத்துமூவரில் மணிவாசகர் உண்டு என்பது தெளிந்துவிடும்.

வலுவான அகச் சான்றும், வலுவற்ற புறச்சான்றும்

வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், மாணிக்கவாசகரின் காலத்தில் கடற்கரைக் கோயி-லாக விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோ-வையாரின் கடல்சூழ்ந்த தில்லைபதிவுகளும், விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் என்பதைக் காட்டும் வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிக மிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். (ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க் குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள்.) எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.

உண்மையுமாய் இன்மையுமாய்

எக்காலத்தும் மாறாது நிலைபெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும் உண்மை ஆகும்; இடையே தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் என்னும் மாற்றம் ஆகும். இறைவனும் உயிர்களும் மெய்ப்பொருட்கள்; உலகமும் உலகியல் சார்ந்த மனித உடல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மாற்றம் என்பதற்கு உட்பட்டு, மாறிக்கொண்டே இருப்பதால் அவை யாவும் பொய் ஆகும்.

முற்றறிவு பெற்ற இறைவன், ஆணவம் என்னும் அறியாமையில் அகப்பட்டுக் கிடக்கும் சிற்றறிவு கொண்ட உயிர்களுக்கு அறிவு புகட்டி, ஆணவ மலம் நீக்கவே, எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகையும் உடல்களையும் படைத்து, உயிர்களை அவ்வுலக உடல்களில் வாழச்செய்து, உயிர்கள் தன்னிச்சையாக வினைகள் செய்ய அனுமதிக்கிறான்; அவ்வினைப்பயன்களை உயிர்களுக்கு நுகர்வித்து, உயிர்களுடன் தானும் உடன் வாழ்ந்து, வழிகாட்டுகிறான். இவ்வாறு, மெய்ப் பொருளான இறைவனே, உயிர்களிடம் கொண்ட கருணையால் பொய்ப் பொருளாகவும் ஆகி நிற்கும் மாண்பை, மணிவாசகர் உண்மையுமாய், இன்மையுமாய்என்று போற்றுவார்.

பொய்யடிமையில்லாப் புலவராக . . .

இறைவன் இன்மையாய் (பொய்ப் பொருட்களாகவும்) நிற்பது, உயிர்கள் உண்மையை (மெய்ப் பொருளை) உணரும் பொருட்டே என்னும் திருவுளக் குறிப்பை அறிந்து, மெய்ப் பொருளான சிவத்திடம், மெய்ம்மையாம் சிவத்தையே வேண்டினார் மணிவாசகர். சுந்தரர் காலத்துக்கு முன்பும், பின்பும் திருவாசகத்துக்கு இணையான நூல் இல்லை.

மணிவாசகரையே பொய்யடிமையில்லாப் புலவர்என்று சிறப்பித்தார் சுந்தரர் பெருமான்.

உயிர்கள் உலகில் வாழ, மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைவாய்ந்த இப்பொய்ப் பொருட்களும் அவசியம். மூவர் தேவாரமும் இத்தேவை கருதி, பொய்ப் பொருளாம் பொன்னையும் மெய்ப் பொருளாம் இறைவனையும் ஒருங்கே வேண்டுபவை என்பதால் அவை திரோதானம்என்னும் உலகியல் வழியாக இறைவனை அடையப் பாடப்பட்டவை; திருவாசகப் பாடல்களில் திருவருள்என்னும் மெய்ப் பொருளாம் சிவத்தை மட்டுமே பாடி, இப்பொய்ப் பொருட்களைச் சிந்தையிலும் வைக்காத மணிவாசகரின் பொய்யடிமை இல்லாச் சிறப்பே திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர் பெருமானின் மனதில் மேலோங்கி நின்றதால், ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்என்று மணிவாசகரைப் பாடிவிட்டார்.

அறுபத்து மூவரில் மணிவாசகர்

இறுதியாக, மணிவாசகரின் காலம் தேவார மூவருக்-கும் முந்தையது என்பதும் சுந்தரர் பெருமான் தம் திருத்தொண்டர் தொகையில் தாம் பாடிய தனிய-டியார்கள் அறுபத்தியொருவரில் ஒருவராக மணிவா-சகப் பெருமானையே பொய்யடிமையில்லாப் புலவர்என்று சிறப்பித்துப் பாடியுள்ளார் என்பதும் அவரையே பெரிய புராணத்தில் சேக்கிழாரும் பாடியுள்ளார் என்பதும் தெளிவு. சிவாலயங்களில் அறுபத்து மூவர் வரிசையில் மணிவாசகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டுச் சிவனடியார்களின் மனங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த குறை நீங்கும். ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த வரலாற்றுப் புதிரை விடுவித்து நற்செய்தியுடன் வான்கலந்த மாணிக்கவாசகம் உங்களுடன் கலந்து நிறைவடைகிறது.

(வாசகம் நிறைந்தது)